Sunday, December 20, 2020
நீண்ட இரவு
Wednesday, September 23, 2020
சீசர் 💜
Saturday, August 29, 2020
Quarantine அய்யனார்
ராசாம காட்டேரி படையலுக்கு நைனா வீட்டு தலைக்கட்டு எல்லாம் கூடியிருந்தது.
எல்லாஞ்சேத்து மொத்தமும் நாலு குடும்பம் தான்.
நைனா வீட்டுக் கொல்லப்பக்கம் சனங்க கூடும்.
வீட்டுல ஆளுக்கொரு பண்டமா ஆக்கிக் கொண்டு வந்து ஒரு இடத்துல வைக்கும்...
களிமண்ணு புள்ளயார் புடிச்சு காட்டேரியை படையலுக்கு அழைக்கும்.
அழைக்கிறது தான் அந்த கணம்.
ஆனால் சமைக்கிறதுக்கு முன்னயே வந்து குத்துக்கால் போட்டு படையக்கார புளிய மரத்து அடியில் உக்கார்ந்து விடுவாள் காட்டேரி.
படையலுக்கு வரப்ப மட்டும் வெச்சுருந்த எல்லா ஊசிமணி பாசிமணி புலிப்பல்லு கரடிமயிரு நரிநகம் என்று சகலத்தையும் மாட்டிக்கொண்டு மேனாமிகினுக்கியாக வந்து உக்காந்துவிடுவாள்.
கீரைத்தண்டு வெட்டிப் போட்டு கருவாட்டு குழம்பு கிண்டி சட்டி நிறைய கொண்டு வந்தாள் மணியம்மா..
கொண்டு வரும்போதே சட்டிக்கு பின்னாடி மோப்பம் பிடித்த காட்டேரி, மணியம்மா மசுர புடிச்சு இழுத்து,
ஏ ஆத்தா..... இப்டி கொஞ்சம் இறக்கி வையேன் நக்கி பாத்துக்குறேன் என்றது.
ஆக்கியறக்கி உனக்கு தான கொண்டாறேன்?? அதுக்குள்ள ஏன் பெனாத மாதிரி அவுதி பறக்குற?? படையல்ல உக்கார இஞ்சூண்டு பொறும பத்தலையோ? வடவம் வாட்டி தாளிச்ச கெண்டக்குஞ்சி கொழம்பு வருது... இஞ்சிப்பூண்டு தட்டிப் போட்டு நாட்டு சாவ கொழம்பு வருது...
ஆட்டுக்கடா ரசம் அவிச்சு வெச்ச ரத்தம் பானைல தனியா பனமரக்கள்ளு இன்னதெல்லாம் வேணாமா ஆத்தாளுக்கு?பங்குடா போய் உக்காரு அத்தனையும் உனக்கு தான் என்று அதட்டினாள் மணியம்மா.
இந்த பெண்களுக்கு காட்டேரி ஒரு மாமியார் மாதிரி.
அதட்டி தான் சோறு போடுவார்கள்.
வாழையிலை நிறைந்தது.
காட்டேரிக்கு ஆனந்தம் தாங்கல..
வருசத்துக்கு ஒருக்கா போடுற படையல்..
மத்த நாளெல்லாம் பெரும்பாலும் பட்டினி தான்..
சில சமயம் பொழுது போய் கருவாடு ஆயுற கிழவிக கிட்ட நின்று ரெண்டு கெண்டத்தலை கேக்கும்.
வேலிய உரசிட்டு போற காட்டேரிப் பொம்பளய பாத்து குடியான வீட்டு கிழவிகளுக்கு நெஞ்சு தாளாது.
இந்தா போன்னு ரெண்டு கருவாட்ட கிள்ளி தூக்கி வீசிருவாளுக.
ஆனா இன்னிக்கு... மொத்த படையலும் இவளுக்கு தான்.
படையல் வெச்ச சனம் மொத்தமும் கோயிந்தா போட்டுட்டு திரும்பி பாக்காம கிளம்பிவிட்டன.
ஒத்தையாளா உக்காந்து மூச்சுப் பிடிக்க திண்றாள் காட்டேரி.
சேலை முந்தானையை உதறி வாயை துடைத்துக் கொண்டாள்.
