Friday, August 26, 2016

மாரீசன் 701

மிராசுக்காரய்யா அழைத்து விட்டுருந்ததால் கீதாரி பிள்ளைகள் நாள்வரும் அதிகாலையிலேயே போயிருந்தோம்...
அப்பாவோடு பல ஊர்களுக்கு ஆடு ஓட்டி போயிருக்கிறேன்...
எவ்வூரிலும் கண்டிராதளவு பெரிய பட்டி அவரோடது...
6000 ஆடுகளென்றால் சும்மாயில்லையே!
ஒவ்வொன்றும் சந்தை காணா உருப்படிகள்.!

கொள்ளிடம் கரையோரம் ஒரு வாரம் கிடைக்கு பட்டி கட்ட சொல்லி கேட்டிருந்ததாக கூட்டி வரும்போதே மணிமுத்து அண்ணன் சொன்னார்.
அவர் மொத்த மந்தையின் கண்காணி.
இந்த ஓட்டத்துக்கு நான் போனால் ஆக்காசு இரண்டு ரூபாய் அவசர செலவுக்காகும்....

அய்யா வந்ததும் வணக்கம் சொல்லிக்கொண்டேன்...

பழையார் பாதை மணல்மேடு....
செம்பனார்கோவில் குறுக்க சாவடி....
ரெண்டு ஓட்டம்... ஒரு வாரம் கெட...
தடம் தெரியுமாடா மாரிமொவனே என்றார்...

தெரியும்ங்க.....

சரி....ரெவ்வெண்டு பேரா புடிச்சுக்க.... விவரம் கேட்டு ஓட்டிவிட்டுட்டு வா....
ரெண்டு நாள்ல ஊரு போயிட்டனு சேதி வரனும்.... என்றபடி முத்து அண்ணனிடம் கண்ணை காட்டிவிட்டு கிளம்பினார்...

புதுசா சொல்றதுக்கில்லடா....
பண்ணைக்காரங்க எதாவது கொடுத்தா வாங்கிக்கங்க... மத்தபடி மந்தை பத்திரம்டா....என மந்தைக்காட்டிற்கு அழைத்து சென்றார் முத்து.

போனதும் ஓவென விரட்டினேன்.
அப்பாவோடு ஓட்டிப் பழகிய கூட்டம் மட்டும் என் குரல் கூச்சல் கேட்டதும் தனியே ஓடியது...
எனக்கும் ரெத்தினசாமிக்கும் 700 உருப்படி..
மணல்மேட்டு கிடை...
எண்ணி தட்டி அனுப்ப
ஊரெல்லை வீரன் கோவிலில் நுங்கு சீவி போட்டுவிட்டு வடக்கால விரட்ட மணி காலை எட்டு.

கூட்டணிக்கு என் பட்டி நாய் ராசுவும் வருகிறான்.
பழக்கதாரி... சிறந்த வாலாட்டி...
ஆள் காண மறந்தாலும் ஒற்றையாடு வழி தவற விட மாட்டான்.

செல்லுமிடம் உண்போம்.... சாயுமிடம் உறங்குவோம்... ஊர் தாண்டி சென்றும்
சுவருக்குள் உறக்கமில்லை...
கால்நடையாக விரட்டி செல்கையில்
குழந்தைகளுக்கு கைக்காட்டுவோம்,
குட்டியாட்டை கொஞ்சி கட்டுவோம்,
அவ்வளவு தான் பொழுதுபோக்கு.
அதுவும் போகிற போக்கில் தான்.

இன்று இரண்டாம் இறவு படுக்கை... நரிகளில்லா வெளியை
ஊர் பெரியோரிடம் அடையாளம் கேட்டு தாண்டி பட்டி கட்டி படுத்தாச்சு..
காலை விடியல் கூடவே நடந்தால் பத்து மணிக்குள் ஊருக்குள் போய் விடலாம்.

சொன்ன தேதிக்கு முன்னதாகவே போனால் நாளணா கூட கிடைக்குமென்பதால் 6மணிநேரம் அதிகமாகவே நடந்திருக்கிறோம்.

