Thursday, September 22, 2016

வால் நட்சத்திரம்

எந்த இடத்திற்கு செல்வதாகயிருந்தாலும்
ஆத்திரம் அவசரமென ஓடாமல்
குறைந்தபட்சம் அரை மணிநேரமாவது முன் கூட்டியே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவது வழக்கம்.
ஏதோ இஞ்சின் கோளாறு காரணமாக செல்லவிருக்கும்
மைசூர் எக்ஸ்பிரஸ் இன்று ஒரு மணிநேரம் தாமதமாக புரப்படுகிறதாம்.!

இரண்டு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டிருந்த பயணமெனவே
முன்பே ரிசர்வேஷன் செய்திருந்தேன்.
பர்த்தும் கன்ஃபாமாகிவிட்டதென்பதால் காத்திருக்கப் போகும் இந்த ஒன்றரை மணிநேரம்,
முட்டியடித்து அன்ரிசர்வ்டு கம்பாட்மெண்ட்டில் தொங்குவது பற்றிய சிந்தனைகளின்றி
ஒரு கையில் டீயும் இன்னொரு கையில் உளுந்தவடை சுற்றிய துண்டு பேப்பருமென
நிம்மதியாக ப்ளாட்ஃபாம் இரண்டின் ஏதோ ஒரு பெஞ்ச்சில் அமர்ந்திருந்து,
நெடுநீள இருகோடுகளின் ரயில் வரும் பாதை நோக்கி காத்திருந்தேன்.

வெயிலுடன் கூடிய லேசான மழை.
கிராமத்து சிறுவர்கள் இதை தான் காக்கைக்கும் நரிக்கும் எங்கோ கல்யாணம் நடப்பதாக கூறுவார்கள்.

ரசித்திருக்க,
ஒரு 26-27வயது மதிக்கத்தக்க இளைஞனொருவன் என் அருகில் வந்து அமர்ந்தான்.
தோழமையுடன் உட்கார இடமளிப்பதாய் காட்டிக்கொள்ள,
இரு கைகளையும் பெஞ்சில் ஊண்றி
அரை இஞ்சிற்கும் குறைவான உயரம் எழுந்து,
கால் இஞ்சிற்கும் கொஞ்ஞ்ஞ்சம் அதிகமான தூரம் நகர்ந்து
சுழலும் மின்விசிறியின் காற்று வட்டத்தை விட்டு அகலாமலும் தள்ளி(!) அமர்ந்தேன்.

சார் என்று பேச்சு கொடுத்தான்.
என்னப்பா என்பது போல் திரும்பினேன்.

என்ன உங்களுக்கும் உங்கள எனக்கும் ரொம்ப நல்லா தெரியும்.
உங்களால எனக்கொரு உதவி ஆக வேண்டியது இருக்கு!
மறுக்காம எனக்கு அதை நீங்க செஞ்சு கொடுக்கனும் என்றான்.

கால் அவுண்ஸ் தண்ணீரை அடி தொண்டையில் வைத்து பேசுவது மாதிரியான குரலில் தென்படுகிறது
ஒரு மாபெரும் அழுகை.
கண்களில் அல்ல.

என்னால உனக்கு என்னப்பா உதவி செய்ய முடியும்?
நீ முதல்ல யாரு அத சொல்லு? என்றேன்.

உங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும்..
கேள்வி பட்டிருப்பீங்க!
போன மாசத்துல தன் கூட பிறந்த தங்கச்சிய கொல்ல சொல்லி ஒருத்தன் கருணைக்கொலை மனு கொடுத்ததா செய்திகள்லயும் பேப்பர்லயும் வந்துச்சே!
அது நான் தான்!

திருவண்ணாமலை சித்ராவோட அண்ணனா?

இவன் பற்றிய எல்லா விபரமும் அறிவேன்!
செந்திலின் இந்த முடிவிற்கு
சிலர் அனுதாபப் பட்டனர். முட்டாள்தனமென்று பலரும் கூச்சலிட்டனர்.
நானும் தான்.
ஊடகங்கள் கொதித்தன.
எல்லா தரப்பு மக்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
கிட்டதட்ட நாடே அதிர்ந்து தான் போனது.

ஹ்ம்ம்க்!!
உங்களுக்கு தெரியாததா.!
எங்க கிட்ட பணம்லாம் பெருசா இல்ல.
அதுக்காக நாங்க எப்போதும் கவலைப்பட்டதும் கிடையாது.
நான் சித்ரா அப்பா அம்மானு அந்த குட்டிக்குட்டி சந்தோஷம் சிரிப்பு
எல்லாம் ஒரே நாள்ல போச்சு!
என்னை இதை தவிர வேற என்ன செய்ய சொல்லுறிங்க!!!

எத்தனை பெரிய இழப்பிற்கும் மூன்றாம் நிலை மனிதராய் ஆறுதல் சொல்வதும் அறிவுரை வழங்குவதும் மிக சுலபமான ஒரு விஷயம்!
நான் அவ்விரண்டையுமே செய்யவில்லை!
செந்திலின் தோள்களில் கை போட்டு கொஞ்சம் அனைத்து உட்கார்ந்தேன்.
இன்னொரு கையை அவன் துடையில் வைத்து முகம் நோக்கினேன்.

இந்த ஆணவக்கொலை எல்லாம் பண்ணுற ஆளுங்க கிடையாது சர் நாங்க.
ஒருத்தன காதலிக்கிறேன்னு வந்து வீட்டுல நின்னா...!
எங்க வீட்டு வால் நட்சத்திரம்.
அவ விறுப்பம் தான் எங்களுக்கு எல்லாமே!
சரினு தலைய ஆட்டினோம்.
குறிச்ச தேதில கல்யாணமாகிருந்தா இன்னியோட பத்து நாள் ஆகியிருக்கும்.!
இப்படியானதும் அவனும் முடியாதுனு ஓடிட்டான்.
இப்டியொரு கேடுகெட்ட காதல நினைச்சு அவ உடம்ப விட மனசு தான் அதிகம் வெந்துருக்கும்!
அவள பாத்து நாங்களும்
நாங்க கஷ்டப்படுறத பாத்து அவளும்!
எங்களுக்கு மட்டும் ஏன் சர் இப்டி நடக்கனும்!
உங்களுக்கு இந்த விஷயம் தெரியும்னு நினைக்கிறேன்!
இந்த மனுவ கொடுக்க சொல்லி சொன்னதே அவ தான்.

புரியுது செந்தில்... நான் அட்வைஸ் பண்றதா நினைக்க வேண்டாம்!
வாழ்க்கைல எது நடந்தாலும் சரி....
Life has to go on....
நீங்களே இப்படி உட்காந்துட்டா அப்பா அம்மாக்கு யாரு ஆறுதல் சொல்றது!?

இல்ல சர்... என்னால நடக்குற எதையும் ஏத்துக்க முடியல....
அவளுக்கு கல்யாணமாகி குழந்தை குடும்பம்னு சந்தோஷமா இருக்குறத பாக்க தானே நாங்களும் விறும்புவோம்!
இதுக்கு மேல அவளுக்கு வாழ்க்கைனு என்ன இருக்கு!?
ஒத்துக்குறேன் சர்.. நான் பெரிய கோழை தான்...
ஆனா அவளே இதை விறும்புறாங்கறப்போ நான் என்ன செய்ய!?
கோர்ட் அந்த விண்ணப்பத்த நிராகரிக்கிற பட்சத்துல தானே சாவை விறும்பி ஏற்க அனுமதி கேட்டு இன்னொரு பெட்டிஷன் போடுவேன்னு சொல்லுறா!
உங்களால மட்டும் தான் உதவ முடியும்.
நீங்க தான் எப்படியாவது கோர்ட் இந்த மனுவை ஏத்துக்குறதுக்கு வழி பண்ணனும்!
ப்ளீஸ் சர்....

புரியாம பேசாதீங்க செந்தில்....
சுத்த முட்டாள்தனமா இருக்கு இது!
இதுல நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கிறீங்க!?
ஜனாதிபதிக்கே இதை அனுமதிக்கிற உரிமை கிடையாது.!
அதுவுமில்லாம எல்லா பிரச்சனைக்கும் சாவு ஒரு காரணமாகிடுமா சொல்லுங்க?
அப்படி பாத்தா நாட்டுல எங்க திரும்பினாலும் சுடுகாடுங்க தான் இருக்கும்.

பயணிகளின் கனிவான கவனத்திற்கு.
மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டி இன்னும் சற்று நேரத்தில் நடைமேடை மூன்றிற்கு வந்து சேரும்.

இதை பாருங்க.... நீங்க விரக்தில இருக்கீங்க... சித்ரா கிட்ட பேசுங்க... புரிய வைங்க... நீங்களும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க...
உங்க இழப்பு பெருசு தான்... மன்னிச்சுடுங்க!
தெரிஞ்சோ தெரியாமலோ அதுக்கு நானும் ஒரு காரணமாகிட்டேன்...
அதுக்காக இப்படியெல்லாம் முட்டாள்தனமா முடிவெடுக்காதீங்க.
எல்லா கஷ்டத்துக்கு பின்னாடியும் ஒரு வாழ்க்கை இருக்கு.
யோசிங்க..... என சங்கடத்தோடு அங்கிருந்து நகர,
காங்ங்கென பெருங்கோஷம் போட்டு வந்து நின்றது ரயில்.

தங்கையின் வாழ்க்கை பற்றிய ஏமாற்றம்,
தவறு செய்தவனை தண்டிக்க முடியா இயலாமை,
அந்த முகத்தை திரும்பி பார்க்க திராணியின்றி வேகவேகமாய ரயில் நோக்கி நடந்தேன்.

சரியான பெட்டியில் ஏறி
இருக்கை எண் தேடி அமர்ந்த பொழுது வரை,
செந்திலின் அந்த பேச்சு மனதிற்குள் நெருடிக்கொண்டே இருந்தது.
நடைமேடையிலும் பெட்டியினுள்ளும்
டீ காபி விற்பவர்கள், புத்தகம் வாங்க சொல்லி நச்சரிப்பவர்கள், பிச்சையெடுக்கும் குழந்தைகள், பேட்டரி லைட் விற்கும் கண் தெரியாதவர்கள் என யாவரினது குரலும் காதுகளில் ஏறவேயில்லை.!

குருவிக்கூடு மாதிரியான ஒரு சின்ன குடும்பத்தினுள் கல் எறிந்து விட்ட காரியத்தை சுட்டி,
என் சட்டையை பிடித்திருந்தாலும் செந்திலின் மேல் நான் கோபம் கொண்டிருக்க மாட்டேன்.
அவனது கோபம் நியாயமானதே!

ஆனால் அதை செய்யாமல் இன்னமும் என்னால் அவனுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறான் என்பதற்காகவே,
அவன் மனம் மகிழ்வதாய் ஏதாவது செய்ய வேண்டும் நினைத்தேன்.

வழக்கமான பயணங்களின் போது புத்தகம் படிப்பதும், டைரியோ அல்லது நண்பர்களுக்கு கடிதமோ எழுதுவதும் வழக்கம்.
இந்த மனநிலையில்
இப்போது என்னால் எதையுமே முழுமையாக செய்ய முடியமென்ற நம்பிக்கை இல்லை!

அமர்ந்திருந்த வண்டியை விட்டு ப்ளாட்பாரம் ஒவ்வொரு அடியாய் விலகியோட,
இளையராஜா மடிதேடி
ஹெட்ஃபோனை காதுகளுக்கு தஞ்சமாக்கினேன்!

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு காணக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா.........

இமைமூடி இரண்டு பாடல்களை கடந்திருப்பேன்,
தோள்களில் கை வைத்து தம்பி என யாரோ அழைத்ததொரு உணர்வு.
நிமிர்ந்து நோக்க வயதான ஒரு தம்பதியினர்.
சொல்லுங்கமா என்றேன்.

செந்தில் உங்க கிட்ட பேசிட்டு இருந்தத பாத்தோம்ப்பா...

அம்மா நீங்க????

செந்தில் சித்ராவோட அம்மா அப்பாப்பா நாங்க.
அவன் பண்ணுறது கொஞ்சம் கூட பிடிக்கல எங்களுக்கு.
என்னயிருந்தாலும் அவ எங்க பொண்ணு!
அவ மனச எங்களால மாத்த முடியும்.
கல்யாணம் காட்சினு ஒன்னு ஆகலனா தான் என்ன!?
கடைசி வரை அவள கூட வெச்சு பாத்துட்டேயிருந்தாளே போதும்.
அதுக்காக
தானே போய் தன்னை பலி கொடுக்குறதா என கண்ணீர் சுரந்து புடவை முந்தானையில் முகம் புதைக்க,
சித்ராவின் அப்பா தொடர்ந்தார்,

ஒருத்தன லவ் பண்ணினத தைரியமா வந்து வீட்டுல சொன்ன பொண்ணு,
ரோடுல இன்னொருத்தன் காதலிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுறான்ங்கறதயும் எங்க கிட்ட சொல்லியிருந்தா அப்போவே ஏதாவது பண்ணி இது மாதிரி அசம்பாவிதம் நடக்காம தடுத்துருக்கலாம்!
முன்னாடியெல்லாம் காதலிச்சு ஏமாத்தினா தான் பொண்ணுங்க மேல ஆசிட் வீசுவானுங்க
ஆனா இப்போ காதலிக்க மாட்டேன்னு சொன்னாலே வீசுறானுங்க!
அவ ஆசைப்பட்ட வாழ்க்கையும் அமையாம,
நடக்கயிருந்த கல்யாணமும் நின்னு,
சாவோட விளிம்புக்கு போய்...... எத்தன போராட்டம்!?
உங்களுக்கு நல்லா தெரிஞ்சுருக்கும் தம்பி...
சாட்சி ஆதாரம்னு எல்லாமே இருந்தும் கடைசில தப்பு செஞ்சவன் ஜாதி சப்போட்டுல வெளிய வரும்போது............ எதுக்கு இந்த சட்டம் மண்ணாங்கட்டி எல்லாம்!!!

உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுறதுனே தெரியலங்க!

இந்த சமூகத்த நான் தப்பு சொல்ல விறும்பல தம்பி..!
என் பையன் பேச்ச மட்டும் கேட்டுடாம
தயவுசெஞ்சு சித்ராவ எங்களுக்கு உயிரோட மட்டுமாவது  திருப்பி கொடுத்துடுங்க....என மல்கினார்.

ஐயா...
நீங்க கேட்டுக்கிட்ட மாதிரியோ
பொதுமக்கள் விருப்பத்துக்காகவோ என்னால செயல்பட முடியாது.
உங்க குடும்பத்துக்கு இப்படி ஆனதுக்கான மறைமுக காரணம்ங்கற குற்றவுணர்ச்சியிலிருந்தே நான் இன்னும் வெளிய வந்த பாடில்ல...
இப்படியெல்லாம் பேசி என்ன நீங்க ரொம்ப பெரிய தர்ம சங்கடத்துக்கு ஆளாக்குறீங்க.! என கூறி அங்கிருந்து வேகமாய் நகர்ந்து கதவருகே வந்து அமர்ந்தேன்.

தனிமை சிலருக்கு நண்பன்.
பலருக்கு எதிரி.
சிந்திக்கவும் தன் தவறுகளை களையவும் இந்த இடம் மிக பொருத்தமாயிருக்கும்.

செந்தில் மற்றும் அவன் பெற்றோர் பேசியவை அனைத்தும் பூவிதழ் கண்ட தேனீயாக தலைக்குள் சுற்றி சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.

உங்களுக்கெல்லாம் ஒரு விஷயத்தை இப்போது சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
சித்ராவை நான் ஒருதலையாக நேசித்தேன்.
இந்த எண்ணத்தை உணர்வை காதலென்ற வரையறைக்குள் கொண்டு வந்துவிட முடியுமா என்பதை பற்றி தெரியவில்லை.
அந்த நேரத்தில் அதை நான் களைய கூட முடியாதளவு காதலில் மூழ்கியிருந்தேன்.

அவள் அழகின் மீதான வர்ணனைகளிலேயே அவள் மீது தீராக் நேசம் கொண்டேன்.
இப்படியொருத்தியை தன்னவள் ஆக்கிக்கொள்ள யாருக்கு தான் ஆசை இராது!?

ஆனால் அவளோ!
யாரோ ஒருவனை காதலித்து அந்த உறவை கல்யாணம் வரை கொண்டு போய் விட்டால்.!
கோபம்!
தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்துவதற்காக சாலையில் ஒரு முரடனை தினமும் அனுப்பியது நான் தான்.
இந்த தொல்லைகளை பற்றி வீட்டில் தற்போது பேச வேண்டாம் என சக தோழியை அனுப்பி அவளை கட்டுப்படுத்தியதும் நான் தான்.
இப்படியிருக்கயில் அவன் மூலமாக சித்ராவை சிறிது காலம் மனரீதியாக சித்ரவதை செய்து சந்தோஷப்பட நினைத்தேன்.
இத்தனை நாள் நான் தான் எத்தனை சேடிஸ்ட்டாக இருந்திருக்கிறேன்!

ஆனால் அவனும் உண்மையிலேயே அவள் மீது காதல் கொண்டு விரக்தியில் கோபத்தில் சித்ரா மீது ஆசிட் வீசியது நானே அறியாமல் நடந்த ஒரு விஷயம்.!
வெட்கமும் குற்றவுணர்ச்சியும் என்னை மரவண்டாய் மனதில் துளைத்தது.

அவள் கதையறிந்தவர்களில் சிலர் பின்வருமாறெல்லாம் சொல்லியிருந்தனர்,

1. ஆசிட் வீசுப்பட்ட முகத்தை பார்த்து அவள வேண்டாம்னு சொல்லிட்டு போன அவளோட காதலன் முன்னாடி அவ வாழ்ந்து காட்டனும்.
2. இப்படி அவலட்சனமா யார் முகத்துலயும் முழிக்காம ஒதுக்கப்பட்டு கஷ்டப்படுற வாழ்க்கைக்கு பேசாம அவ செத்தே போயிருக்கலாம்.
3. முகம் போனா என்ன! அழகு தான் எல்லாமேவா? அவ உழைச்சு எதிர்காலத்துல பெரிய தொழிலதிபராவோ அரசியல் தலைவராவோ ஆகி சாதிக்கனும்.
இவ ஒரு முன் மாதிரியா இருக்கனும் மத்த பெண்களுக்கெல்லாம்!
4. அந்த பொண்ணு கைல துப்பாக்கிய கொடுத்து அந்த ஆசிட் வீசுனவன சுட சொல்லனும்ங்க.

இதற்கு மேலும் அவளை கஷ்டப்படுத்தி பார்க்க நான் கிருமியானவன் அல்ல!
ஆத்மாவின் ஏதோஒரு ஓரத்தில் கொஞ்ம் மனிததத்தை அடைக்காத்திருப்பவன் தான்.
என் காதலுக்குறியவள் ஆகாவிடிலும் இத்தனை அச்சுறுத்தல்களுக்கு பின்னாவது அவளுக்கொரு நல்ல வாழ்க்கை அமையட்டும்!

பையிலிருந்த டேபை எடுத்து டைப் செய்ய ஆரம்பித்தேன்.

☆வால் நட்சத்திரம் - அத்தியாயம் இறுதி☆

இப்போதெல்லாம் சித்ரா தன் அறையை விட்டு வெளியே வருவதேயில்லை.
சுவர்களுக்குள்ளேயே தன்னை சிறைப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
ஆழ்மனதின் இச்சையின் காரணமாய்
யாரோ ஒருவன் அவள் மீது காட்டியிருந்த வன்முறை
ஒட்டுமொத்த சமூகத்தையும் வெறுத்து ஒதுங்கிக்கொள்ளுமளவு வீரியம் கொண்டிருந்தது.

இரவுகளில் பயந்தெழுந்து அலருவாள்.
கண்ணாடி டிவி எவர்சில்வர் பாத்திரங்கள் என உருவத்தை பிரதிபலிக்கும் எதை கண்டாலும்
தூக்கி தூரமெறிந்து உடைப்பாள்.
மூன்று மாதங்களுக்கு முன் அவள் பயன்படுத்திய மஸ்காரா காஜல் லிப்ஸ்டிக் மேக்கப் கிட்களை இப்போது காணவே அவளுக்கு அறுவறுப்பாய் இருந்தது.

வீட்டினுள் உலவும் போதும் கூட முழு முக்காட்டோடே திரிந்தாள்.
தன்னை தானே தனிமைப் படுத்திக்கொண்டாள்.

கருணைக்கொலை மனு நிராகரிக்கப்பட செந்தில் வழக்குரைஞரை காண சென்றிருந்தான்.
அப்பா அம்மாவும் வீட்டிலில்லை.

கதவை தட்டும் ஓசை.
தபால்காரரோ கூரியர்காரரோ பக்கத்து வீட்டினரோ கூட கதவை தட்டினாலும் அவள் போய் திறப்பதில்லை.
வெகுநேரமாக காலிங் பெல்லும் கதவை தட்டும் சத்தமும்.

எழுந்து போய் தாழை திறந்து
ஓரிரு கோணம் விலகிய கதவின் பின் பதுங்கி
வீட்டுல யாரும் இல்ல போயிட்டு அப்பரம் வாங்க என்றாள்.
மழலையின் சினுங்கள் மாதிரியான குரல்,
அச்சம்பவத்திற்கு பிறகு கொஞ்சம் கரகரத்து போயிருந்தது.

மறுபக்கம் கண்ணீரோடு கதவில் சாய்ந்தவன்
திற சித்ரா நான் பாஸ்கர் வந்துருக்கேன் எனவே
கதவை ஓங்கியறைந்து ஓடியவள் அடுப்பறையில் போய் கத்தினாள்.

இங்க எதுக்கு வந்த.!? உன்ன பாக்கவே எனக்கு பிடிக்கல... என் முகத்துலயே முழிக்காத..... இங்கிருந்து போயிடு தயவுசெஞ்சு....

குரல்களுக்குள் விவாதம்.
அறையுள் ஒளிந்தவளை இவன் இன்னும் கண்களால் காணவில்லை.!

உன்னோட கோபம் நியாயமானது தான்.
ஆனா என்னயும் கொஞ்சம் பேச விடு ப்ளீஸ்.... என கூறிக்கொண்டே அறை நோக்கி நெருங்கினான் பாஸ்கர்.

கிட்ட வராத.!
பேச இனிமே எதுவுமேயில்ல.... காதல்... உன்னோட காதல் என்கிட்ட எத பாத்து வந்ததுனு நல்லா புரிஞ்சுக்கிட்டேன்...
இனியும் உன்கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு?
கேவலம் என் உடம்ப தான விறும்பின நீ??

அய்யோ சித்ரா....
தயவுசெஞ்சு இப்டி பேசி என்ன வார்த்தையால கொல்லாத...
அன்னிக்கு நடந்ததுக்கு எல்லாம் காரணம் என் ஃபேமிலி தான்...

சமாதானம் சொல்ல வந்தியா?!?
அந்த கட்டத்தையெல்லாம் நான் எப்போவோ தாண்டிட்டேன்.!

என்ன பத்தி நீ புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தானா!
உன்னோட அந்த மனு பத்தின செய்திய கேள்விப்பட்டதும் அந்த நொடியே நான் செத்துட்டேன்!
உனக்காக யாரும் இல்லனு நீயே ஏன் முடிவு பண்ணின?
உனக்காக வந்துருக்கேன்...
நீ வேணாம்னு சொன்ன என் குடும்பத்தை தூக்கி எறிஞ்சுட்டு வந்துருக்கேன்.

அதுக்கு உனக்கு ரெண்டு மாசம் ஆச்சா பாஸ்கர்?
என்ன பரிதாபப் படுறியா!? வாழ்க்கை பிச்சை போடுறியா எனக்கு?
இங்கிருந்து போயிடு என்றவளின் குரலில் தென்பட்டது பேச்சின் முதல் கலக்கம்.

அப்பரம் ஏன் அழற?
ஒரேயொரு வார்த்த....
அழாம....
உன் மனசுல நான் இன்னுமும் இல்லனு சொல்லு நான் இப்போவே போயிடுறேன்.!

ஐந்து நிமிடமாக அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை..!
நிறைய அழுதாள்....
கண்ணீரை துடைத்தெறிந்து ஆசுவாசமாகிவிட்டு ஏதேனுமொரு பதிலளிப்பாளென காத்திருந்தான் பாஸ்கர்.

இங்கிருந்து முதல்ல போவென கத்தியவள் குரலில் அழுகை ஆர்ப்பரிக்க,
காற்றில் தலை விலகிய துப்பட்டா தோள் சாய்ந்தது.

அறை நுழைந்து
முகம் நோக்கிய காதலன் விழிகளில் வெள்ளம்.
ஓடி சித்ராவை கட்டியணைத்து விசும்பினான்.
நெற்றியிலும் கண்ணிலும்.
முத்தங்களாய் பொழிந்தான்.

அவன் வருகையை கண்ட கணம் அவள் அதிர்ச்சியாகி இருக்கவில்லை.
அவன் தன்னை தேடி வருவான் எனவே காத்திருந்தாள்.
தன் காதலை நம்பியிருந்தாள்.

ஃஃ..... ஃஃ...... ஃஃ......
நீ வருவேனு தெரியும் பாஸ்கர்.
அதுக்காக ரெண்டு மாசம் என்ன காக்க வெச்சுட்டல்ல!

உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் சித்ரா!
இனிமே உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன்.!

திருமணமாகி மூன்று வருடங்களிலேயே இந்த காதலுக்கு சான்றாக இரு குழந்தைகளும் பிறந்தன.
சித்ராவின் அப்பாம்மா மற்றும் செந்திலுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணங்களாயிருந்தது.
பாஸ்கர் தன் குடும்பத்தை பற்றி யோசித்திருக்கவே இல்லை.
அவன் குடும்பத்தினர் இக்காரியம் புரிந்த காரணத்திற்காக அவனை ஒதுக்கி வைத்து விட்டதாக இருமாப்பு கொண்டிருந்தனர்.

தன் மகளை திருமணம் செய்துக் கொண்டு தான் கஷ்டப்படுவதாக எந்த காரணத்திற்காகவும் சித்ராவின் பெற்றோர் நினைத்துவிட கூடாதென்பதில் பாஸ்கர் மிகவும் அக்கரையாக இருந்தான்.
இன்னும் சொல்லப் போனால் அதில் மிகுந்த எச்சரிக்கையுடனேவே இருந்தான்.

முகநூலிலும் சமூகவலைதளங்களிலும் இவர்களது படங்கள் லைக்ஸுகளை அள்ளின.
காதல் ஜோடிகளுக்கு பெரிய ரோல்மாடல் ஆகினர்.
___________சுபம்________________

மனதில் இருந்த பெரும் சுமையை இறக்கி வைத்ததை போலொரு உணர்வு.
என்னால் தொடங்கிய கதை என்னாலேயே ஒரு முடிவிற்கும் வந்தது!
ஆக்கம் காப்பு அழிவு என்ற மூன்றும் தன்னாலாகுமென்ற கணத்தை இறக்கி வைக்க விரும்புவதோடு,
சமீப மூன்று மாதங்களாக வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வால் நட்சத்திரம் தொடர்கதை முடிவிற்கு வருகிறது.
சித்ராவின் வாழ்க்கை மீது அக்கரை கொண்ட பலரும் இந்த ஹேப்பி எண்டிங்கை விரும்புவார்களெனவே நம்புகிறேன்.
இந்த மென்பிரதியை எடிட்டருக்கு மெயில் செய்துவிட்டால் போதும்.
அடுத்த வார இதழில் பிரசுரிக்கப்பட்டுவிடும்.

அடுத்த தொடர் கதைக்கான சூழல் பற்றி கற்றறிய மைசூர் செல்கிறேன்.
இனி சங்கடங்களின்றி கடிதமெழுதலாம், இசையில் மூழ்கலாம்.................




-ராஜ்குமார் @RajiTalks

No comments:

Post a Comment