ஏவ்வ்வ்..... ஒரு ஏப்பம்.ஆடுமாடு புள்ளக்குட்டி ஆம்பள பொம்பள மக்கசனம் அத்தனையும் நல்லாருக்கும் என் ரெண்டு கண்ணும் பாத்தமுச்சும்.... வாழ்த்திவிட்டு வயக்காடு நோக்கி நடந்தாள்.
ஆத்தங்கரையை தாண்டி பனமரக்காடு.
அதுக்கு பின்னாடி வெறும் வயல்வெளி தான்.
வயல்ல அங்கங்க சில வேப்பமரம் ஒதியமரம் ஒத்தமரமா நிக்கும்.
அதுல ஒன்னுல ஏறி கணுயில்லாத கிளையா பாத்து கண்ணு அசந்துக்குவா காட்டேரி.
நடந்து போற வழி நெடுக பயித்தங்கா வெதச்சுருக்கு...
எத்தி நடந்த செத்த சத்தம் தூரத்துல யாருக்கோ கேட்டுருச்சு.
வோவ்.... எவடி அவ பொம்பள?? இருட்டான நேரத்துல?? வயக்காட்டு வரப்புல??? பனமரத்து உச்சியிலிருந்து அய்யனார் குரல்.
நாந்தான் மச்சான்... ராசாம படையலுக்கு மனைக்கட்டு பக்கம் போயாறேன்...
அடி... அரைமயிரு சிறுக்கி... எவளுக்கு எவன்டிமச்சான்?? ஊரு பொறுக்கி திண்ணுற உனக்கு காவக்காரன் நான் மச்சானா??
நாக்கை துருத்திக்கொண்டுபனை மரத்திலிருந்து இறங்கி வந்தார் அய்யனார்.
வேட்டியை ஒரு உலுக்கு உலுக்கி இறுக்கி கட்டினார்.
என்னத்த சொல்லிட்டாங்கனு இப்ப மோடி வெக்கிற என்மேல?? நானாவது அப்பப்ப ஊருக்குள்ள போனோமா... நாலு மக்க மூஞ்ச பாத்தோமானு லாத்திட்டு வந்துடுறேன்..
ஆளான ஆம்பள பொழுதன்னைக்கும் தனியா தான குந்திருக்க!! பேச்சுத்தொணைக்கு செத்த நாழி உக்காந்து போலாம்னு வந்தா.... ரொம்ப தான் மூஞ்ச காட்டுறியே!!கோச்சுக்காம இந்த கருவாட்ட கடிச்சுக்க....
முந்தானையிலிருந்து ஒரு கருவாட்டு துண்டை தூக்கி கொடுத்தாள்.
எல்லா ஊரு அய்யனார் கோவிலை போலவும் ராயப்பட்டிண அய்யனார் கோவிலும் ஊருக்கு வெளியே வயல்வெளிக்கு மத்தியில் தனியாக தான் இருந்தது.
மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கி நிக்க ஒரு கீத்துக்கொட்டா கிடையாது.
ஊரை வெறிக்க பார்த்த மாதிரி அரிவாள் ஏந்தின ஐயஞ்செல.
ஐயஞ்செல எதுத்தாப்ள மேய்ச்சக்கார குதிரசெல.
குதிரைய சுத்தி குத்தி நிக்கும் வேல்கம்பு பத்து.
இத்தனை தான் மொத்த கோயிலும்.
சிலையை கட்டி பனைமரமா சுத்தி நிற்கும்.
பனை மரத்து ஊடால வேப்பரமும் அரசமரமும் கள்ளிச்செடியும் காட்டரளியுமா அண்டிக் கிடக்கும்.
பக்கத்துல போய் பார்த்தா கூட உள்ளருக்குற ஐயஞ்செல கண்ணுலாப்புடாது.
புதரை தாண்டி உள்ளார போக பாதைனு எதுவும் தனியா கிடையாது.
பாக்குறது தான் பார்வை, சீய்க்கிறது தான் தடம், நடக்குறது தான் பாதை.
வருசத்துக்கு ஒரு தடவ பங்காளிகள் கூடி கடா வெட்டி படையல் போடுவார்கள்.
அப்ப மட்டும் காட்ட கழிச்சு கிளைகளை களைந்து விடுவார்கள்.
எப்பவாவது எவனாவது வந்து எதாவது நேந்திக்கிட்டு சூடம் காட்டிட்டு போவான்.
மத்தபடி மொத்த நேரமும் அய்யனாரு பொழப்பு தனிமைல தான்.
அய்யனாரை தனிமை ரொம்பவே வாட்டியது.
தினந்தோறும் தனியாகவே இருந்தால் பொழுதை எப்படி தான் போக்குவது!
தன் சிலை மீது உக்காந்திருக்கும் காக்கா குருவிகளை கம்பெடுத்து விரட்டுவார்.
ந்தே... ச்சேய்... ஓடு... ந்தேய்...
வயலில் மேயும் காளை மாடுகள் மேல் ஏறி உக்காந்துக்கொண்டு கொஞ்ச நேரம் அங்குமிங்கும் சவாரி செய்வார்.
ட்ரூ... ட்ரூ... ஹெய்ய்ய்.. ட்ரேய்..
பனை மரத்து உச்சியில் ஏறி உக்கார்ந்துக்கொண்டு வயக்காட்டில் வேலை செய்யும் பொம்பளைகளை வேடிக்கை பார்ப்பார்.
அவர்களில் சிலரை மட்டும் ஒளிந்திருந்து சடைய பிடிச்சு இழுத்து பரிகாசம் பண்ணுவார்.
சிலைக்கு பின்னாடி ஒரு நாவல் மரம் உண்டு.
அதில் ஏறி உக்கார்ந்துக்கொண்டு கிளையை உலுக்குவார்.
கீழே விழுந்த பழங்களை ஒவ்வொன்றாக பொறுக்கி ஊதி ஊதி உச்சுக் கொட்டி திண்ணுவார்.
சொற்பமாக சில பட்டாம்பூச்சிகள் ராயப்பட்டிண வயக்காட்டில் உலாவித் திரியும்..
அவற்றை விரல்களில் ஏந்தி அவற்றோடு பேசிக்கொண்டிருப்பார்...
முதுகுல ஏதுத்தா மஞ்ச நெறம்??செல்லமணி வயக்காடு சூரியகாந்தி தோட்டத்துல பொரண்டெழுந்தியா??சோத்தாங்கை றெக்கைல நீலநெறம் நிறைஞ்சுருக்கே!நீலசேலை கட்டி வந்த எந்த பொம்பள முந்தானைல மோந்து வந்த??
இதெல்லாம் எத்தனை நாளைக்கு!? பிறை போனாலும் இதான்... பருவம் போனாலும் இதான்.. பொழுதே கழியாது.அய்யனாராக இருப்பது தான் எத்தனை சிரமம்!!
காட்டேரி மாதிரி யாராவது பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.. போதும் போதும்னு சொல்லுமளவுக்கு கதை வெச்சு தீர்த்து விடுவார்.
கருவாட்டை ஒரு கடி கடித்தார் அய்யனார்.
பலத்த படையல் போலயே!?
கவுச்சி வாசம் வீசிட்டேருக்கு.!?
ஆமான்றேன்!சாவக்கறி வாட்டி ஆட்டுக்கடா போட்டு மேஞ்ச மீனு காஞ்ச மீனுனு ஜமாச்சுப்புட்டானுவல்ல!!
அதுலயும் அந்த நைனான் மருமவ கெண்டக்குஞ்சு கொழம்பு ஒன்னு வெச்சா பாரு... உச்சு கொட்டி உச்சு கொட்டி எச்சி வறண்டு போனது தான் மிச்சம்...
ஏதோ கேட்டேனேனு ரொம்பத் தான் கதைக்காத...
எனக்கும் அடுத்த பிறை போய் படையல் இருக்கு ஆத்தா...காத்து கிடக்கேன்..
நீ காத்து தான் கிடக்க வருசம் முழுக்க... நான் தான் நாடுமேறி.. ஆனா உனக்கு ஊரு சனம் இருக்குல்ல!? குலசாமி கும்புடு போடுறவன் அப்பப்ப வந்து தான் உன்ன பாத்துட்டு போறானா?அனாதையா தான அனத்திட்டு கிடக்க??
ஒன்ட வந்த பிடாரிகளை ஊருக்குள்ள வெச்சுக்கிட்டானுவ...
வூட்டுக்கார கொலசாமிய காட்டுக்குள்ள நிறுத்திப்புட்டானுவ...
அயலான் பொண்டாட்டிக்கு உழக்குல ஊத்துவான் நெய்யி...
ஐயா ஐயானுகிட்டு வருசத்துக்கு ஒரு தடவ தான் வருவான் காட்டுப்பக்கம்....