நேரம் இரண்டு இருக்கலாம்...
நட்சத்திரங்களை எண்ணி களைத்து
கண்கள் தானாய் போய் சொறுகிய வேளையில் நரிகள் ஊளையிடும் சத்தம் வெகுதூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது...
கவனித்திருக்க ராசு வாலாட்டி முகம் கூசினான்.
உறங்கியும் விழி தவறாதிருத்தல் அவசியம்.

கொஞ்ச நேரம் கண்களசந்திருப்பேன்...
விழித்தெழ சூரியன் எத்தனிக்கும்
முன் பொழுதிலேயே மந்தையில் சிறு கூட்டம் தேவையின்றி சத்தமிட்டது...
ராசுவும் தூரத்தில் அலறிக்கொண்டிருந்தான்.
பரபரவென எழுந்து கூச்சல் கேட்ட திசை நோக்கி தடுமாறி ஓட,
பட்டியில் ஒரு இருபது ஆடுகள் மட்டும் தனியே நின்றுக்கொண்டிருந்தன...
என் வருகையறிந்து ராசு வாய் மூடினான்..

உற்று நோக்க உடலூதியிருந்த ஒரு ஆடு மட்டும் வால் நனைந்து நின்றுக்கொண்டிருந்தது..
எண்ணியோட்டும் போதே பெருத்துருக்கே புள்ள தூக்குதானு கேட்டதற்க்கு
சினையாடு பாத்தாலே தெரியாதாடா என திட்டி அனுப்பினார் முத்து.
மந்தையில் சினையாடு சிக்கியது இதுவே முதல் முறை.

கூட்டம் கண்டு வெட்கப்பட்டு நின்கிறாளென்பதையறிந்து பட்டிக்கு வெளியே இழுத்து தூரம் தள்ளியதும் சாய்ந்து விழுந்தாள்...
ரெத்தினமோ தூங்கிக்கொண்டிருந்தான்.

நான் சின்னதாய் ஜாடை காட்டுவதாக தெரிந்தாலும் உயிர் தள்ள மாட்டாள்,
எதுவும் இடையூறின்றி மரத்தோரம் ஒளிந்து நிற்க,
பெரு முக்கலில்
குட்டியாட்டின் தலை முன்பகுதி வெளியே வர தொடங்கியது..

ஓவியங்களில் ரசித்திடா அழகல்லவா!!

நிலவொளி மங்க பறவைகள் பயணப்படும் பொழுதில்
கூட்டதில் கூடுதலாய் ஒரு குட்டி சீற்றம் இணையவிருக்கிறது.

பிரசிவிப்பவள் வலியில் முணகுவதாய் தெரியவில்லை.
தாய்மை எல்லா உயிர்களும் பொது தானே!
கழுத்து வரை எட்டிப் பார்க்கும் குழந்தையை
தேவையின்றி வெளி இழுத்து தள்ள முயற்சிப்பது
இயற்கைக்கு புறம்பானதென்பதோடு
தாய்மைக்கும் இழுக்கானதென்பதையறிந்து
காலப்போக்கில் நடப்பவைக்காக காத்திருக்கிறேன்.

ரசித்திருப்பதை லயித்திருப்பதை அவளறியாள்.
இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் கடற்கரை மணற்துகளாய் இன்னுமொரு உயிர்
சில காலம் வாழ்ந்து செல்வதற்காய்
ஜனனிக்க துடித்துக் கொண்டிருக்கிறது.

இடுப்பை தாண்டி எட்டியவன்
தலைகள் அசைப்பதை காண
எத்தனை பேருக்கு வாய்க்கும்!
பின்னங்கால் முட்டி வந்ததும் ஓடிப்போய் தூக்கி இழுத்து அசடுகள் விலக்கினேன்.

தாயாடு எழுந்து கடைக்கொடி விழ காத்திருந்தாள்.
இடுப்பிலிருந்த வாங்கரிவாளை எடுத்து சின்னக் கால்களின் குழம்புகள் சீவினேன்..
வெள்ளாட்டு மந்தையில் குட்டியாய் ஒரு கரும்புள்ளி.
முகத்தில் முழு கிடாரிக்கான ஜாடை...

சிலநேரம் நக்கிக் களைத்த தாயவள் முட்டித் தள்ள,
தலைக்கீழ்விழுந்த சிறு அருவியாய் துள்ளித் திரிந்தான் மாரீசன்.
அவனை இனி நான் அப்படி தான் அழைக்கப் போகிறேன்.

