ஶ்ரீதேவி, வெண்ணிலா, ரீனா மூன்று பேரும் அந்த உயரமான இரும்பு வேலியின் ஓரமாக நின்றுக்கொண்டிருந்தனர்.
பத்து அடி இருக்கலாம்.. அல்லது அதற்கும் கொஞ்சம் அதிகமான உயரம்.
ஒரு சராசரி ஆளின் தோளுயரத்தில்
வேலியின் கதவில் தொங்கவிடப்பட்டிருந்த செய்திப்பலகையில்,
WARNING என்ற பெரிய எழுத்துக்களின் கீழ் அதை விட கொஞ்சம் சிறிதான அளவில்
ARMY PROPERTY
STRICTLY NOBODY ALLOWED INSIDE
CAUTION - HIGH VOLTAGE CURRENT PASSING ON LINES என எழுதியிருந்தது.
உங்க வீட்டுக்கு பின்னாடி இப்படி ஒரு இடம் இருக்குனு இவ்ளோ நாளா எங்க கிட்டலாம் நீ சொல்லவேயில்லயே ஶ்ரீ? என கேட்டாள் ரீனா.
அவ என்கிட்ட எத்தனையோ தடவ சொல்லிருக்கா!! நான் தான் எங்க உனக்கு தெரிஞ்சா இங்கயெல்லாம் இழுத்துட்டு வந்துடுவியோனு பயந்துக்கிட்டு இத பத்தி பேசாம இருந்தேன்!
இவ்வளோ நாள் பயந்தது இன்னிக்கு நடந்துடுச்சு என்றாள் வெண்ணிலா.
ஓஓ! எனக்கு தெரியாம உங்களுக்குள்ள ரகசியமா??
ரகசியம்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.... வா முதல்ல இங்கிருந்து கிளம்பலாம் என ரீனாவின் கையை பிடித்து இழுத்தாள் ஶ்ரீதேவி.
என்கிட்ட ரெண்டு பேரும் மறைச்சீங்கல்ல!?
அதுக்கு பிராயச்சிதம் பண்ணுங்க... என கையை உதறினாள் ரீனா.
சரி என்ன பண்ணனும்னு கேளு நிலா.....
உள்ள என்ன இருக்குனு வா போய் பாத்துட்டு வருவோம் என புன்னகைத்தபடி கண்ணடித்தாள் ரீனா.
அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்ல..
எங்க வீட்ல தெரிஞ்சா அவ்ளோ தான்...
கொலையே பண்ணிடுவாங்க......
இவ பேச்சயெல்லாம் கேக்காத ஶ்ரீ....
முதல்ல கிளம்பு இங்கிருந்து என்றபடி யார் பதிலும் வரவும் எதிர்பாராமல் எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தாள் வெண்ணிலா...
ஓடி வந்து கைகளை நீட்டி வழிமறித்தாள் ரீனா...
வேலிய தாண்டி அதோ தெரியுது பாரு ஒரு தந்தி கம்பம் அதுவரைக்கும் போயிட்டு திரும்பி வந்துடலாம் சரியா?? என குழைந்தாள்.
முடியவே முடியாது.... உள்ள என்னயெல்லாம் இருக்கோ யாருக்கு தெரியும்??
ஆர்மி இடம்னு போட்டுருக்கு...
யாராவது பாத்து துப்பாக்கியால சுட்டா என்ன பண்ணுவ??
நான் வர மாட்டேன்....
தயங்கியபடி நிலாவின் பக்கத்தில் வந்து நின்றாள் ஶ்ரீதேவி...
அவள பத்தி தான் தெரியும்லடி???
ஒன்னு நினைச்சுட்டா ஒத்த கால்ல நின்னு அடம் பிடிச்சு அது வேணும்பா....
ம்ம்ம்.... ம்ம்ம்.... என தலையை மேலும் கீழும் ஆட்டினாள் ரீனா...
அந்த கம்பம் ஒரு நூறு அடி தான் இருக்கும்... வா போயிட்டு திரும்பிடலாம்...
வீட்டுக்கு பின்னாடியே இருக்கு...
சின்ன வயசுலருந்து எனக்கும் ஆச தான்...
இப்ப வாய்ப்பு கிடைச்சதா நினைச்சுக்க வேண்டியது தான்.... வா.... என நிலாவை சமாதானப்படுத்தியபடி ரீனாவை பார்த்து,
அந்த கம்பம் வரை தான் வருவோம் சரியா என்றாள் ஶ்ரீதேவி..
அது போதும் என சிரித்தாள் ரீனா.
நிலாவிற்கு இதில் கொஞ்சமும் உடன்பாடில்லை.
வாசலில் காய்கறி விற்பவன் தக்காளி முருங்கக்கா பீண்ஸே என்று கொஞ்சம் சத்தமாக கூவினாலே காதுகளை மூடிக்கொண்டு பயந்து அழுபவள்,
இதற்கு சம்மதித்ததே மற்ற இருவருக்கும் ஆச்சர்யமாக தான்.
