Sunday, December 20, 2020

நீண்ட இரவு

ராவா பகலான்னே தெரியாத மாதிரி வானம் இருட்டிக் கிடக்கு...
ரெண்டு நாளாக நிக்காத மழை..
ஊர் அல்லிக்குளம் நிரம்பி ரெண்டு படித்துறையும் மூழ்கிருச்சு... 
சுத்திருக்குற கருவக்காடு முழுக்க ஏரிக் கணக்கா தண்ணி...
ஆளு யாரும் வயக்காட்டுக்கு போகனும்னா கூட மேடு பள்ளம் தெரியாது.
காலுக்கு கீழ நழுவுறது பாம்பா தவக்களையானு யூகிக்க முடியாது.

ஆடு மாடெல்லாம் கொட்டாயில கட்டுன மொளக்குச்சிய தாண்டி ரெண்டடி கூட நகர முடியாம சேறு வேற சாணி வேற தெரியாம  ஒன்னுமண்ணா விழுந்து கிடக்கு...
அடிச்ச காத்துல முருங்கமரத்துலருந்து மூங்கிமரம் வரைக்கும் அத்தனையும் அங்கங்க கெளக்கெளயா சாஞ்சு கிடக்கு..
நிறைய இடத்துல கரண்ட்டு கம்பி அறுந்து போனதுல ரெண்டு நாளா எல்லா வீட்டுலயும் மண்ணெண்ண விளக்கு தான்.

மழைக்கு முன்னயே விறகையும் வரட்டியையும் கூரைக்குள்ள அடுக்கிக்கிட்ட வீடுங்கள்ல மட்டும் வயித்துக்கு கொஞ்சம் சோறு பொங்க முடிஞ்சுது.
மத்த வீட்டுலயெல்லாம் கஞ்சிக்கு என்ன கதியோ!! பக்கத்து வீட்டுக்காரனுக்கே தெரியாது. 

தண்ணி நிரம்ப வரப்பை உடைச்சு விடனுமேனு ஒருத்தரும் கவலைப்பட வேண்டாத மாதிரி, கம்மா காவா மட்டத்துக்கு நாத்தாங்கா மொத நட்டது வரை அத்தனையும் மூழ்கி கிடக்கு.
மொத்த ஊருமே வேலை வெட்டிக்கும் போகாம கடைகன்னிக்கு போகாம வீட்டுக்குள்ளயே முடங்கி போச்சு.


ஆடியோடு நீலாவுக்கு வயசு இருவத்தி மூனு.
கனுக்காலுக்கு கீழ பாவாடை தரையை கூட்டும்.
இறுக்கிக் கட்டும் தாவணிக்கட்டில் கழுத்துக்கு கீழ் நூலளவு தோலை கூட தேடினாலும் தவறியும் பார்த்திட முடியாது.
தெருவில் நடந்து போனால் விடலைகள் சொக்கி நிற்பார்கள்.
அவ எனக்கு தான் எனக்கு தான் என்று அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வார்கள்.
அதற்காக தனியே தங்களுக்குள்  பந்தயங்கள் வைத்துக்கொள்வார்கள்.
பங்காளி பயலுக சில பேர் இவளுக்கு அண்ணன் முறைல பொறந்து தொலைச்சுட்டோமேயென தமக்கு தாமே நொந்துக்கொள்வார்கள்.

புயலோடு
ஒத்தவிளக்கு வெளிச்சத்தில் ரேடியோ கேட்டுக்கொண்டு இருந்தாள் நீலா.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புயலால் தமிழகத்தில் எல்லா கடலோர மாவட்டங்களிலும் இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
பிஓபி பூஜ்ஜியம் மூன்று என்று பெயரிடப்பட்ட இந்த புயல் நாளை காலை கரையை கடக்கும் என்று,

ரேடியோவை நிறுத்திவிட்டு பூட்டியிருந்த கதவருகே சென்றாள்.
அப்பாவும் கைக்காரு சித்தப்பாவும் பேசிக்கொண்டு இருந்தனர்.

கைக்காரோட நிஜப்பெயர் வேல்முருகன்.
நாப்பத்தஞ்சு வயசாகியும் கல்யாணம் பண்ணிக்காத மனுசன்.
யாரும் அவருக்கு பொண்ணு கொடுக்க தயாரில்லை.
அதான் நிஜம்.
எப்ப பாரு குடி... மதியம் ஆகிட்டாலே மூட்டைய உடைச்சு முழுங்கிட்டு எங்கேயாவது விழுந்து கிடப்பவருக்கு யாரு பொண்ணு கொடுப்பா!?
ஒரு கால் வேற நடக்க வராது.
ஒரு பக்கமாக ஊணி ஊணி நடப்பார்.
எப்பவும் கோவில் வாசல்ல சின்னப்பசங்களை உக்கார வெச்சு வம்சம் பரம்பரை என்றெல்லாம் மும்முரமாக கிளாஸ் எடுத்துக்கொண்டு இருப்பார்.
ஊருல கிரிக்கெட் தோரணமெண்ட் வந்துட்டா போதும்... தெரு பசங்களுக்கு புது பேட் பந்தெல்லாம் வாங்கி தந்து அமர்க்களப்படுத்தி விடுவார்.
வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்.
அவர மாதிரி ஒரு மேஸ்திரி ஊருல கிடையாது.
அதனால கைக்காரன்ங்கறது அவர் தொழிலுக்கு கிடைத்த பட்டப்பெயர்.

கதவிடுக்கு வழியே காதில் வாங்கினாள் நீலா,

எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன்டா...
கேக்குற மாதிரியே தெரியல...
போன வாரம் குளத்தாங்கரைல அந்தப் பய கூட நின்னு பேசிட்டுருந்தானு சுந்தரம் வந்து சொல்றான்..
வெளிய தல காட்ட முடியல...
மெரட்டியும் பாத்துட்டேன் கால்ல விழுந்து கெஞ்சியும் பாத்துட்டேன்‌‌...
புடிச்சப் புடில நிக்கிறா...
சொந்தக்காரப் பயளுக எவனுக்காவது பாத்து கட்டிக்கொடுத்துடலாம்னாலும், ரெண்டாநாளே தாலியத்துட்டு வீட்ட விட்டு அவன் கூட ஓடிருவேன்றா ஓடுகாலிக் கலுத...
அப்டியெதும் நடந்துட்டா நான் நாண்டுக்கிட்டு தொங்குறத விட வேற நாதியில்ல கைக்காரா...

நீ நிச்சியமா சொல்லுணே...
அப்பறம் போனா வராது...

அப்புடி எதும் பெத்த பாசம் இருந்தா நான் ஏன்டா உன்ன கூப்புடுறேன்!?
முடிச்சு வுட்ரு...

பெருமழைக்கு நடுவே ஒரு பேரிடி இடித்தது...

மேல் தாழ்ப்பாளையும் சேர்த்து சாத்தினாள் நீலா.
பக்கத்திலிருந்த பீரோவை நகர்த்தி கதவோடு சேர்த்து அணைத்தாள்.
பதட்டத்தில் கைகள் உதறின.
சொம்பில் இருந்த தண்ணீரை ரெண்டு மொடக்கு முழுங்கினாள்.
தொண்டைக்கு கீழ் தண்ணீர் இறங்க மறுத்தது.
வீட்டிலிருந்து தப்பிக்கவே முடியாது.
அது ரொம்ப நல்லாவே தெரியும்.
தெருவை தாண்டி ஓடும் முன்னரே விரட்டி பிடித்து விடுவார்கள்.
அப்பறம் அவர்கள் விரும்பியபடியே கழுத்தையறுத்தோ விஷம் ஊற்றியோ தூக்கில் தொங்க விட்டோ கொண்று விடுவார்கள்.
நிச்சயம்.!
தான் கொல்லப்பட்ட பிறகு சந்துருவும் இவர்களால் கொல்லப்படலாம்.
அது ரொம்ப சுலபம்.
பாவம் அவனுக்கு கேட்பார் கிடையாது.
தான் தற்கொலை செய்துக்கொண்டு விட்டதாக மட்டும் யாரும் நினைத்து விட கூடாது.

ஒரு லெட்டர் எழுத வேண்டும்.
பேப்பரை தேடினாள்.
எதுவும் அகப்படவில்லை.
நேற்று வாங்கிய ராணி கிடந்தது.
ஏதோ ஒரு பக்கத்தை கிழித்தாள்.
கிழித்த பக்கத்தில் சிரித்துக்கொண்டு இருந்த நடிகையின் நெற்றியிலிருந்து எழுத ஆரம்பித்தாள்,

அன்புள்ள சந்துருவுக்கு,
என்னய கொலை செய்ய என் அப்பா திட்டம் தீட்டுகிறார் காலைல எப்படியும் நான் உயிரோடு இருக்க மாட்டேன் நீ பத்திரமாக இரு எங்காவது வெளியூருக்கு போய் விடு இந்த சமூகத்தில் நாம் வாழ்வு

பென்சில் உடைந்தது.

நீலா... கதவை திற... அப்பா கதவை தட்டினார்.

இருங்கப்பா வரேன்...

பேப்பரை நான்காக எட்டாக மடித்துக்கொண்டே
ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள்.
பேய் மழை பெய்துக்கொண்டு இருந்தது.

தலையில் கோணியை சாத்தியபடி லாந்தர் விளக்கோடு எங்கோ சென்றுக்கொண்டு இருந்தான் செல்வராசு.
அவனுக்கும் ஜன்னலுக்கும் ஏழெட்டடி தான் தூரம் இருக்கும்.
ஆனால் அடிக்கும் சாரலிலும் காற்றிலும் நீலா கத்தினாலேயொழிய அவள் அழைப்பது அவன் காதில் விழாது.

சத்தமாகவும் கூப்பிட வேண்டும், கதவுக்கு பின்னால் இருக்கும் அப்பாவுக்கும் அது கேட்க கூடாது...

செல்லம்.... டேய்... செல்லம்...

பக்கத்திலிருந்த வலையல் பெட்டியை தூக்கி ஜன்னல் வழியே வெளியே வீசினாள்...

செல்வராசு சுதாரித்தான்..

என்னம்மா?? என்னாச்சு??

இந்தா டா... இதை புடி...  பேப்பரை செல்வராசு கையில் திணித்தாள்...

எவ்ளோ நேரம் நீலா??? உள்ள என்னா பண்ற???


வரேன்.... மாட்டுக்கு வெக்க அள்ளி போட கொட்டாப்பக்கம் போனேன்... துணி நனைச்சுருச்சு... அதான் வேற தாவணி மாத்திட்டுருக்கேன்...

சீக்கிரம் ஆகட்டும்....


டேய்... இதை எப்படியாவது கொண்டு போய் கீழத்தெரு சந்துரு அண்ணன் கிட்ட குடுத்துடுடா... அக்காவுக்காக இதை பண்ணுடா செல்லம் கெஞ்சிக்கிறேன்டா...

என்னம்மா இது பேப்பரு??

 எதுவும் கேக்காத... இதை எடுத்துட்டு முதல்ல இடத்தை காலி பண்ணு.... போ... விரட்டினாள்.


செல்வராசு எதிர்வீட்டு முருகேசன் சித்தப்பா புள்ள.. சித்தப்பா தான் ஆனா கொஞ்சம் தூரத்து பங்காளி முறை ஆகும்.
செல்வராசுக்கு ஒரு வயசு ஆகுறதுக்கு முன்னவே அவன் அம்மா தீக்குளிச்சு செத்து போச்சு.
பொண்டாட்டி மேல சந்தேகம்.
நெதம் புருசன் பேசுற சொல்லுக்கு அஞ்சியே உசுர மாய்ச்சுக்கிச்சு பாவம்.
சித்தப்பாவோட கேள்விய விட
சாவுற அன்னிக்கு மொத்தமா சுடுற கங்கு பெருசா வேக வெச்சுடாதுனு நினைச்சுதோ என்னவோ தெரியல. 
ஆனா அந்த சித்தி ரொம்ப தங்கமானவங்க..
நான் எப்போ வீட்டுக்கு போனாலும் பானைல போட்டு வெச்ச அவங்க தோட்டத்து மாம்பழம், நெல்லிக்கானு என்னையே பவுனா  பாத்துப்பாங்க.

அவங்க செத்ததுக்கு அப்பறம் செல்வராசு பாதி கிழமை எங்க வீட்டுல தான் வளந்தான்.
பாதி கிழமை ஸ்கூல்ல என் பக்கத்துல தான் உக்காந்துருப்பான்.
தீவாளிக்கும் பொங்கலுக்கும் ஜவுளி போட போனா அவனுக்கும் சேத்து தான் ஒரு சட்டை எடுப்போம்‌.
அவனுக்கு மூனு வயசு இருக்கும்போது எங்க பெரியாத்தா அவன் கிட்ட ஆயாவ கட்டிக்கிறியானு கேட்டப்ப, இல்ல நான் நீலாக்காவ தான் கட்டிப்பேன் அப்டினான்.
என் மேல அவ்ளோ பிரியம்.
ஊரு பசங்க ஸ்கூல் பசங்கனு எனக்கு வந்த லவ் லெட்டர்ல பாதிக்கு அவன் தான் போஸ்ட்மேன்.

அஞ்சு வயசு வரைக்கும் அவனுக்கு பேச்சு வராது..
அதனால அவனுக்கு ஊமப்புள்ளனு பேரு. இப்பவும் கூட எங்க பெரியாத்தா அவன அப்படி தான் கூப்பிடும்.
சின்ன புள்ளையாருக்குறப்ப மடில தூக்கி வெச்சுட்டு வாய்ல பச்சரிசிய அள்ளி போட்டுக்கிட்டு நான் தான் அவனுக்கு பேச்சு பழக்குனேன். 
என் உள்ளங்கைலயே வளந்த புள்ள..
பத்தாவது பரீட்சைக்கு அப்பறம் தான் இப்பலாம் ரெண்டு மூனு வருசமா வீட்டுக்கெல்லாம் வரதில்ல.
நான் அவன செல்லம்னு தான் கூப்டுவேன்.. அவன் என்ன அம்மானு கூப்பிடுவான்..

இப்ப கதவ திறக்குறியா இல்லையா நீ???

இருங்கப்பா வரேன்...

பீரோவை சன்னமாக நகர்த்தி விட்டு கதவை திறந்தாள்.

இப்ப எதுக்கு நொய் நொய்னு கதவ தட்டிட்டு இருக்கீங்க??

செல்லியாயி கோயிலு படையல் கஞ்சி கொண்டாந்தான் கைக்காரன்... இந்தா குடிச்சுட்டு போ...டம்ளரை நீட்டினார்.

இல்ல எனக்கு பசிக்கல...

கோயில் கஞ்சி... 
ராவுக்குள்ள மொடக்கனும்... குடிச்சுட்டு படு...

எனக்கு பசிக்கல... வேணாம்னு சொல்றேன்லா!?

வெளிக்கதவை தாழிட்டு விட்டு சேலை முந்தானையில் வாயை மூடி சமையற்கட்டு பக்கம் ஓடினாள் அம்மா.

பளாரென்று நீலாவை கன்னத்தில் அறைந்தான் கைக்காரன்.

கையிலிருந்த டம்ளரை தட்டி தூக்கியெறிந்தாள் நீலா..

கழுத்திலிருந்த துண்டை எடுத்து நீலாவின் கைகளை பின்னால் கட்டினான்.

ஐய்யயோ என்ன கொல்லுறாங்களே.... கேக்க ஆளில்லயா.... கத்த ஆரம்பித்தாள்... கொலை பண்ண பாக்குறாங்களே... அம்மா நீயாவுது கேளேன்மா... அடிக்கிறான்மா... ஐயோ... காப்பாத்துங்களேன் யாராவது... அப்பா.... உன் முன்னயே அடிக்கான்ப்பா.. கேளுப்பா அப்பா....