ஓடிப்பிடிக்க கூச்சலிட்டு துரத்தியதோடு சூரியனும் அறைந்தெழுப்ப
ரெத்தினம் விழித்து ஆச்சர்யத்தான்.
சந்தோஷப்பட்டான்.

மீதமிருந்த பயணத்தை மாரீசனோடு கடந்தோம்.
#701
ஊர் கிடைக்கு சென்று
மூன்று நாட்கள் மந்தை கட்டியவிழ்க்க சொந்த ஊர் திரும்ப தயாரானோம்.

செல்லும் வழியெங்கும் மாரீசனை தோள்களில் அணைத்துக்கொண்டேன்.
என் துரத்தி கொம்போடு சீண்டி விளையாடுவான்.
ராசுவை விரட்டி தாக்குவான்.
நீரருந்த சென்றாலும் துனையென்னை தேடுவான்.
விழியோடு நானவன் விழி நோக்கி மிரட்ட
போராளியாய் சீறி முட்டி மோதுவான்.
அயர்ந்தமர்ந்து புள்வெளி சாய இடைக்கூசி மயிர் கூச்செரிவான்.
பசுந்தழை முறித்து தலை நீட்டி முகர விட
தன் பால் பற்களால் இலை கடித்து பின் தொடர்வான்.
பிறந்தைந்து நாட்களில் அவனின் சிறந்த சகோதரனானேன்.

மூன்று நாட்கள் பிரயாணமாய்
மந்தைக்காட்டுக்கே திரும்ப
எழுநூற்றி ஒன்றோடு எங்களுக்கும் சரியான களைப்பு.
உருப்படிகளை எண்ணியடைக்கும் வேளையில் மாரீசனை பார்த்து சந்தோஷப்பட்டார் முத்து அண்ணன்.
மேய்ப்பு கூலியை வாங்கி நான் திரும்ப,
தாயாடு பட்டிக்குள் நின்று மாரீசனை மேவென அழைத்தது...

தன் தாயிற்கும் எனக்குமிடையே நின்ற அவனோ நொடி காத்து
என்னை நோக்கி பாய்ந்தான்.
வேகமாய் ஓடி வந்த மாரீசனை நோக்கி நான் மண்டியிட
வேகமாயொருமுறை என் மார்மோதி திரும்பி சென்று தாயை அனைத்தான்.

இந்த காதலின் பிரிவை என்னால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஈரடி நடந்திருப்பேன்.
திரும்பி பட்டியை காண
மந்தையில் ஒளிந்துவிட்டான் மாரீசன்.

நயமாய் நகர்ந்து முத்து அண்ணனை நோக்கினேன்.

அண்ணே.... ஒரு சின்ன கோரிக்கை...

என்ன..!? சாப்டு போறியா..... மேகலை....... என தன் மகளை அழைத்தார்...

அண்ணேணே.... அதுயில்லணே.... அந்த ஆட்டுக்குட்டி.....

ஆமா.... பத்திரமா கூட்டியாந்துட்ட.... பரவால்லயேடா....

இல்லணே.... அதை எனக்கு கொடுத்துடுறிங்களாணே!!
நான் கொஞ்சம் கொஞ்சமா வேலை செஞ்சு மந்தையோட்டி கழிச்சுடுறேன்ணே.... என கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

ஏன்டா... உங்களுக்கெல்லாம் ஆடு மேய்க்க விட்டு சோறு போட்டா முதலாளியாக ஆசை வருதா....என ஓங்கியுதைக்க
தரைத் தஞ்சமானேன்.....


உன்னையெல்லாம் நம்பியினி ஆட்ட ஓட்டி கொடுத்தா போற வழில வித்துட்டு ஊர விட்டு ஓடிடுவ....
டேய்.... இவன........ இனியிவன் வந்தா பந்தலுக்குள்ள விடாதடா.... உதைச்சு அனுப்புடா அவன....என ஏதேதோ சொல்லி திட்ட திட்ட விழியோரம் சிற்றருவி... அவ்விடத்தை விட்டு நெடுநடந்து நகர்ந்தேன்....

உணர்வுகளுக்குரியவர்களுக்கு உறவுகளில்லை.

-ராஜ்குமார் @RajiTalks

2 comments: