Sunday, September 25, 2016

கடவுள் candy

இந்த ப்ராஜக்ட் டீட்டெய்ல துல்கர் சல்மானுக்கு மெய்ல் பண்ணி க்ளாரிஃபிகேஷன் கேட்டு வைக்க சொல்லி நேத்தே சொன்னேன்.
மண்டைய மண்டைய ஆட்டிட்டு இப்போ வந்து தலைய சொறியுற.!
இன்னும் அரை மணிநேரத்துல ஃபைல் வரணும்..... கண்டபடி கடிந்தார் மேனேஜர் விஜய்சேதுபதி.

இந்த மேனேஜருங்கள நினைச்சாலே காண்டாகுது.... ஒரு நாளைக்கு 25மணிநேரம் வேலையும் வாங்கிட்டு,
அப்பரமும் அது சரியில்ல இது சரியில்லனு நம்மளயே நொட்டயும் சொல்லுவானுக......
டேய் ரெட் டீ ஷர்ட் வாடா நாயே என்று கூப்பாடு போட்டு திட்ட முடியவில்லை என்றாலும் மனது ஆறுதலடையும் வரை உள்ளுக்குள்ளேயே திட்டி தீர்த்து விட்டு வெளியே வந்தான் சிவகார்த்திகேயன்.

வேலை பளு, ஏகப்பட்ட டென்ஷன்.! வீட்டுக்கு போனால் மனைவி சாய் பல்லவி வேலை முடிஞ்சா நேரா வீட்டுக்கு வர மாட்டியா என்று கேட்க பூரிகட்டடையும் கையுமாய் பால்கனியிலிருந்து பார்க்கிங்கையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பாள்.
இதே ரொட்டீன் லைஃப்....

இதெல்லாம் ஒரு வாழ்க்கையாடா!!!
சும்மா சாப்டோம் தூங்கினோம் மேலதிகாரி கிட்ட திட்டு வாங்கினோம்னு.... ச்சை...

பைக்கை ஓட்டியவாறே ஆவேசத்தில் கடவுளே இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா என்று கத்த,
பூமியை பிளந்துக் கொண்டு எழுந்து, சாலையை மறைத்தவாறு நின்றது
சுமார் ஏழடியில் ஒரு செங்கல் சுவர்.
ஒன்றும் புரியாமல் விழித்தான் சிவகார்த்திகேயன்.

சுவரின் மேலிருந்து ஏணியொன்று கீழே விழ,
ஆசுவாசமாக இறங்கி வந்தான் டீசர்ட் ஜீன்ஸ் அணிந்த ஒரு யோயோ இளைஞன்.

சிவகார்த்திகேயனுக்கு கோபம் தலைக்கேறியது.

யார்ரா நீ? மனுஷன் போய் வர பாதைல செவுரு கட்டி விளையாண்டுட்டு இருக்க?

ஹாய் டூட்... நான் தான் கடவுள்...

கடவுளா.!? இப்ப என்ன மேட்டரா வந்துருக்க? எதாவது வதம் பண்ண போறியா!? இல்ல வரம் கொடுக்க போறியா?

டேய் டேய்!! ஷாப்பிங் போற அம்மாப்பா கிட்ட குர்குரே வேணும் கிண்டர்ஜாய் வேணும்னு கேக்குற குழந்தைங்க போல,
அது வேணும் இது வேணும்னு கேட்டு தொலைச்சுடாத...
நான் வந்தது ஒரு பர்சனல் மேட்டரா உன்ன பாக்க...

பர்ஸ்னலா!? என்ன பர்ஸ்னலு??

ஒரு மானிடன் என்ன போட்டு ரொம்ப டார்ச்சர் பண்ணுறான்டா...
டெய்லி அவன் மேல ஆயிரத்தெட்டு கம்ப்ளைன்ட்.... அதான் உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேக்க வந்தேன்!

சரி.... நான் என்ன ஹெல்ப் பண்ணுறது? அதும் கடவுள் உனக்கு?

படைத்தல் காத்தல் அழித்தல்ங்கற மூனு டிபார்ட்மென்ட்ல நான் காத்தல் துறை கடவுள்!
ஒரு மானிடனோட துணையோட அவன டீப்பா வாட்ச் பண்ணி மேலிடத்துக்கு ஃபீட்பேக் கொடுக்கனும்!
அதுக்கு தான் உன்ன செலக்ட் பண்ணிருக்கோம்!

பக்கத்து வீட்டுக்கு கொஞ்சூண்டு காபி பொடி கடன் கொடுத்தாலே, அடுத்த நாளே ஒரு தம்ளர் மிளகாப்பொடி கொடுங்களைன்னு போய் நிற்போம்!
என்றாய் இருந்தாலும் இது நமக்கு ஒரு அட்வான்டேஜ் தான்.
இனி
செய்த இந்த உதவியை சொல்லிக் காட்டி எப்போது வேண்டுமானாலும் கடவுளிடம் தேவையானதை கேட்கலாம்.

ஹெல்ப் பண்றதெல்லாம் எங்க ஃபேமிலில பல்பு கழட்டி மாட்டுறது போல....
மேடைல கன்னுக்குட்டி தையல்மிஷின் கொடுக்குற தமிழ்சினிமா முன்னணி ஹீரோ மாதிரி அசால்ட்டா பண்ணிட்டு போயிட்டேயிருப்போம்... உனக்கில்லாததா என்று வசனம் பேசியபடி ஒப்புக்கொண்டான் சிவகார்த்திகேயன்.

இருவரும் காற்றில் மெல்ல பறந்தனர்.

ட்ராவலிங் டைமில் போரடிக்காமல் இருக்க ஏதாவது பேசிக்கொண்டே வரலாமே என கடவுளிடம் பேச்சு கொடுத்தான் சிவா.

எதாவது பேசிட்டே போலாமே.!
வாழ்க்கையுடைய தாம்பத்தியத்த பத்தி.... ச்சீ.. அதென்ன.!? தாத்பர்யமா? அத பத்தி
கீதாசாரம் மாதிரி எதாவது அட்வைஸ் கொடேன் கடவுளே!

அதுக்கு தான் மேலோகத்துல படைத்தல்னு ஒரு டிபார்ட்மென்ட்ட ஆர்கனைஸ் பண்ணி,
உன்ன படைச்சு இவ்வளோ பெரிய மண்டய வெச்சு, மண்டக்குள்ள கால் கிலோல ஒரு மூளைய வெச்சு அனுப்பிருக்கோம்!
அத யூஸ் பண்ணி சொந்தமா சிந்திச்சு செயல்படவீங்களா!!
இல்ல அத கொண்டு போய் மார்வாடி கடைல அடமானம் வெச்சுட்டு அட்வைஸ் பண்ணுனு சாமியார்களுக்கு காச இரைப்பீங்களாடா?
முட்டாப்பயளுகளா!

என்னப்பா கோவப்படுற!
சரி... வந்ததுலருந்து கடவுள் கடவுள்ணே சொல்லிட்டு இருக்கியே!?
உன் பேரு தான் என்ன?

கடவுள் கேண்டி...

ஹிஹிஹிஹி... அதென்னயா கடவுள் கேண்டி.!?

ஏன்டா நீங்க மட்டும் ராமராஜன் ராண்டி,
சொப்பனசுந்தரி சேண்டி, ஹ்ரித்திக்ரோஷன், சித்தார்த் அபிமன்யுனு எல்லாம் ஸ்டைலிஷா பேரு வெச்சுக்கலாம்.
நான் வெச்சுக்க கூடாதா?