அடிக்கும் புயலில் அவள் கத்தியது எதுவும் வெளியே கேட்கவில்லை.

சத்தம் வராமல் தலையில் அடித்துக்கொண்டு வெளியே கிளம்பினார் நீலாவின் அப்பா...


நீலாவின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து
கால் முட்டியை மடக்கி
மல்லாக்க கிடந்தவளின் கழுத்தில் அணைத்தான் கைக்காரன்.

குரல்வளை இறுகி கண்கள் வெளியே பிதுங்கின...
இருமினாள்... திமிரினாள்... திணறினாள்...இரைத்தாள்..
 மூச்சு விடுவது முடியாமல் தலையை சிலுப்பினாள்.. கண்ணீர் கசிந்தாள்...

கையிலிருந்த கொல்லித்தண்ணியை  வாயில் ஊற்றினான்.

என்ன கொண்ணாலும் என் கட்ட வேகாதுடா....என்ன மாச்ச  எல்லா பயளும் மண்ணா தான்டா போவிங்க... கஷ்டப்பட்டு அரை தொண்டையில் பேசினாள்...

இன்னொரு பளார்...
கால் முட்டியால் நெஞ்சில் ரெண்டு இடி இடித்தான்.

முழுவதும் காலியான மருந்து பாட்டிலை தூக்கி தூரம் வீசினான்.

அரை மயக்கத்தில் இருந்தாள் நீலா...

கையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தன் தலையில் கட்டிக்கொண்டு வெளியே வந்தான் கைக்காரன்.

அம்மா... என்ன காப்பாத்தேன்மா... தண்ணி குடுமா தொண்டயெல்லாம் எரியுது.... தாங்க முடிலமா... 
நெருப்பு வெச்சாப்ள இருக்கு... தண்ணி ஊத்துமா... நெஞ்சு கரிக்கிம்மா... முடியலம்மா... பச்சத்தண்ணிக்கி பிச்ச கேக்க வெக்கியேம்மா...தண்ணிம்மா... ம்மா...

நீலாவை நோக்கி ஓடியவளை சவட்டி நிறுத்தினான் கைக்காரன்..
என்ன பண்ண போற??? ஒம்பொண்ணோடச் சேத்து ஒன்னயும் நசுக்கிருவேன்... .போய் ஓரமா உக்காரு என்றான்...

முந்தானையில் முகம் பதுக்கி ஓரமாய் உக்கார்ந்து மௌன ஒப்பாரி வைத்தாள் அம்மா...

இழுத்துட்டு கிடக்குணே!
இப்டியே கொண்டு பொய் கொளுத்திடுவோம்.. உசுரு போவுற வரை உக்காந்துருந்தா ஆவாது‌‌... காத்தோட காத்தா கொண்டு போய் தள்ளிருவோம்... புயல் காத்தோட போயிருச்சுனா சத்தமில்லாம முடிஞ்சுரும்.. அதாஞ்சரி...

என்னமோ பண்ணுடா என்ன கேக்காத என்று ஓரமாக போய் உக்கார்ந்து விட்டார் நீலாவின் அப்பா.

பின் வாசலை திறந்து வெளியே எட்டி பார்த்தான் கைக்காரன்.

பங்காளிக்கார விடலைக நாலு பேர் மரத்தடியில் நின்றுக்கொண்டு இருந்தனர்.

டேய்... பெருமாளு... கதிரேசா...சுரேசு...

ஓடி வந்தவன் மூன்று பேரும் ஆளுக்கொன்றாய் சொல்லு மாமா சொல்லு சித்தப்பா என்றார்கள்.

சேதி தெரியுமா???

அம்மா சொன்னுச்சு மாமா... இப்பவா காலைலயா?? என்றான் கதிரேசன்.

பாதி முடிஞ்சுருச்சு... இப்பவே அள்ளி போட்டுட வேண்டியது தான்... ஒருத்தன் மட்டும் வந்து கைய புடி... மித்த பேரு அங்கங்க கிடக்குற டயரு ட்யூபயெல்லாம் அள்ளிட்டு வாங்கடா.. கட்ட எப்டி வேகாம போகுதுனு இன்னிக்கு பாத்துடுறேன்...

கதிரேசனும் கைக்காரனும் ஆளுக்கொரு கையாக பிடித்து நீலாவை கயித்து கட்டிலில் கிடத்தினர்.

அதுவரை சத்தம் வராமல் சும்மா அழுதுக்கொண்டு மட்டுமே இருந்த அம்மா ஓடிப்போய் ஒரு இனுக்கு குங்குமத்தை கொண்டு வந்து நீலா நெற்றியில் வைத்துவிட்டு ஓவென்று ஒப்பாரி வைத்தாள்.

இதுக்கெல்லாம் இப்ப நேரமில்லந்தா... 
ஒரு வாரம் சென்டு எல்லாத்தையும் வெச்சுக்க....என்று விட்டு கயித்து கட்டிலை ஆளுக்கொரு காலாக பிடித்து தூக்கினார்கள்.

அரை மயக்கத்தில் பெனாத்திக்கொண்டே கிடந்தாள் நீலா.

அடிக்கும் மழை கட்டிலோடு சேர்த்து மொத்தமாக அனைவரையும் நனைத்திருந்தது.

ஊரே ஒரே இருட்டு..

பின் வாசல் வழியாகவே சுடுகாட்டுக்கு கட்டிலோடு தூக்கி சென்றார்கள்.

விரிந்திருந்த இருளுக்கு நடுவே மின்னலொன்று பளீரென விளக்கெரிக்க,
கட்டிலின் வலது பின்னங்காலை தூக்கி வருவது செல்வராசு என்று கவனித்தாள்..

உளறும் வாக்கியத்தில் கைகளை நீட்டி...

டேய்... செல்லம்... லட்தர குடுட்டியாடா???

நீட்டிய நீலாவின் கைகளை தட்டிவிட்டு செல்வம் சொன்னான்,

ஏன்டி தேவிடியா... உனக்கு இங்கன உள்ளவன்லாம் ஆம்பளயா தெரியல... கீழத்தெரு பய கேக்குதா?? செத்தொழிடி முண்ட...

அடுத்த நொடி வெட்டிய மற்றொரு மின்னலின் வெளிச்சத்தில் சுற்றியிருந்தவர் யார் முகங்களும் நீலாவுக்கு தெரியவில்லை.

Wednesday, September 23, 2020

சீசர் 💜

“எல்லா ஹேட்ச்சஸையும் மூடியாச்சா ஜார்ஜ்? Copy??”

“Yes, copy... மூடியாச்சு மைக்கேல்... எல்லாரும் அவங்கவங்க ஷெல்டர்ல பாதுகாப்பா இருக்காங்க...” 

“Team, இது நமக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை, Roscosmos headquartersலருந்து கொஞ்ச நேரம் முன்ன ஒரு தகவல் வந்து இருக்கு. நம்மளுடைய ஆர்பிட்ல ஒரு பெரிய அளவிலான விண்வெளிக் குப்பை வந்துட்டு இருக்கு.
ரொம்ப அபாயகரமான க்ராஸிங்கா கருதப்படுற இந்த சூழ்நிலையை எந்த அசம்பாவிதங்களும் இல்லாம நம்மளோட இந்த ஸ்டேஷன் இதுக்கு முன்ன பல முறை பாதுகாப்பாக் கடந்திருக்கு. 
இந்த முறையும் அதுவே நடக்கும்னு வேண்டிக்குவோம்” 

மைக்கேலின் தகவலுக்கு மறுமொழியாக இன்டெக்ரேட்டட் ஆடியோ சிஸ்டத்திலிருந்த மற்ற ஏழு பேரின் குரலும் ஒரு சேர,
“Yes sir...” என்று ஒலித்தன. 

ஜார்ஜ் தனக்காக ஒதுக்கப்பட்ட ஷெல்டரில் கால்களை மடக்கி அமர்ந்திருந்தார். ரொம்பவே குறுகலான இடம் அது. மொத்த ஸ்டேஷனிலும் பாதுகாப்பான இடம் என்றால் அது தான்.
அசம்பாவிதங்கள் நேருவதற்கு வாய்ப்பிருக்கும் தருணங்களிலெல்லாம் ஆஸ்ட்ரோனாட்ஸ் தங்களை தற்காத்துக் கொள்ள அடையும் புகலிடம் இந்த சேஃப்டி ஷெல்டர்ஸ்.
எப்படி நெருக்கி உட்கார்ந்தாலும் பக்கவாட்டில் நான்கைந்து இஞ்ச்சை தாண்டி காலியிடம் கிடையாது..
ஒரு நெருக்கமான கூண்டுக்குள் அடைக்கப்பட்டது போல் தான் அந்த இடம் நம்மை உணர வைக்கும்.
பயணத்துக்கு முன்பு நான்கு ஆண்டுகள் சிறப்பு விண்வெளிப் பயிற்சிகள் எடுத்திருப்பினும், எல்லா பயிற்சிகளும் எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாருக்கும் உதவுவதில்லை.
அந்த குறுகலான இடம் தன்னை ரொம்பவே அச்சுறுத்துவது போல் உணர்ந்தார் ஜார்ஜ்.
சில நிமிடங்களில் தன் நாடித்துடிப்பு அதிகமாவதாக தானே உணர்ந்தார். 

அவர் இதற்கு முன்பு அமெரிக்க வான்படை பயிற்சிப் பிரிவில் தலைமை அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.
பல பைலட்டுகளுக்கு ஜி-ஃபோர்ஸை எதிர்கொள்ள பயிற்சியளித்தவர். இருப்பினும், இந்த சூழ்நிலையைக் கடப்பதற்கு என்னமோ கடினமானதாக இருந்தது. அதற்கிடையில் கூடவே சில மோசமான நிமித்தங்களையும் அங்கே அவர் உணர்ந்தார். 

இன்னும் இரண்டொரு நிமிடங்கள் தான். அந்த ஸ்பேஸ் டெப்ரிஸ் மையத்தை கடந்துவிட்டால் நாம் பாதுகாப்பாகிவிடலாம். 
கண்களை இறுக மூடிக்கொண்டார். 
தன் சட்டைப் பையில் இருந்த ஒரு கவரை எடுத்து அதிலிருந்து ஒரு கலர் மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டார். 
அந்த குறுகலான ஷெல்டரும், அபாயகரமான சூழலும் மனதிலிருந்த பல பழைய நினைவுகளை அகழ்ந்தன.

################

தலைக்கு மேலே இருக்கும் கதவை திறந்த அவர் மகள் கேத்தி,
“அப்பா நீங்க மாட்டிக்கிட்டீங்க” என்று கத்தினாள். 

அலமாரியிலிருந்து, “ஐய்யயோ.... கண்டுபிடிச்சுட்டியா!???” என்றபடி வெளியே வந்தார் ஜார்ஜ்.

 ஜார்ஜின் தோள்களில் ஏறிக்கொண்டாள் கேத்தி. 
 எல்லாரும் கிஃப்ட் கொடுத்துட்டாங்க.. நீங்க இன்னும் எனக்கு எந்த கிஃப்ட்டும் கொடுக்கல. 
 என்னை மிச்செல் அங்கிள் கடைக்குக் கூட்டிட்டுப் போங்க. அந்த ரெட் கலர் ஹவர்போர்ட் எனக்கு வேணும்” சிணுங்கத் துவங்கினாள் கேத்தி. 
 
தோள்களில் தொங்கிக் கொண்டு இருந்த மகளைக் கழுத்து வழியாகச் சுற்றி கீழே இறக்கி நெற்றியில் முத்தமிட்டார் ஜார்ஜ்.

 கேத்தியின் இரு கைகளையும் தன் கைகளுக்குள் சேர்த்துக்கொண்டார்.
 அந்த தேதி கேத்தியின் ஐந்தாவது பிறந்தநாள். 
 
“அப்பா உனக்கு வேற ஒரு கிஃப்ட் வாங்கி வெச்சுருக்கேன் தெரியுமா!?”

“என்ன கிஃப்ட்?? அப்ப எனக்கு ஹவர்போர்ட் கிடையாதா??” 

“இல்ல, இது அந்த ஹவர்போர்ட விட பெரிய கிஃப்ட்... நீ அதைப் பாத்தா உனக்கு ரொம்ப பிடிச்சுடும்...”

“அப்படியா?? அப்ப எனக்கு அது இப்போவே வேணும்...” என்ற கேத்தியின் கண்களைத் தன் கைகளால் மூடினார் ஜார்ஜ். 

“நீ ரெடியா கேத்தி??” 

“ம்ம்ம்ம்ம் அயம் ரெடி...”

################

எதிர்வந்த விண்வெளி குப்பைகள் ஸ்டேஷனை சரமாரியாக மோதின. சேஃப்டி, வால்வ்ஸ், ஏர்லாக், ஹேட்ச், ஃபயர், ப்ராக்ஸிமிட்டி அலாரம்கள் என்று ஒன்று விடாமல் அனைத்தும் வீல்வீலென்று கத்தின. 

மீடியத்தில் மைக்கேல் தொடர்பு கொண்டார்.
"Team... We are under critical situation... குப்பைகள் மோதுனதுல ஸ்டேஷனோட பல சேம்பர்ஸ் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்கு... 
நாம பெரிய பிரச்சனைல இருக்கோம்... நம்மளோட மல்டிப்பர்பஸ் மாட்யூல்ஸ் ரொம்பவே சிதைஞ்சுருக்கு... 
ஆப்ரேட்டிங் டீம் உடனே அந்த ஹேட்ச்சுக்குப் போய் அதைச் சரி செய்யுங்க..." 

இப்படி ஏதோ ஒன்று நடக்கப்போவதாக ஜார்ஜ் உணர்ந்த நிமித்தங்கள் உண்மையாகிப் போயின.

ஜார்ஜும், அலினா கபேவாவும் தான் எமெர்ஜென்ஸி ஆப்ரேட்டிங் டீம் பொறுப்பாளர்கள்.
அவர்கள் இப்போது உடனடியாகப் பிரச்சனை இருக்கும் இடத்துக்குப் போய் ஆய்வு செய்து NASAவுக்கும், ROSCOSMOSக்கும் தகவல் தெரிவித்தாக வேண்டும்.

சிதைந்திருக்கும் மாட்யூலை நோக்கி இருவரும் வேகமாக விரைந்தனர்.
சேம்பர் முழுக்கச் சிதைந்திருந்தது. இந்தச் சேம்பரில் தான் ஸ்டேஷனில் உள்ள அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்குரிய துணிகள் கருவிகள் என அனைத்தும் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும்.
இது ஸ்பேஸ் ஸ்டேஷனின் ஒரு godown மாதிரி. இப்போது அந்த மாட்யூல் சிதைவுக்குள்ளானதில் உள்ளே இருந்த உணவு பெட்டகங்கள் மற்றும் இதர உதவிப் பொருட்கள் வெளியில் பறந்துவிட்டன.
 மாட்யூல் சுவர்கள் உடைந்ததில் ஸ்டேஷனின் ரெஃபரன்ஸ் டைரக்ஷனே மாறும் அளவுக்கு காற்றழுத்தம் மாறிப்போனது.

 நோடுக்கு வெளியே நின்று சில நிமிடங்கள் ஆய்வு செய்யக் கூட முடியாதபடியான சூழ்நிலை தான் ஜார்ஜுக்கும், கபேவாவுக்கும். 
 
தற்சமயம் மல்ட்டிப்பர்பஸ் மாட்யூலை அன்டாக் செய்து விடவில்லையெனில் அந்த ஒற்றை நோடின் சிதைவினால் மொத்த ஸ்டேஷனும் கூட சுக்கு நூறாக நொறுங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. மாட்யூலை கழட்டி விட்டுவிடலாம் என்று யோசனை சொன்னாள் கபேவா. ஜார்ஜுக்கும் இதுவே சரியான யோசனையாகப் பட்டது.
டாக்கிங் அடாப்டரில் எதுவும் பிரச்சனையில்லை. 
இன்னும் ஆறு நாட்களில் பூமியிலிருந்து ரீசப்ளை ஷிப் ஸ்டேஷனுக்கு வரப்போகிறது.
அதுவரை இந்த உணவு மற்றும் அடிப்படை தேவை பொருட்களின் தட்டுப்பாட்டினை சமாளித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர் இருவரும். 

"நாசா... நான் ஐஎஸ்எஸ்லருந்து ஜார்ஜ்... Copy??" 

"Yes sir, copy. ஸ்டேஷனோட ஸ்டேடஸ் என்ன? டேமேஜஸ் எந்தளவுக்கு இருக்கு? ஆஸ்ட்ரோநாட்ஸ் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே?" 

"இல்லை, எல்லாரும் பத்திரமா இருக்கோம். ஆனா, இங்க மல்டிப்பர்பஸ் மாட்யூல்ஸ் ரொம்ப சிதைஞ்சுருக்கு.
உள்ள இருந்த கருவிகளும் உணவு மற்றும் அடிப்படை சேமிப்புகளும் வெளியே பறந்துடுச்சு.
மாட்யூலோட அல்ஃபா மற்றும் கலிலியோ ரெண்டு சேம்பர்களும் சரி செய்ய முடியாத அளவுக்கு சிதைஞ்சுருக்கு.
 அட்மோஸ்பியரிக் ப்ரெஷர் டீவியேட் ஆகுது..
 எங்களுக்கு வேற‌ வழி இல்லை. இப்ப நாங்க டெஸ்லா நோடை அன்டாக் பண்ண போறோம்.
 
"ஓகே சர்... டாக்கிங் அடாப்டர் வர்க்கிங் ஸ்டேடஸ் என்ன?" 

"அடாப்டர்ல எந்த பிரச்சனையும் இல்ல" 

மறுபக்கம் கபேவா இதையே ரஷ்யனில் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
அவளும் தலையசைக்க, அன்டாக்கிங் லிவரை கபேவாவும் ஏர்லாக் லிவரை ஜார்ஜும் கீழே அழுத்தினர். 

###########

டோர் லிவரை அழுத்தி கதவைத் திறந்தால் மறுமுனையில் கேத்தி நின்று கொண்டு இருந்தாள்.
அவள் இப்போது மேடிசனில் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கிறாள்.
அங்கிருந்து எப்படி கலிஃபோர்னியா வந்தாள் என்று ஜார்ஜுக்கு ஒரே அதிர்ச்சி.

 பொதுவாக, கலன் ஏவுவதற்கு முன்னாடி நாள் ஆஸ்ட்ரோநாட்ஸை வெளியாட்கள் யாரும் சந்திப்பதை நாசா அனுமதிப்பதில்லை.
 ஆஸ்ட்ரோநாட்ஸின் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே ஆயினும், நேரடியாகச் சந்தித்தல் முடியாது.
 இருந்தாலும், கேத்தி எப்படியோ அனுமதி வாங்கியிருக்கிறாள் அல்லது திருட்டுத்தனமாக எப்படியோ உள்ளே நுழைந்திருக்கிறாள். 
 
"யாராவது பாக்குறதுக்கு முன்ன சீக்கிரம் உள்ள வா" என்று கையைப் பிடித்து உள்ளே இழுத்தார் ஜார்ஜ். 

"நீங்க வெளியே வாங்கப்பா" என்று சிரித்தபடி ஜார்ஜை வெளியே இழுத்தாள் கேத்தி. 

"வெளியவெல்லாம் போக முடியாது, டைரக்ஷன் டீமுக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும்." 

"அதெல்லாம் நான் பாத்துக்குறேன், என் கூட வாங்க" என்று இழுத்துப்போனாள். 

இருவரும் யாருக்கும் தெரியாமல் அலுவல் விடுதியின் சமையலறை வழியாகப் பதுங்கி வெளியே இருக்கும் பார்க்குக்கு வந்தனர். 

"இன்னும் ஆறு மாசத்துக்கு உங்களை பார்க்க முடியாது, நீங்க பக்கத்துல இல்லாம உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்ப்பா.
வேலைக்குப் போனதும் என்னை மறந்துடாதீங்க.
நான் ஐஎஸ்எஸோட பொசிஷனை ட்ராக் பண்ணிட்டே இருப்பேன்.
நீங்க எப்போயெல்லாம் கலிஃபோர்னியாக்கு மேல பறக்குறீங்களோ அப்போயெல்லாம் நான் இந்தப் பார்க்ல இதே இடத்துல நின்னு உங்களுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுப்பேன்" என்று கட்டியணைத்துக் கொண்டாள். 

"உன்ன எப்படிம்மா நான் மறப்பேன்! எதுவுமே இல்லாத வெளியிலும், அப்பா உன்னப் பத்தித் தான் நினைச்சுட்டு இருப்பேன்." 

"உங்களுக்காக நான் ஒன்னு வாங்கிட்டு வந்தேன்" என்று ஒரு கவரைக் கையில் கொடுத்தாள்.
அந்தக் கவர் முழுக்க கலர் மிட்டாய்கள் இருந்தன.
என் ஞாபகம் வரப்பல்லாம் இந்த கேண்டில ஒன்னு எடுத்து வாய்ல போட்டுக்கங்க. நாக்குல இருக்குற இனிப்பு போலவே நான் உங்க கூடவே இருப்பேன்."

 "அப்போ இந்த பாக்கெட் பத்தாதே! இதை நான் அஞ்சு நாள்ல காலி பண்ணிடுவேனே!" ஜார்ஜ் சிரித்தார்.

##############

குழுவில் இருந்த எட்டு பேரும் கூடியிருந்தனர். 
மைக்கேல் துவங்கினார்.
 இது நாம யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம். 
 வழக்கம் போல ஆர்பிட்லருந்து கடந்து போயிடும்னு நம்புன குப்பைகள் இப்படி மோசமா மோதி நிறைய சேதங்களை ஏற்படுத்திடுச்சு. 
 நல்ல வேளையா நம்மளோட ஃபங்ஷனல் மாட்யூலுக்கு எதுவும் ஆகல. 
 அதனால நம்ம பவர் சப்ளை, ப்ரொபல்ஷன் யூனிட் நல்லபடியா இருக்கு. இப்போதைக்குச் சில மைனர் ரிப்பேர் வேலைகள் இருக்கு. 
 நாம ரெண்டு குழுவா பிரிஞ்சு EVAல தான் இதைச் சரி செஞ்சாகணும். 
 அப்பல்லோ டீம் ஜார்ஜ் அண்டு வில்லியம்ஸ், ஸ்புட்னிக் டீம் கபேவா அண்டு ஸ்டாலின். 
 லியனடோ மாட்யூல்ல இருக்குற செர்வர் ஆண்ட்டனா பிரச்சனையை ஸ்பேஸ்வாக்ல சரி செய்யுங்க." 
 
ஒருமித்த குரலில் "ஓகே சர்" என்ற சத்தம் எழுந்தது. 

"வில்லியம்ஸ், நம்ம கிட்ட இன்னும் எவ்வளவு உணவு மிச்சம் இருக்கு?"

"நாற்பது பாப் வரைக்கும் இருக்கு சர்.
 இன்னும் ஆறு நாள்ல ரீசப்ளை ஷிப் வருது அது வரை நாம இந்த ரேஷனை வெச்சு தாராளமா சமாளிக்கலாம்."
 
"தாராளமா எல்லாம் வேணாம். எவ்வளவு சிக்கனமா முடியுமோ, அவ்வளவு சிக்கனமா பயன்படுத்துங்க." 

"ஓகே சர்..." 

ஜார்ஜும், வில்லியம்ஸும் ஸ்பேஸ்வாக்கில் இருந்தனர். 
ஸ்டேஷனில் இருந்து லீ-வான் தான் பழுதுக்கானப் பொசிஷன் குறிப்பு அறிவிப்புகளை வழங்கிக்கொண்டிருந்தார். 
வில்லியம்ஸ் ஆண்ட்டனாவைத் திருப்பி, சரி செய்து கொண்டு இருந்தார். 
ஜார்ஜ் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உதவிகளை செய்து கொண்டு இருந்தார்.

 ஹெல்மெட் ஸ்பீக்கரில் லீவானின் கட்டளை வந்தது. 
 "டேடா கன்ஃபர்மேஷன் 100%. ஓகே ஓகே ஆண்ட்டனாவ இதே க்ராஃப்ல அப்படியே ஃபிக்ஸ் பண்ணுங்க.. 
 வில்லியம்ஸ் காப்பி? ஜார்ஜ் காப்பி?
  திரும்பவும் சொல்றேன், இதே க்ராஃப்ல ஃபிக்ஸ் பண்ணுங்க..." 
  
ஹெல்மெட்டுக்குள் இந்தக் குரல் ரேடியோ வாய்ஸில் சத்தமாக ஒலித்துக்கொண்டே இருந்தது. 
"ஜார்ஜ் காப்பி??" 

##############

கண்ணாடிக்கு ஒரு பக்கம் இன்று ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு பயணப்படப் போகும் வீரர்களான ஜார்ஜும், ஸ்டாலினும் உட்கார்ந்திருக்க, மறுபக்கம் அவர்களை வழியனுப்ப வந்த நண்பர்களும் உறவினர்களும் அமர்ந்திருந்தனர்.

 ஸ்பீக்கரில் ரேடியோ வாய்ஸில் டைரக்டர் ஜெனரல் பேசினார். 
"ஜார்ஜ் காப்பி? ஸ்டாலின் காப்பி?? உங்களோட பயணம் இனிதாகவும் பாதுகாப்பாகவும் அமைய நாசாவின் வாழ்த்துக்கள். 
ஸ்டாலின், இந்த ப்ராஜக்ட்ல ரஷ்யா கூட இணைந்து பணியாற்றுவதில் நாசா பெருமையடைகிறது. 
Bon voyage. 
ஜார்ஜ், உங்களுக்காக அமெரிக்க மக்களும் உங்க மகளும் காத்திருக்கோம். திரும்பி வந்ததும் உங்க மகளை நீங்க நடுராத்திரில திருட்டுத்தனமாச் சந்திக்க வேண்டியதில்லை. சுதந்திரமா சந்திக்கலாம்.
Bon voyage."

 ஜார்ஜ் நெகிழ்ந்து போய்‌க் கண்ணாடிக்கு மறுபக்கம் பார்த்தார். 
 டைரக்டர் ஜெனரல் சிரித்தபடி thumbsup காட்டினார். 
 அதற்குக் கீழ் சேம்பரில் கேத்தி கண்களில் கண்ணீரும், உதட்டில் புன்னகையுமாய் கையசைத்தபடி அமர்ந்திருந்தாள். 
 
மகளுடனான பிரிவில் ஜார்ஜின் கண்களில் கண்ணீர் கசிந்தது. 
எத்தனை அடக்க முயற்சித்தும் நீர்க்குமிழ்கள் கண்களில் பெருக்கெடுத்தன. 

#############

ஈர்ப்பு இன்றி கண்ணீர் கசியாமல் இமைகளுக்குள்ளேயே உருண்டு பார்வையை மங்கச்செய்தன. இமைகளுக்குள் ஒரு குட்டிக் குளம் உருவாகியிருந்தது.
 தலையை ஆட்டி கண்ணீரை ஹெல்மெட்டுக்குள் கசக்க முயற்சித்தார் ஜார்ஜ். 
 ஆனால், கண்ணீர் கசிவதாய் இல்லை. சில நொடிகளிலேயே இமைகள் கண்ணீரால் வீங்க ஆரம்பித்துவிட்டன.
 
 "வில்லியம்ஸ்... லீ... மெடிக்கல் எமெர்ஜென்ஸி... ஒரு பிரச்சனை. எனக்குக் கண்ணீர் வந்துடுச்சு.. என்னால சரியாப் பாக்க முடியல. எல்லாம் மங்கலாத் தெரியுது... எனக்குக் கண்ணு தெரிய மாட்டேங்குது."
 
செய்த வேலையை அப்படியே போட்டுவிட்டு, ஜார்ஜை கைகளில் தாங்கினார் வில்லியம்ஸ்.
லீ உடனடியாக ஏர்லாக் சேம்பரைத் திறந்தார். 
உள்ளே தூக்கி வந்ததும், ஜார்ஜின் ஹெல்மெட்டைக் கழற்றி கண்ணீரை வெளியேற்றினார் வில்லியம்ஸ். 
ஸ்பேசில் ஜார்ஜின் உடல் பதட்டமடைந்ததால் ஸ்பேஸ்சூட்டுக்குள் அழுத்தம் அதிகமாகி எலும்பு மற்றும் சதைகளில் வலி ஏறி மயக்கமடைந்தார்.
 இந்த உடல்நிலையை தி பெண்டு என்று சொல்வார்கள். 
 
ஐந்து நாட்களாக ஜார்ஜ் அரை மயக்கத்தில் தான் இருந்தார். 
படுக்கையிலிருந்து எழவேயில்லை. சரியாகச் சாப்பிடாததால் உடல்நிலை மோசமாகிப் போனது. சுயநினைவுக்கு வந்து விழித்துப் பார்க்கும்போது மைக்கேல் அருகில் இருந்தார். 

"ரீசப்ளை வந்துடுச்சா மைக்" என்றார் ஜார்ஜ். 

"நம்மளோட க்ரிட்டிக்கல் ஸ்டேஜ் அதிகமாகிட்டே போகுது ஜார்ஜ்.
 ரீசப்ளை ராக்கெட் அட்மாஸ்பியரத் தாண்டுறதுக்கு முன்னயே வெடிச்சு சிதறிடுச்சு. 
 ஆனா, நாம கவலைப்படத் தேவையில்ல, அடுத்த பேக்அப் மிஷனை நாசா துவங்கிட்டாங்க. 
 நாளைக்கே வேறொரு ராக்கெட்டை மாஸ்கோலருந்து ஏவுறாங்க. அமெரிக்காவோட முன்னணி நிறுவனமான கேலக்ஸி அன்லாக் தான் இந்த ப்ராஜக்ட்ட பண்றாங்க. அதனால நாம பயப்படத் தேவையில்ல. அது கண்டிப்பா நம்மள வந்து சேந்துடும்" என்றார் மைக். 


ஒன்றன் பின் ஒன்றாக வரும் பிரச்சனைகளைக் கண்டு உடைந்து போய்விட்டார் ஜார்ஜ். 
இந்த ரீசப்ளை மட்டும் வரவில்லையென்றால் ஸ்டேஷனில் இருப்பவர்களின் நிலை சொல்ல முடியாத அளவுக்கு மேலும் மோசமாகிப் போய்விடும். 
ஜார்ஜுக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. 
தொடக்கத்திலிருந்தே ஒவ்வொன்றாக வரும் இன்னல்கள் அவரை மனதளவில் நலிவுறச் செய்திருந்தது.

 ஆஸ்ட்ரோனாட்ஸுக்கு உடல் வலிமை எத்தனை முக்கியமோ அதை விட அதிக முக்கியமானது மனவலிமை. 
 ஜார்ஜ் இரண்டையும் ஒரே நேரத்தில் இழந்து கொண்டு இருந்தார்‌. 
 ஜார்ஜின் நிலை பிற ஆஸ்ட்ரோனாட்ஸையும் சேர்த்துக் கவலையுறச் செய்தது. 
 
அப்போது தான் கேத்தி அனுப்பிய ஒரு ஆடியோ மெசேஜ் ஸ்டேஷனை அடைந்தது.
லீ தான் அதை ஸ்பீக்கரில் போட்டு காட்டினார்.

"அப்பா,. உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு கேள்விப்பட்டேன். 
நீங்க நல்லா இருப்பீங்கனு நம்புறேன். உங்க உடல் நிலைக்காக  பிரபஞ்சத்துக்கிட்ட வேண்டிக்குறேன். இன்னும் மூனு நாள்ல உங்க பிறந்தநாள் வருது. 
உங்களுக்காக ஒரு பிறந்தநாள் பரிசு அனுப்பியிருக்கேன். 
வரப்போற ரீசப்ளை ஷிப்ல அது உங்களை வந்து அடைஞ்சுடும். 
அதைப் பார்த்தா நீங்க ரொம்பவே சந்தோஷப்படுவீங்க. உங்களுக்கு மழைனா ரொம்ப பிடிக்கும்ல!? இங்க கலிஃபோர்னியால நல்ல மழை. 
நீங்க கேக்குறீங்களா?" 

மழை சத்தம் சலசலவென்றது. 

"உங்களுக்காக இங்க நாங்க எல்லாரும் காத்துட்டுருக்கோம். 
மிஷனை முடிச்சுட்டு பத்திரமாத் திரும்பி வாங்க.
ரெண்டு பேரும் சேந்து மழைல நனையலாம். 
லவ் யூப்பா..."

ஆடியோவைக் கேட்ட ரெண்டு நிமிடத்தில் ஜார்ஜ் எழுந்து உட்கார்ந்துவிட்டார். 
இதற்கு மேல் சோர்ந்திருக்க உடன்படாதவராகி விட்டார். 
இப்போது அவர் குறிக்கோளெல்லாம் வீட்டுக்கு போகனும் மழைல நனையனும் என்பது மட்டும் தான்.

மனசு தான் எல்லாம். 
அதைப் புத்துணர்வாக வைத்திருக்க இதுபோல் அன்பின் அபிமானத்தின் ஒரு குரல் எப்போதும் அவசியமாகிறது, போதுமானதாகிறது. 
பெண்டில் இருந்த மீளுவதற்கு சரியான உடற்பயிற்சியும் ஃபிஸியோதெரபியும் அவசியம்.
வாக்கிங், வாம்அப்ஸ் போன்ற சின்னச்சின்ன உத்திகள் தான் அதற்கு மருந்து.
ஐந்து நாட்களாக எழாமல் கிடந்து,
கேத்தி குரலை கேட்ட அடுத்த ஏழு மணிநேரத்தில் ட்ரெட்மில்லில் நடக்க ஆரம்பித்த ஜார்ஜைப் பார்த்து தான் ஸ்டேஷனில் எல்லாருக்கும் வியப்பு. 
ஜார்ஜ் எல்லாருக்கும் ஒரு உத்வேகமாக மாறிப்போனார்.

இன்னும் பத்து பாப் தான் உணவு இருக்கிறது. 
நாளை ஷிப் வரும்வரை அதை தான் பங்கிட்டு சாப்பிட்டாக வேண்டும். 
நாளை வரப்போகிற ரீசப்ளை ஷிப் தான் எல்லாருடையை வாழ்க்கையையும் ஏன், நாசாவின் - ராஸ்காஸ்மாஸின் எதிர்காலத்தையுமே கூடத் தீர்மானிக்கப் போகிறது. 


அடுத்த நாள் அனைவரும் ரீசப்ளை ராக்கெட் லாஞ்சுக்காகக் காத்திருந்தனர்.
 இது ஒரு எமர்ஜென்ஸி லேட் லாஞ்ச் என்பதால் ஷாட் கவுன்டவுனேலேயே லாஞ்ச் தயாரானது‌. 
 மூன்று டன் எடையுள்ள உணவு, அடிப்படை தேவை பொருட்கள் மற்றும் கருவிகள், மல்டிபர்பஸ் யூனிட்டுக்கான புதிய வடிவமைப்பு சாதனங்கள் அடங்கிய ஸ்பேரோ செவன் ராக்கெட், லாஞ்சுக்கு தயாராகிறது. 
10 
09 
08 
07 
06 
05 
04 
03 
02 
01 
00 
நெருப்பை கக்கி வெளிநோக்கி பறந்தது ஸ்பேரோ செவன். 
ஸ்டேஷனில் அனைவரும் ஃபிங்கர் க்ராஸ்டு நிலையில் அமர்ந்திருந்தனர். தலைமை செயலகத்தில் இருப்பவர்களுக்கும் இதே படபடப்பு தான்.

 ஸ்பேரோ வளிமண்டலத்தைத் தாண்டியது. அடுத்தடுத்தக் கட்ட கலப்பிரிவுகளும் சரியாக முடிய, ரீசப்ளை கேப்சூல் ஸ்டேஷனின் ஆர்பிட்டில் செலுத்தப்பட்டு சோலார் அரேஸ் விரிக்கப்பட்டு விட்டது.
 
 இன்னும் சொற்ப மணிநேரத்தில் கேப்சூல் ஸ்டேஷனுக்கு அருகில் வந்துவிடும். 
 அதை ரோபோட்டிக் கைக்கருவிகளால் தாவிப் பிடித்துக் கொள்ள வேண்டியது மட்டும் தான் ஸ்டேஷனின் வேலை.
 
 மீண்டும் ஒரு அலாரம் அடித்தது. 
ரேடியோவில் லீ பேசினார்.
 "டீம், கேப்சூலோட டாக்கிங் பொசிஷனை நம்மளால கண்டுபிடிக்க முடியல.‌ திரும்பவும் சொல்றேன். கேப்சூலோட டாக்கிங் பொசிஷனை நம்மளால கண்டுபிடிக்க முடியல.‌" 
 
"ச்ச... ஒரே நேரத்துல எத்தனை பிரச்சனை தான் வரும்!! இங்கேயே கிடந்து எல்லாரும் சாகனும்ங்கறது தான் நம்ம தலைவிதியா!!?" டேபிள் மேல் இருந்த பந்தைத் தட்டி வீசினார் மைக்கேல்.

 மெதுவாகப் பறந்து வந்த பந்தைக் கையில் பிடித்தார் வில்லியம்ஸ். 
"அப்படினா என்ன அர்த்தம்??" 

"கேப்சூலோட பொசிஷனைக் கண்டுபிடிக்க முடியலனா அதுல இருந்த ஏதோ ஒரு நேவிகேட்டர் செயலிழந்துருக்குன்னு அர்த்தம். பொசிஷன் தெரியாம நாம கேப்சூலைப் பிடிக்கிறது கஷ்டம். ஒன்னு நாம அதைத் தொலைச்சுடலாம் இல்லனா கடந்து போக விட்டுடலாம்‌." 

"அப்போ நமக்கு இந்த ரீசப்ளையும் கிடைக்காதா?" என்றார் ஸ்டாலின். 

ஜார்ஜ் குறுக்கிட்டார். "இல்ல கிடைக்கும்... கண்டிப்பா, நாம அதைக் கேப்ச்சர் பண்ணுவோம். 

"இல்ல ஜார்ஜ், அது அவ்வளவு எளிதில்ல.. ஆர்பிட்டல் பொசிஷனிங் டேடா இல்லாம அதை நம்மளால பிடிக்கவே முடியாது" என்றார் மைக்கேல். 

"இல்ல என்னை நம்புங்க. அதை நாம கண்டிப்பாத் தவற விடமாட்டோம்" என்றார் ஜார்ஜ். 

"எப்படி சொல்லுறீங்க?" என்றார் மைக்கேல். 

"அதுல கேத்தி எனக்கு அனுப்பின பிறந்தநாள் பரிசு இருக்கு. 
அது அப்படியெல்லாம் ஸ்பேஸ்ல தொலைஞ்சு போயிடாது. 
அது கண்டிப்பா என்னை வந்து சேரும். பொசிஷன் டேடா இல்லனா பரவால்ல. விஷுவல் ஐடின்டிஃபிகேஷன் வந்ததும் SAFERல அதை நானே பிடிக்கிறேன்." 

சிலருக்கு கடவுள், சிலருக்கு அறிவியல்,
அதுபோல் ஜார்ஜ் இந்தப் பிரபஞ்சத்தின் மீது அலாதி நம்பிக்கையுடையவர். 
நாம் கேட்கும் அத்தனையையும் இந்தப் பிரபஞ்சம் நமக்கு அளிக்கும் என்று தீர்க்கமாக நம்புபவர். 

ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். கீழே நீலமும், வெண்மையுமாய் பூமி அத்தனை அழகாக காட்சியளித்தது. 
பக்கவாட்டில் பெரிதாய் இருள் படர்ந்திருந்தது. 
வேண்டிக் கொண்டார். 
"பிரபஞ்சமே எங்களைக் கை விட்டுடாத"

 அருகில் இருந்த திரையில் ஜிபிஎஸை கவனித்தார். 
 32°32′ N to 42° N என்று காட்டியது. கலிஃபோர்னியாவிலிருந்து காற்றில் மிதந்து வந்த முத்தத்தை ஒற்றைக் கையில் வாரி நெஞ்சில் அதக்கிக் கொண்டார். 
 
லீ ரேடியோவில் பேசினார். 
"டீம்... விஷுவல் வெரிஃபிகேஷன்... கேப்சூல் நம்மளை நெருங்கிருச்சு. அது சரியா, போயிஸ்க் மாட்யூலோட நேர் திசைல தோராயமா 750 மீட்டர் தூரத்துல இருக்கு. 
ஜார்ஜ், அது ஸ்டேஷன் கிட்ட வந்ததும், அதை நீங்க பக்கத்துல இருக்குற ஈரா மாட்யூல் கிட்ட தள்ளி விட்டா போதும். அப்பறம், அதை அந்த ரோபோட் ஆர்ம்ஸ் கைப்பற்றிக்கும்.
நீங்க ரெடியா?" 

SAFER சூட்டை அணிந்து கொண்டு, 'சரி' என்று தலையாட்டியபடி ஏர்லாக் சேம்பருக்குள் நுழைந்தார் ஜார்ஜ். 

அகண்ட பெருவெளி அவர் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தது.
SAFER சூட் அணிந்திருந்தாலும் குறைந்தபட்ச பாதுகாப்பு கருவிகள் இன்றி ஸ்பேஸ்வாக் கூடாது.
அதனால் ஒரு ஸ்பேஸ்டெதரை தன் சூட்டோடு இணைத்துக்கொண்டு வெளியேறினார்.
டெதர் என்பது ஆஸ்ட்ரோனாட் ஸ்பேஸில் தொலைந்துவிடாமல் இருக்க ஸ்டேஷனுடன் சூட்டை இணைத்து வைத்திருக்கும் ஒரு கயிறு.

SAFERஐ கையாளுவது எல்லாராலும் முடியக்கூடிய அளவுக்கு அத்தனை எளிதான காரியமல்ல.
ஆஸ்ட்ரோநாட்டுக்கு அதன் இயக்கத்துக்கான பிரத்யேக பயிற்சி தேவை.
அதை பூமியில் ஏற்கனவே ஜார்ஜ் எடுத்திருந்தார்.

ஸ்டேஷனில் இருந்து லீ தகவல்களை கொடுத்துக்கொண்டு இருந்தார்.

ஜார்ஜ் போயிஸ்க்குக்கு வெளியே காத்துக்கொண்டு இருந்தார்.
கேப்சூல் ஸ்டேஷனை நெருங்கியதும் ஜார்ஜ் அதன் பின்புறம் போய் முன்னே அதை உந்தி தள்ளி விட வேண்டும்.
உந்துதலுக்கு தேவையான ப்ரொபல்ஷன் அவருக்கு SAFERலேயே கிடைக்கும்.

" கேப்சூல் சரியான திசைல தான் வந்துட்டு இருக்கு ஜார்ஜ்... அப்ராக்ஸிமேட்டா இன்னும் ஐநூறு மீட்டர் தூரம் இருக்கு.." -லீ

"கேப்சூல் டெதர் பவுண்டரிக்குள்ள வரதுக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்??" 

"இன்னும் மூனு நிமிஷம் இருக்கு ஜார்ஜ்"

குனிந்து ஆக்ஸிஜன் கால்குலேட்டரை கவனித்தார்.
32% என்று காட்டியது.

இந்த பிரபஞ்சம் எதிர்பாராத பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது.
அப்படியான அற்புதத்துக்கான காத்திருப்பில் தான் ஜார்ஜ் அப்போது இருந்தார்.
இருபது வருடங்களாக மனிதயினம் வெளியில் கட்டியெழுப்பியிருந்த உலகின் தலைச்சிறந்த ஒரு  கட்டமைப்பு ஒற்றை மனிதனின்  வெற்றிக்காக காத்திருந்தது.


"ஜார்ஜ் காப்பி? கேப்சூலோட ஆர்பிட்டல் இன்க்லினேஷன் மாறுது.... அதை திசை திருப்பனும், இல்லனா அது ஸ்டேஷனுக்கு தாழ்வா பறந்து எஸ்கேப் ஆகிடும்" -லீ

"எஸ்... காப்பி... கேப்சூல் எவ்வளவு தூரத்துல இருக்கு??"

"300 மீட்டர்ஸ்"

"அப்படினா நான் அதுக்கு பின்னாடி போய் அதை தள்ளி திசை திருப்புறேன்"

உடனடியாக கேப்சூலை நோக்கி பறக்க ஆரம்பித்தார் ஜார்ஜ்.



கேப்சூலுக்கு நூறு மீட்டர் தூரத்தில் தடுமாறி கவிழ்ந்து நின்றார்.
டெதரின் நீளம் அதோடு முடிந்துவிட்டது.
முன்னேற முயற்சித்தவரை முடிவுற்றிருந்த கயிறு  தடுத்து நிறுத்தியது.
அதற்கு மேல் தாண்டி போக வேண்டுமென்றால் டெதர் இல்லாமல் தான் போயாக வேண்டும்.
ஆனால் அப்படி செய்வது தற்கொலைக்கு சமமான ஒரு காரியம்.
டெதர் இல்லாமல் பயணிப்பதால் 84% ஸ்பேஸில் தொலைந்துப் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அனைவரின் கண்ணுக்கு முன்னருமே கேப்சூல் திசை மாறிக்கொண்டு இருந்தது.
கிட்டத்தட்ட எல்லாருமே ஒரு பெரிய கையாளாகாத்தனத்தில் இருந்தனர்.

கலக்கமான குரலில் "எல்லாம் முடிஞ்சுடுச்சு" என்றார் வில்லியம்ஸ்.


"இல்ல முடியல... நம்ம மூச்சு இருக்குற வரை எதுவும் முடிஞ்சுப் போயிடாது" -ஜார்ஜ்

ஸ்டேஷனிலிருந்து திரையை கவனித்துக்கொண்டு இருந்த அலினா கத்த ஆரம்பித்தாள்.
"அவர் என்ன செய்றாரு????? பாருங்க... அவரை அப்படி செய்யக்கூடாதுனு சொல்லுங்க"

ஸ்டேஷனில் இருந்த அனைவரும் கத்த ஆரம்பித்தனர்.
"No.... ஜார்ஜ்... அந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம்... அப்படி செய்யாதீங்க"

சூட்டோடு இணைந்திருந்த டெதரை கழட்டி விட்டுவிட்டு கேப்சூலை நோக்கி பறந்தார் ஜார்ஜ்.

######################

"இல்ல, இது அந்த ஹவர்போர்ட விட பெரிய கிஃப்ட், நீ அதைப் பாத்தா உனக்கு ரொம்ப பிடிச்சுடும்." 

"அப்படியா?? அப்ப எனக்கு அது இப்போவே வேணும்." கேத்தியின் கண்களை மூடினார் ஜார்ஜ். 

"நீ ரெடியா கேத்தி??" 

"ம்ம்ம்ம்ம் அயம் ரெடி..." 

கேத்தியை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார் ஜார்ஜ். 
"ஓகே, பாக்கலாமா??" 

"ம்ம்... பாக்கலாம்", 
கண்களைத் திறந்தாள்.
 அங்கே ஒரு செடி இருந்தது. 
அதை அவள் கையில் கொடுத்தார்.

இது ஒரு ஸ்பெஷல் செடி...
 இது உனக்குத் தான். இதுக்கு டெய்லி தண்ணி ஊத்தி நீ எப்பவும் பத்திரமா பாத்துக்கணும். 

"இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு??"

"இதுக்கு பேரு இந்தியன் குறிஞ்சி, இது பண்ணிரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ தான் பூப்பூக்கும் தெரியுமா!!"
 
"ஓஓஓஓ! ரியலி!? அப்போ இவன் ஸ்பெஷல் தான்.... இவன நான் பத்திரமா பாத்துப்பேன்.... ஆமா
இவனுக்கு  என்ன பேரு வைக்கிறது?? 

நீயே ஒரு நல்ல பேரு வையேன்..." 

"ம்ம்ம்ம்ம்... இவன் பேரு... சீசர்..." 

#################

ரீசப்ளை கேப்சூலைச் சரியாக அட்டாச் செய்ததற்காக ஜார்ஜுக்கு ஒரு சின்ன பார்ட்டி நடத்திக் கொண்டு இருந்தது டீம். 
அப்போது மைக்கேல் கையில் ஒரு பெட்டியோடு வந்தார்.

 "கேப்சூலை அன்லாக் பண்ணினதும், நான் முதல்ல தேடி எடுத்தது இதைத் தான் ஜார்ஜ்" என்று ஒரு வெள்ளை நிறப் பெட்டியைக் கையில் கொடுத்தார்.
  சுற்றியிருந்த அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாட ஜார்ஜ் அந்தப் பெட்டியை திறந்தார்.
 உள்ளே ஒரு நீல நிறப் பூவும் கூடவே ஒரு வாழ்த்து அட்டையும்  இருந்தது. 
  
'பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா...
அன்புடன், 
கேத்தி மற்றும் சீசர்'

Saturday, August 29, 2020

Quarantine அய்யனார்

ராசாம காட்டேரி படையலுக்கு நைனா வீட்டு தலைக்கட்டு எல்லாம் கூடியிருந்தது.
எல்லாஞ்சேத்து மொத்தமும் நாலு குடும்பம் தான்.
நைனா வீட்டுக் கொல்லப்பக்கம் சனங்க கூடும்.
வீட்டுல ஆளுக்கொரு பண்டமா ஆக்கிக் கொண்டு வந்து ஒரு இடத்துல வைக்கும்...
களிமண்ணு புள்ளயார் புடிச்சு காட்டேரியை படையலுக்கு அழைக்கும்.
அழைக்கிறது தான் அந்த கணம்.
ஆனால் சமைக்கிறதுக்கு முன்னயே வந்து குத்துக்கால் போட்டு படையக்கார புளிய மரத்து அடியில் உக்கார்ந்து விடுவாள் காட்டேரி.

படையலுக்கு வரப்ப மட்டும் வெச்சுருந்த எல்லா ஊசிமணி பாசிமணி புலிப்பல்லு கரடிமயிரு நரிநகம் என்று சகலத்தையும் மாட்டிக்கொண்டு மேனாமிகினுக்கியாக வந்து உக்காந்துவிடுவாள்.

கீரைத்தண்டு வெட்டிப் போட்டு கருவாட்டு குழம்பு கிண்டி சட்டி நிறைய கொண்டு வந்தாள் மணியம்மா..
கொண்டு வரும்போதே சட்டிக்கு பின்னாடி மோப்பம் பிடித்த காட்டேரி, மணியம்மா மசுர புடிச்சு இழுத்து,
ஏ ஆத்தா..... இப்டி கொஞ்சம் இறக்கி வையேன் நக்கி பாத்துக்குறேன் என்றது.
ஆக்கியறக்கி உனக்கு தான கொண்டாறேன்?? அதுக்குள்ள ஏன் பெனாத மாதிரி அவுதி பறக்குற?? படையல்ல உக்கார இஞ்சூண்டு பொறும பத்தலையோ? வடவம் வாட்டி தாளிச்ச கெண்டக்குஞ்சி கொழம்பு வருது... இஞ்சிப்பூண்டு தட்டிப் போட்டு நாட்டு சாவ கொழம்பு வருது...
ஆட்டுக்கடா ரசம் அவிச்சு வெச்ச ரத்தம் பானைல தனியா பனமரக்கள்ளு இன்னதெல்லாம் வேணாமா ஆத்தாளுக்கு?பங்குடா போய் உக்காரு அத்தனையும் உனக்கு தான் என்று அதட்டினாள் மணியம்மா.
இந்த பெண்களுக்கு காட்டேரி ஒரு மாமியார் மாதிரி.
அதட்டி தான் சோறு போடுவார்கள்.

வாழையிலை நிறைந்தது.
காட்டேரிக்கு ஆனந்தம் தாங்கல..
வருசத்துக்கு ஒருக்கா போடுற படையல்..
மத்த நாளெல்லாம் பெரும்பாலும் பட்டினி தான்..
சில சமயம் பொழுது போய் கருவாடு ஆயுற கிழவிக கிட்ட நின்று ரெண்டு கெண்டத்தலை கேக்கும்.
வேலிய உரசிட்டு போற காட்டேரிப் பொம்பளய பாத்து குடியான வீட்டு கிழவிகளுக்கு நெஞ்சு தாளாது‌.
இந்தா போன்னு ரெண்டு கருவாட்ட கிள்ளி தூக்கி வீசிருவாளுக.
ஆனா இன்னிக்கு... மொத்த படையலும் இவளுக்கு தான்.

படையல் வெச்ச சனம் மொத்தமும் கோயிந்தா போட்டுட்டு திரும்பி பாக்காம கிளம்பிவிட்டன.
ஒத்தையாளா உக்காந்து மூச்சுப் பிடிக்க திண்றாள் காட்டேரி.
சேலை முந்தானையை உதறி வாயை துடைத்துக் கொண்டாள்.
ஏவ்வ்வ்..... ஒரு ஏப்பம்.ஆடுமாடு புள்ளக்குட்டி ஆம்பள பொம்பள மக்கசனம் அத்தனையும் நல்லாருக்கும் என் ரெண்டு கண்ணும் பாத்தமுச்சும்.... வாழ்த்திவிட்டு வயக்காடு நோக்கி நடந்தாள்.

ஆத்தங்கரையை தாண்டி பனமரக்காடு.
அதுக்கு பின்னாடி வெறும் வயல்வெளி தான்.
வயல்ல அங்கங்க சில வேப்பமரம் ஒதியமரம் ஒத்தமரமா நிக்கும்.
அதுல ஒன்னுல ஏறி கணுயில்லாத கிளையா பாத்து கண்ணு அசந்துக்குவா காட்டேரி.

நடந்து போற வழி நெடுக பயித்தங்கா வெதச்சுருக்கு...
எத்தி நடந்த செத்த சத்தம் தூரத்துல யாருக்கோ கேட்டுருச்சு.

வோவ்.... எவடி அவ பொம்பள?? இருட்டான நேரத்துல?? வயக்காட்டு வரப்புல??? பனமரத்து உச்சியிலிருந்து அய்யனார் குரல்.

நாந்தான் மச்சான்... ராசாம படையலுக்கு மனைக்கட்டு பக்கம் போயாறேன்...

அடி... அரைமயிரு சிறுக்கி... எவளுக்கு எவன்டிமச்சான்?? ஊரு பொறுக்கி திண்ணுற உனக்கு காவக்காரன் நான் மச்சானா??
நாக்கை துருத்திக்கொண்டுபனை மரத்திலிருந்து இறங்கி வந்தார் அய்யனார்.
வேட்டியை ஒரு உலுக்கு உலுக்கி இறுக்கி கட்டினார்.

என்னத்த சொல்லிட்டாங்கனு இப்ப மோடி வெக்கிற என்மேல?? நானாவது அப்பப்ப ஊருக்குள்ள போனோமா... நாலு மக்க மூஞ்ச பாத்தோமானு லாத்திட்டு வந்துடுறேன்..
ஆளான ஆம்பள பொழுதன்னைக்கும் தனியா தான குந்திருக்க!! பேச்சுத்தொணைக்கு செத்த நாழி உக்காந்து போலாம்னு வந்தா.... ரொம்ப தான் மூஞ்ச காட்டுறியே!!கோச்சுக்காம இந்த கருவாட்ட கடிச்சுக்க....
முந்தானையிலிருந்து ஒரு கருவாட்டு துண்டை தூக்கி கொடுத்தாள்‌.

எல்லா ஊரு அய்யனார் கோவிலை போலவும் ராயப்பட்டிண அய்யனார் கோவிலும் ஊருக்கு வெளியே வயல்வெளிக்கு மத்தியில் தனியாக தான் இருந்தது.
மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கி நிக்க ஒரு கீத்துக்கொட்டா கிடையாது.
ஊரை வெறிக்க பார்த்த மாதிரி அரிவாள் ஏந்தின ஐயஞ்செல.
ஐயஞ்செல எதுத்தாப்ள மேய்ச்சக்கார குதிரசெல.
குதிரைய சுத்தி குத்தி நிக்கும் வேல்கம்பு பத்து.
இத்தனை தான் மொத்த கோயிலும்‌.
சிலையை கட்டி பனைமரமா சுத்தி நிற்கும்.
பனை மரத்து ஊடால வேப்பரமும் அரசமரமும் கள்ளிச்செடியும் காட்டரளியுமா அண்டிக் கிடக்கும்.
பக்கத்துல போய் பார்த்தா கூட உள்ளருக்குற ஐயஞ்செல கண்ணுலாப்புடாது.
புதரை தாண்டி உள்ளார போக பாதைனு எதுவும் தனியா கிடையாது.
பாக்குறது தான் பார்வை, சீய்க்கிறது தான் தடம், நடக்குறது தான் பாதை.
வருசத்துக்கு ஒரு தடவ பங்காளிகள் கூடி கடா வெட்டி படையல் போடுவார்கள்.
அப்ப மட்டும் காட்ட கழிச்சு கிளைகளை களைந்து விடுவார்கள்.
எப்பவாவது எவனாவது வந்து எதாவது நேந்திக்கிட்டு சூடம் காட்டிட்டு போவான்.
மத்தபடி மொத்த நேரமும் அய்யனாரு பொழப்பு தனிமைல தான்.

அய்யனாரை தனிமை ரொம்பவே வாட்டியது.
தினந்தோறும் தனியாகவே இருந்தால் பொழுதை எப்படி தான் போக்குவது!

தன் சிலை மீது உக்காந்திருக்கும் காக்கா குருவிகளை கம்பெடுத்து விரட்டுவார்.

ந்தே... ச்சேய்... ஓடு... ந்தேய்...

வயலில் மேயும் காளை மாடுகள் மேல் ஏறி உக்காந்துக்கொண்டு கொஞ்ச நேரம் அங்குமிங்கும் சவாரி செய்வார்.

ட்ரூ... ட்ரூ... ஹெய்ய்ய்.. ட்ரேய்..

பனை மரத்து உச்சியில் ஏறி உக்கார்ந்துக்கொண்டு வயக்காட்டில் வேலை செய்யும் பொம்பளைகளை வேடிக்கை பார்ப்பார்.
அவர்களில் சிலரை மட்டும் ஒளிந்திருந்து சடைய பிடிச்சு இழுத்து பரிகாசம் பண்ணுவார்.

சிலைக்கு பின்னாடி ஒரு நாவல் மரம் உண்டு.
அதில் ஏறி உக்கார்ந்துக்கொண்டு கிளையை உலுக்குவார்.
கீழே விழுந்த பழங்களை ஒவ்வொன்றாக பொறுக்கி ஊதி ஊதி உச்சுக் கொட்டி திண்ணுவார்.

சொற்பமாக சில பட்டாம்பூச்சிகள் ராயப்பட்டிண வயக்காட்டில் உலாவித் திரியும்..
அவற்றை விரல்களில் ஏந்தி அவற்றோடு பேசிக்கொண்டிருப்பார்...
முதுகுல ஏதுத்தா மஞ்ச நெறம்??செல்லமணி வயக்காடு சூரியகாந்தி தோட்டத்துல பொரண்டெழுந்தியா??சோத்தாங்கை றெக்கைல நீலநெறம் நிறைஞ்சுருக்கே!நீலசேலை கட்டி வந்த எந்த பொம்பள முந்தானைல மோந்து வந்த??

இதெல்லாம் எத்தனை நாளைக்கு!? பிறை போனாலும் இதான்...  பருவம் போனாலும் இதான்.. பொழுதே கழியாது.அய்யனாராக இருப்பது தான் எத்தனை சிரமம்!!

காட்டேரி மாதிரி யாராவது பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.. போதும் போதும்னு சொல்லுமளவுக்கு கதை வெச்சு தீர்த்து விடுவார்.

கருவாட்டை ஒரு கடி கடித்தார் அய்யனார்.
பலத்த படையல் போலயே!?
கவுச்சி வாசம் வீசிட்டேருக்கு.!?

ஆமான்றேன்!சாவக்கறி வாட்டி ஆட்டுக்கடா போட்டு மேஞ்ச மீனு காஞ்ச மீனுனு ஜமாச்சுப்புட்டானுவல்ல!!
அதுலயும் அந்த நைனான் மருமவ கெண்டக்குஞ்சு கொழம்பு ஒன்னு வெச்சா பாரு... உச்சு கொட்டி உச்சு கொட்டி எச்சி வறண்டு போனது தான் மிச்சம்...

ஏதோ கேட்டேனேனு ரொம்பத் தான் கதைக்காத...
எனக்கும் அடுத்த பிறை போய் படையல் இருக்கு ஆத்தா...காத்து கிடக்கேன்..

நீ காத்து தான் கிடக்க வருசம் முழுக்க... நான் தான் நாடுமேறி.. ஆனா உனக்கு ஊரு சனம் இருக்குல்ல!? குலசாமி கும்புடு போடுறவன் அப்பப்ப வந்து தான் உன்ன பாத்துட்டு போறானா?அனாதையா தான அனத்திட்டு கிடக்க??

ஒன்ட வந்த பிடாரிகளை ஊருக்குள்ள வெச்சுக்கிட்டானுவ...
வூட்டுக்கார கொலசாமிய காட்டுக்குள்ள நிறுத்திப்புட்டானுவ...
அயலான் பொண்டாட்டிக்கு உழக்குல ஊத்துவான் நெய்யி...
ஐயா ஐயானுகிட்டு வருசத்துக்கு ஒரு தடவ தான் வருவான் காட்டுப்பக்கம்....
அவன சொல்லி குத்தமில்ல...

நீ உம்ம்ம்னு சொல்லு... ஊருக்குள்ள போய் உன் வகையறா சனங்களா பாத்து மிரட்டி விட்டுட்டு வாரேன்!!
பசுமாட்டுங்க மடியில முடிச்சு போட்டு வுட்டா தானா வாரானுக உன் காலடிக்கு....

எட்டியேய்! அடிய கொடுத்தா மடிய கேப்பியே!!என் கிட்டயே வந்து என் சனத்தையே மெரட்டுவேன்றியா!?மசுர அறத்துடுவேன்!!

நீ இப்படியே பேசிட்டு கிட... அவனவன் மரக்கறி திண்ணுற தேவதைய பாத்துட்டு கும்புட போயிருவான்... நீ ஊரு மதிக்காத உதவாக்கரையா போகப் போற...

பக்கத்தில் கிடந்த வேல்கம்பை எடுத்து விரட்டினார் அய்யனார்.
போடி சிறுக்கி எழுந்து.... எனக்கு புத்தி சொல்ல வந்துட்டா....

என்னய அடிக்க வாய்யா... காட்டேரி நாக்கு கருநாக்கு.. நான் வாசாக்கு விட்டா பலிக்கும்....

இன்னும் செத்த நாழி நின்னா அடி வெளுத்துப்புடுவான் ஐயன்.
ஓட்டம் பிடித்தாள் காட்டேரி.

ஊரு கவனிக்காத ஆளாகிப் போனாலும் மக்க மேல மனசு அத்துப் போகுமா!?
பெத்த மனம் பித்து புள்ள மனம் கல்லு...
இருந்தாலும் ஐயனுக்கு சங்கடமாகவே இருந்தது.காட்டேரி சொன்னதும் நிசந்தான!இத்தனை காலமா இங்க தனிமையில கிடக்கோமே!வாரம் ஒரு கிழமையாவது சும்மாவாச்சும் வந்து பாத்துட்டு போறானுகளா இந்த பயலுக.!!
அப்பன் மேல அக்கறையேயில்ல!

பனமரத்து மேலே ஏறி உக்கார்ந்துக்கொண்டது அய்யனார்.ஓஓவென்று கத்தி ஒப்பாரி வைத்தது!

ஓஓஓஓஓஓ!
ஊரு சனத்து காட்டயெல்லாம் பாத்து நின்னேனே ராமுச்சும்!
மக்க கண்ணு காணலயா காவக்கார வேலுக்கம்ப!!!

காத்து கருப்பு அண்டாம காத்து நின்னேனே நாளுமுச்சும்.!
மக்க கண்ணு காணலயா காவக்கார வேலுக்கம்ப!!

உழுது வந்த ஆம்பளைக்கு ஐயன் ஒருத்தன் நான் தான!
ஐயன தான் மறந்துட்டியே ஆளில்லயா நினைப்புலயே!?
பிறத்தியாளாம் பொம்பளைக்கும் அப்பன்காரன் நான் தான!!
அப்பன தான் மறந்துட்டியே ஆளில்லயா நினைப்புலயே??
பச்சப்புள்ள பருவப்புள்ளைக்கு ஐயங்காரன் நான் தான!
ஐயன காண வாரலயே பேரப்புள்ள ஒன்னு கூட!!
ஓஓஓஓஓஓ!!!!
குலுங்கி குலுங்கி அழுதது அய்யனார்.

ஐயனோட ஒப்பாரி சத்தம் பக்கத்து ஊரு வீரன் கொல்லை வரை கேட்டது!
பாட்டு மொத்தமும் அனத்தல்,
போட்ட ஆட்டம் ஆதங்கம்,
மனசு முச்சும் அழுகை.
தான் செல்லமாக வளர்த்த நாயோ அல்லது தன் ஆத்தாளோ செத்துப்போன நாளன்று ஒரு சின்னப்பையனுக்கு இருக்கும் அந்த மனநிலையில் தான் அன்று இரவு முழுவதும் இருந்தார் அய்யனார்.

விடியற்காலையிலேயே ஐயன் தோப்புக்கு வந்தான் காளிங்கன்.
மக்கசனத்துலேயே அப்பப்ப வந்து ஐயனடி அகலேத்திட்டு போறது காளிங்கன் ஒருத்தன் தான்.
ராயப்பட்டிண ரெத்தினம் மிராசு வீட்டுல ஆடு மாடு குதிரை பாக்குறது காளிங்கன் தான்.
கூலிக்கு கேப்பை தான்..
சாமி சாமினு மிராசு கால கட்டிட்டு கிடந்தாலும் கஞ்சி குடிச்சது போக கால் காசு சேர்த்தது கிடையாது.
சாமர்த்தியமான பொண்டாட்டி அமைஞ்சுட்டதால பாதி வேளைக்கு மட்டுமாவது அடுப்புல அணல் விழுந்துட்டு இருக்கு...

ஐயா.... நான் காளிங்கன் வந்தருக்கேன்... முன்ன வந்து அருள் கொடு சாமி...

இப்படியெல்லாம் காளிங்கனை காக்க வெச்சதே கிடையாது அய்யனார்.
இன்னிக்கு ரொம்ப நேரமா அருளுக்கு அழைச்சும் ஆளை காணல... 

தேங்காயை உடைத்து சூடத்தை  கொளுத்தி வைத்தான்...சூடத் தீயை கண்டதும் லேசாக மனம் இறங்கினார் அய்யனார்.

என்னடா காளிங்கா?? என்ன இந்த பக்கம்??? ஆக வேண்டிய காரியம் எதாவது இருக்கா??ஏன்னா எதாவது காரியம் ஆகனும்னா தான் எல்லா பயலும் இந்த பக்கம் வருவீங்க???அய்யனார் பேச்சில் ஒரு இக்கு இருந்தது.
ஐயா...

ஊர காலி பண்ணிட்டு குடிய மாத்திக்கலாமுன்னு இருக்கேனுங்க... அதான் ஐயா கிட்ட உத்தரவு வாங்க வந்தேன்...

முடிவு பண்ணி கிளம்புனதுக்கு அப்பறம் என்னடா உத்தரவு?? சொந்த மண்ண விட்டுட்டு எங்கடா போறீங்க பொழப்பு தேடி??

சொந்த மண்ணு தானுங்க... ஆனா சோறு போடலயே!?
உருகுறது தான் நாங்க.. ஆனா ஒளி வேற எங்கயோல்ல அடிக்குது.!
காலம் முழுக்க உழைச்சாலும் கால் காசு சேக்க முடியல...
அன்னாடம் சோலில ஒரு நாள் கெட்டு போனாலும் அடுத்த நாள் கஞ்சிக்கு சட்டி சொரண்ட வேண்டியதா இருக்கு.. அதாஞ்சாமி வண்டிய கட்டுறேன்...

அது சரி... மகராசா வாழ்வு வாழ எந்தூரு கிளம்பி போறீங்க சமீன்தொர??

சங்கராரு கிட்ட போய் பேசிட்டு வந்தனுங்க...
கிழக்கால அறுவது மைலு நடைல பட்டவிளாகம்னு ஊரு....
நாலு கலம் நெல்லு ஒன்ற மரக்கா பயிரு ரெண்டேகால் திர வெக்கலு..
வருசத்துக்கு அளந்து குடுத்தா எட்டு மா நிலம் தாரேன்னாங்க...
என் உருப்படியே ஆறு கிடக்கு... உழுது அறுக்க அதுங்க போதாதுங்களா!? அதான் கிளம்பிட்டேனுங்க...

எலேய்... பட்டவிளாகம்னா தில்லைக்கரை ஒத்தக்காலான் நிலம்டா... ஒத்தக்காலான் சொத்து உருப்படாத சொத்துடா... சானு ஏறுனா மொழம் சறுக்கும்.. தேவையாடா உனக்கு??

தடுமாறி விழுந்தா கைய குடுத்து தூக்கி விடதுணைக்கு  நீதான் இருக்கியே சாமீ!அடுத்த கிழமை வயிறு நிறையுமா வாய் நிறையுமானு தெரியாம மேலண்ட மக்க கால்ல விழுந்து மானங்கெட்ட கஞ்சி குடிச்சது என்னோட போகட்டுஞ்சாமீ!
என் புள்ளைங்களுக்கு அது வேணாம்...

நீதான் அறுவது மைலு கடந்து போறேன்றியே!
நான் வந்து தூக்கி விடுறதுக்குள்ள நீ விழுந்த இடத்துல கும்பி காஞ்சுடுமேடா!?

அதுக்கு தான் சாமீ உன்ன தேடி வந்தேன்... நீயும் நாதியில்லாம இங்க தனியா தான கிடக்க?? உன்ன கூட்டிட்டு போய் என் வீட்டு கொல்லைலயே வெச்சுக்கறேன்..
நாளான நாளுல உனக்கு படைச்சே நான் திண்ணுக்கறேன்.. உன் காலடி அகலுல  தீயணையாம பாத்துக்கறேன்..
என் புள்ளைங்களுக்கு துணையா என் வண்டியோடயே வந்துடேன்ய்யா????

அய்யனாருக்கு திடுக்கென்று ஆனது...

எலேய்... உன்னோட நான் கிளம்பி வந்துட்டா இங்க உள்ள மக்க சனத்தை யாருடா காணுறது?
வயக்காட்டுல காவலுக்கு கட்டனும்...
காத்து கருப்ப முடிஞ்சு வெக்கனும்... கிணத்தடியில் பிசாசு விரட்டனும்...
ஆடுமாட தேத்தி வைக்கனும்...
அப்பப்ப ஆத்தங்கரைல பச்சப்புள்ளைங்க தவறி விழும்... தவறி விழும் புள்ளைங்க ஐயானு கூப்பிட்டு ஏமாந்து போயிடாதா?? காவக்காரன் இல்லாத ஊரு கள்ளன் புகுந்த காடாகி போயிடும்டா... தவிச்சு போயிடும்டா சனங்க...

இப்படி எதுவுமே பேசவில்லை அய்யனார்.

காளிங்கன் கேட்டது அத்தனை ஆசுவாசமாக இருந்தது அய்யனாருக்கு.தனிமைலயே தவிச்சு போய் கிடந்தோமே!!
கூட்டிட்டு போய் கொல்லையிலயே வெச்சுக்கறேன்றானே!
பார்வைலயே வெச்சுக்க ஆறு புள்ளைங்க பெத்து போட்டுருக்கான்..
இது போதாதா எனக்கு.!!!

காளிங்கனின் அழைப்பு எல்லாமுமான பொண்டாட்டி செத்த துக்கத்தில் இருக்கும் ஒருவனை, மடியில் கிடத்தி தலையில் கை வைத்து முடியைக் கோதி விட்டு நாங்க இருக்கோம் உனக்கு கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்வதை போல் இருத்தது.

அய்யனார் இப்போது ஒரு மார்பு நரைத்த  இளம்பிள்ளையாகிப் போயிருந்தார்.
பிறந்து குளம்பு சீவி கொஞ்ச நேரமே ஆன பசுங்கன்றை போல் மகிழுள்ளம் துள்ளி குதித்தது.
விசும்பி விட்டார் அய்யனார்.
அய்யனாரின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது.
காளிங்கனை கட்டியணைத்துக் கொண்டார்.

கண்களில் அன்பை மட்டும் காணும் பச்சைக் குழந்தை இரு கைகளை நீட்டி யார் கூப்பிட்டாலும் தாவித் தோள்களில் ஏறிக்கொள்ளும்.
பசியில் இருக்கும் பாலன் உண்ண எதை கொடுத்தாலும் வாங்கி வாயில் போட்டுக்கொள்வான்.
வைராக்கியத்தில் இருக்கும் விடலை வரும் வாய்ப்புகளையெல்லாம் எக்கியணைப்பான்.
தனிமையில் இருக்கும் முதுமகனுக்கு குடும்பம்  ஒன்னு கிடைச்சா போதாதா!

மாட்டு வண்டி முழுக்க பண்டம் பாத்திரத்தை அடுக்கியிருந்தான் காளிங்கன்.
வண்டிக்கு மேலேயும் மாட்டுக்கு பக்கத்துலயும் காளிங்கனோட ஒவ்வொரு மக்களும் நின்றனர்.
பொண்டாட்டி ரெண்டு ஆட்டை பிடித்துக்கொண்டாள்.
ஒரு கையில் வேல் கம்பை எடுத்துக்கொண்டான் காளிங்கன்.
மற்றொரு கையை மடக்கி சுண்டு விரலை மட்டும் அய்யனாரிடம் நீட்டினான்.
ஒரு கையில் குதிரை வடத்தை பிடித்திருந்த அய்யனார் மற்றொரு கையால் காளிங்கனின் சுண்டு விரலை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.




Saturday, May 16, 2020

கயித்துக் கட்டில்

தொந்தரவில்லாத தொடர் உறக்கத்தை காட்டிலும் அனைவருக்கும் அத்தனை எளிதில் கிடைக்க வாய்த்திடாத மற்றொரு விஷயம் உறக்கத்துக்கு முன்னாலான நிம்மதியான மனநிலை.
அப்படியொரு நிம்மதியான மனநிலையில் உறங்க போய் பல காலம் ஆகிறது.

எங்கள் தெருவில் எல்லா வீடுகளும் ஓலை வீடுகள் தான்.
ஆம்பளை பொம்பளை என்று எல்லாருமே தினக்கூலிகள் தான்.
என் வயதில் என்னை போல் பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் அப்போது என் தெருவில் அதிகம் இருந்திருக்கவில்லை.
போன வருஷம் ஏழாப்பு என்னோடு படித்த சியாமளா கூட இப்போது அரை சம்பளத்துக்கு அவள் அம்மாவோடு செங்கசூலைக்கு கல்லு அறுக்க போய் விட்டாள்.
இந்த ஆறு மாதமாக ஐய்யனார் கோவிலை தாண்டி வயக்காடு வழியாக பள்ளிக்கூடத்துக்கு நான் தனியாக தான் பையை தூக்கிக்கொண்டு போய் வருகிறேன்.

என் தெருவில் எல்லா வீடுகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவே தான் இருக்கும்.
பள்ளி தோழி சௌபாக்கியலஷ்மியின் வீட்டை போல எங்கள் வீட்டில் ஆளுக்கொரு அறையெல்லாம் கிடையாது.
மொத்தமே ஒரேயொரு கூடம் தான்.
அதற்கும் முன் வாசல் உண்டு பின் வாசல் கிடையாது.

ஆறேழு வருஷத்துக்கு முன்பு வேய்ந்த தென்னங்கூரைக் கீற்றுகள்.
மழையிலும் வெய்யிலிலும் உளுத்துப் போய் இப்போது எங்கே தொட்டாலும் பொளப்பொளவென்று கொட்டுகிறது.
உச்சி வெய்யிலில் வீட்டுக்குள் குறைந்தது இருபது இருபத்தைந்து ஒளிக்கீற்றுகளாவது பீறிட்டு அடிக்கும்.
கூரையில் அத்தனை ஓட்டைகள் உண்டு மொத்தத்தையும் எண்ண முடியாது.

கதவின் எதிர்பக்கத்து வலது மூலையில் விறகடுப்பு இருக்கும்.
பக்கத்திலேயே விறகுகள் அடுக்கியிருக்கும்‌.
இடது மூலையில் கொஞ்சநெஞ்ச அரிசி பருப்புகள் சின்னச்சின்ன டப்பாக்களில் அடுக்கியிருக்கும்.
கதவுக்கு இடது மூலையில் ஒரு தென்னங்கயிற்று கொடி கட்டியிருக்கும்.
அம்மா அப்பா மற்றும் என்னை சேர்த்து மூவரின் துணிமணிகளும் அந்த ரெண்டடி கயிற்றுக் கொடியில் தான் கிடக்கும்.
கதவுக்கு வலது மூலையில் ஒன்றன் மேல் ஒன்றாக சில பாத்திரங்கள் அடுக்கியிருக்கும்.
மழைக்காலத்தில் தேவையென்றால் வீட்டுக்களுள் ஆங்காங்கே சொட்டும் தண்ணீரை பிடிக்க அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மற்ற நேரங்களில் அவை வீட்டில் சும்மாவே தான் இருக்கும்‌.
சட்டையை நான் மேலாக்க கழற்ற வேண்டுமென்றால் அரைமடியில் வலைந்தோ முட்டி போட்டோ  தான் கழற்ற வேண்டும். இல்லையென்றால் கையில் போட்டிருக்கும் கண்ணாடி வலையல்களை மெதுவாக மேலே சுற்றும் சீலிங்ஃபேன் நொறுக்கிவிடும்.
மூன்று பேரும் வரிசையாக காலை நீட்டி படுத்தால் நான்காவதாக ஒரு ஆள் வீட்டுக்குள் குத்துக்கால் போட்டு உக்கார கூட இடம் இருக்காது‌.
இந்த கூடத்தோடு சேர்த்து வாசலில் ஒரு கயிற்றுக் கட்டில்.
இவ்வளவு தான் எங்கள் மொத்த வீடுமே!

தினமும் நான் வாசலில் உக்காந்து மண்ணென்ணெய் விளக்கில் தான் வீட்டுப்பாடம் எழுதுவேன்.
மண்ணென்ணெய் விளக்கென்றால் உண்மையில் அது ஒரு சாராய பாட்டில்.
அப்பா குடித்து விட்டு போட்ட பாட்டில் ஒன்றின் மூடியில் ஓட்டை போட்டு திரி சொருகி அதை விளக்காக மாற்றி வைத்திருந்தாள் அம்மா.

அப்பா எப்போதும் குடித்துவிட்டு பத்து பதினோரு மணிக்கு தான் வீட்டுக்கு வருவார்.
காசிருந்தா சீமசாராயம், காசில்லனா கடன் வாங்கி மூட்ட சாராயம்.
மூட்ட சாராயம் குடித்துவிட்டு வந்தால் வீடே நாறும்,
சீமசாராயம் குடித்துவிட்டு வந்தால் கொஞ்சம் குறைவாக நாறும் அவ்வளவு தான்.
என் பிரச்சனையெல்லாம் அது கிடையாது.

நானும் அம்மாவும் படுத்த பிறகு தான் வீட்டுக்கு வருவார் அப்பா.
பல நாட்களில் அவர் ராத்திரி சாப்பாடு சாப்பிட்டதே கிடையாது.
குடிச்ச சாராயத்துக்கு கொஞ்சமாவது வயித்துக்கு சாப்புடுய்யா என்றால் கத்தி கூப்பாடு போட்டு அம்மாவோடு சண்டைக்கு வருவார்.
சாராயம் தான் அப்பாவோட பிரச்சனையா என்றால் இல்லை.
சாராயம் இல்லாமல் கூட அப்பா தூங்கி விடுவார் ஆனால் அம்மா இல்லாமல் தூங்க மாட்டார்.

பத்து மணிக்கெல்லாம் கண்களை இறுக்கிக்கொண்டு படுத்துவிடுவேன்.
ஆனால் இந்த பாழாய்ப்போன தூக்கம் தான் வந்து தொலையாது.

வந்ததும் சோறு இருக்கா என்று கூட கேட்க மாட்டார்.
புள்ள தூங்கிருச்சா என்பார்.
ரொம்ப நேரம் நான் சும்மாவே கண்களை மூடியிருப்பது தெரிந்து இன்னும் இல்ல பேசாம படு என்பாள் அம்மா.
ரொம்ப நாளுக்கு முன்னாடி வரை புள்ள தூங்கிருச்சா என்பது என் மீதிருந்த அக்கறை என்றே நினைத்திருந்தேன்.

நேரம் கழியும்.
மூட்டத்தையும் மீறி கொசு புடுங்கும்..
மூன்று பேருக்குமே இன்னும் தூக்கம் வந்திருக்காது.
அம்மா மேல் கையை தூக்கி போடுவார்.
அம்மாவை தாண்டி அப்பாவின் விரல்கள் என் மீதும் விழும்‌.
கைகளை தட்டிவிட்டு உச் கொட்டுவாள் அம்மா.
பின்பு இன்னும் நெருக்கி என்னை நெஞ்சோடு அணைத்துக்கொள்வாள்.
அசந்து தூக்கிக்கொண்டு இருப்பவளை போல் நடித்து லேசாக சுணங்குவேன்.

மீண்டும் கைகளை அம்மாவின் மீது போட்டு ஒருக்களித்து படுத்திருந்தவளை மல்லாக்க திருப்புவார்.
தினமும் இது தான் நடக்கும் ஆனால் 
ஓரிரவு இது சண்டையாகவே வெடித்துவிட்டது.
சண்டையென்றால் ஒருவர் பேசுவது மற்றொருவருக்கு மட்டுமே கேட்கும்படியான சன்னமான குரலிலான ஒரு பிணக்கம்.
துர்பாக்கியவசமாக அவை எனக்கும் கேட்டது.

வயசுப்புள்ளய வீட்டுல வெச்சுக்கிட்டு கொஞ்சமாச்சம் ஒனத்தியோட நடந்துக்குறியா நீ??

வயசுப்புள்ளயா? பச்சப்புள்ளடி அது...

இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ! அதுக்குள்ள வயசுக்கு வந்து பெரிய பொம்பளயாகிடுவாய்யா...
இப்பவே அவளுக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கும்...

இது வயசுக்கு இவ்ளோ வெவரம் தெரிஞ்சுருக்காது... சும்மாரு... பேசியே பச்சப்புள்ளய பெரிய பொம்பளயாக்காத...

என்ன??? உன் பொண்ணுக்கு இன்னும் ரெண்டு வைசுனு நினைச்சுட்டு இருக்கியா??
இன்னிக்கு தெரியலனா மட்டும்? ராத்திரில ஆத்தா மேல அப்பன் எதுக்கு கைய தூக்கி போட்டான்னு என்னிக்காவது தெரியாமலா போயிடும்?
அப்படி ஒன்னா இருக்குறத என்னிக்காவது ஒரு நாள் முழிச்சு பாத்துருச்சுன்னா அதுக்கப்பறம் நான் உத்திரத்துல தொங்குறத தான் ஊரு பாக்கும்..

தெரிஞ்சுக்குற வயசுனா புரிஞ்சுக்குற வயசும் தான்டி... அதுக்கு ஏன் சாமத்துல இத்தன ஏச்சாம்பாட்டு வெக்கிற?

மீண்டும் கையை தூக்கி மேலே போட்டார் அப்பா.

மீண்டும் கையை உதறிவிட்டு உச் கொட்டினாள் அம்மா.

ஏன்னா சாமத்துல தான உனக்கு எல்லாம் தேவப்படுது?
நீ பேசலய்யா... நீ ஊத்திக்கிட்டது பேசுது...
வைசுக்கு வரப்போற புள்ளய வீட்டுல வெச்சுக்கிட்டு மூனுப்பேரு பொறண்டு படுக்க நாதியில்ல இந்த கொட்டாயில.. ராத்திரியானா கீழ படுக்க மட்டும் ஆளு தேடுறியே உன் கறியில கூசல?

நாளு முழுக்க தான் உழைக்கிறேன்...
வருசம் முழுக்க தான் உழைக்கிறேன்... இந்த கொட்டாயிக்கு ஒரு கீத்து வேய முடியலயே!
நம்ம பொறப்பு அப்புடிடி...

மீண்டும் கையை தூக்கி மாருக்கு மேல் போட்டார்...

சளார் என்று தட்டி விட்டாள்..

ஏன்யா... இவ்ளோ  சொல்றேனே திரும்ப திரும்ப கைய தூக்கி மேல போடுற?
எப்ப தான்யா உனக்கு ஒனத்தி வரும்?
நம்ம பொறப்பு தப்பில்லயா... உன் வளப்பு தப்பு...

என்னடி என் வளப்ப இப்ப குத்தங்கண்டுட்ட நீ?

உங்கோயியொப்பன் ஒன்னா படுத்துருக்கறத பாத்தா நீ வளந்த?
என் புள்ள மட்டும் அப்புடி வளரனுமா?
என் புள்ளைக்கு மட்டும் ஏன் அந்த கெரவம்?
கால் மேல் கால போட்டு அடக்கிக்கிட்டு படு... ராத்திரியானா புள்ளய வெச்சுக்கிட்டு என்னய நோண்டாத... 

இது இப்படியே தொடர்ந்துக் கொண்டிருக்கும்போதே என் கண்கள் சொருகின.
ஒவ்வொரு நாளும் அப்பாவின் இப்படியான சீண்டல்களையும் அம்மாவின் ஏய்ச்சுகளையும் கேட்காது நான் உறங்கியதேயில்லை.
இவற்றை கேட்டிடாமல்
எப்படியாவது சீக்கிரம் தூங்கி விட வேண்டுமென்று  தினந்தோறும் முயன்று முயன்று தோற்றிருக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக
எக்காரணத்தைக் கொண்டும்
தவறியும் நடுசாமத்தில் என் உறக்கம் கலைந்து விடக் கூடாது என்று பிராத்தனை செய்துவிட்டு தான் பல ராத்திரிகள் தூங்க போயிருக்கிறேன்.
அப்படியான என் பிராத்தனை ஓரிரவில் பொய்ப்பித்துப் போனது.

தூங்குவதற்கு முன்பு நடந்த சண்டையில் அம்மாவை அப்பா எப்படியோ சமாதானம் செய்திருப்பார் போல.
நடுசாமத்தில் அரை தூக்கம் கலைந்திருந்தபோது
அம்மாவின் முணகல் சத்தமும் அப்பாவின் மூச்சிரைக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது.
நான் அசையக்கூட இல்லை.
தூக்கம் மொத்தமாக கலைந்து கண்களை இறுக மூடிக்கிடந்தேன்.
இத்தனை நாட்கள் தூங்குவது தான் சிரமமாக இருந்தது.
இன்று தூங்குவதை போல நடிப்பது கூட கஷ்டமாகிப் போனது போல் தோன்றியது.

சில விஷயங்களை 
தோழிகளோடு கலந்து பேசி சிரித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.
சில விஷயங்களை தெரிந்துக்கொள்ளாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
அறிவியல் பாடப்புத்தகத்தில் நான்காவது பாடமான உயிரியல் இனப்பெருக்க பாடத்தை வெறுமென மனப்பாடம் மட்டுமே செய்திருக்கலாம் என்று தோன்றியது.
இன்னும் கொஞ்ச காலத்துக்கு சில விஷயங்கள் நான் அறிந்திராத ரகசியங்களாக மட்டுமே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

பெருமூச்சு விட்டு புரண்டுப் படுத்தார் அப்பா.
ஒருக்களித்துப் படுத்து என் தலையை கோதிக் கொடுத்தாள் அம்மா.
கொஞ்ச நேரத்தில் அப்பா எழுந்து வெளியே போய் விட்டார்.
என் நெற்றிப்பொட்டில் லெசாக முத்தமிட்டாள் அம்மா.
இப்போது தூக்கம் வருவது போல் தோன்றியது.

மறு நாள் பள்ளியில் முழுவதும் இதே சிந்தனையாகவே இருந்தது.
அடச்சே! எங்கள் வீட்டில் ஒரேயொரு தனியறை மட்டுமாவது இருத்திருக்க கூடாதா!?
கூடத்துக்கு குறுக்கே ஒரேயொரு தடுப்பு சுவர் எழுப்புமளவுக்காவது என் அப்பாவுக்கு வசதி இருந்திருக்க கூடாதா!?
குறைந்தபட்சம் படுத்ததும் உறங்கும், உறங்கியதும் காலை வரை விழித்திடாத வரத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்க கூடாதா!?
அது சரி!
என் அப்பா ஒன்றும் வேசி வீட்டுக்கு போகவில்லை.
என் அம்மாவோடு தான் அன்பை பகிர்ந்துக்கொண்டார்.
அது அன்பு தானா என்பது நிச்சயம் எனக்கு தெரியாது.
ஆனால் அதை என் அம்மாவோடு தான் பகிர்ந்துக்கொண்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இருந்தாலும் இதை எப்படி எதிர்கொள்வது என்பது தான் எனக்கு குழப்பமாகவே இருந்தது.

அடுத்த நாளும் இரவு அதே பதினோரு மணி ஆனது.
அதே அப்பா அதே மாதிரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து புள்ள தூங்கிருச்சா என்ற அதே கேள்வியை கேட்டார்.
இன்னும் இல்லையென்று அம்மா சொல்லுவதற்கு முன்பு நான் முந்திக்கொண்டேன்.

அம்மா..‌.. இங்க ரொம்ப புழுக்கமாயிருக்கு... நான் கயித்துக் கட்டிலை போட்டு வாசல்ல படுத்துக்கவா...!??

அடிக்க்க் கலுத... வைசு என்னகுது வாசல்ல படுக்குறேன்ற??? என்று அதட்டினார் அப்பா.

ஏதும் பேசாது
உறைந்து போய் நின்றிருந்தாள் அம்மா...
அவளுக்கு புரிந்துவிட்டது போல...
பார்வையால் அப்பாவை அறைந்தாள்.
அவள் கண்கள் நெருப்பாய் எரிந்து நீராவியாய் கசிந்தன.
என்னை ஆரத்தழுவிக் கட்டியணைத்து விசும்பி அழ ஆரம்பித்தாள்...


- @RajiTalks


















Saturday, April 11, 2020

சிசுவை கருவறுத்த ஸ்ரீராமன்.

துந்துபி என்றொரு அசுரன் எருமை உருவம் ஏற்று சகல பராக்கிரமங்களும் கொண்டு உலகை சுற்றி வந்தான்.
அவனுடைய வீரத்துக்கும் வலிமைக்கும் எங்கு தேடினாலும் அவனுக்கு நிகரான வீரனை யாராலும் காட்டிட முடியாது.
வலிமையில் ஆயிரம் யானைகளுக்கு சமமான துந்துபி போர் புரிவதில் அலாதி பிரியமுற்றவன்.
போர் ஆர்வத்தில் கண்ணில் பார்க்கும் எல்லா வீரர்களையும் வதம் செய்து கொண்று குவித்தவன்.

அது போதாதென்று சாலை முதல் சந்தைக்கடை வரை வழியில் பார்க்கும் எல்லாரையும் சண்டைக்கு வா...சண்டைக்கு வா... என்று வலிய அழைத்து போர் புரிந்து அனைவரையும் வென்றவன்.
இருந்தும் அவன் போர் வெறி இம்மியும் அடங்கிய பாடில்லை.
ஒரு கட்டத்தில் தன் பராக்கிரமத்துக்கு ஈடு தேடி அகிலம் எங்கும் சுற்றி அலைந்தான் துந்துபி.

அந்த பக்கமாக பறந்து போய்க்கொண்டு இருக்கும்போது,
எதேச்சையாக துந்துபியின் கண்களில் பட்டான் கடலரசன்.
வேட்டியை தார்ப்பாய்ச்சி கட்டிய வேகத்துக்கு
கடல்களின் அரசனிடம் வலிய வந்து நின்று வா சண்டைக்கு என்றான்.

துந்துபியின் வலிமையை கண்ட கடலரசனுக்கு பேச்சு மூச்சு இல்லை.
செய்வதறியாது நின்ற கடலரசனின் பதட்டத்தை அவன் காலடியில் கிடந்த சிற்றலைகள் வரை அதிர்வுணர்ந்தது.
அதிர்ந்த அலைகள் கரைகளை தாண்டி வழிந்தோடியது.
கரை புரண்டு கசிந்தோடிய அலைகள் எல்லாம் நுரை தள்ளியிருந்தது.
சுற்றுமுற்றும் பார்த்தான் கடலரசன்.
வெள்ளைக் கொடி ஒன்றை கம்பத்தில் கட்டிக்கொண்டு சமாதானத்துக்கு இறங்கி விட்டான்.

