தொந்தரவில்லாத தொடர் உறக்கத்தை காட்டிலும் அனைவருக்கும் அத்தனை எளிதில் கிடைக்க வாய்த்திடாத மற்றொரு விஷயம் உறக்கத்துக்கு முன்னாலான நிம்மதியான மனநிலை.
அப்படியொரு நிம்மதியான மனநிலையில் உறங்க போய் பல காலம் ஆகிறது.
எங்கள் தெருவில் எல்லா வீடுகளும் ஓலை வீடுகள் தான்.
ஆம்பளை பொம்பளை என்று எல்லாருமே தினக்கூலிகள் தான்.
என் வயதில் என்னை போல் பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் அப்போது என் தெருவில் அதிகம் இருந்திருக்கவில்லை.
போன வருஷம் ஏழாப்பு என்னோடு படித்த சியாமளா கூட இப்போது அரை சம்பளத்துக்கு அவள் அம்மாவோடு செங்கசூலைக்கு கல்லு அறுக்க போய் விட்டாள்.
இந்த ஆறு மாதமாக ஐய்யனார் கோவிலை தாண்டி வயக்காடு வழியாக பள்ளிக்கூடத்துக்கு நான் தனியாக தான் பையை தூக்கிக்கொண்டு போய் வருகிறேன்.
என் தெருவில் எல்லா வீடுகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவே தான் இருக்கும்.
பள்ளி தோழி சௌபாக்கியலஷ்மியின் வீட்டை போல எங்கள் வீட்டில் ஆளுக்கொரு அறையெல்லாம் கிடையாது.
மொத்தமே ஒரேயொரு கூடம் தான்.
அதற்கும் முன் வாசல் உண்டு பின் வாசல் கிடையாது.
ஆறேழு வருஷத்துக்கு முன்பு வேய்ந்த தென்னங்கூரைக் கீற்றுகள்.
மழையிலும் வெய்யிலிலும் உளுத்துப் போய் இப்போது எங்கே தொட்டாலும் பொளப்பொளவென்று கொட்டுகிறது.
உச்சி வெய்யிலில் வீட்டுக்குள் குறைந்தது இருபது இருபத்தைந்து ஒளிக்கீற்றுகளாவது பீறிட்டு அடிக்கும்.
கூரையில் அத்தனை ஓட்டைகள் உண்டு மொத்தத்தையும் எண்ண முடியாது.
கதவின் எதிர்பக்கத்து வலது மூலையில் விறகடுப்பு இருக்கும்.
பக்கத்திலேயே விறகுகள் அடுக்கியிருக்கும்.
இடது மூலையில் கொஞ்சநெஞ்ச அரிசி பருப்புகள் சின்னச்சின்ன டப்பாக்களில் அடுக்கியிருக்கும்.
கதவுக்கு இடது மூலையில் ஒரு தென்னங்கயிற்று கொடி கட்டியிருக்கும்.
அம்மா அப்பா மற்றும் என்னை சேர்த்து மூவரின் துணிமணிகளும் அந்த ரெண்டடி கயிற்றுக் கொடியில் தான் கிடக்கும்.
கதவுக்கு வலது மூலையில் ஒன்றன் மேல் ஒன்றாக சில பாத்திரங்கள் அடுக்கியிருக்கும்.
மழைக்காலத்தில் தேவையென்றால் வீட்டுக்களுள் ஆங்காங்கே சொட்டும் தண்ணீரை பிடிக்க அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மற்ற நேரங்களில் அவை வீட்டில் சும்மாவே தான் இருக்கும்.
சட்டையை நான் மேலாக்க கழற்ற வேண்டுமென்றால் அரைமடியில் வலைந்தோ முட்டி போட்டோ தான் கழற்ற வேண்டும். இல்லையென்றால் கையில் போட்டிருக்கும் கண்ணாடி வலையல்களை மெதுவாக மேலே சுற்றும் சீலிங்ஃபேன் நொறுக்கிவிடும்.
மூன்று பேரும் வரிசையாக காலை நீட்டி படுத்தால் நான்காவதாக ஒரு ஆள் வீட்டுக்குள் குத்துக்கால் போட்டு உக்கார கூட இடம் இருக்காது.
இந்த கூடத்தோடு சேர்த்து வாசலில் ஒரு கயிற்றுக் கட்டில்.