வெச்சுக்கலாமே! ஹெஹெ... சரி... அப்போ உன் அப்பா பேரு என்ன?

டேய்! எதாவது பேசனும்னு பேசுவியா??
என் அப்பா பேரு ஆண்டவன் ஆண்டி, அண்ணன் பேரு இறைவன் ஏண்டி, தம்பி பேரு சாமி சாண்டி...
அதெல்லாம் உனக்கு இப்போ தேவையா??
கம்முனு வா... இல்லனா போற வழில முள்ளம்பன்றியா மாத்தி அமேசான் காட்டுல இறக்கி விட்டுட்டு போயிடுவேன்.

வாயை மூடினான் சிவா.
இதுபோக இருவரும் அமைதியாய் பயணிக்க,
இறங்க  வேண்டிய இடம் வந்ததென
கூறி கீழே இறக்கினார் கடவுள்.

அதோ போறான் பாரு... அவன் தான் நான் சொன்னவன்... பேரு நிவின் பாலி என்று ஒரு பதினைந்து வயது சிறுவனை காட்டினான் கேண்டி.

ஒரு பள்ளி செல்லும் பொடியனை கண்டு கடவுளே பயப்படுகிறாரா!
பார்க்க ஏதோ விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியரில் பாட்டு பாடும் சிறுவன் போல் இருக்கிறான்.!
அப்படி என்ன தான் செய்திட முடியும் அவனால்!

வா காட்டுகிறேன் என சிவகார்த்திகேயன் கையை பிடித்து கூட்டி சென்றார் கடவுள்.

According to the law of world fantasy cinemaவின் படி கடவுள் யார் கண்களுக்கும் தெரிய மாட்டாரென்பதால், அட்மோஸ்பியரில் இருக்கும் 78.08% ஹைட்ரஜனோடு கலந்து இருவரும் நிவின் பாலியை நெருக்கமாக பின் தொடர்ந்தனர்.
(கடவுள் தானே தெரிய மாட்டார், சிவகார்த்திகேயன் தெரிவானே என புத்திசாலித்தனமாக கேட்க
கூடாது.... நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாய்வது போல்,
தினத்தந்திக்கு இலவச இணைப்பு வாரமலர் குடும்பமலர் போல், கடவுள் கூட வரும்போது சிவகார்த்திகேயனும் யார் கண்களுக்கும் தெரிய மாட்டான்.)

சிவனேயென்று சென்ற நிவின் பாலி
பார்க்கிங்கை நெருங்கியதும் நின்று திருதிருவென விழித்தான்.
பெட்ரோல் திருடவெல்லாம் ஆயத்தப்படவில்லை.
பாக்கெட்டிலிருந்த துண்டு பேப்பர் ஒன்றை எடுத்து
"வண்டியில் கீறல் போட்டதற்கு மன்னிக்கவும்" என்று எழுதி கார் வைப்பரில் திணித்துவிட்டு நகர்ந்தான்.

கேண்டியும் சிவாவும் புரியாமல் விழித்தனர்.
கொஞ்ச நேரத்தில் அந்த பக்கம் வந்த கார் ஓனர்
அதை படித்து விட்டு கடுப்பாகி வண்டியை சுற்றி சுற்றி இல்லாத கீறலை தேடினார்.
அடுத்தவர்களை டார்ச்சர் செய்வதில் தான் எத்தனை ஆனந்தம்!
நடப்பவற்றை எல்லாம் ஒளிந்திருந்து ரசித்து சந்தோஷப்பட்டான் நிவின் பாலி.

சொல்லு சிவா... இப்போ நீ தான் முடிவு பண்ணனும்!
இவன என்ன செய்யலாம்?
அவனோட பேரண்ட்ஸ் கிட்ட சொல்லி அடி வாங்க வைக்கலாம், இல்ல அந்த அங்கிள் கிட்ட மாட்டி விடலாம்.

சின்ன பையன்.... இந்த வயதில் இந்த விளையாட்டெல்லாம் சகஜம் தானே!!
அதற்காக தண்டிப்பதா!?
இன்னும் 10வருடங்களுக்கு பிறகு அவன் மனதில் கோலூன்றி மெண்பசையாய் சிந்தனையில் தினம் அசை போட்டு சந்தோஷப்பட காத்திருக்கும் மகிழ்வான தருணங்களல்லவா இவை!

பாவம் சின்ன பையன் கடவுளே!
ஜாலியா தான பண்ணுறான்... மன்னிச்சு விட்டுடலாம் என்று ரசித்தபடி புன்னகைத்தான் சிவகார்த்திகேயன்.
.........எத்தனை நல்ல உள்ளம்!

அப்டீன்ற?? சரி நீ சொல்லுறதும் ரைட்டு தான் என்றவாறு கடந்து நிவினை திரும்பவும் பின்தொடர்ந்தனர்.

காலிங் பெல்லை அழுத்தி நிவினும்
காற்றோடு காற்றாய் கடவுளும் சிவாவும் வீட்டிற்குள் நுழைய,
ஸ்கூலுக்கு கிளம்ப நேரமாச்சு இவ்வளோ நேரம் எங்க போய் ஊர சுத்திட்டு வர என்று கத்தியவாறு துடைப்பத்தோடு துரத்தினார் நிவினின் அம்மா திரிஷா.

டேபிளுக்கு பின், சோஃபாவுக்கு கீழென ஒளிந்தோடி
பாத்ரூமில் அரை மணிநேரமும்,
துணி மாற்ற அரை மணிநேரமும் என போராடி ஒருவழியாக பள்ளிக்கு கிளப்பப்பட்டான் நிவின்.
எல்லாவற்றையும் கவனித்தவாறு டிவியில் சோட்டாபீம் பார்த்துக்கொண்டிருந்தார் கடவுள்.

பள்ளி வேனில் ஏறிய நிவின் திரிஷாவுக்கு டாட்டா காட்ட
கூடவே ஏறிக்கொண்டனர் கேண்டியும் சிவாவும்.

பள்ளியில் இறுதி வகுப்பு தமிழ் பாடம்.
டீச்சர் வந்து சிலப்பதிகாரத்தின் செய்யுள்களை விளக்கிக்கொண்டிருக்க,
பெஞ்சின் கீழ் கையை விட்டு மொபைலில் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டிருந்த நிவின்,
"Tamil miss class is very boring" என்று ஸ்டேட்டஸ் அப்டேட்டினான்.

கவனித்திருந்த கடவுள், க்ளாஸ கவனிக்காம மூஞ்சிபுக் நோண்டுறான் இந்த பயல என்ன செய்யலாமென கொக்கரிக்க,
காத கொடுங்க என்று கேண்டியிடம் ஏதோ கிசுகிசுத்தான் சிவா.

ஹிஹி... நல்ல ஐடியா.... அப்படியே ஆகட்டும் என ஒரு சொடுக்கு போட்டார் கடவுள்.
மறுநொடியே நிவின் பாலியின் கைபேசி கத்த தொடங்கியது.

ஆல அஞ்சல பஜாரு நிஜாரு கன்னியப்பன் முனியம்மா கிரி கஜா மணி எம்ஜியாரு சிவாஜி ரஜினி கமலு....... கஸ்டமர் கேரிடம் இருந்து அழைப்பு.
அறையே அதிர,
ஸ்கூலுக்கு ஃபோன் கொண்டு வரியா என கத்தி மொபைலை பிடுங்கி சென்றார் தமிழ் மிஸ் ராதிகா ஆப்தே.

