Tuesday, February 7, 2017

சுயமாக சிந்தித்து தானாக எழுதும் பேனா

ஒரு விஷயம் சொல்லவா!
கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாகவும் அதிகம் ஆச்சர்யமாகவும் இருக்கும்.
என்னிடம் ஒரு கேட்ஜட் உள்ளது!
உலகில் யாரிடமும் இல்லாத ஒரு பிரத்யேக சாதனம்!

ஒரு பேனா!

பேனாவில் என்ன பெரிய பிரத்யேகமா?

இந்த பேனாவால் விரலின் துணையின்றி தானாகவே எழுத முடியும்!

மூடியை கழட்டி காகிதத்தின் மேல் வைத்து விட்டால் போதும்!
நீங்கள் சொல்ல சொல்லவும் எழுதும்,
சொல்ல தவறினால் சிந்தித்து சுயமாகவும் எழுதும்.
கடிதமெழுதும்,
கவிதையெழுதும்,
கதையெழுதும், ஏன்! வங்கி படிவங்களை கூட தாமாகவே பூர்த்தி செய்யும்.
யார் கையெழுத்தையும் எழுதும்,
யார் கையெழுத்திலும் எழுதும்.

இந்த பேனா என் கைக்கு கிடைத்ததே ஒரு பெரிய கதை!

என் பெயர் சத்யா.
சொந்தமாக ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் வைத்து நடத்தி வருகிறேன்.
என் தங்கை லீனா MBBS ஹோம் சர்ஜன் முடித்துவிட்டு, தற்காலிகமாக இப்போது ஊரிலேயே ஒரு பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாள்.
எப்போதும் வேலை முடிந்ததும் அவளை வீட்டிற்கு அழைத்து செல்வது நான் தான்.
அன்று சைட்டில் கொஞ்சம் வேலை அதிகமாதலால்
லீனாவை பிக்அப் செய்ய நேரம் இரவு பதினொன்று ஆகிவிட்டது.

நிச்சயம் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டாளென தெரியும்.
அதனால் அன்று போகும்போதே கையோடு பார்சல் சாப்பாடு வாங்கி சென்றுவிட்டேன்.
உட்காந்து சாப்பிடுவதற்கு ஏதுவாக ஹாஸ்பிடல் ரிசப்ஷன் சௌகரியமாக தான் இருக்கும்.
நிறைய முறை தாமதமான காரணத்தால் இருவரும் இப்படி உட்கார்ந்து சாப்பிட்டதுண்டு.

ஆனால் அன்று மட்டும் ஏதோ அநாவசியமாக நடக்கப்போவதாய் தோண்றியது.

டவுன் ஏரியா ஆஸ்பத்திரி தான்.
தனியாக வாட்ச்மேனெல்லாம் கிடையாது.
ஒரு கூர்க்கா மட்டும் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை விசிலடித்தபடி வாசலை கடந்து செல்வார்.

கதவை தட்டும் சத்தம்.
திடீர் அதிர்ச்சி தரும் தொடர் அதிர்வு கதவில் ஏற்பட்டிருக்கவில்லை.
டப்.... என ஒரேயொரு தட்டல் மட்டும் தான்.

நீயிங்கேயே இரு என லீனாவை நிறுத்தி,
தலைவலிக்கு மாத்திரை கேட்குமொரு இளைஞன்,
பையனுக்கு அஜீரன கோளாறுங்க என்று ஒரு சிறுவனை தோளில் சுமந்தபடி ஒரு நடுவயது பெண் என்பது போல்
யாராவது எதிரிருக்கலாமெனும்  கணிப்போடு கதவை திறக்க,
உடல் முழுவதும் இரத்தம் சொட்டியபடி ஒரு ஆள்.
மருமகள் கொடுமையால் வீட்டை விட்டு ஓடி வந்த ஒரு வயதான பெரியவர் எங்கேனும் காண கிடைத்தால் அவருக்கு இந்த ஆளுடைய வயது இருக்கலாம்.

வலது தோளில் கத்தியோ அல்லது அது போன்ற ஏதோவொரு ஆயுதமோ பாய்ந்திருக்கிறது.
கல்லோ புல்லோ இடரி விட,
விழுமிடத்தில் கிடந்த ஒன்று கூட எதேர்ச்சையாய் கிழித்திருக்கலாம்.!
கொலை முயற்சி வெட்டுக்குத்து மாதிரி எதுவுமாக இருக்க வாய்ப்புகள் குறைவு.
பெரிய அடியில்லையென்றாலும் முதிர்ச்சி காரணமாகவோ சத்தின்மையாலோ மயங்கியிருக்கிறார் போல் தெரிந்தது.
நான் டாக்டரல்ல.
லீனா தான் சொல்ல வேண்டும்.

நானும் லீனாவும் ஆளுக்கொரு கை பிடித்து ஸ்டெச்சரில் தூக்கிப் போட்டோம்.

என்ன லீனா!? இப்போ என்ன செய்யுறது?

நேரமில்லண்ணா.... நான் ஃபஸ்ட் எய்ட் பண்ணுறேன்... நீ போலீஸுக்கு இன்ஃபாம் பண்ணிடு என்றாள்.

லோக்கல் ஸ்டேஷன் நம்பர் தெரியும்.
சப்இன்ஸ்பெக்டர் மூர்த்தியை வேலை சம்மந்தமாக இரு முறை சந்தித்திருக்கேன்.
பேசியதும் உடனே மருத்துவமனைக்கு ஒரு காண்ஸ்டபிளை அனுப்புவதாக சொன்னார்.

திரும்பி போய் நான் பார்த்தபோது
அந்த வயதானவர் தோளில் கட்டோடு படுத்திருந்தார்.
நினைவிருந்தது.
காயம் பற்றிய கேள்விகள் எதையும் அவரிடம் கேட்டுக்கொள்ளவில்லை..

ஏதோ ரகசியம் சொல்வது போல் லீனா என் கையை பிடித்து அறையை விட்டு வெளியே இழுத்து வரவும்,
காண்ஸ்டபிள் எதிர் வரவும் சரியாக இருந்தது.
சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கியவள் காண்ஸ்டபிளை புன்முகத்தோடு வரவேற்றாள்.

வாங்க சர்... உள்ள தான்...இந்த ரூமு என கைக்காட்டினாள்.

அதுக்கு முன்னாடி உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்மா என தொடங்கியவர்,
எத்தனை மணிக்கு பாத்தீங்க, எங்க கிடந்தாரு, எங்கெங்க அடி என்பது போல் சில ஃபார்மலான கேள்விகளுக்கு பதில் நோக்கினார்.

நடந்தவாறே சொன்னோம்.

ஏதோ விபத்தாக இருக்க வேண்டும் என்பது தான் அவருடைய அனுமானமும்.

எங்களை வெளியே காக்க சொல்லி அறையுள் சென்றார்.

அவர் நகரும் வரை காத்திருந்தவள் காதில் முனகியபடி ஆளை இழுத்து தூரம் நகர்த்தானாள்.

அண்ணா... இது ஏதோ பெரிய பிரச்சனை போலருக்கு...

என்ன லீனா சொல்ற!??

ஆமா... அவரு தோள்ல இருந்த காயம்....
அது ஏதேர்ச்சையா நடந்தது இல்ல..
அவர கொலை செய்யவும் முயற்சிக்கல...
வலிக்கனும்ங்கறதுக்காக சித்திரவதை செய்யனும்னு கத்தியாலயோ இல்ல வேற எதாலயோ கீறிருக்காங்க...
நெஞ்சுல ஏழு இடத்துல...
18 தையல் போட்டிருக்கேன்...

அப்போ இதையெல்லாம் காண்ஸ்டபிள் கிட்ட சொல்லுறது தான ஏன் மறைச்ச!??

இல்லண்ணா... அத நாம சொல்லப் போய், அப்பரம் நம்மள போலீஸ் கேஸு அது இதுனு...

இப்போ மட்டும் கொஞ்சவா போறாங்க!?
இப்பவும் அதே தான்...
அவரு வெளிய வந்ததும் எல்லாத்தையும் சொல்லிடு என வாயை மூட,

அறையுள்ளிருந்து டமால் என்ற சத்தம்...
துப்பாக்கிச்சூடு..

ஓடிப்போய் கதவை திறக்க, அந்த காண்ஸ்டபிள் தலையில் குண்டடிப்பட்டு தரையில் ஐக்கியமாகியிருந்தார்.

அந்த வயதானவர் மெல்லிய அலறலில் கீழ படுங்க கீழ படுங்கவென அச்சுறுத்தினார்.

சரமாறியான தோட்டா துளைப்புகள்.
கண்ணாடிகள் சிதறின.
சுவர்களின் சுண்ணாம்பு முதல் உட்கற்கள் வரை செதில்களாய் பறந்தன.
போதாததற்கு லீனாவின் அலறல் வேறு.

பக்கத்து கட்டிடத்திலிருந்து தான் சுடப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

வெடி சத்தத்தில்
பின் சிறிதொரு இடைவெளி.

லீனாவையும் அந்த முதியவரையும் இழுத்துக்கொண்டு வெளியே ஓடினேன்.
மறுபடியும் எப்போது வேண்டுமானாலும் அந்த தொடர் சுடுதல் தொடங்கலாம்.
அவரால் நடக்க முடியாதென்பதை அறிவேன்.
மார்பின் அந்த 18தையல்கள் அதற்கு நிச்சயம் அனுமதிக்கவும் செய்யாது.

இத்தனை அமளிதுமளியிலும் என் பையி என் பையி என அலமாரியிலிருந்த தன் முதுகுப்பையை கை நீட்டினார்.

உயிர் கேட்குமளவிற்கு என்ன இருக்கிறது அதில்!?
அதற்கு தான் இத்துப்பாக்கிச்சூடா!?
மார்பில் வாங்கிய கீறல்களும் இதன் காரணத்தால் தானா!?
யோசிக்க பொழுதில்லை.
பையை நீட்டி எடுத்து அவர் மடியில் வீசினேன்.

அருகிலிருந்த வீல்ச்சேரில் அவரை கிடத்தி உருட்டியோடினோம்.

எதிரிகள் இங்கே வருவதற்குள் தாமதிக்காமல் பின் வாசல் வழியாக காரில் தப்பித்தோம்.

இவையெல்லாம் நான்கு அல்லது அதற்கும் குறைவான நிமிடங்களில் நிகழ்ந்திருக்க வேண்டும்.

ஆஸ்பத்திரியிலிருந்து காரில் வீடு வர வழக்கமாக 15நிமிடங்களாவது ஆகும்.
இன்று ஏழு அல்லது எட்டு நிமிடங்களில் பறந்திருக்கிறேன்.