இவ்வளவு தான் எங்கள் மொத்த வீடுமே!
தினமும் நான் வாசலில் உக்காந்து மண்ணென்ணெய் விளக்கில் தான் வீட்டுப்பாடம் எழுதுவேன்.
மண்ணென்ணெய் விளக்கென்றால் உண்மையில் அது ஒரு சாராய பாட்டில்.
அப்பா குடித்து விட்டு போட்ட பாட்டில் ஒன்றின் மூடியில் ஓட்டை போட்டு திரி சொருகி அதை விளக்காக மாற்றி வைத்திருந்தாள் அம்மா.
அப்பா எப்போதும் குடித்துவிட்டு பத்து பதினோரு மணிக்கு தான் வீட்டுக்கு வருவார்.
காசிருந்தா சீமசாராயம், காசில்லனா கடன் வாங்கி மூட்ட சாராயம்.
மூட்ட சாராயம் குடித்துவிட்டு வந்தால் வீடே நாறும்,
சீமசாராயம் குடித்துவிட்டு வந்தால் கொஞ்சம் குறைவாக நாறும் அவ்வளவு தான்.
என் பிரச்சனையெல்லாம் அது கிடையாது.
நானும் அம்மாவும் படுத்த பிறகு தான் வீட்டுக்கு வருவார் அப்பா.
பல நாட்களில் அவர் ராத்திரி சாப்பாடு சாப்பிட்டதே கிடையாது.
குடிச்ச சாராயத்துக்கு கொஞ்சமாவது வயித்துக்கு சாப்புடுய்யா என்றால் கத்தி கூப்பாடு போட்டு அம்மாவோடு சண்டைக்கு வருவார்.
சாராயம் தான் அப்பாவோட பிரச்சனையா என்றால் இல்லை.
சாராயம் இல்லாமல் கூட அப்பா தூங்கி விடுவார் ஆனால் அம்மா இல்லாமல் தூங்க மாட்டார்.
பத்து மணிக்கெல்லாம் கண்களை இறுக்கிக்கொண்டு படுத்துவிடுவேன்.
ஆனால் இந்த பாழாய்ப்போன தூக்கம் தான் வந்து தொலையாது.
வந்ததும் சோறு இருக்கா என்று கூட கேட்க மாட்டார்.
புள்ள தூங்கிருச்சா என்பார்.
ரொம்ப நேரம் நான் சும்மாவே கண்களை மூடியிருப்பது தெரிந்து இன்னும் இல்ல பேசாம படு என்பாள் அம்மா.
ரொம்ப நாளுக்கு முன்னாடி வரை புள்ள தூங்கிருச்சா என்பது என் மீதிருந்த அக்கறை என்றே நினைத்திருந்தேன்.
நேரம் கழியும்.
மூட்டத்தையும் மீறி கொசு புடுங்கும்..
மூன்று பேருக்குமே இன்னும் தூக்கம் வந்திருக்காது.
அம்மா மேல் கையை தூக்கி போடுவார்.
அம்மாவை தாண்டி அப்பாவின் விரல்கள் என் மீதும் விழும்.
கைகளை தட்டிவிட்டு உச் கொட்டுவாள் அம்மா.
பின்பு இன்னும் நெருக்கி என்னை நெஞ்சோடு அணைத்துக்கொள்வாள்.
அசந்து தூக்கிக்கொண்டு இருப்பவளை போல் நடித்து லேசாக சுணங்குவேன்.
மீண்டும் கைகளை அம்மாவின் மீது போட்டு ஒருக்களித்து படுத்திருந்தவளை மல்லாக்க திருப்புவார்.
தினமும் இது தான் நடக்கும் ஆனால்
ஓரிரவு இது சண்டையாகவே வெடித்துவிட்டது.
சண்டையென்றால் ஒருவர் பேசுவது மற்றொருவருக்கு மட்டுமே கேட்கும்படியான சன்னமான குரலிலான ஒரு பிணக்கம்.
துர்பாக்கியவசமாக அவை எனக்கும் கேட்டது.
வயசுப்புள்ளய வீட்டுல வெச்சுக்கிட்டு கொஞ்சமாச்சம் ஒனத்தியோட நடந்துக்குறியா நீ??
வயசுப்புள்ளயா? பச்சப்புள்ளடி அது...
இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ! அதுக்குள்ள வயசுக்கு வந்து பெரிய பொம்பளயாகிடுவாய்யா...