நல்லா வேணும் நல்லா வேணும் என்று ROFL ஆனான் சிவகார்த்திகேயன்.

மொபைல் போச்சு.... 200 ரூபாய் ஃபைன் கட்ட சொல்லிட்டாங்களே.... அம்மா கிட்ட கேட்டா தர்மடி விழுமே.... என்ன செய்வதென்று அறியாது பள்ளி பார்க்கிங் ஓரம் அமைதியாக அமர்ந்திருந்தான் நிவின்.

அருகில் தமிழ் மிஸ் ராதிகா ஆப்தேவின் ஸ்கூட்டி...

மொபைல புடுங்கிட்டு விட்டல்ல... இரு உன்ன பழிவாங்குறேன் என்று பையிலிருந்த ரஃப் நோட்டை துண்டு துண்டாக கிழித்து ஸ்கூட்டி சைலன்ஸரில் குச்சி கொண்டு திணித்தான்.

ஹாஹா... சுட்ட்ட்டி....அப்டி தான் வேணும்!!  பாவம் அந்த மிஸ்ஸு இல்ல!! என்று சிரித்தார் கடவுள்.

சிவகார்த்திகேயன் கோபமடைந்திருந்தான்.
யோவ்... மாதா பிதா குரு தெய்வம்யா...
வாத்தியாருக்கு அப்பரம் தான் நாங்க உன்னையே வெச்சுருக்கோம்..
ஆனா இவன்.... அப்படிப்பட்ட டீச்சரையே பழிவாங்குறான்... இவனுக்கு தண்டனை கொடுக்காம பாத்து சுட்டினு சொல்லி சிரிக்கிற?? நீயெல்லாம் கடவுளா?

சரி... என்ன தான் பண்ண சொல்லுற??

இவன் பண்ணுற இந்த சேட்டைய P.E.T வாத்தியார் பாக்கனும்.... அந்த மாதிரி செய் என்றான்..

சரி அப்படியே ஆகட்டுமென கேண்டி விரலை சொடுக்க,
ஸ்டாஃப் ரூமில் அமர்ந்திருந்த பிஇடிக்கு வயிற்றை கலக்கியது.
பாத்ரூம் செல்வதற்க்காக அந்த பக்கம் வந்தவர்,
நிவின் பாலி பேப்பர் திணிப்பதை பார்த்து, பிரம்பை எடுத்து செய்வியா செய்வியா என்று கிரவுண்டை சுற்றி வெளுவெளுவென வெளுத்தார்.

வலி தாங்க முடியாமல் அங்குமிங்கும் ஓடினான் நிவின்.

உடலெங்கும் கோடுகளுடனும்
நாளைக்கு பேரண்ட்சோட ஸ்கூலுக்கு வரனும் என்ற நிபந்தனையுடனும் வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.

இரவில் தெருக்களில் செல்கையில் பின்னாலேயே துரத்தும் நாய்க்கு பயந்து கால்களை மேலே தூக்கியவாறு வேகமாய் பைக்கில் பறந்திருப்போம்.
என்றாவது ஒரு நாள் வண்டியை நிறுத்திவிட்டு,
பயப்படாமல் திரும்பி நாயை ஒரு பார்வை பாருங்கள்.
என்னடா பைக்க நிறுத்திட்டான்!!!
கல்ல தூக்கி எறிஞ்சுடுவானோ!!
ஆமா இப்போ நாம இவன எதுக்கு துரத்தினோம்! என்ற குழம்பிய மனநிலையோடு நம்மை ஒரு பார்வை பார்க்கும்.
அது மாதிரியான ஒரு முக பாவனையோடு
வீடு திரும்பினான் நிவின்.

பார்க்கிங்கில் அங்கிள் இன்னும் கீறலை தேடிக் கொண்டிருந்தார்.

வீட்டில் யாருமில்லை.!
மாடியில் போய் சமத்து பிள்ளையாக அமர்ந்தான்.

பாரு கேண்டி.... உன்ன ஏதோ டார்ச்சர் பண்ணுறான்னு சொன்ன!?
ரெண்டே ட்ரீட்மெண்ட்ல எப்படி திருத்திட்டேன் பாத்தியா பையன!?

யாரு இவனா!? இவன் மைண்டு வாய்ஸ ஸ்பீக்கர்ல போடுறேன்... என்னனு நீயும் கேளு!

*200ரூபாய் காசு கூட பரவாயில்ல!
அப்பாவோட சட்டைலருந்து திருடி கொடுத்துடலாம்!
ஆனா பேரண்ட்ஸை கூட்டிட்டு வர சொல்லிருக்காங்களே!
பேசாம அருணோட அண்ணன கூட்டிட்டு போயிடலாமா!!
இல்ல அம்மாக்கு ஹார்ட் அட்டாக்னு சொல்லிடலாமா!?*

இவன் திருந்தவே மாட்டான்டா என்று அலுத்துக்கொண்டார் கடவுள்!

வெகு காலமாக பதில் கிடைக்காத சமன்பாட்டிற்கு, குறுக்கு உக்தி கண்டறிந்து விட்ட ஐன்ஸ்டைன் நியூட்டனை போல மனதிற்குள் ஏதோ ஒளிவட்டம் தோண்ற,
திடுதிடுவென பின்வாசல் நோக்கி ஓடினான் நிவின்.

ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த செங்கற்கள் மேல் ஏறி ஜன்னல் வழியே நோட்டமிட,
பக்கத்து வீட்டு பெண் நயன்தாரா பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தாள்.

இந்த பையன் என்ன செஞ்சாலும் திருந்த மாட்டான்.
இப்போ தான்யா கேண்டி தெரியுது... உனக்கு ஏன் இவ்வளவு ரிப்போட்ஸ் வந்துதுனு... இவன ஏதாவது பண்ணி மாட்டி விடு என்றான்...

பாவம்டா... ஏற்கனவே ஸ்கூல்ல அடி வாங்கி நொந்து போயிருக்கான என பரிதாபப்பட்டார் கடவுள்.

அதெல்லாம் இல்ல.... டூ வாட் ஐ சே....

கடவுள் திரும்பவும் விரலை சொடுக்கினார்.

மாடிக்கு வடாவம் காயப் போட வந்த நயன்தாராவின் அம்மா மனிஷா கொய்ராலா,
நிவின் பாலி செய்வதை பார்த்து விட,
அவன் வீட்டு வாசலில் டண்டனக்கா.

என்னடி புள்ள வளத்து வெச்சுருக்க என்று
மனிஷா திரிஷாவை பார்தது சிலபல பசுமை வார்த்தைகளால் வசவ,
நிவினுக்கு வீட்டில் நாயடி பேயடி.

நிவினுக்கோ இந்த நாள் இதைவிட மோசமாக அமைந்து விட கூடாது பாவம்!

மனமுடைந்தவன் வீட்டை விட்டு வெளியேறினான்.

நடுராத்திரி நேரம் இரண்டு இருக்கும்.
பார்க் பெஞ்சில் பசியுடன் படுத்திருந்தான்.
கோவத்தில் திரிஷாவும் அவனை தேடவில்லை.

அந்த பக்கமாக வந்த போலீஸ் பேட்ரோல் அழைத்து விசாரித்தனர்.