வீட்டிற்கு வந்து கதவுகளை தாழிட்டேன்.

கத்தினாள் லீனா...
உண்மையில் அது ஒரு உயிர் பய ஓலம்.

என்ன நடக்குது இங்க!??
யார் இவங்கலாம்!??

லீனா கத்தாத.... கொஞ்சம் அமைதியாயிருக்கியா....

நான் ஏன்டா அமைதியாருக்கனும்!?
இந்தாளு யாரு!?
இவருக்காக நாம ஏன் ஓடனும்!?
இதுவரைக்கும் துப்பாக்கிய பாத்த்த்....த்த்....த்த்.... பாத்துருக்கியா நீ!?
இன்னிக்கு நான் பாத்தேன்...
வெடிக்குது....
கொஞ்சம் மிஸ்ஸாகிருந்தா....

லீனா.... ஷட் அப்... கொஞ்சம் அமைதியாருனு சொல்லுறேன்ல....

அவங்க என்ன கொல்ல வந்தவங்க தான்... என இடைமறித்து தொடங்கிய பெரியவர் இவ்வாறு தொடர்ந்தார்.

நான் எதேர்ச்சையா அந்த ஹாஸ்பிடலுக்கு வரல...
உங்கள தேடி தான் வந்தேன்...
உங்களால ஒரு உதவியாகனும் எனக்கு...

எங்களால என்ன?!

உங்க அப்பா யாரு??

சரவணன்....

மிஸ்டர் சரவணன் என்ன வேலை பாக்குறாரு!?

ரியல் எஸ்டேட்ல இருக்காரு...
அதெல்லாம் ஏன் இப்போ!??
அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்!??

சம்மந்தம் இருக்கு....
முதுகுப்பையிலிருந்த ஒரு கட்டு காகிதங்களை அள்ளி வீசினார்.
ஐம்பது அறுபது தாள்கள் இருக்கலாம்... எல்லாம் ஏதேதோ ஆவணங்கள் படிவங்கள் துண்டு கத்தரிப்புகள்.
ஒவ்வொன்றாய் புரட்ட சிலவற்றில் என் அப்பா ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எனவும்,
சிலவற்றில் ஏதோ தொலைந்துப்போன நகரம் பற்றியும் செய்திகளாய் இருந்தன.
அவள் பங்கிற்கு லீனாவும் வாங்கியவற்றை அலசினாள்.

இது எப்படி சாத்தியமாகும்!
இத்தனை நாள் எங்கள் அப்பா ஒரு ஆய்வாளர் என்பதற்கான எந்த அறிகுறியையும் அவர் நடத்தையில் நாங்கள் கண்டதில்லையே!
பெற்ற பிள்ளைகளிடமே இதை மறைக்கும் அவசியம் என்ன!?
அல்லது இவையாவும் பொய்யானவையா!!
இக்கேள்விளையெல்லாம் என்னுள்ளே முன்னும், அம்முதியவரிடம் அடுத்தும் வரிசையிட்டேன்.

இதுல ஆச்சரப்படவும் சந்தேகப்படவும் எதுவுமேயில்ல...
65வயசாகுது... என் பசங்களுக்கு நான் என்ன வேலை பாக்குறேன்னு தெரியாது...
இது இந்திய தொல்லியல் துறையோட ஒரு ரகசிய அமைப்பு...
என் பேரு தேவராஜன்.
உங்கப்பா என் ஜூனியர்...
என் தலைமைல தான் இந்த ஆராய்ச்சிகள் நடந்துது...
தொலைஞ்சு போன நகரத்தை தேடுற ஆராய்ச்சி...
இருபது வருஷம் முன்ன ராமநாதபுரம் செந்தூர் கிராமத்துல நடந்த ஒரு ஆராய்ச்சில ஒரு சிவன் கோவிலை  கண்டுபிடிச்சோம்..
2200 வருஷம் பழமையான
அதுல சிதைஞ்ச நிலைல கிடைச்ச சில கல்வெட்டு குறிப்புகளை திரட்டினப்போ
3000வருஷம் முன்ன காணாம போன அந்த நகரம் பற்றின செய்திகள் கிடைச்சுது.
அதை வெச்சுட்டு தான் அந்த நகரத்தை தேட ஆரம்பிச்சோம்..

என்ன நகரம்!??
அப்டி என்ன இருக்கு அந்த நகரத்துலயென குறுக்கிட்டாள் லீனா...

உங்கப்பாவுக்கு அது ஒரு கனவு...
ஒரு உண்மையான வரலாற்று ஆய்வாளனுக்கு இருந்த கனவு...
ஆனா ஒரு வரலாறையும் தாண்டி அங்க பிரம்மிக்க வைக்கிற ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு...
இளமை நீரூற்று, பொன், இயற்கை, காதல் தேவதைகள்னு ஏராளம்.
இத்தனை வருஷமா ரொம்ப ரகசியமா நடந்த இந்த ஆய்வு முடிவுல,
ஆய்வுக்குறிப்புகள் வழியா அந்த நகரம் எங்க இருக்குங்கறதுக்கான சங்கேத வழிகாட்டிய வடிவமைச்சுட்டதா சரவணன் அறிக்கையிட்ட நேரம் தான் எல்லா பிரச்சனையும் தொடங்குச்சு...
போன மாசம் அவரு திடீர்னு காணாம போயிட்டாரு...

அவர் வேலை விஷயமா தெலுங்கானா வரை போயிருக்குறதா சொன்னாரே!?

அதுவும் எங்க திட்டத்துல ஒரு அத்தியாயம் தான்...
இப்போ வரை அவரை தேடிட்டு இருக்கோம்...
காணாம போன அவரோடவே எங்க
டேட்டாஸ் எல்லாமும் மிஸ்ஸாகிடுச்சு...

இவங்கள்லாம் யாரு!??
உங்கள துரத்தினவங்க!?
அவங்களுக்கு எங்கப்பாவ தெரியுமா?
எங்கப்பா அவங்களுக்கு தேவையா??
தேவைனா ஏன்!?? என கோபத்துடன் வினவினாள் லீனா.

அவங்களுக்கு உங்கப்பாவ நல்லா தெரியும்...
ஆனா அவங்களுக்கு அவர் தேவையில்ல...
அந்த நகரத்துக்கான மேப்..
அது போதும் அவங்களுக்கு...

அது உங்க கிட்ட தான் இருக்கா!?
அதுக்காக தான் அவங்க உங்கள துரத்தினாங்களா!??

இல்ல சத்யா...
அந்த மேப் இப்போ இல்லை..

என்ன உளறுறிங்க என சத்தமிட்டாள் லீனா.

எங்க கிட்ட ஒரு பேனா இருக்கு..
ஒரு அதிசய பேனா...
தானாவே சிந்திச்சு சுயமா எழுதக்கூடிய ஒரு பேனா...
அந்த மேப்புக்கான குறிப்புகள உங்க அப்பா அதால தான் எழுதினாரு...
அதனால அந்த குறிப்புகள் அந்த பேனாவுல பதிவாகியிருக்கும்...
அந்த பேனாவால அந்த குறிப்புகள திரும்ப எழுத முடியும்...

அதுவரை அமைதியாயிருத்த சத்யா கோபத்தில் கூச்சலிட்டான்.
நான்சென்ஸ்.... எங்கள என்ன முட்டாள்னு நினைச்சிங்களா!??
இவ்வளவு நேரம் நீங்க பேசிட்டுருந்ததையெல்லாம் கேட்டதுக்கு
தானா எழுதுற பேனா அதுயிதுனு
ஏதேதோ பைத்தியக்காரத்தனமான கதையெல்லாம் சொல்லி குழப்புறீங்க!?

சில விஷயங்கள நம்பி தான் ஆகனும் சத்யா...
அந்த பேனாவுக்காக தான் என்ன கட்டி வைச்சு சித்திரவதை செஞ்சாங்க...
அங்கிருந்து தப்பிச்சு தான் உங்கள தேடி வந்தேன்...
நான் சொல்ற இடத்துக்கு என்ன கூட்டிட்டு போ...
அந்த பேனா அங்க தான் இருக்கு பத்திரமா...
என்னால உனக்கு அத நிரூபிச்சு காட்ட முடியும்... என லேசாய் இறுமி கைக்குட்டையால் முகம் மூடினார்.

கோக் டின் அளவிலுள்ள ஒரு சிலிண்டர் புகையை கக்கியபடி அறையுள் வந்து விழுந்தது.

சில நொடிகள் இடைவெளியில்
நான் லீனா என இருவருக்குமே இருமல் பரவி மயங்குவதாய் உணர்ந்தோம்...

சத்யா..... சத்யா எழுந்திரு.... என யாரோ கன்னத்தை அறைந்த உணர்வு..

லீந்தா..... லீன்... லீனா எங்க.!??
அறை மயக்கத்தில் உளறினேன்...

என்ன மன்னிச்சுடு சத்யா...
என்னால உன்ன மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சுது...
அவங்க லீனாவ தூக்கிட்டு போயிட்டாங்க....

ஆவேசத்தில் எழுந்து அவர் சட்டையை பிடித்தேன்....

############

கோட்சூட் அணிந்த நான்கு பேர் அறையுள் நுழைந்தனர்.

லீனா கத்தினாள்.
உங்களுக்கு என்ன வேணும்..!?
அந்த பேனா எங்க கிட்ட இல்ல...
அது அந்த தேவராஜன் கிட்ட தான் இருக்கு..
என்னயும் எங்க அப்பாவையும் விட்டுடுங்க...

ஒருவன் கண்ணசைக்க மற்றொருவன் குறுக்கிட்டான்.
அவன் பேச்சு ரொம்பவும் மரியாதையாக தான் இருந்தது.

அந்த பேனா அவன் கிட்ட தான் இருக்குனு தெரியும் மேடம்.
அதை எப்டி வாங்கனும்னும் எங்களுக்கு தெரியும்...
எங்களுக்கு தேவை நீங்க தான்..
உங்க கிட்ட இருக்குற அந்த பாஸ்வேடு...

என்ன பாஸ்வேடு!??
என்கிட்ட எதுவும் அப்டி கிடையாது...

உங்களுக்கு தெரியும்னு உங்க அப்பா சொல்லிருக்காரு...

எங்க அப்பாவ என்ன செஞ்சீங்க!?

உங்க அப்பாவ நாங்க எதுவும் செய்யல...
நீங்க தூக்கிட்டு ஓடுனிங்களே அந்த தேவராஜன்,
அவன் கிட்ட தான் இருக்காரு உங்க அப்பா...
அவனால உங்க உயிருக்கும் ஆபத்து இருக்கு... அவன் உங்க ஹாஸ்பிடல்ல இருக்குறத தெரிஞ்சுக்கிட்டு தான் உங்கள காப்பாத்த அங்க வந்தோம்..

காப்பாத்த வந்தீங்களா!?? பொய் சொல்லிதீங்க....
அப்பரம் ஏன் எங்கள சுட்டீங்க!??

சுட்டது நாங்க இல்ல... நல்லா யோசிச்சு பாருங்க... அத்தனை துப்பாக்கி சூட்டுலயும் உங்க மேலயெல்லாம் ஒரு குண்டு கூடவா படல!??
அது அவன் செட் பண்ணின ஆளுங்களேவா தான் இருக்கனும்...
அந்த கான்ஸ்டபிளுக்கு அவன பத்தி ஏதோ தெரிஞ்சுருக்கனும்..
அதனால தான் அவர சுட்டுட்டு,
வேற யாரோ வெளியிலிருந்து சுடுறதா நாடகமாடிட்டு
போலீஸோ நாங்களோ வரதுக்கு முன்ன உங்கள கூட்டிட்டு அங்கிருந்து தப்பிச்சுருக்கான்...
உங்கள ஃபாலோ பண்ணிட்டு வீட்டுக்கு வந்து பாத்தோம்...
அப்போ உங்க வீடு முழுக்க புகையா இருந்துச்சு...
நீங்க மட்டும் தான் தரைல மயங்கி கிடந்தீங்க.. உங்கள தூக்கிட்டு இங்க வந்தோம்...
சத்யாவ கூட்டிட்டு அவன் வேற எங்கேயோ போயிருக்கனும்...
தேடிட்டுருக்கோம்....

அப்போ இது எல்லாம் அவனோட ப்ளானா!??
எங்க அப்பா அரசோட ஒரு ரகசிய ஏஜன்ஸியில ஆர்க்கியாலஜிஸ்ட்,
காணாம போன நகரத்த தேடுறீங்க,
தானா எழுதுற ஒரு பேனா இருக்கு,
நீங்க அதுக்காக தான் எங்கள துரத்துறதா சொன்னானே!?

ஹாஹாஹா.... தானா எழுதுற பேனா, காணாம போன நகரம்!!
என்ன உளறுறிங்க!??
அந்த பேனா தானா எழுதுறத நீங்க பாத்தீங்களா??

இல்ல... எங்கேயோ ரகசியமா பதுக்கி வெச்சுருக்குறதா சொன்னாரு...

அப்டி ஒன்னு இருந்தா தான பாக்க முடியும்..!!
உங்க அப்பா கவர்மெண்ட்டோட சீக்ரட் ஏஜன்ஸில வர்க் பண்ணினது உண்ம தான்...
ஆனா ஆர்க்யாலஜி டிபாட்மெண்ட்ல இல்ல, நியூக்லியர் ஆராய்ச்சில...
உங்க அப்பா ஒரு சைன்ட்டிஸ்ட்...
உலகமே நடுங்குற ஒரு ஆயுதத்த கண்டுபிடிச்ச விஞ்ஞானி...

நீங்க என்ன புது கதை சொல்லுறிங்க!??

நால்வரில் மற்றொருவன் தொடர்ந்தான்..
சிவா... இரு நான் எக்ஸ்ப்ளைன் பண்ணுறேன்...
கதையெல்லாம் இல்ல மேடம்...
சில நேரங்கள்ல கதைகளை விட உண்மை தான் ஏத்துக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும்...
உங்க அப்பா ஒரு ஆர்ட்டிஃபிஷியல் ரேடியோக்டிவ் எலமெண்ட்ட கண்டுபிடிச்சாரு...
ஹைலி கான்ஃபிடென்ஷியலா நடந்துது அந்த ரீசேர்ச்...
எலமெண்ட் X அண்டு எலமெண்ட் Yனு ரெண்டு மெட்டீரியல்...
ரெண்டயும் உருவாக்கினது சரவணன் சர் தான்...
அது ரெண்டும் சாதாரணமா இருக்குறப்போ மண்ணு மாதிரி...
அதுக்கு எந்த பவரும் கிடையாது..
ஆனா அது ரெண்டயும் ரியாக்ட் பண்ணுறப்போ கிடைக்கிற எலமெண்ட் ரொம்ப சக்தி வாய்ந்தது.
என்ரிச்டு ப்ளூட்டோனியம் யுரேனியத்தோட ஒரு டன் பவர,
இந்த எலமெண்ட் வெறும் இருபது கிராம்ல கொடுத்துடும்..
அதாவது ஒரு சின்ன சாக்பீஸ் போதும்...
இந்த நாடே 18 செகண்ட்ஸ்ல...... BOOOOOM.....

அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்தாள் லீனா.....

தொடர்ந்தான்...

இந்த ரெண்டு எலமெண்ட்ஸயும் உருவாக்குற ப்ரொஸிஜரையும், ரெண்டயும் ரியாக்ட் பண்ணுற ப்ரொஸிஜரயும் உங்க அப்பா டாக்குமெண்ட் பண்ணி வெச்சுருந்தாரு...
அது ஒரு காண்ஃபிடன்ட்ஷியல் ஃபார்முலா....
அதுல எலமெண்ட் எக்ஸோட ஃபார்முலாவும்,
X அண்டு Yய ரியாக்ட் பண்ற ப்ரொஜிரும் மட்டும் தான் எங்க கிட்ட இருக்கு...
எலமெண்ட் Yயோட ஃபார்முலா மிஸ்ஸிங்....
ஆனா அதோட ஒரு சாம்ப்பிள் பீஸ் மட்டும் இருக்கு...
ஏதோ தானா எழுதுற பேனானு கதை விட்டதா சொன்னீங்களே!?
அந்த பேனா.... அந்த பேனாவோட நிப் தான் அந்த எலமெண்ட் Y....
அது இப்போ அந்த தேவராஜன்
கிட்ட இருக்கு...

அதனால அவனுக்கு என்ன லாபம்??
பணத்துக்கு திருடி வேற யாருகிட்டயாவது விக்கிறானா??
அப்பரம்
ஏதோ பாஸ்வேடுனு சொன்னிங்களே அது என்ன!?

அவன் உங்க அப்பாவோட கோ-ரீசேர்ச்சர்....
அதை ஏன் திருடிட்டு போனான்னு எங்களுக்கும் இன்னும் தெரியல...
எவ்வளவோ சித்திரவதை பண்ணி பாத்துட்டோம்.... வாயவே திறக்க மாட்டேனுட்டான்.... அப்பரம் எப்டியோ அவன் ஆளுங்க,
அவன் இருக்குற இடத்தை கண்டுபிடிச்சு அவன தூக்கிட்டு போயிட்டாங்க...... என பெருமூச்சு விட்டு நகர மூன்றாவதாய் மற்றொருவன் தொடர்ந்தான்.

அந்த பாஸ்வேடுங்கறது ஒரு 5டிஜிட் நம்பர் மேடம்...
நாங்க அத எக்ஸ்பெரிமெண்ட்டல் நியூமரிக்கல் காண்ஸ்ட்டன்ட்னு சொல்லுவோம்.
உங்களுக்கு புரியுற போல சொல்லனும்னா,
அந்த ரியாக்ஷன் ப்ரொஸிஜர் டாக்குமெண்ட்ஸ்ல நிறைய நியூமரிக்கல் டேம்ஸ் இருக்கும்...
உதாரணமா எவ்வளவு நேரம் எந்த எலமெண்ட்ட ஹீட் ட்ரீட்மெண்ட் பண்ணனும், அதை எவ்வளவு நேரம் க்ரிட்டிக்கல் டெம்ப்ரேச்சர்ல வித்ஸ்டேன்டு பண்ணனும்,
எவ்வளவு ப்ரெஷர் இருக்கனும் அதை எவ்வளவு நேரம் மெய்ண்ட்யென் பண்ணனும்னு நிறைய்ய்ய்ய.....
அதையெல்லாம் நேரடியா 500டிகிரி டெம்ரேச்சர், 600பார் ப்ரெஷர், 2000செகண்ட்ஸ் டைம் சீக்வண்ஸ்னு உங்க அப்பா நோட் பண்ணல....
அவரு நோட் பண்ணிருக்குற நம்பர்ஸோட ஒரு ஃபைவ் டிஜிட் காண்ஸ்டண்ட்ட கூட்டனும்...
அப்போ தான் ரியாக்ஷன் அக்யூரட்டா நடக்கும்...
ஃபார் எக்ஸாம்பிள், 555டிகிரி டெம்ப்ரேச்சர்ல ஹீட் பண்ணனும்னு எழுதிருக்கு, அந்த காண்ஸ்டன்ட் 55000னு வெச்சுக்கோங்க...
இப்போ 55000கூட 555கூட்டினா 55555...
இது தான் ஆக்ச்சுவல் டெம்ப்ரேச்சர்.
இதுல வன் ஆர் டூ டீவியேஷன்ல குறைஞ்சாலோ அதிகமானாலோ கூட எக்ஸ்பெரிமெண்ட் ஃபெயிலியர் ஆகிடும்.
இது ஒரு 99999டிஜிட் காம்பினேஷன்.
அந்த பாஸ்வேடு என் பசங்களுக்கு மட்டும் தான் தெரியும்னு சொல்லிருக்காரு...
அதனால தான் தேவராஜன் உங்கள தேடி வந்துருக்கான்...

ஆனா அப்படி எதுவும் எங்க அப்பா என்கிட்ட சொன்னதில்ல...

நல்லா யோசிச்சு பாருங்க...
எதோ ஒரு சமயத்துல
நேரடியாவோ மறைமுகமாவோ உங்க கிட்ட அதை அவரு சொல்லிருக்கனும்...
இல்லனா சத்யாவுக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பிருக்கா!???

மொபைலை பார்த்தபடி ஒருவன் குறுக்கிட்டான்....
கார்த்திக்.....
சத்யாவ ட்ரேஸ் பண்ணிட்டோம்...
உடனே கிளம்பனும்....
செயின்ட் பால் ஸ்ட்ரீட் கிண்டி....
இன்னும் 15மினிட்ஸ்ல அங்க போயிடலாம்.....

##########

சட்டய விடு சத்யா....
விடுனு சொல்றேன்ல....

கத்தியபடி நகர்ந்தான் சத்யா...

என்ன உங்க பிரச்சனை!??
எதுக்கு எங்கள இதுக்குள்ள சிக்க வெச்சீங்க!??
அப்பா தொலைஞ்சுட்டாரு.... இப்போ லீனா...
அவளுக்கு மட்டும் எதாவது ஆச்சு........

கோவப்படாத சத்யா....
உன்ன அவங்க கிட்டருந்து காப்பாத்தி கொண்டு வரவே எனக்கு போதும் போதும்னு ஆகிடுச்சு....
முடிஞ்சா நிச்சயமா லீனாவையும் காப்பாத்திருப்பேன்...

சுதாரித்தான்....

என்ன சொன்ன!??
என்ன காப்பாத்தி கூட்டிட்டு வந்தியா!??
எப்டி உன்னால முடியும்!?...
உன்னயே நான் தான் கூட்டிட்டு வரல தூக்கிட்டு வந்தேன்..
உன்னால எப்டி என்ன காப்பாத்திருக்க முடியும்!??
உண்மைய சொல்லு....
நீ யாரு!??
இதெல்லாம் வெல் ப்ளாண்டு அண்டு எக்ஸிக்யூட்டட்னு நல்லா தெரியுது...
யாரு நீ???

நான் எல்லா உண்மையையும் சொல்லிடுறேன் சத்யா....
அந்த தொலைஞ்ச நகரத்துக்கான வழிகாட்டில இருக்குற சங்கேத வார்த்தைகள உன்னால மட்டும் தான் படிக்க முடியும்னு உங்க அப்பா சொல்லிருக்காரு...
அதனால தான் உன்ன தேடி வந்தேன்...
ஆனா உண்மையாவே நான் லீனாவ காப்பாத்த முயற்சி பண்ணேன் அதுக்குள்ள அவங்க அவள தூக்கிட்டு போயிட்டாங்க...
அவங்கயெல்லாம் கவுண்ஸில சேந்தவங்க....
அந்த பேனாவுக்காக கொலையும் செய்ய தயங்க மாட்டாங்க...
அவங்க கிட்டயிருந்து லீனாவ மீட்டாகனும்...

அதுக்கு அவசியமில்ல தேவராஜன்....... என்று துப்பாக்கியை நீட்டியபடி உள்ளே வந்தான் கார்த்திக், அவன் பின் சிவாவும் லீனாவும், பின் ஒவ்வொருவராய் மற்ற இருவரும்.

உன்னோட ஃபேன்டஸி பேனா கதை முடிவுக்கு வந்துடுச்சு தேவராஜன்.... அந்த எலமெண்ட் எங்க!?
அதை கொடுத்துடு உன் உயிருக்கு உத்திரவாதம் தரோம் கமான் என்றான் கார்த்திக்.

லீனா ஓடிப்போய் சத்யாவோடு நின்றுக்கொண்டாள்.

லீனா!? இவங்க கூட சேந்துட்டு என்ன நீயும்!?
துப்பாக்கிய கீழ இறக்கு என்றார் தேவராஜன்.

உன்ன பத்தி எல்லாத்தையும் இவங்க சொல்லிட்டாங்க தேவராஜன்.
எனக்கு அந்த எலமெண்ட்டெல்லாம் வேணாம்.
எங்க அப்பாவ எங்க வெச்சுருக்கனு மட்டும் சொல்லிடு...

உங்க அப்பாவ நான் வெச்சுருக்கேனா!?
உங்க அப்பாவ கொண்ணதே இவங்க தான்..
நீ இவங்க கூடவே சேந்துட்டு என்ன பாத்து துப்பாக்கிய நீட்டுற!?

ஷட்அப் தேவராஜ்.... இனிமே நீ எந்த கதையும் சொல்ல முடியாது...
லீனாவுக்கு எல்லாம் உண்மையும் தெரிஞ்சுடுச்சு என்றான் நால்வரில் ஒருவன்.

லீனா.... சத்யா... நான் சொல்லுறத நம்புங்க... உங்க அப்பாவ கொண்ணது அவங்க தான்...
என்கிட்ட அதுக்கான வீடியோ ஆதாரமே இருக்கு.....

துப்பாக்கியை கவுண்சிலை சேர்ந்தவர்கள் பக்கம் திருப்பினாள் லீனா...
இவரு என்ன சொல்லுறாரு!??
இவரு சொல்லுறது உண்மையா சொல்லுங்க!??

லீனா அவன் சொல்லுறது அத்தனையும் பொய்...
சரவணன் சார கொண்ணுட்டு அவரு பொண்ணு கைலயே துப்பாக்கிய கொடுக்க நாங்க என்ன முட்டாளா!?? கத்தினான் சிவா.

துப்பாக்கியை தேவராஜன் பக்கம் திருப்பினாள்.

அவங்களுக்கு அதான் வேணும் லீனா...
உன் நம்பிக்கைக்குறியவங்களாகி
உன் கையாலயே என்ன கொண்ணுட்டு அந்த பேனாவையும் நகரத்துக்கான மேப்பயும் கைப்பற்றுறது தான் அவங்க திட்டம்..
நான் சொல்லுறத கேளு...

சரவணன் சார கொண்ணுட்டு அவரோட கண்டுபிடிப்பையும் திருடிட்டு எப்டி உன்னால இவ்வளோ அழகா நாடகமாட முடியுது தேவராஜன்!??? கார்த்திக் துப்பாக்கியின் குறி தேவராஜன் தலைக்கு நின்றது.

அந்த எலமெண்ட்ட யாருக்கு விற்க ட்ரை பண்ணுற தேவராஜ்!?
இப்போ அது எங்க இருக்கு!?
இதுக்கு மேல உன்னால தப்பிக்க முடியும்னு நினைக்காத.... என்றான் சிவா.

என்ன நடக்குது இங்க!??
தேவராஜன்.... அந்த பேனாவ கொடுத்துடுங்க... என்னால முடிஞ்ச வரை அந்த சங்கேத வார்த்தைகள நான் ட்ரான்ஸ்லேட் பண்ணி கொடுத்துடுறேன்...
எங்க அப்பா எங்கனு மட்டும் சொல்லிடுங்க....

நான் சொன்னேனே சத்யா....
ஹீஇஸ் நோ மோர்....
உங்கப்பாவ கொண்ணது அவங்க தான்...

அவன் நாடகமாடுறான் சத்யா...
அவன நம்பாத....

அந்த எலமண்ட் எங்க தேவராஜன்!???
உனக்கு ஃபைவ் செகண்ட்ஸ் டைம் தரேன்....
FIVE....

லீனா அவங்க நாளு பேரும் நம்ம எதிரிங்க... ஷூட் தெம்...

FOUR....

ஷட் அப் தேவராஜன்... அவங்க உன்ன பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்க....

THREE....

அந்த எலமெண்ட்ட கொடுத்துடு தேவராஜ்....

என் கிட்ட எந்த எலமெண்ட்டும் இல்ல....
அந்த பேனா தான் உங்களுக்கு தேவைனா நிச்சயம் தர மாட்டேன்....

TWO....

அந்த பேனாவ கொடுத்துடுங்க தேவராஜன்...
மேப்ப விட உயிர் முக்கியம்....

ONE...

ட்டொஃஃஃஃஃஃஃப்.............

கதைவை திறந்துக்கொண்டு போலியோ பாதித்த கால்களை சுமந்தவாறு ஒரு வீல்ச்சேர் உள்ளே வந்தது...

லீனா.... லீனா எங்கருக்க!??

என்னண்ணா!?? என்றபடி பத்தினைந்து வயது சிறுமி ஒருத்தி ஓடி வந்தாள்.

என் பேனாவ எங்க வெச்ச!?
ரொம்ப நேரமா தேடுறேன் காணல....

ரூம்ல டேபிள்ல வெச்சேனே!!
இருங்க எடுத்துட்டு வரேன்..

மூடியவாவது மூடி வெச்சியா இல்லையா!??

அய்யயோ!! மறந்துட்டேனே!!

ஹ்ம்ம்... கிழிஞ்சுது... எதாவது ஒன்ன எழுதி எழுதி மொத்த இங்க்கயும் காலி பண்ணிருக்கும் இந்நேரம்...
இதுக்காகவே வாரம் ஒரு இங்க் பாட்டில் வாங்க வேண்டியதா இருக்கு!!

பேனாவும் பேப்பருமாய் வந்தாள் லீனா..

இன்னிக்கு என்ன!??
கவிதையா கட்டுரையா!???

ஏதோ கதை போல இருக்குண்ணா....

ஹாஹா.... படி கேப்போம்....

ஹ்ம்ம்ம்.....

ஒரு விஷயம் சொல்லவா!
கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாகவும் அதிகம் ஆச்சர்யமாகவும் இருக்கும்.
என்னிடம் ஒரு கேட்ஜட் உள்ளது!
உலகில் யாரிடமும் இல்லாத ஒரு பிரத்யேக சாதனம்!

ஒரு பேனா!

பேனாவில் என்ன பெரிய பிரத்யேகமா?

இந்த பேனாவால் விரலின் துணையின்றி தானாகவே எழுத முடியும்!

மூடியை கழட்டி காகிதத்தின் மேல் வைத்து விட்டால் போதும்!
நீங்கள் சொல்ல சொல்லவும் எழுதும்,
சொல்ல தவறினால் சிந்தித்து சுயமாகவும் எழுதும்.
கடிதமெழுதும்,
கவிதையெழுதும்,
கதையெழுதும், ஏன்! வங்கி படிவங்களை கூட தாமாகவே பூர்த்தி செய்யும்.
யார் கையெழுத்தையும் எழுதும்,
யார் கையெழுத்திலும் எழுதும்.

இந்த பேனா என் கைக்கு கிடைத்ததே ஒரு பெரிய கதை!

என் பெயர் சத்யா.
சொந்தமாக ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் வைத்து நடத்தி வருகிறேன்.
என் தங்கை லீனா MBBS ஹோம் சர்ஜன் முடித்துவிட்டு, தற்காலிகமாக இப்போது ஊரிலேயே ஒரு பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாள்.
எப்போதும் பணி முடிந்ததும் அவளை வீட்டிற்கு அழைத்து செல்வது நான் தான்.
அன்று சைட்டில் கொஞ்சம் வேலை அதிகமாதலால்
லீனாவை பிக்அப் செய்ய நேரம் இரவு பதினொன்று ஆகிவிட்டது.

#ராஜ்குமார்@RajiTalks

7 comments:

  1. மச்சான் செம்ம்ம்மடா டோய் :-)) சுஜாதா கண்ணு முன்னாடி வந்துட்டு போனத தவிர மத்தபடி கொலமாஸ்

    ReplyDelete
  2. நல்லாருக்கு சகோ..!!!

    ReplyDelete
  3. Excellent story, just the story ran on my eyes while reading. Nice narration.

    ReplyDelete
  4. முதல் உட்கதை பேனாவின் கற்பனையா?

    ReplyDelete
  5. முதல் உட்கதை பேனாவின் கற்பனையா?

    ReplyDelete