இப்பவே அவளுக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கும்...
இது வயசுக்கு இவ்ளோ வெவரம் தெரிஞ்சுருக்காது... சும்மாரு... பேசியே பச்சப்புள்ளய பெரிய பொம்பளயாக்காத...
என்ன??? உன் பொண்ணுக்கு இன்னும் ரெண்டு வைசுனு நினைச்சுட்டு இருக்கியா??
இன்னிக்கு தெரியலனா மட்டும்? ராத்திரில ஆத்தா மேல அப்பன் எதுக்கு கைய தூக்கி போட்டான்னு என்னிக்காவது தெரியாமலா போயிடும்?
அப்படி ஒன்னா இருக்குறத என்னிக்காவது ஒரு நாள் முழிச்சு பாத்துருச்சுன்னா அதுக்கப்பறம் நான் உத்திரத்துல தொங்குறத தான் ஊரு பாக்கும்..
தெரிஞ்சுக்குற வயசுனா புரிஞ்சுக்குற வயசும் தான்டி... அதுக்கு ஏன் சாமத்துல இத்தன ஏச்சாம்பாட்டு வெக்கிற?
மீண்டும் கையை தூக்கி மேலே போட்டார் அப்பா.
மீண்டும் கையை உதறிவிட்டு உச் கொட்டினாள் அம்மா.
ஏன்னா சாமத்துல தான உனக்கு எல்லாம் தேவப்படுது?
நீ பேசலய்யா... நீ ஊத்திக்கிட்டது பேசுது...
வைசுக்கு வரப்போற புள்ளய வீட்டுல வெச்சுக்கிட்டு மூனுப்பேரு பொறண்டு படுக்க நாதியில்ல இந்த கொட்டாயில.. ராத்திரியானா கீழ படுக்க மட்டும் ஆளு தேடுறியே உன் கறியில கூசல?
நாளு முழுக்க தான் உழைக்கிறேன்...
வருசம் முழுக்க தான் உழைக்கிறேன்... இந்த கொட்டாயிக்கு ஒரு கீத்து வேய முடியலயே!
நம்ம பொறப்பு அப்புடிடி...
மீண்டும் கையை தூக்கி மாருக்கு மேல் போட்டார்...
சளார் என்று தட்டி விட்டாள்..
ஏன்யா... இவ்ளோ சொல்றேனே திரும்ப திரும்ப கைய தூக்கி மேல போடுற?
எப்ப தான்யா உனக்கு ஒனத்தி வரும்?
நம்ம பொறப்பு தப்பில்லயா... உன் வளப்பு தப்பு...
என்னடி என் வளப்ப இப்ப குத்தங்கண்டுட்ட நீ?
உங்கோயியொப்பன் ஒன்னா படுத்துருக்கறத பாத்தா நீ வளந்த?
என் புள்ள மட்டும் அப்புடி வளரனுமா?
என் புள்ளைக்கு மட்டும் ஏன் அந்த கெரவம்?
கால் மேல் கால போட்டு அடக்கிக்கிட்டு படு... ராத்திரியானா புள்ளய வெச்சுக்கிட்டு என்னய நோண்டாத...
இது இப்படியே தொடர்ந்துக் கொண்டிருக்கும்போதே என் கண்கள் சொருகின.
ஒவ்வொரு நாளும் அப்பாவின் இப்படியான சீண்டல்களையும் அம்மாவின் ஏய்ச்சுகளையும் கேட்காது நான் உறங்கியதேயில்லை.
இவற்றை கேட்டிடாமல்
எப்படியாவது சீக்கிரம் தூங்கி விட வேண்டுமென்று தினந்தோறும் முயன்று முயன்று தோற்றிருக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக
எக்காரணத்தைக் கொண்டும்
தவறியும் நடுசாமத்தில் என் உறக்கம் கலைந்து விடக் கூடாது என்று பிராத்தனை செய்துவிட்டு தான் பல ராத்திரிகள் தூங்க போயிருக்கிறேன்.
அப்படியான என் பிராத்தனை ஓரிரவில் பொய்ப்பித்துப் போனது.
தூங்குவதற்கு முன்பு நடந்த சண்டையில் அம்மாவை அப்பா எப்படியோ சமாதானம் செய்திருப்பார் போல.