இவனை இப்படியே விட கூடாது கேண்டி... ஏதாவது பிக்பாக்கெட் 420 கேஸ் எழுதி விசாரணை பட தினேஷ் கணக்கா ஒரு வாரம் உள்ள பிடிச்சு போடனும் என்றான் சிவகார்த்திகேயன்.

அப்படியா சொல்ற.!?

உண்மையா தான்.... செய்யி... அப்போ தான் திருந்துவான்...

அப்படியே நடக்கட்டும்....

அருகில் இருந்த காண்ஸ்டபிள் எஸ்ஐ காதில் ஏதோ ஓதினார்.

சரி இவன வண்டில ஏத்து.....

சார் சார்... நான் எந்த தப்பும் பண்ணல சார்  என கத்தினான் நிவின்.
யார் காதில் விழும்!
கொண்டு போய் ஸ்டேஷன் செல்லில் அடைத்தனர்.

ஒரு பதினைந்து வயது சிறுவன் காலையில் இருந்து எத்தனை கொடுமைகளை தாங்குவான்.!
மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தான் நிவின்.

அறையுள் நாற்காலியும் வெளியே ஒரு கயிறும் கிடந்ததை கவனித்தான்.
ஸ்டேஷனில் அனைவரும் குரட்டை சூழ தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.
கம்பிகளின் வழியே கயிற்றை திருடி
நாற்காலியில் ஏறி சுறுக்கு போட தொடங்கினான்.

இவன் எதற்கு எத்தனிக்கிறான் என இருவருக்கும் புரிந்தது.
ஸ்டேஷனில் யாரையாவது எழுப்பலாம் என விரைந்தார் கடவுள்.

சிவகார்த்திகேயன் நிறுத்தினான்.
கொஞ்சம் இரு கேண்டி.... எவ்வளவு சேட்டை பண்ணினான்... ஒரு நாளஞ்சு நொடி தொங்கட்டும் அப்பரம் யாரையாவது எழுப்பி காப்பாத்தி விட்டுடலாம். ஹிஹி

ஏதும் பேசாமல் அமைதியானார் கடவுள்.

நாற்காலி கீழே விழ கால்கள் காற்றில் நாட்டியமாடின.

சில நொடிகள் சிரித்து சந்தோஷப்பட்ட பின் இப்போ காப்பாத்து என்றான்.

கடவுள் வழக்கம் போல் விரலை சொடுக்கினார்.... அப்படியே ஆகட்டும்...
சொடுக்கினார்....
எதுவும் ஆகவில்லை!
அப்படியே ஆகட்டும்...
திரும்பவும் சொடுக்கினார்....
பேட்டரி லோ ஆகியிருக்கும் போல!
எதுவுமே நிழகவில்லை.

சிவாகார்த்திகேயனோ அதிர்ச்சியானான்.
யோவ் கடவுளே... ஏதாவது பண்ணுயா....
யோவ்... தொங்குறான் பாருயா... செத்துட போறான்யா!!

கடவுளும் திரும்ப திரும்ப விரல் நோக சொடுக்கி பார்த்தார்....
ம்ஹூம்...

உயிர் பிரிந்து தொங்கினான் நிவின்.

இருவரின் முகங்களிலும் ஈயாடவில்லை.

அடப்பாவி..... உன் பேச்ச கேட்டேன் பாரு.... இப்படி அநியாயமா ஒருத்தன கொண்ணுட்டியேடா... மேலிடத்துக்கு இனி நான் என்னடா பதில் சொல்லுவேன் என்று கத்தி புலம்பினார் கடவுள்.

சிவகார்த்திகேயனோ ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு கொலை செய்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் ஆழ்ந்திருந்தான்.
பத்து நிமிடத்திற்கு முகத்தில் எந்த ரியாக்ஷனுமே இல்லை!
ஸ்டேஷன் எங்கும் பேரமைதி.
சிவாவிற்கு கண்களில் மெல்ல கண்ணீர் ஆர்ப்பரித்தது.

அடுத்த நொடி,
புலம்பிக் கொண்டிருந்த கடவுள் மெல்ல சிரிக்க தொடங்கினார்.

ஹாஹாஹாஹாஹா ஹாஹா ஹாஹாஹா ஹா.....
ஸ்கெட்ச்சு சேகருக்குனு நினைச்சியா சௌந்தரு....சௌந்தரு..... ஸ்கெட்ச்சு உனக்கு தான்... என்றவாறு இன்னும் கத்தி சிரித்தார்.
சிரிப்பில் அத்தனை வில்லத்தனம்!

டிங் என்றதும் நிவின் மறைந்தான், ஸ்டேஷன் மறைந்தது.
ஆரம்பத்தில் சாலையில் பைக்கை நிறுத்திய இடத்திற்கே இருவரும் வந்தனர்.

இன்னுமும் அந்த பதட்டத்தில் இருந்து வெளியே வரவில்லை சிவகார்த்திகேயன்.

இதோ பார் சிவா.... பயப்படாதே! திருவிளையாடல் வால்யூம் இரண்டை எழுதுவதற்காக
தேர்வு செய்யப்பட்ட ஆட்களில் நீயும் ஒருவன்.
தினசரி மேலதிகரியை திட்டிக் கொண்டு,
உன்னையறியாமலேயே உத்தமன் வேடமிட்டு திரிந்துக் கொண்டிருந்தாய்.
ஒவ்வொருவனுக்குள்ளேயும் இருக்கும் சின்ன சாத்தானை சுட்டிக் காட்டும் முயற்சியிது.
ஆரம்பத்தில் நிவினின் தவறுகளை ரசித்த மன்னித்த நீயே, கையில் அதிகாரம் சேர சேர அவனை சின்னச்சின்னதாய் தண்டிக்க தொடங்கினாய்.
உன்னால் முடியுமென்ற போதை உன் கண்களை மூடின.
மனதால் சர்வாதிகாரி ஆனாய்.
நிவின் ஒவ்வொரு முறை தண்டிக்கப்படும் போதும் உற்சாகம் கொண்டாய்.
அவன் இயல்பாக கஷ்டப்பட ஆனந்தம் அடைந்தாய்.
பின் அந்த மயக்கத்தை மீண்டும் வேண்டி, அவன் செய்யாத தவறிற்கு தண்டித்து சந்தோஷப்பட்டாய்.
நான் வந்ததும் கேட்டாயே!
வாழ்க்கையின் தாம்பத்தியத்தை பற்றி.... ச்சை.... உன் கூட பேசி பேசி எனக்கும்... ப்ச்...
ஹ்ம்.... வாழ்க்கையுடைய தாத்பர்யத்தை பற்றி....
இது தான்டா வாழ்க்கையுடைய தாத்பர்யம்.
எத்தனையோ பக்தர்களின் வேண்டுதல்களை கேட்டிருக்கிறேன்.

கடவுளே... இப்போ.... என்று குறுக்கிட்டான் சிவா.

வாய மூடு.... அட்வைஸ் பண்ணும்போது குறுக்கால பேசாத................
எங்க விட்டேன்??

வேண்டுதல்களை கேட்டுருக்க.........

ஹாம்ம்.... வேண்டுதல்களை கேட்டிருக்கிறேன்... எல்லா பயளும் தான் நல்லா இருக்கனும்ங்கறத விட அடுத்தவன் நாசமா போகனும்னு வேண்ட தானடா கோவில் பக்கமே வரீங்க...
சோ.... மக்களுக்கு இதை உணர்த்த தான் யாம் இந்த திருவிளையாடைலை நடத்தினோம்.
எத்தனை கொடியவனாயினும் அவனை துன்பப்படுத்தி இன்பம் காண்பது பப்பி ஷேமான ஒரு விஷயம்!
நீனு இல்ல.. இந்த விளாட்டுல வேற எவன் மாட்டியிருந்தாலும் 85-90% பயபுள்ளைங்க உன்ன போல தான் பிஹேவ் பண்ணிருக்கும்ங்க...
உன்னோட இந்த கதைய படிச்ச பின்னாவது இந்த மனுஷப்பயளுக திருந்துவானுகனு நம்புறேன்!!
அதனால எதையும் மனசுல வெச்சுக்காத....
சரியா..!?
இனி வேலா வேலைக்கு நல்லா சாப்டு... சனிக்கிழம ஆனா எண்ணெய் தேய்ச்சு குளி என்றெல்லாம் அட்வைஸ் சொன்னபடி ஜூட் விட்டார் கேண்டி.

-ராஜ்குமார் @RajiTalks
   (The Experiments)

Thursday, September 22, 2016

வால் நட்சத்திரம்

எந்த இடத்திற்கு செல்வதாகயிருந்தாலும்
ஆத்திரம் அவசரமென ஓடாமல்
குறைந்தபட்சம் அரை மணிநேரமாவது முன் கூட்டியே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவது வழக்கம்.
ஏதோ இஞ்சின் கோளாறு காரணமாக செல்லவிருக்கும்
மைசூர் எக்ஸ்பிரஸ் இன்று ஒரு மணிநேரம் தாமதமாக புரப்படுகிறதாம்.!

இரண்டு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டிருந்த பயணமெனவே
முன்பே ரிசர்வேஷன் செய்திருந்தேன்.
பர்த்தும் கன்ஃபாமாகிவிட்டதென்பதால் காத்திருக்கப் போகும் இந்த ஒன்றரை மணிநேரம்,
முட்டியடித்து அன்ரிசர்வ்டு கம்பாட்மெண்ட்டில் தொங்குவது பற்றிய சிந்தனைகளின்றி
ஒரு கையில் டீயும் இன்னொரு கையில் உளுந்தவடை சுற்றிய துண்டு பேப்பருமென
நிம்மதியாக ப்ளாட்ஃபாம் இரண்டின் ஏதோ ஒரு பெஞ்ச்சில் அமர்ந்திருந்து,
நெடுநீள இருகோடுகளின் ரயில் வரும் பாதை நோக்கி காத்திருந்தேன்.

வெயிலுடன் கூடிய லேசான மழை.
கிராமத்து சிறுவர்கள் இதை தான் காக்கைக்கும் நரிக்கும் எங்கோ கல்யாணம் நடப்பதாக கூறுவார்கள்.

ரசித்திருக்க,
ஒரு 26-27வயது மதிக்கத்தக்க இளைஞனொருவன் என் அருகில் வந்து அமர்ந்தான்.
தோழமையுடன் உட்கார இடமளிப்பதாய் காட்டிக்கொள்ள,
இரு கைகளையும் பெஞ்சில் ஊண்றி
அரை இஞ்சிற்கும் குறைவான உயரம் எழுந்து,
கால் இஞ்சிற்கும் கொஞ்ஞ்ஞ்சம் அதிகமான தூரம் நகர்ந்து
சுழலும் மின்விசிறியின் காற்று வட்டத்தை விட்டு அகலாமலும் தள்ளி(!) அமர்ந்தேன்.

சார் என்று பேச்சு கொடுத்தான்.
என்னப்பா என்பது போல் திரும்பினேன்.

என்ன உங்களுக்கும் உங்கள எனக்கும் ரொம்ப நல்லா தெரியும்.
உங்களால எனக்கொரு உதவி ஆக வேண்டியது இருக்கு!
மறுக்காம எனக்கு அதை நீங்க செஞ்சு கொடுக்கனும் என்றான்.

கால் அவுண்ஸ் தண்ணீரை அடி தொண்டையில் வைத்து பேசுவது மாதிரியான குரலில் தென்படுகிறது
ஒரு மாபெரும் அழுகை.
கண்களில் அல்ல.

என்னால உனக்கு என்னப்பா உதவி செய்ய முடியும்?
நீ முதல்ல யாரு அத சொல்லு? என்றேன்.

உங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும்..
கேள்வி பட்டிருப்பீங்க!
போன மாசத்துல தன் கூட பிறந்த தங்கச்சிய கொல்ல சொல்லி ஒருத்தன் கருணைக்கொலை மனு கொடுத்ததா செய்திகள்லயும் பேப்பர்லயும் வந்துச்சே!
அது நான் தான்!

திருவண்ணாமலை சித்ராவோட அண்ணனா?

இவன் பற்றிய எல்லா விபரமும் அறிவேன்!
செந்திலின் இந்த முடிவிற்கு
சிலர் அனுதாபப் பட்டனர். முட்டாள்தனமென்று பலரும் கூச்சலிட்டனர்.
நானும் தான்.
ஊடகங்கள் கொதித்தன.
எல்லா தரப்பு மக்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
கிட்டதட்ட நாடே அதிர்ந்து தான் போனது.

ஹ்ம்ம்க்!!
உங்களுக்கு தெரியாததா.!
எங்க கிட்ட பணம்லாம் பெருசா இல்ல.
அதுக்காக நாங்க எப்போதும் கவலைப்பட்டதும் கிடையாது.
நான் சித்ரா அப்பா அம்மானு அந்த குட்டிக்குட்டி சந்தோஷம் சிரிப்பு
எல்லாம் ஒரே நாள்ல போச்சு!
என்னை இதை தவிர வேற என்ன செய்ய சொல்லுறிங்க!!!

எத்தனை பெரிய இழப்பிற்கும் மூன்றாம் நிலை மனிதராய் ஆறுதல் சொல்வதும் அறிவுரை வழங்குவதும் மிக சுலபமான ஒரு விஷயம்!
நான் அவ்விரண்டையுமே செய்யவில்லை!
செந்திலின் தோள்களில் கை போட்டு கொஞ்சம் அனைத்து உட்கார்ந்தேன்.
இன்னொரு கையை அவன் துடையில் வைத்து முகம் நோக்கினேன்.

இந்த ஆணவக்கொலை எல்லாம் பண்ணுற ஆளுங்க கிடையாது சர் நாங்க.
ஒருத்தன காதலிக்கிறேன்னு வந்து வீட்டுல நின்னா...!
எங்க வீட்டு வால் நட்சத்திரம்.
அவ விறுப்பம் தான் எங்களுக்கு எல்லாமே!
சரினு தலைய ஆட்டினோம்.
குறிச்ச தேதில கல்யாணமாகிருந்தா இன்னியோட பத்து நாள் ஆகியிருக்கும்.!
இப்படியானதும் அவனும் முடியாதுனு ஓடிட்டான்.
இப்டியொரு கேடுகெட்ட காதல நினைச்சு அவ உடம்ப விட மனசு தான் அதிகம் வெந்துருக்கும்!
அவள பாத்து நாங்களும்
நாங்க கஷ்டப்படுறத பாத்து அவளும்!
எங்களுக்கு மட்டும் ஏன் சர் இப்டி நடக்கனும்!
உங்களுக்கு இந்த விஷயம் தெரியும்னு நினைக்கிறேன்!
இந்த மனுவ கொடுக்க சொல்லி சொன்னதே அவ தான்.

புரியுது செந்தில்... நான் அட்வைஸ் பண்றதா நினைக்க வேண்டாம்!
வாழ்க்கைல எது நடந்தாலும் சரி....
Life has to go on....
நீங்களே இப்படி உட்காந்துட்டா அப்பா அம்மாக்கு யாரு ஆறுதல் சொல்றது!?

இல்ல சர்... என்னால நடக்குற எதையும் ஏத்துக்க முடியல....
அவளுக்கு கல்யாணமாகி குழந்தை குடும்பம்னு சந்தோஷமா இருக்குறத பாக்க தானே நாங்களும் விறும்புவோம்!
இதுக்கு மேல அவளுக்கு வாழ்க்கைனு என்ன இருக்கு!?
ஒத்துக்குறேன் சர்.. நான் பெரிய கோழை தான்...
ஆனா அவளே இதை விறும்புறாங்கறப்போ நான் என்ன செய்ய!?
கோர்ட் அந்த விண்ணப்பத்த நிராகரிக்கிற பட்சத்துல தானே சாவை விறும்பி ஏற்க அனுமதி கேட்டு இன்னொரு பெட்டிஷன் போடுவேன்னு சொல்லுறா!
உங்களால மட்டும் தான் உதவ முடியும்.
நீங்க தான் எப்படியாவது கோர்ட் இந்த மனுவை ஏத்துக்குறதுக்கு வழி பண்ணனும்!
ப்ளீஸ் சர்....

புரியாம பேசாதீங்க செந்தில்....
சுத்த முட்டாள்தனமா இருக்கு இது!
இதுல நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கிறீங்க!?
ஜனாதிபதிக்கே இதை அனுமதிக்கிற உரிமை கிடையாது.!
அதுவுமில்லாம எல்லா பிரச்சனைக்கும் சாவு ஒரு காரணமாகிடுமா சொல்லுங்க?
அப்படி பாத்தா நாட்டுல எங்க திரும்பினாலும் சுடுகாடுங்க தான் இருக்கும்.

பயணிகளின் கனிவான கவனத்திற்கு.
மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டி இன்னும் சற்று நேரத்தில் நடைமேடை மூன்றிற்கு வந்து சேரும்.

இதை பாருங்க.... நீங்க விரக்தில இருக்கீங்க... சித்ரா கிட்ட பேசுங்க... புரிய வைங்க... நீங்களும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க...
உங்க இழப்பு பெருசு தான்... மன்னிச்சுடுங்க!
தெரிஞ்சோ தெரியாமலோ அதுக்கு நானும் ஒரு காரணமாகிட்டேன்...
அதுக்காக இப்படியெல்லாம் முட்டாள்தனமா முடிவெடுக்காதீங்க.
எல்லா கஷ்டத்துக்கு பின்னாடியும் ஒரு வாழ்க்கை இருக்கு.
யோசிங்க..... என சங்கடத்தோடு அங்கிருந்து நகர,
காங்ங்கென பெருங்கோஷம் போட்டு வந்து நின்றது ரயில்.

தங்கையின் வாழ்க்கை பற்றிய ஏமாற்றம்,
தவறு செய்தவனை தண்டிக்க முடியா இயலாமை,
அந்த முகத்தை திரும்பி பார்க்க திராணியின்றி வேகவேகமாய ரயில் நோக்கி நடந்தேன்.

சரியான பெட்டியில் ஏறி
இருக்கை எண் தேடி அமர்ந்த பொழுது வரை,
செந்திலின் அந்த பேச்சு மனதிற்குள் நெருடிக்கொண்டே இருந்தது.
நடைமேடையிலும் பெட்டியினுள்ளும்
டீ காபி விற்பவர்கள், புத்தகம் வாங்க சொல்லி நச்சரிப்பவர்கள், பிச்சையெடுக்கும் குழந்தைகள், பேட்டரி லைட் விற்கும் கண் தெரியாதவர்கள் என யாவரினது குரலும் காதுகளில் ஏறவேயில்லை.!

குருவிக்கூடு மாதிரியான ஒரு சின்ன குடும்பத்தினுள் கல் எறிந்து விட்ட காரியத்தை சுட்டி,
என் சட்டையை பிடித்திருந்தாலும் செந்திலின் மேல் நான் கோபம் கொண்டிருக்க மாட்டேன்.
அவனது கோபம் நியாயமானதே!

ஆனால் அதை செய்யாமல் இன்னமும் என்னால் அவனுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறான் என்பதற்காகவே,
அவன் மனம் மகிழ்வதாய் ஏதாவது செய்ய வேண்டும் நினைத்தேன்.

வழக்கமான பயணங்களின் போது புத்தகம் படிப்பதும், டைரியோ அல்லது நண்பர்களுக்கு கடிதமோ எழுதுவதும் வழக்கம்.
இந்த மனநிலையில்
இப்போது என்னால் எதையுமே முழுமையாக செய்ய முடியமென்ற நம்பிக்கை இல்லை!

அமர்ந்திருந்த வண்டியை விட்டு ப்ளாட்பாரம் ஒவ்வொரு அடியாய் விலகியோட,
இளையராஜா மடிதேடி
ஹெட்ஃபோனை காதுகளுக்கு தஞ்சமாக்கினேன்!

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு காணக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா.........

இமைமூடி இரண்டு பாடல்களை கடந்திருப்பேன்,
தோள்களில் கை வைத்து தம்பி என யாரோ அழைத்ததொரு உணர்வு.
நிமிர்ந்து நோக்க வயதான ஒரு தம்பதியினர்.
சொல்லுங்கமா என்றேன்.

செந்தில் உங்க கிட்ட பேசிட்டு இருந்தத பாத்தோம்ப்பா...

அம்மா நீங்க????

செந்தில் சித்ராவோட அம்மா அப்பாப்பா நாங்க.
அவன் பண்ணுறது கொஞ்சம் கூட பிடிக்கல எங்களுக்கு.
என்னயிருந்தாலும் அவ எங்க பொண்ணு!
அவ மனச எங்களால மாத்த முடியும்.
கல்யாணம் காட்சினு ஒன்னு ஆகலனா தான் என்ன!?
கடைசி வரை அவள கூட வெச்சு பாத்துட்டேயிருந்தாளே போதும்.
அதுக்காக
தானே போய் தன்னை பலி கொடுக்குறதா என கண்ணீர் சுரந்து புடவை முந்தானையில் முகம் புதைக்க,
சித்ராவின் அப்பா தொடர்ந்தார்,

ஒருத்தன லவ் பண்ணினத தைரியமா வந்து வீட்டுல சொன்ன பொண்ணு,
ரோடுல இன்னொருத்தன் காதலிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுறான்ங்கறதயும் எங்க கிட்ட சொல்லியிருந்தா அப்போவே ஏதாவது பண்ணி இது மாதிரி அசம்பாவிதம் நடக்காம தடுத்துருக்கலாம்!
முன்னாடியெல்லாம் காதலிச்சு ஏமாத்தினா தான் பொண்ணுங்க மேல ஆசிட் வீசுவானுங்க
ஆனா இப்போ காதலிக்க மாட்டேன்னு சொன்னாலே வீசுறானுங்க!
அவ ஆசைப்பட்ட வாழ்க்கையும் அமையாம,
நடக்கயிருந்த கல்யாணமும் நின்னு,
சாவோட விளிம்புக்கு போய்...... எத்தன போராட்டம்!?
உங்களுக்கு நல்லா தெரிஞ்சுருக்கும் தம்பி...
சாட்சி ஆதாரம்னு எல்லாமே இருந்தும் கடைசில தப்பு செஞ்சவன் ஜாதி சப்போட்டுல வெளிய வரும்போது............ எதுக்கு இந்த சட்டம் மண்ணாங்கட்டி எல்லாம்!!!

உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுறதுனே தெரியலங்க!

இந்த சமூகத்த நான் தப்பு சொல்ல விறும்பல தம்பி..!
என் பையன் பேச்ச மட்டும் கேட்டுடாம
தயவுசெஞ்சு சித்ராவ எங்களுக்கு உயிரோட மட்டுமாவது  திருப்பி கொடுத்துடுங்க....என மல்கினார்.

ஐயா...
நீங்க கேட்டுக்கிட்ட மாதிரியோ
பொதுமக்கள் விருப்பத்துக்காகவோ என்னால செயல்பட முடியாது.
உங்க குடும்பத்துக்கு இப்படி ஆனதுக்கான மறைமுக காரணம்ங்கற குற்றவுணர்ச்சியிலிருந்தே நான் இன்னும் வெளிய வந்த பாடில்ல...
இப்படியெல்லாம் பேசி என்ன நீங்க ரொம்ப பெரிய தர்ம சங்கடத்துக்கு ஆளாக்குறீங்க.! என கூறி அங்கிருந்து வேகமாய் நகர்ந்து கதவருகே வந்து அமர்ந்தேன்.

தனிமை சிலருக்கு நண்பன்.
பலருக்கு எதிரி.
சிந்திக்கவும் தன் தவறுகளை களையவும் இந்த இடம் மிக பொருத்தமாயிருக்கும்.

செந்தில் மற்றும் அவன் பெற்றோர் பேசியவை அனைத்தும் பூவிதழ் கண்ட தேனீயாக தலைக்குள் சுற்றி சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.

உங்களுக்கெல்லாம் ஒரு விஷயத்தை இப்போது சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
சித்ராவை நான் ஒருதலையாக நேசித்தேன்.
இந்த எண்ணத்தை உணர்வை காதலென்ற வரையறைக்குள் கொண்டு வந்துவிட முடியுமா என்பதை பற்றி தெரியவில்லை.
அந்த நேரத்தில் அதை நான் களைய கூட முடியாதளவு காதலில் மூழ்கியிருந்தேன்.

அவள் அழகின் மீதான வர்ணனைகளிலேயே அவள் மீது தீராக் நேசம் கொண்டேன்.
இப்படியொருத்தியை தன்னவள் ஆக்கிக்கொள்ள யாருக்கு தான் ஆசை இராது!?

ஆனால் அவளோ!
யாரோ ஒருவனை காதலித்து அந்த உறவை கல்யாணம் வரை கொண்டு போய் விட்டால்.!
கோபம்!
தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்துவதற்காக சாலையில் ஒரு முரடனை தினமும் அனுப்பியது நான் தான்.
இந்த தொல்லைகளை பற்றி வீட்டில் தற்போது பேச வேண்டாம் என சக தோழியை அனுப்பி அவளை கட்டுப்படுத்தியதும் நான் தான்.
இப்படியிருக்கயில் அவன் மூலமாக சித்ராவை சிறிது காலம் மனரீதியாக சித்ரவதை செய்து சந்தோஷப்பட நினைத்தேன்.
இத்தனை நாள் நான் தான் எத்தனை சேடிஸ்ட்டாக இருந்திருக்கிறேன்!

ஆனால் அவனும் உண்மையிலேயே அவள் மீது காதல் கொண்டு விரக்தியில் கோபத்தில் சித்ரா மீது ஆசிட் வீசியது நானே அறியாமல் நடந்த ஒரு விஷயம்.!
வெட்கமும் குற்றவுணர்ச்சியும் என்னை மரவண்டாய் மனதில் துளைத்தது.

அவள் கதையறிந்தவர்களில் சிலர் பின்வருமாறெல்லாம் சொல்லியிருந்தனர்,

1. ஆசிட் வீசுப்பட்ட முகத்தை பார்த்து அவள வேண்டாம்னு சொல்லிட்டு போன அவளோட காதலன் முன்னாடி அவ வாழ்ந்து காட்டனும்.
2. இப்படி அவலட்சனமா யார் முகத்துலயும் முழிக்காம ஒதுக்கப்பட்டு கஷ்டப்படுற வாழ்க்கைக்கு பேசாம அவ செத்தே போயிருக்கலாம்.
3. முகம் போனா என்ன! அழகு தான் எல்லாமேவா? அவ உழைச்சு எதிர்காலத்துல பெரிய தொழிலதிபராவோ அரசியல் தலைவராவோ ஆகி சாதிக்கனும்.
இவ ஒரு முன் மாதிரியா இருக்கனும் மத்த பெண்களுக்கெல்லாம்!
4. அந்த பொண்ணு கைல துப்பாக்கிய கொடுத்து அந்த ஆசிட் வீசுனவன சுட சொல்லனும்ங்க.

இதற்கு மேலும் அவளை கஷ்டப்படுத்தி பார்க்க நான் கிருமியானவன் அல்ல!
ஆத்மாவின் ஏதோஒரு ஓரத்தில் கொஞ்ம் மனிததத்தை அடைக்காத்திருப்பவன் தான்.
என் காதலுக்குறியவள் ஆகாவிடிலும் இத்தனை அச்சுறுத்தல்களுக்கு பின்னாவது அவளுக்கொரு நல்ல வாழ்க்கை அமையட்டும்!

பையிலிருந்த டேபை எடுத்து டைப் செய்ய ஆரம்பித்தேன்.

☆வால் நட்சத்திரம் - அத்தியாயம் இறுதி☆

இப்போதெல்லாம் சித்ரா தன் அறையை விட்டு வெளியே வருவதேயில்லை.
சுவர்களுக்குள்ளேயே தன்னை சிறைப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
ஆழ்மனதின் இச்சையின் காரணமாய்
யாரோ ஒருவன் அவள் மீது காட்டியிருந்த வன்முறை
ஒட்டுமொத்த சமூகத்தையும் வெறுத்து ஒதுங்கிக்கொள்ளுமளவு வீரியம் கொண்டிருந்தது.

இரவுகளில் பயந்தெழுந்து அலருவாள்.
கண்ணாடி டிவி எவர்சில்வர் பாத்திரங்கள் என உருவத்தை பிரதிபலிக்கும் எதை கண்டாலும்
தூக்கி தூரமெறிந்து உடைப்பாள்.
மூன்று மாதங்களுக்கு முன் அவள் பயன்படுத்திய மஸ்காரா காஜல் லிப்ஸ்டிக் மேக்கப் கிட்களை இப்போது காணவே அவளுக்கு அறுவறுப்பாய் இருந்தது.

வீட்டினுள் உலவும் போதும் கூட முழு முக்காட்டோடே திரிந்தாள்.
தன்னை தானே தனிமைப் படுத்திக்கொண்டாள்.

கருணைக்கொலை மனு நிராகரிக்கப்பட செந்தில் வழக்குரைஞரை காண சென்றிருந்தான்.
அப்பா அம்மாவும் வீட்டிலில்லை.

கதவை தட்டும் ஓசை.
தபால்காரரோ கூரியர்காரரோ பக்கத்து வீட்டினரோ கூட கதவை தட்டினாலும் அவள் போய் திறப்பதில்லை.
வெகுநேரமாக காலிங் பெல்லும் கதவை தட்டும் சத்தமும்.

எழுந்து போய் தாழை திறந்து
ஓரிரு கோணம் விலகிய கதவின் பின் பதுங்கி
வீட்டுல யாரும் இல்ல போயிட்டு அப்பரம் வாங்க என்றாள்.
மழலையின் சினுங்கள் மாதிரியான குரல்,
அச்சம்பவத்திற்கு பிறகு கொஞ்சம் கரகரத்து போயிருந்தது.

மறுபக்கம் கண்ணீரோடு கதவில் சாய்ந்தவன்
திற சித்ரா நான் பாஸ்கர் வந்துருக்கேன் எனவே
கதவை ஓங்கியறைந்து ஓடியவள் அடுப்பறையில் போய் கத்தினாள்.

இங்க எதுக்கு வந்த.!? உன்ன பாக்கவே எனக்கு பிடிக்கல... என் முகத்துலயே முழிக்காத..... இங்கிருந்து போயிடு தயவுசெஞ்சு....

குரல்களுக்குள் விவாதம்.
அறையுள் ஒளிந்தவளை இவன் இன்னும் கண்களால் காணவில்லை.!

உன்னோட கோபம் நியாயமானது தான்.
ஆனா என்னயும் கொஞ்சம் பேச விடு ப்ளீஸ்.... என கூறிக்கொண்டே அறை நோக்கி நெருங்கினான் பாஸ்கர்.

கிட்ட வராத.!
பேச இனிமே எதுவுமேயில்ல.... காதல்... உன்னோட காதல் என்கிட்ட எத பாத்து வந்ததுனு நல்லா புரிஞ்சுக்கிட்டேன்...
இனியும் உன்கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு?
கேவலம் என் உடம்ப தான விறும்பின நீ??

அய்யோ சித்ரா....
தயவுசெஞ்சு இப்டி பேசி என்ன வார்த்தையால கொல்லாத...
அன்னிக்கு நடந்ததுக்கு எல்லாம் காரணம் என் ஃபேமிலி தான்...

சமாதானம் சொல்ல வந்தியா?!?
அந்த கட்டத்தையெல்லாம் நான் எப்போவோ தாண்டிட்டேன்.!

என்ன பத்தி நீ புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தானா!
உன்னோட அந்த மனு பத்தின செய்திய கேள்விப்பட்டதும் அந்த நொடியே நான் செத்துட்டேன்!
உனக்காக யாரும் இல்லனு நீயே ஏன் முடிவு பண்ணின?
உனக்காக வந்துருக்கேன்...
நீ வேணாம்னு சொன்ன என் குடும்பத்தை தூக்கி எறிஞ்சுட்டு வந்துருக்கேன்.

அதுக்கு உனக்கு ரெண்டு மாசம் ஆச்சா பாஸ்கர்?
என்ன பரிதாபப் படுறியா!? வாழ்க்கை பிச்சை போடுறியா எனக்கு?
இங்கிருந்து போயிடு என்றவளின் குரலில் தென்பட்டது பேச்சின் முதல் கலக்கம்.

அப்பரம் ஏன் அழற?
ஒரேயொரு வார்த்த....
அழாம....
உன் மனசுல நான் இன்னுமும் இல்லனு சொல்லு நான் இப்போவே போயிடுறேன்.!

ஐந்து நிமிடமாக அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை..!
நிறைய அழுதாள்....
கண்ணீரை துடைத்தெறிந்து ஆசுவாசமாகிவிட்டு ஏதேனுமொரு பதிலளிப்பாளென காத்திருந்தான் பாஸ்கர்.

இங்கிருந்து முதல்ல போவென கத்தியவள் குரலில் அழுகை ஆர்ப்பரிக்க,
காற்றில் தலை விலகிய துப்பட்டா தோள் சாய்ந்தது.

அறை நுழைந்து
முகம் நோக்கிய காதலன் விழிகளில் வெள்ளம்.
ஓடி சித்ராவை கட்டியணைத்து விசும்பினான்.
நெற்றியிலும் கண்ணிலும்.
முத்தங்களாய் பொழிந்தான்.

அவன் வருகையை கண்ட கணம் அவள் அதிர்ச்சியாகி இருக்கவில்லை.
அவன் தன்னை தேடி வருவான் எனவே காத்திருந்தாள்.
தன் காதலை நம்பியிருந்தாள்.

ஃஃ..... ஃஃ...... ஃஃ......
நீ வருவேனு தெரியும் பாஸ்கர்.
அதுக்காக ரெண்டு மாசம் என்ன காக்க வெச்சுட்டல்ல!

உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் சித்ரா!
இனிமே உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன்.!

திருமணமாகி மூன்று வருடங்களிலேயே இந்த காதலுக்கு சான்றாக இரு குழந்தைகளும் பிறந்தன.
சித்ராவின் அப்பாம்மா மற்றும் செந்திலுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணங்களாயிருந்தது.
பாஸ்கர் தன் குடும்பத்தை பற்றி யோசித்திருக்கவே இல்லை.
அவன் குடும்பத்தினர் இக்காரியம் புரிந்த காரணத்திற்காக அவனை ஒதுக்கி வைத்து விட்டதாக இருமாப்பு கொண்டிருந்தனர்.

தன் மகளை திருமணம் செய்துக் கொண்டு தான் கஷ்டப்படுவதாக எந்த காரணத்திற்காகவும் சித்ராவின் பெற்றோர் நினைத்துவிட கூடாதென்பதில் பாஸ்கர் மிகவும் அக்கரையாக இருந்தான்.
இன்னும் சொல்லப் போனால் அதில் மிகுந்த எச்சரிக்கையுடனேவே இருந்தான்.

முகநூலிலும் சமூகவலைதளங்களிலும் இவர்களது படங்கள் லைக்ஸுகளை அள்ளின.
காதல் ஜோடிகளுக்கு பெரிய ரோல்மாடல் ஆகினர்.
___________சுபம்________________

மனதில் இருந்த பெரும் சுமையை இறக்கி வைத்ததை போலொரு உணர்வு.
என்னால் தொடங்கிய கதை என்னாலேயே ஒரு முடிவிற்கும் வந்தது!
ஆக்கம் காப்பு அழிவு என்ற மூன்றும் தன்னாலாகுமென்ற கணத்தை இறக்கி வைக்க விரும்புவதோடு,
சமீப மூன்று மாதங்களாக வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வால் நட்சத்திரம் தொடர்கதை முடிவிற்கு வருகிறது.
சித்ராவின் வாழ்க்கை மீது அக்கரை கொண்ட பலரும் இந்த ஹேப்பி எண்டிங்கை விரும்புவார்களெனவே நம்புகிறேன்.
இந்த மென்பிரதியை எடிட்டருக்கு மெயில் செய்துவிட்டால் போதும்.
அடுத்த வார இதழில் பிரசுரிக்கப்பட்டுவிடும்.

அடுத்த தொடர் கதைக்கான சூழல் பற்றி கற்றறிய மைசூர் செல்கிறேன்.
இனி சங்கடங்களின்றி கடிதமெழுதலாம், இசையில் மூழ்கலாம்.................




-ராஜ்குமார் @RajiTalks