அவன சொல்லி குத்தமில்ல...
நீ உம்ம்ம்னு சொல்லு... ஊருக்குள்ள போய் உன் வகையறா சனங்களா பாத்து மிரட்டி விட்டுட்டு வாரேன்!!
பசுமாட்டுங்க மடியில முடிச்சு போட்டு வுட்டா தானா வாரானுக உன் காலடிக்கு....
எட்டியேய்! அடிய கொடுத்தா மடிய கேப்பியே!!என் கிட்டயே வந்து என் சனத்தையே மெரட்டுவேன்றியா!?மசுர அறத்துடுவேன்!!
நீ இப்படியே பேசிட்டு கிட... அவனவன் மரக்கறி திண்ணுற தேவதைய பாத்துட்டு கும்புட போயிருவான்... நீ ஊரு மதிக்காத உதவாக்கரையா போகப் போற...
பக்கத்தில் கிடந்த வேல்கம்பை எடுத்து விரட்டினார் அய்யனார்.
போடி சிறுக்கி எழுந்து.... எனக்கு புத்தி சொல்ல வந்துட்டா....
என்னய அடிக்க வாய்யா... காட்டேரி நாக்கு கருநாக்கு.. நான் வாசாக்கு விட்டா பலிக்கும்....
இன்னும் செத்த நாழி நின்னா அடி வெளுத்துப்புடுவான் ஐயன்.
ஓட்டம் பிடித்தாள் காட்டேரி.
ஊரு கவனிக்காத ஆளாகிப் போனாலும் மக்க மேல மனசு அத்துப் போகுமா!?
பெத்த மனம் பித்து புள்ள மனம் கல்லு...
இருந்தாலும் ஐயனுக்கு சங்கடமாகவே இருந்தது.காட்டேரி சொன்னதும் நிசந்தான!இத்தனை காலமா இங்க தனிமையில கிடக்கோமே!வாரம் ஒரு கிழமையாவது சும்மாவாச்சும் வந்து பாத்துட்டு போறானுகளா இந்த பயலுக.!!
அப்பன் மேல அக்கறையேயில்ல!
பனமரத்து மேலே ஏறி உக்கார்ந்துக்கொண்டது அய்யனார்.ஓஓவென்று கத்தி ஒப்பாரி வைத்தது!
ஓஓஓஓஓஓ!
ஊரு சனத்து காட்டயெல்லாம் பாத்து நின்னேனே ராமுச்சும்!
மக்க கண்ணு காணலயா காவக்கார வேலுக்கம்ப!!!
காத்து கருப்பு அண்டாம காத்து நின்னேனே நாளுமுச்சும்.!
மக்க கண்ணு காணலயா காவக்கார வேலுக்கம்ப!!
உழுது வந்த ஆம்பளைக்கு ஐயன் ஒருத்தன் நான் தான!
ஐயன தான் மறந்துட்டியே ஆளில்லயா நினைப்புலயே!?
பிறத்தியாளாம் பொம்பளைக்கும் அப்பன்காரன் நான் தான!!
அப்பன தான் மறந்துட்டியே ஆளில்லயா நினைப்புலயே??
பச்சப்புள்ள பருவப்புள்ளைக்கு ஐயங்காரன் நான் தான!
ஐயன காண வாரலயே பேரப்புள்ள ஒன்னு கூட!!
ஓஓஓஓஓஓ!!!!
குலுங்கி குலுங்கி அழுதது அய்யனார்.
ஐயனோட ஒப்பாரி சத்தம் பக்கத்து ஊரு வீரன் கொல்லை வரை கேட்டது!
பாட்டு மொத்தமும் அனத்தல்,
போட்ட ஆட்டம் ஆதங்கம்,
மனசு முச்சும் அழுகை.
தான் செல்லமாக வளர்த்த நாயோ அல்லது தன் ஆத்தாளோ செத்துப்போன நாளன்று ஒரு சின்னப்பையனுக்கு இருக்கும் அந்த மனநிலையில் தான் அன்று இரவு முழுவதும் இருந்தார் அய்யனார்.
விடியற்காலையிலேயே ஐயன் தோப்புக்கு வந்தான் காளிங்கன்.
மக்கசனத்துலேயே அப்பப்ப வந்து ஐயனடி அகலேத்திட்டு போறது காளிங்கன் ஒருத்தன் தான்.
ராயப்பட்டிண ரெத்தினம் மிராசு வீட்டுல ஆடு மாடு குதிரை பாக்குறது காளிங்கன் தான்.
கூலிக்கு கேப்பை தான்..
சாமி சாமினு மிராசு கால கட்டிட்டு கிடந்தாலும் கஞ்சி குடிச்சது போக கால் காசு சேர்த்தது கிடையாது.
சாமர்த்தியமான பொண்டாட்டி அமைஞ்சுட்டதால பாதி வேளைக்கு மட்டுமாவது அடுப்புல அணல் விழுந்துட்டு இருக்கு...
ஐயா.... நான் காளிங்கன் வந்தருக்கேன்... முன்ன வந்து அருள் கொடு சாமி...
இப்படியெல்லாம் காளிங்கனை காக்க வெச்சதே கிடையாது அய்யனார்.
இன்னிக்கு ரொம்ப நேரமா அருளுக்கு அழைச்சும் ஆளை காணல...
தேங்காயை உடைத்து சூடத்தை கொளுத்தி வைத்தான்...சூடத் தீயை கண்டதும் லேசாக மனம் இறங்கினார் அய்யனார்.
என்னடா காளிங்கா?? என்ன இந்த பக்கம்??? ஆக வேண்டிய காரியம் எதாவது இருக்கா??ஏன்னா எதாவது காரியம் ஆகனும்னா தான் எல்லா பயலும் இந்த பக்கம் வருவீங்க???அய்யனார் பேச்சில் ஒரு இக்கு இருந்தது.
ஐயா...
ஊர காலி பண்ணிட்டு குடிய மாத்திக்கலாமுன்னு இருக்கேனுங்க... அதான் ஐயா கிட்ட உத்தரவு வாங்க வந்தேன்...
முடிவு பண்ணி கிளம்புனதுக்கு அப்பறம் என்னடா உத்தரவு?? சொந்த மண்ண விட்டுட்டு எங்கடா போறீங்க பொழப்பு தேடி??
சொந்த மண்ணு தானுங்க... ஆனா சோறு போடலயே!?
உருகுறது தான் நாங்க.. ஆனா ஒளி வேற எங்கயோல்ல அடிக்குது.!
காலம் முழுக்க உழைச்சாலும் கால் காசு சேக்க முடியல...
அன்னாடம் சோலில ஒரு நாள் கெட்டு போனாலும் அடுத்த நாள் கஞ்சிக்கு சட்டி சொரண்ட வேண்டியதா இருக்கு.. அதாஞ்சாமி வண்டிய கட்டுறேன்...
அது சரி... மகராசா வாழ்வு வாழ எந்தூரு கிளம்பி போறீங்க சமீன்தொர??
சங்கராரு கிட்ட போய் பேசிட்டு வந்தனுங்க...
கிழக்கால அறுவது மைலு நடைல பட்டவிளாகம்னு ஊரு....
நாலு கலம் நெல்லு ஒன்ற மரக்கா பயிரு ரெண்டேகால் திர வெக்கலு..
வருசத்துக்கு அளந்து குடுத்தா எட்டு மா நிலம் தாரேன்னாங்க...
என் உருப்படியே ஆறு கிடக்கு... உழுது அறுக்க அதுங்க போதாதுங்களா!? அதான் கிளம்பிட்டேனுங்க...
எலேய்... பட்டவிளாகம்னா தில்லைக்கரை ஒத்தக்காலான் நிலம்டா... ஒத்தக்காலான் சொத்து உருப்படாத சொத்துடா... சானு ஏறுனா மொழம் சறுக்கும்.. தேவையாடா உனக்கு??
தடுமாறி விழுந்தா கைய குடுத்து தூக்கி விடதுணைக்கு நீதான் இருக்கியே சாமீ!அடுத்த கிழமை வயிறு நிறையுமா வாய் நிறையுமானு தெரியாம மேலண்ட மக்க கால்ல விழுந்து மானங்கெட்ட கஞ்சி குடிச்சது என்னோட போகட்டுஞ்சாமீ!
என் புள்ளைங்களுக்கு அது வேணாம்...
நீதான் அறுவது மைலு கடந்து போறேன்றியே!
நான் வந்து தூக்கி விடுறதுக்குள்ள நீ விழுந்த இடத்துல கும்பி காஞ்சுடுமேடா!?