நடுசாமத்தில் அரை தூக்கம் கலைந்திருந்தபோது
அம்மாவின் முணகல் சத்தமும் அப்பாவின் மூச்சிரைக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது.
நான் அசையக்கூட இல்லை.
தூக்கம் மொத்தமாக கலைந்து கண்களை இறுக மூடிக்கிடந்தேன்.
இத்தனை நாட்கள் தூங்குவது தான் சிரமமாக இருந்தது.
இன்று தூங்குவதை போல நடிப்பது கூட கஷ்டமாகிப் போனது போல் தோன்றியது.
சில விஷயங்களை
தோழிகளோடு கலந்து பேசி சிரித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.
சில விஷயங்களை தெரிந்துக்கொள்ளாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
அறிவியல் பாடப்புத்தகத்தில் நான்காவது பாடமான உயிரியல் இனப்பெருக்க பாடத்தை வெறுமென மனப்பாடம் மட்டுமே செய்திருக்கலாம் என்று தோன்றியது.
இன்னும் கொஞ்ச காலத்துக்கு சில விஷயங்கள் நான் அறிந்திராத ரகசியங்களாக மட்டுமே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
பெருமூச்சு விட்டு புரண்டுப் படுத்தார் அப்பா.
ஒருக்களித்துப் படுத்து என் தலையை கோதிக் கொடுத்தாள் அம்மா.
கொஞ்ச நேரத்தில் அப்பா எழுந்து வெளியே போய் விட்டார்.
என் நெற்றிப்பொட்டில் லெசாக முத்தமிட்டாள் அம்மா.
இப்போது தூக்கம் வருவது போல் தோன்றியது.
மறு நாள் பள்ளியில் முழுவதும் இதே சிந்தனையாகவே இருந்தது.
அடச்சே! எங்கள் வீட்டில் ஒரேயொரு தனியறை மட்டுமாவது இருத்திருக்க கூடாதா!?
கூடத்துக்கு குறுக்கே ஒரேயொரு தடுப்பு சுவர் எழுப்புமளவுக்காவது என் அப்பாவுக்கு வசதி இருந்திருக்க கூடாதா!?
குறைந்தபட்சம் படுத்ததும் உறங்கும், உறங்கியதும் காலை வரை விழித்திடாத வரத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்க கூடாதா!?
அது சரி!
என் அப்பா ஒன்றும் வேசி வீட்டுக்கு போகவில்லை.
என் அம்மாவோடு தான் அன்பை பகிர்ந்துக்கொண்டார்.
அது அன்பு தானா என்பது நிச்சயம் எனக்கு தெரியாது.
ஆனால் அதை என் அம்மாவோடு தான் பகிர்ந்துக்கொண்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இருந்தாலும் இதை எப்படி எதிர்கொள்வது என்பது தான் எனக்கு குழப்பமாகவே இருந்தது.
அடுத்த நாளும் இரவு அதே பதினோரு மணி ஆனது.
அதே அப்பா அதே மாதிரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து புள்ள தூங்கிருச்சா என்ற அதே கேள்வியை கேட்டார்.
இன்னும் இல்லையென்று அம்மா சொல்லுவதற்கு முன்பு நான் முந்திக்கொண்டேன்.
அம்மா.... இங்க ரொம்ப புழுக்கமாயிருக்கு... நான் கயித்துக் கட்டிலை போட்டு வாசல்ல படுத்துக்கவா...!??
அடிக்க்க் கலுத... வைசு என்னகுது வாசல்ல படுக்குறேன்ற??? என்று அதட்டினார் அப்பா.
ஏதும் பேசாது
உறைந்து போய் நின்றிருந்தாள் அம்மா...
அவளுக்கு புரிந்துவிட்டது போல...
பார்வையால் அப்பாவை அறைந்தாள்.
அவள் கண்கள் நெருப்பாய் எரிந்து நீராவியாய் கசிந்தன.
என்னை ஆரத்தழுவிக் கட்டியணைத்து விசும்பி அழ ஆரம்பித்தாள்...
- @RajiTalks
நல்லாருக்கு...ஆனா ஓல்டு டெம்ப்ளேட்
ReplyDeleteசெளபாக்கியலட்சுமி சியாமளா என்றெல்லாம் ஓலைக்குடிசையில் வாழ்பவர்கள் பெயர் வைக்கிறார்களா?
ReplyDelete