உன் கிட்ட கோதால இறங்கி நம்மளால மாளாதுப்பா... 
நானுன்டு என் பொழப்பு உண்டுனு உப்புல உழண்டுட்டு சிவனேனு படுத்துக்கிடக்கேன்‌.
என்ன சீண்டிப் பாத்து உனக்கு ஆவப்போறது ஒன்னுமில்ல‌..
என்ன விட்டுடுய்யா எஞ்சாமீ என்று படுத்தே விட்டான்.

எடுத்த கத்தியை ரத்தம் பார்க்காமல் உறைக்குள் வைக்கும்படியான ஏமாற்றம் துந்துபியின் முகத்தில் தெரிவதை கவனித்த கடலரசன்‌,
இது தான் அந்த பயல கோர்த்து வுட சரியான நேரமென்று நினைத்தாற்போல்,
மலையரசன் என்னை விட பெரிய குஸ்திக்காரன்,
குத்துப்பட்ட நெஞ்சோட குருதி வழிய கிடந்தாலும் ஒத்தையாளா நின்னு ஊரயே உலுக்குற சண்டக்காரன்... 
கரடுமுரடா வளந்துக் கிடக்குற காட்டுப்பய.
பரமேஸ்வரன் பொண்ணு எடுத்ததே அந்த பரதேசி கிட்ட தான்.
நீ வேணும்னா அவனோட போய் மள்ளுக்கட்டேன் என்றான்.

கடலரசன் சொல்லி முடித்தது தான் தெரியும்.
ஒரே தாவாக தாவி இமயத்தின் அடிவாரத்துக்கே சென்று விட்டான் துந்துபி.
பெரும் கற்பாறைகளை உருட்டியும் காடுகளை உலுக்கியும் மலையரசனை சீண்டி சண்டைக்கு அழைத்தான்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.
இங்கு ஒரு காடும் மலையுமே சாதுவாக வந்து துந்துபியின் முன்னால் நின்றது.

எய்யா.... நான் முன்ன மாதிரி இல்லய்யா...
வயசாகிருச்சு...
பொண்ண கட்டிக்கொடுத்து பேரப்புள்ள தூக்கியாச்சு...
மள்ளுக்கட்டுற பக்குவமெல்லாம் நரையேறிப் போச்சு... குஸ்தி கும்மாளம்னு இறங்கி பல காலம் ஆச்சு... இப்பயெல்லாம்  தவம் பண்ணுறேன்னு இந்த பக்கமா போற வர ஆசாமிங்களுக்கு குடைவரை குகை, ஆத்தங்கரை காத்து, மரத்தடி நிழலுனு விரலக் காட்டி வாரிக் கொடுத்துட்டு வேடிக்கை பாத்துட்டு மல்லாக்க படுத்து கிடக்குறதோட சரி... அதை கூட நான் ஒரு சமூக சேவையா தான் பண்ணிட்டு இருக்கேன்... என்றான் மலையரசன்.

கெஞ்சி நின்று பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருக்கும் மலையரசனை பார்த்து ச்சீ என்றானது துந்துபிக்கு.
இந்த தொடைநடுங்கியை பாக்கவா தூரம் பாக்காம இமயம் வரை பாஞ்சு வந்தோமென்று நொந்துக்கொண்டான்.
பல்லத்தாக்கு போல் பணிந்து விட்டவனை மெல்ல தாக்கினாலும் பாவம் சேரும் என்று புரிந்தான்.

சரி.... உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு... பிழைச்சு போனு விட்டுடுறேன்... ஆனா என் கூட சண்டை போட நிகரான ஒரு வீரனை மட்டும் காட்டிவிட்டு தொலைந்து போ என்றான்...

இதுவரை யாரும் கேள்விப்பட்டிடாத ஒரு வீரனை பற்றி உனக்கு சொல்லுறேன்...
தென்கோடி நாட்டிலே கிஷ்கிந்தைனு ஒரு 
காடு உண்டு..
காடுனா காடு நானே கண்டிடாத அப்படியோரு காடு...
பத்து யானை கூட்டமா போனாலும் பாதை மறந்து தொலைஞ்சு போற அத்தாம்பெரிய காடு...
அப்பேற்பட்ட காட்டுக்கு ஒத்த ராசா வாலி ராசா...
வாலி ராசா வானர ராசா...
எப்பேர்ப்பட்ட வீரன் கிட்டயும் அவன் அரைநாழி தாண்டி மள்ளுக்கட்டினதில்ல..
அவன் முட்டிய மடக்கி குத்துற ஒத்த குத்துக்கு பத்து ஆலம் முறிஞ்சு விழும்..
ஒத்தைக்கு ஒத்தைனாலும் சரி... ஒருத்தனுக்கு ஊரேனாலும் சரி.. எதிர்த்து வந்தவன் யாரானாலும் ஊரேனாலும் அவன கண்டா மண்டி தான் போடனும்...
உன் கொம்ப தழுவுற கொரங்கு அவன் ஒருத்தன் தான்...
அவன தேடி போ... என்றான் மலையரசன்.

வாலியை தேடி கிஷ்கிந்தை வனம் பறந்தான் துந்துபி.

##########################


சுக்ரீவனும் வாலியும் கிஷ்கிந்தை வனந்தோரும் விழுந்து வாரி சண்டையிட்டுக் கொண்டு இருந்தனர்.

கொஞ்ச நேரத்துக்கு முன்பு வரை வாலி அந்தபுரத்தில் மது அருந்திக்கொண்டும் அழகிகளோடு காம விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டும் தான் இருந்தான்.
உடலெங்கும் காம அசதி.
கள்ளு களிப்பிலும் கலவி களைப்பிலும் இருந்தபோதும் கூட
ஆரம்பத்திலிருந்தே சண்டையில் வாலியின் கைகளே ஓங்கியிருந்தது.
வாலியின் வலிமைக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டு இருந்தான் சுக்ரீவன்.
சுக்ரீவனின் உடலின் பல அங்கங்களின் எலும்புகளை உடைத்தெடுத்திருந்தான் வாலி‌.
வாலி மீது வழிந்தோடும் ரத்தம் மொத்தமும் சுக்ரீவனுடையது.
சுக்ரீவனின் பிடரி முடி பாதி வாலியின் விரலிடுக்குகளில் ஒட்டிக் கிடந்தது.
வாலியின் நகக்கண்கள் அத்தனையிலும் சுக்ரீவனின் தசைகள் சிக்கிக் கிடந்தது.


அவ்வளவு ரத்தம் சொட்ட சொட்ட சமாளித்துப் போரிட்டு கொண்டு இருந்தான் சுக்ரீவன். 
அத்தனை அடியும் உதையும் வாங்கிய போதிலும் தன் கழுத்தில் தொங்கிய கஜபுஷ்பி கொடியை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தவனை சுற்றியிருந்த சில வானரங்கள் முட்டாப்பய தேடி வந்து கேட்டு வாங்கிக் கட்டிக்கிறான் பாரு என்று கரித்துக் கொட்டின.
அவற்றுள் சில வானரங்கள்
சண்டையில் யாரு ஜெயிப்பா என்று தங்களுக்குள் பந்தயம் கட்டிக்கொண்டிருந்தன.

வாலி ராசா தான் ஜெயிப்பாரு... இருவது வாழைப்பழம் பந்தயம்... இளவட்டங்கள் கூடின.

மரத்து மேலிருந்து மேலும் சில வானரங்கள் குதித்தனர்.
எல்லாரும் உச்சிப்பாறையில் உக்காந்து உத்து பார்க்க ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தனர்.

இங்கிருந்து சண்டை நல்லா தெளிவா தெரியுதுல்ல மாப்ள..??

வாலி ராசா மேல பத்து வாழைப்பழம்... என்றான் செங்கன்.

நான் அஞ்சு வாழப்பழம் பந்தயம் கட்டுறேன் வாலி ராசா மேல... ராக்கப்பன்.

எல்லாரும் வாலி மேலயே பந்தயம் கட்டினா எப்புடிடா??
யாராவது சின்ன ராசா சுக்கி மேலயும் பந்தயம் கட்டுங்கப்பா...
கூட்டத்தில் ஒரு வயசான வானரம்.

கொம்பு முறிஞ்சு 
தோக்க போற கொழுப்பெடுத்த கடா மேல பந்தயம் கட்டி மொத்தமும் நக்கிட்டு போகவா!?? கொஞ்சம் கம்முனு போ பெருசு... என்றான் செங்கன்.

யாரலே கொழுப்பெடுத்த கடான்ற?
நாட்டுக்காக ரத்தம் சிந்துற சுக்ரீவ ராசாவா கொழுப்பெடுத்த கடா??
மக்க சனத்தை மறந்து பொழுதன்னைக்கும் அந்தபுரத்துல கள்ளும் பொண்ணும்னு மாஞ்சு  கிடக்குற வாலி தான்டா கொழுப்பெடுத்த கடா...


தோ... இந்த சுக்ரீவன்... காலைல நடந்த சண்டைல தான் வாலி ராசா இவர அடிச்சு விரட்டுனாரு... இந்தாளு வேட்டி முள்ளு புதருல சிக்கி அவுந்தது தெரியாம விழுந்து வாரி ஓடுனத காட்டுலருந்த பூனைலருந்து யானை வரைக்கும் அத்தனையும் பாத்துச்சுக...
இப்ப திரும்ப வந்து மள்ளுக்கு நின்னா காரணம் இல்லாமலா??
அவரு ஊருக்காக சண்டைக்கு வந்துருக்காரா இல்ல அவரு வூட்டுக்காரம்மாவுக்காக சண்டைக்கு வந்திருக்காரா??..

ஓடுனவன் திரும்ப வந்துருக்கான்னா திட்டம் இல்லாம இருக்காதுடா... மக்க மேல சுக்ரீவ ராசாக்கு அத்தனை பிரியம்.. ரத்த சூடு இளவட்டத்துக்கு கொஞ்சும் ஜாஸ்தி தான்... அது நம்ம வானர சனத்துக்கு வலிமைல இருக்கனுமே தவிர வாய்ல இருக்க கூடாது...

என்ன திட்டமா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும்...
யாரு நாடாண்டாலும் உழைக்கிற சாதிக்கு நாதியேது பெருசு??
அவுக கைய காட்டுற இடத்துல கவ்வுறதும் கண்ண காட்டுற இடத்துல பாயுறதும் தான நம்ம பொழப்பு?? 
மக்க உசுரு அவங்களுக்கு மசுருக்கு தான் சமானம்...
அது வாலி ராசாவாருந்தாலும் சரி சுக்ரீவ ராசாவாருந்தாலும் சரி... எதுவும் மாறப்போறது இல்ல... 
சோக்க கெடுக்காம ஓரமா போ...

################

நேராக கிஷ்கிந்தை காட்டுக்கே வந்து சேர்ந்தான் துந்துபி அசுரன்.
காடெங்கும் சுற்றித் தேடி வாலி இருக்கும் இடம் அடைந்தான்.

துந்துபி அசுரன் வந்த நேரம் வாலி அந்தபுரத்தில் அழகிகளோடு கலவியில் லயித்திருந்தான்.
குடம் குடமாக தென்னங்கள்ளையும் பனங்கள்ளையும் குடித்து போதையில் களித்திருந்தான்.
அழகிகளோடு மணிக்கணக்கில்  கூடியிருந்ததில் உடல் முழுக்க அத்தனை களைப்பு.
அசுரன் வந்த நேரமென்று இல்லை.
துந்துபி இப்போது அன்றி எப்போது வந்திருந்தாலும் வாலியை அந்தபுரத்திலியே பார்த்திருக்கக் கூடும்.
வாலிக்கு அந்தபுரம் தான் சொந்தபுரம்.

கடலரசனையும் மலையரசனையும் கண்டு ஏமாந்த அசுரன் வாலியாவது தன்னுடன் சமரிடுவான் என்று ஆவலிலிருந்தான்.

வாலியின் அந்தபுரத்து வாசலில் நின்று அசுர கூச்சலிட்டான்.
பாறைகளை தூக்கி வீசி அந்தபுர அரண் கதவுகளை தூளாக்கினான்.

டேய்...வாலி.... வெளிய வாடா.... இன்னிக்கு உன்ன நார்நாரா கிழிக்காம நான் நகரப்போறதில்ல....

அரையாடையில் இருந்த இரண்டு பெண்களை இடது கைகளால் அணைத்தபடியும், வலது தோளில் இரண்டு அழகிகளை கிடத்தியபடியும், வலது கையில் ஒரு பெரிய மதுக்குடுவையுடனும், கால்களில் களைப்பு கண்களில் களிப்புமாய் வெளியே வந்தான் வாலி...
போதையென்றால் போதை... அப்படியொரு போதை...

வாலியை இந்த நிலையில் பார்த்த அசுரன் நம்பிக்கை இழந்து நின்றான்.
போதையில் சோர்ந்து கிடக்கும் ஒரு குடிகாரனோடு, கலவியில்  களைத்து கிடக்கும் ஒரு வானரனோடு சண்டையிடுவதா என்று தயங்கி நின்றான்.

ஏ குரங்கே!
உன் கூட சண்ட போட்டு உன்னை வீழ்த்த தான் நான் இங்க வந்தேன்..
ஆனா உன் நிலைமையோ இப்போது சரியில்லை...
கள்ளு போதைலயும் காம போதைலயும் இருக்குற உன் கூட சண்டை போட்டு என் அறத்தை கெடுத்துக்க நான் விரும்பல...
மதுபானத்தில் மதி மங்கியிருப்பவன்,  தூங்கிக்கொண்டு இருப்பவன், காம களைப்பில் இருப்பவன்,
கையில் ஆயுதம் இல்லாது இருப்பவன்,
அஜாக்கிரதையாக இருப்பவன் இவர்களை தாக்கி வீழ்த்துவது ஆயிரம் தாயின் வயிற்றில் இருக்கும் பிறக்காத சிசுக்களை கருவறுத்து கொள்வதற்கு சமம்.
அதனால் உன் எல்லா போதைகளும் தெளிந்து பிறகு வா.. உன்னுடனான‌ சண்டையை நான் அப்போது வைத்துக் கொள்கிறேன் என்றான் அசுரன்.

##############

சுக்ரீவனை கிட்டத்தட்ட வீழ்த்திவிட்டான் வாலி.
இன்னும் ரெண்டு உதைக்கு தாங்க மாட்டான் சுக்ரீவன்.
வாலியின் கவனம் மொத்தமும் சுக்ரீவனை சிதைப்பதில் மட்டுமே இருந்தது.
சுற்றி நடப்பவை எதுவுமே அவன் கண்களுக்கு தெரியவில்லை.
சகோதரன் சுக்ரீவனை கொல்லப்போகும் திருப்தி ஒரு கண்ணையும், கொஞ்ச நேரத்துக்கு முன்பு குடித்து வயிற்றை  நிரப்பியிருந்த கள்ளு போதை மற்றொரு கண்ணையும் மறைத்திருந்தது.
கீழே கிடந்த சுக்ரீவனின் நெஞ்சில் ஒரு காலை தூக்கி மிதித்தான் வாலி.
அருகில் கிடந்த கூர்மையான மரத்தை தூக்கி சுக்ரீவனின் நெஞ்சுக்கு நேராக ஓங்கினான்.

யாரும் வாலியும் எதிர்பாராத வண்ணம்
பக்கத்து மலையிலிருந்து பாய்ந்து வந்த அம்பு ஒன்று வாலியின் நெஞ்சில் பாய்ந்தது.
நிலைக்குலைந்தான் வாலி.
வாலி மண்ணில் வீழ்வதற்கு முன்பாக ஆயிரம் பச்சிளம் சிசுக்கள் வாலியின் காலடியில் செத்து கீழே விழுந்தது.

########