அதுக்கு தான் சாமீ உன்ன தேடி வந்தேன்... நீயும் நாதியில்லாம இங்க தனியா தான கிடக்க?? உன்ன கூட்டிட்டு போய் என் வீட்டு கொல்லைலயே வெச்சுக்கறேன்..
நாளான நாளுல உனக்கு படைச்சே நான் திண்ணுக்கறேன்.. உன் காலடி அகலுல தீயணையாம பாத்துக்கறேன்..
என் புள்ளைங்களுக்கு துணையா என் வண்டியோடயே வந்துடேன்ய்யா????
அய்யனாருக்கு திடுக்கென்று ஆனது...
எலேய்... உன்னோட நான் கிளம்பி வந்துட்டா இங்க உள்ள மக்க சனத்தை யாருடா காணுறது?
வயக்காட்டுல காவலுக்கு கட்டனும்...
காத்து கருப்ப முடிஞ்சு வெக்கனும்... கிணத்தடியில் பிசாசு விரட்டனும்...
ஆடுமாட தேத்தி வைக்கனும்...
அப்பப்ப ஆத்தங்கரைல பச்சப்புள்ளைங்க தவறி விழும்... தவறி விழும் புள்ளைங்க ஐயானு கூப்பிட்டு ஏமாந்து போயிடாதா?? காவக்காரன் இல்லாத ஊரு கள்ளன் புகுந்த காடாகி போயிடும்டா... தவிச்சு போயிடும்டா சனங்க...
இப்படி எதுவுமே பேசவில்லை அய்யனார்.
காளிங்கன் கேட்டது அத்தனை ஆசுவாசமாக இருந்தது அய்யனாருக்கு.தனிமைலயே தவிச்சு போய் கிடந்தோமே!!
கூட்டிட்டு போய் கொல்லையிலயே வெச்சுக்கறேன்றானே!
பார்வைலயே வெச்சுக்க ஆறு புள்ளைங்க பெத்து போட்டுருக்கான்..
இது போதாதா எனக்கு.!!!
காளிங்கனின் அழைப்பு எல்லாமுமான பொண்டாட்டி செத்த துக்கத்தில் இருக்கும் ஒருவனை, மடியில் கிடத்தி தலையில் கை வைத்து முடியைக் கோதி விட்டு நாங்க இருக்கோம் உனக்கு கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்வதை போல் இருத்தது.
அய்யனார் இப்போது ஒரு மார்பு நரைத்த இளம்பிள்ளையாகிப் போயிருந்தார்.
பிறந்து குளம்பு சீவி கொஞ்ச நேரமே ஆன பசுங்கன்றை போல் மகிழுள்ளம் துள்ளி குதித்தது.
விசும்பி விட்டார் அய்யனார்.
அய்யனாரின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது.
காளிங்கனை கட்டியணைத்துக் கொண்டார்.
கண்களில் அன்பை மட்டும் காணும் பச்சைக் குழந்தை இரு கைகளை நீட்டி யார் கூப்பிட்டாலும் தாவித் தோள்களில் ஏறிக்கொள்ளும்.
பசியில் இருக்கும் பாலன் உண்ண எதை கொடுத்தாலும் வாங்கி வாயில் போட்டுக்கொள்வான்.
வைராக்கியத்தில் இருக்கும் விடலை வரும் வாய்ப்புகளையெல்லாம் எக்கியணைப்பான்.
தனிமையில் இருக்கும் முதுமகனுக்கு குடும்பம் ஒன்னு கிடைச்சா போதாதா!
மாட்டு வண்டி முழுக்க பண்டம் பாத்திரத்தை அடுக்கியிருந்தான் காளிங்கன்.
வண்டிக்கு மேலேயும் மாட்டுக்கு பக்கத்துலயும் காளிங்கனோட ஒவ்வொரு மக்களும் நின்றனர்.
பொண்டாட்டி ரெண்டு ஆட்டை பிடித்துக்கொண்டாள்.
ஒரு கையில் வேல் கம்பை எடுத்துக்கொண்டான் காளிங்கன்.
மற்றொரு கையை மடக்கி சுண்டு விரலை மட்டும் அய்யனாரிடம் நீட்டினான்.
ஒரு கையில் குதிரை வடத்தை பிடித்திருந்த அய்யனார் மற்றொரு கையால் காளிங்கனின் சுண்டு விரலை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.