துந்துபி என்றொரு அசுரன் எருமை உருவம் ஏற்று சகல பராக்கிரமங்களும் கொண்டு உலகை சுற்றி வந்தான்.
அவனுடைய வீரத்துக்கும் வலிமைக்கும் எங்கு தேடினாலும் அவனுக்கு நிகரான வீரனை யாராலும் காட்டிட முடியாது.
வலிமையில் ஆயிரம் யானைகளுக்கு சமமான துந்துபி போர் புரிவதில் அலாதி பிரியமுற்றவன்.
போர் ஆர்வத்தில் கண்ணில் பார்க்கும் எல்லா வீரர்களையும் வதம் செய்து கொண்று குவித்தவன்.
அது போதாதென்று சாலை முதல் சந்தைக்கடை வரை வழியில் பார்க்கும் எல்லாரையும் சண்டைக்கு வா...சண்டைக்கு வா... என்று வலிய அழைத்து போர் புரிந்து அனைவரையும் வென்றவன்.
இருந்தும் அவன் போர் வெறி இம்மியும் அடங்கிய பாடில்லை.
ஒரு கட்டத்தில் தன் பராக்கிரமத்துக்கு ஈடு தேடி அகிலம் எங்கும் சுற்றி அலைந்தான் துந்துபி.
அந்த பக்கமாக பறந்து போய்க்கொண்டு இருக்கும்போது,
எதேச்சையாக துந்துபியின் கண்களில் பட்டான் கடலரசன்.
வேட்டியை தார்ப்பாய்ச்சி கட்டிய வேகத்துக்கு
கடல்களின் அரசனிடம் வலிய வந்து நின்று வா சண்டைக்கு என்றான்.
துந்துபியின் வலிமையை கண்ட கடலரசனுக்கு பேச்சு மூச்சு இல்லை.
செய்வதறியாது நின்ற கடலரசனின் பதட்டத்தை அவன் காலடியில் கிடந்த சிற்றலைகள் வரை அதிர்வுணர்ந்தது.
அதிர்ந்த அலைகள் கரைகளை தாண்டி வழிந்தோடியது.
கரை புரண்டு கசிந்தோடிய அலைகள் எல்லாம் நுரை தள்ளியிருந்தது.
சுற்றுமுற்றும் பார்த்தான் கடலரசன்.
வெள்ளைக் கொடி ஒன்றை கம்பத்தில் கட்டிக்கொண்டு சமாதானத்துக்கு இறங்கி விட்டான்.
உன் கிட்ட கோதால இறங்கி நம்மளால மாளாதுப்பா...
நானுன்டு என் பொழப்பு உண்டுனு உப்புல உழண்டுட்டு சிவனேனு படுத்துக்கிடக்கேன்.
என்ன சீண்டிப் பாத்து உனக்கு ஆவப்போறது ஒன்னுமில்ல..
என்ன விட்டுடுய்யா எஞ்சாமீ என்று படுத்தே விட்டான்.
எடுத்த கத்தியை ரத்தம் பார்க்காமல் உறைக்குள் வைக்கும்படியான ஏமாற்றம் துந்துபியின் முகத்தில் தெரிவதை கவனித்த கடலரசன்,
இது தான் அந்த பயல கோர்த்து வுட சரியான நேரமென்று நினைத்தாற்போல்,
மலையரசன் என்னை விட பெரிய குஸ்திக்காரன்,
குத்துப்பட்ட நெஞ்சோட குருதி வழிய கிடந்தாலும் ஒத்தையாளா நின்னு ஊரயே உலுக்குற சண்டக்காரன்...
கரடுமுரடா வளந்துக் கிடக்குற காட்டுப்பய.
பரமேஸ்வரன் பொண்ணு எடுத்ததே அந்த பரதேசி கிட்ட தான்.
நீ வேணும்னா அவனோட போய் மள்ளுக்கட்டேன் என்றான்.
கடலரசன் சொல்லி முடித்தது தான் தெரியும்.
ஒரே தாவாக தாவி இமயத்தின் அடிவாரத்துக்கே சென்று விட்டான் துந்துபி.
பெரும் கற்பாறைகளை உருட்டியும் காடுகளை உலுக்கியும் மலையரசனை சீண்டி சண்டைக்கு அழைத்தான்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.
இங்கு ஒரு காடும் மலையுமே சாதுவாக வந்து துந்துபியின் முன்னால் நின்றது.
எய்யா.... நான் முன்ன மாதிரி இல்லய்யா...
வயசாகிருச்சு...
பொண்ண கட்டிக்கொடுத்து பேரப்புள்ள தூக்கியாச்சு...
மள்ளுக்கட்டுற பக்குவமெல்லாம் நரையேறிப் போச்சு... குஸ்தி கும்மாளம்னு இறங்கி பல காலம் ஆச்சு... இப்பயெல்லாம் தவம் பண்ணுறேன்னு இந்த பக்கமா போற வர ஆசாமிங்களுக்கு குடைவரை குகை, ஆத்தங்கரை காத்து, மரத்தடி நிழலுனு விரலக் காட்டி வாரிக் கொடுத்துட்டு வேடிக்கை பாத்துட்டு மல்லாக்க படுத்து கிடக்குறதோட சரி... அதை கூட நான் ஒரு சமூக சேவையா தான் பண்ணிட்டு இருக்கேன்... என்றான் மலையரசன்.
கெஞ்சி நின்று பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருக்கும் மலையரசனை பார்த்து ச்சீ என்றானது துந்துபிக்கு.
இந்த தொடைநடுங்கியை பாக்கவா தூரம் பாக்காம இமயம் வரை பாஞ்சு வந்தோமென்று நொந்துக்கொண்டான்.
பல்லத்தாக்கு போல் பணிந்து விட்டவனை மெல்ல தாக்கினாலும் பாவம் சேரும் என்று புரிந்தான்.
சரி.... உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு... பிழைச்சு போனு விட்டுடுறேன்... ஆனா என் கூட சண்டை போட நிகரான ஒரு வீரனை மட்டும் காட்டிவிட்டு தொலைந்து போ என்றான்...
இதுவரை யாரும் கேள்விப்பட்டிடாத ஒரு வீரனை பற்றி உனக்கு சொல்லுறேன்...
தென்கோடி நாட்டிலே கிஷ்கிந்தைனு ஒரு
காடு உண்டு..
காடுனா காடு நானே கண்டிடாத அப்படியோரு காடு...
பத்து யானை கூட்டமா போனாலும் பாதை மறந்து தொலைஞ்சு போற அத்தாம்பெரிய காடு...
அப்பேற்பட்ட காட்டுக்கு ஒத்த ராசா வாலி ராசா...
வாலி ராசா வானர ராசா...
எப்பேர்ப்பட்ட வீரன் கிட்டயும் அவன் அரைநாழி தாண்டி மள்ளுக்கட்டினதில்ல..
அவன் முட்டிய மடக்கி குத்துற ஒத்த குத்துக்கு பத்து ஆலம் முறிஞ்சு விழும்..
ஒத்தைக்கு ஒத்தைனாலும் சரி... ஒருத்தனுக்கு ஊரேனாலும் சரி.. எதிர்த்து வந்தவன் யாரானாலும் ஊரேனாலும் அவன கண்டா மண்டி தான் போடனும்...
உன் கொம்ப தழுவுற கொரங்கு அவன் ஒருத்தன் தான்...
அவன தேடி போ... என்றான் மலையரசன்.
வாலியை தேடி கிஷ்கிந்தை வனம் பறந்தான் துந்துபி.
##########################
சுக்ரீவனும் வாலியும் கிஷ்கிந்தை வனந்தோரும் விழுந்து வாரி சண்டையிட்டுக் கொண்டு இருந்தனர்.
கொஞ்ச நேரத்துக்கு முன்பு வரை வாலி அந்தபுரத்தில் மது அருந்திக்கொண்டும் அழகிகளோடு காம விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டும் தான் இருந்தான்.
உடலெங்கும் காம அசதி.
கள்ளு களிப்பிலும் கலவி களைப்பிலும் இருந்தபோதும் கூட
ஆரம்பத்திலிருந்தே சண்டையில் வாலியின் கைகளே ஓங்கியிருந்தது.
வாலியின் வலிமைக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டு இருந்தான் சுக்ரீவன்.
சுக்ரீவனின் உடலின் பல அங்கங்களின் எலும்புகளை உடைத்தெடுத்திருந்தான் வாலி.
வாலி மீது வழிந்தோடும் ரத்தம் மொத்தமும் சுக்ரீவனுடையது.
சுக்ரீவனின் பிடரி முடி பாதி வாலியின் விரலிடுக்குகளில் ஒட்டிக் கிடந்தது.
வாலியின் நகக்கண்கள் அத்தனையிலும் சுக்ரீவனின் தசைகள் சிக்கிக் கிடந்தது.
அவ்வளவு ரத்தம் சொட்ட சொட்ட சமாளித்துப் போரிட்டு கொண்டு இருந்தான் சுக்ரீவன்.
அத்தனை அடியும் உதையும் வாங்கிய போதிலும் தன் கழுத்தில் தொங்கிய கஜபுஷ்பி கொடியை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தவனை சுற்றியிருந்த சில வானரங்கள் முட்டாப்பய தேடி வந்து கேட்டு வாங்கிக் கட்டிக்கிறான் பாரு என்று கரித்துக் கொட்டின.
அவற்றுள் சில வானரங்கள்
சண்டையில் யாரு ஜெயிப்பா என்று தங்களுக்குள் பந்தயம் கட்டிக்கொண்டிருந்தன.
வாலி ராசா தான் ஜெயிப்பாரு... இருவது வாழைப்பழம் பந்தயம்... இளவட்டங்கள் கூடின.
மரத்து மேலிருந்து மேலும் சில வானரங்கள் குதித்தனர்.
எல்லாரும் உச்சிப்பாறையில் உக்காந்து உத்து பார்க்க ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தனர்.
இங்கிருந்து சண்டை நல்லா தெளிவா தெரியுதுல்ல மாப்ள..??
வாலி ராசா மேல பத்து வாழைப்பழம்... என்றான் செங்கன்.
நான் அஞ்சு வாழப்பழம் பந்தயம் கட்டுறேன் வாலி ராசா மேல... ராக்கப்பன்.
எல்லாரும் வாலி மேலயே பந்தயம் கட்டினா எப்புடிடா??
யாராவது சின்ன ராசா சுக்கி மேலயும் பந்தயம் கட்டுங்கப்பா...
கூட்டத்தில் ஒரு வயசான வானரம்.
கொம்பு முறிஞ்சு
தோக்க போற கொழுப்பெடுத்த கடா மேல பந்தயம் கட்டி மொத்தமும் நக்கிட்டு போகவா!?? கொஞ்சம் கம்முனு போ பெருசு... என்றான் செங்கன்.
யாரலே கொழுப்பெடுத்த கடான்ற?
நாட்டுக்காக ரத்தம் சிந்துற சுக்ரீவ ராசாவா கொழுப்பெடுத்த கடா??
மக்க சனத்தை மறந்து பொழுதன்னைக்கும் அந்தபுரத்துல கள்ளும் பொண்ணும்னு மாஞ்சு கிடக்குற வாலி தான்டா கொழுப்பெடுத்த கடா...
தோ... இந்த சுக்ரீவன்... காலைல நடந்த சண்டைல தான் வாலி ராசா இவர அடிச்சு விரட்டுனாரு... இந்தாளு வேட்டி முள்ளு புதருல சிக்கி அவுந்தது தெரியாம விழுந்து வாரி ஓடுனத காட்டுலருந்த பூனைலருந்து யானை வரைக்கும் அத்தனையும் பாத்துச்சுக...
இப்ப திரும்ப வந்து மள்ளுக்கு நின்னா காரணம் இல்லாமலா??
அவரு ஊருக்காக சண்டைக்கு வந்துருக்காரா இல்ல அவரு வூட்டுக்காரம்மாவுக்காக சண்டைக்கு வந்திருக்காரா??..
ஓடுனவன் திரும்ப வந்துருக்கான்னா திட்டம் இல்லாம இருக்காதுடா... மக்க மேல சுக்ரீவ ராசாக்கு அத்தனை பிரியம்.. ரத்த சூடு இளவட்டத்துக்கு கொஞ்சும் ஜாஸ்தி தான்... அது நம்ம வானர சனத்துக்கு வலிமைல இருக்கனுமே தவிர வாய்ல இருக்க கூடாது...
என்ன திட்டமா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும்...
யாரு நாடாண்டாலும் உழைக்கிற சாதிக்கு நாதியேது பெருசு??
அவுக கைய காட்டுற இடத்துல கவ்வுறதும் கண்ண காட்டுற இடத்துல பாயுறதும் தான நம்ம பொழப்பு??
மக்க உசுரு அவங்களுக்கு மசுருக்கு தான் சமானம்...
அது வாலி ராசாவாருந்தாலும் சரி சுக்ரீவ ராசாவாருந்தாலும் சரி... எதுவும் மாறப்போறது இல்ல...
சோக்க கெடுக்காம ஓரமா போ...
################
நேராக கிஷ்கிந்தை காட்டுக்கே வந்து சேர்ந்தான் துந்துபி அசுரன்.
காடெங்கும் சுற்றித் தேடி வாலி இருக்கும் இடம் அடைந்தான்.
துந்துபி அசுரன் வந்த நேரம் வாலி அந்தபுரத்தில் அழகிகளோடு கலவியில் லயித்திருந்தான்.
குடம் குடமாக தென்னங்கள்ளையும் பனங்கள்ளையும் குடித்து போதையில் களித்திருந்தான்.
அழகிகளோடு மணிக்கணக்கில் கூடியிருந்ததில் உடல் முழுக்க அத்தனை களைப்பு.
அசுரன் வந்த நேரமென்று இல்லை.
துந்துபி இப்போது அன்றி எப்போது வந்திருந்தாலும் வாலியை அந்தபுரத்திலியே பார்த்திருக்கக் கூடும்.
வாலிக்கு அந்தபுரம் தான் சொந்தபுரம்.
கடலரசனையும் மலையரசனையும் கண்டு ஏமாந்த அசுரன் வாலியாவது தன்னுடன் சமரிடுவான் என்று ஆவலிலிருந்தான்.
வாலியின் அந்தபுரத்து வாசலில் நின்று அசுர கூச்சலிட்டான்.
பாறைகளை தூக்கி வீசி அந்தபுர அரண் கதவுகளை தூளாக்கினான்.
டேய்...வாலி.... வெளிய வாடா.... இன்னிக்கு உன்ன நார்நாரா கிழிக்காம நான் நகரப்போறதில்ல....
அரையாடையில் இருந்த இரண்டு பெண்களை இடது கைகளால் அணைத்தபடியும், வலது தோளில் இரண்டு அழகிகளை கிடத்தியபடியும், வலது கையில் ஒரு பெரிய மதுக்குடுவையுடனும், கால்களில் களைப்பு கண்களில் களிப்புமாய் வெளியே வந்தான் வாலி...
போதையென்றால் போதை... அப்படியொரு போதை...
வாலியை இந்த நிலையில் பார்த்த அசுரன் நம்பிக்கை இழந்து நின்றான்.
போதையில் சோர்ந்து கிடக்கும் ஒரு குடிகாரனோடு, கலவியில் களைத்து கிடக்கும் ஒரு வானரனோடு சண்டையிடுவதா என்று தயங்கி நின்றான்.
ஏ குரங்கே!
உன் கூட சண்ட போட்டு உன்னை வீழ்த்த தான் நான் இங்க வந்தேன்..
ஆனா உன் நிலைமையோ இப்போது சரியில்லை...
கள்ளு போதைலயும் காம போதைலயும் இருக்குற உன் கூட சண்டை போட்டு என் அறத்தை கெடுத்துக்க நான் விரும்பல...
மதுபானத்தில் மதி மங்கியிருப்பவன், தூங்கிக்கொண்டு இருப்பவன், காம களைப்பில் இருப்பவன்,
கையில் ஆயுதம் இல்லாது இருப்பவன்,
அஜாக்கிரதையாக இருப்பவன் இவர்களை தாக்கி வீழ்த்துவது ஆயிரம் தாயின் வயிற்றில் இருக்கும் பிறக்காத சிசுக்களை கருவறுத்து கொள்வதற்கு சமம்.
அதனால் உன் எல்லா போதைகளும் தெளிந்து பிறகு வா.. உன்னுடனான சண்டையை நான் அப்போது வைத்துக் கொள்கிறேன் என்றான் அசுரன்.
##############
சுக்ரீவனை கிட்டத்தட்ட வீழ்த்திவிட்டான் வாலி.
இன்னும் ரெண்டு உதைக்கு தாங்க மாட்டான் சுக்ரீவன்.
வாலியின் கவனம் மொத்தமும் சுக்ரீவனை சிதைப்பதில் மட்டுமே இருந்தது.
சுற்றி நடப்பவை எதுவுமே அவன் கண்களுக்கு தெரியவில்லை.
சகோதரன் சுக்ரீவனை கொல்லப்போகும் திருப்தி ஒரு கண்ணையும், கொஞ்ச நேரத்துக்கு முன்பு குடித்து வயிற்றை நிரப்பியிருந்த கள்ளு போதை மற்றொரு கண்ணையும் மறைத்திருந்தது.
கீழே கிடந்த சுக்ரீவனின் நெஞ்சில் ஒரு காலை தூக்கி மிதித்தான் வாலி.
அருகில் கிடந்த கூர்மையான மரத்தை தூக்கி சுக்ரீவனின் நெஞ்சுக்கு நேராக ஓங்கினான்.
யாரும் வாலியும் எதிர்பாராத வண்ணம்
பக்கத்து மலையிலிருந்து பாய்ந்து வந்த அம்பு ஒன்று வாலியின் நெஞ்சில் பாய்ந்தது.
நிலைக்குலைந்தான் வாலி.
வாலி மண்ணில் வீழ்வதற்கு முன்பாக ஆயிரம் பச்சிளம் சிசுக்கள் வாலியின் காலடியில் செத்து கீழே விழுந்தது.
########
No comments:
Post a Comment