உண்மையாவே இதுல கரண்ட் போகுதா ஶ்ரீ??? செக் பண்ணிடலாமா என்றபடி வேகவேகமாக போய் வேலி கதவை கைகளால் தள்ளினாள் ரீனா...
வீல் என கத்தி கண்களை மூடினர் இருவரும்...
கதவு சரிந்து கீழே கிடக்க
வேலிக்கு மறுமுனையில் நின்று சிரித்துக்கொண்டிருந்தாள் ரீனா...
என்ன பைத்தியக்காரத்தனம் இது??
கரண்ட் அடிச்சுருந்தா என்ன பண்ணிருப்ப?? என்று அலறினாள் ஶ்ரீ...
வரும்போது பாக்கலயா நீங்க??
அந்த ட்ரான்ஸ்ஃபார்மர் பாழடைஞ்சு கிடந்தத??
அதுவுமில்லாம இங்க பாருங்க?? வேலி கம்பி முழுக்க அரிச்சுருக்கு..
இது ஆர்மி இடம் மாதிரி இல்ல, ஏதோ கைவிடப்பட்ட இடம் மாதிரி இருக்கு...
உன் லாஜிக்லாம் நல்லா தான் இருக்கு ஆனா அதுக்குனு இப்டிலாம் முட்டாள்தனம் பண்ணி மத்தவங்கள பயமுறுத்தாத என கடிந்தாள் நிலா...
சரிமா சரி என நக்கலாய் சிரித்தவளாய் சமாதானம் செய்து இருவரையும் நகர்த்தினாள் ரீனா.
உள்ளே இருந்தவை எல்லாம் ஐம்பது அறுபது வருட கால பழைய கட்டிடங்கள்.
எல்லாம் பாதிக்கு மேல் உடைந்து நொறுங்கி போய் கிடந்தன.
சிலவை தீக்கு இரையாகியிருந்தன.
இலக்காய் இருந்த கம்பத்தை மூவரும் நெருங்கினர்.
அவர்கள் அதற்கு பின் பார்த்தது சற்றும் நம்ப முடியாத காட்சி.
இடிபாடுகள் சூழ் கட்டிடங்களுக்கு நடுவே ஒரு பராமரிப்புடைய வீடு இருந்தது.
புதிதாய் கட்டமைக்கப்பட்ட தோற்றத்துடன் உடைய வீடு.
வாசலில் ஒரு பொம்மேரியன் நாய் கூட கட்டியிருந்தது.
அந்த வீட்டிலிருந்து வந்த ரேடியோ சத்தத்தை மூவருமே கேட்டனர்.
60களின் ஒரு பழைய பாடல்.
ரீனா ஶ்ரீயை பார்த்து கேட்டாள்,
உள்ள போய் பாக்கலாம் வரீயா??
ம்ம்ம்... என்று தலையாட்டியபடி அடுத்த அடியை எடுத்து வைத்த ஶ்ரீயை,
இழுத்து சுவற்றில் கிடத்தினாள் வெண்ணிலா...
என்ன சொன்னீங்க??
கம்பம் வரை வரேன்னு தான் சொன்னேன்...
இதுக்கு மேல போக உங்கள நான் அனுமதிக்கவே மாட்டேன் என்று மெல்லிய உச்சரிப்பில் மிரட்டினாள் நிலா.
உன் அனுமதிய இங்க யாரும் கேக்கல நிலா...
நாங்க போறோம்... நீ வரதுனா வா... இல்லனா இங்கேயே இரு... அதுவும் வேண்டாம்னா திரும்பி போ... ஆனா நாங்க போக தான் போறோம் என்று கடிந்தாள் ரீனா...
நிலா அமைதியானாள்.
இருவரும் அந்த வீட்டை நோக்கி நடக்க விரைந்தனர்.
சுவற்றில் சாய்ந்து கீழே அமர்ந்தாள் நிலா..
வாசலில் கட்டியிருந்த நாய் தொடர்ந்து குறைத்துக்கொண்டேயிருந்தது.
ஐந்து நிமிடத்திற்கு பிறகு எட்டி பார்த்தாள்.
அந்த வீட்டின் கதவு திறந்து இருந்தது.
ரேடியோ ஒலிக்கவில்லை.
அந்த வீட்டை நோக்கி நடந்து நண்பர்களை தேடலாம்.
ஊருக்குள் ஓடிச்சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வரலாம்.
அல்லது அங்கேயே இன்னும் கொஞ்சம் நேரம் காத்திருக்கலாம்.
செய்வதறியாது நின்றுக்கொண்டிருந்தாள்.
வீட்டிற்குள்ளிருந்து ஶ்ரீதேவி அழும் சத்தம்.
இப்டிலாம் நடக்கும்னு தெரியாம செஞ்சுட்டோமேயென்னு தன்னை தானே கடிந்தபடியான அழுகை குரல்.
அது அவளே தான்.
அந்த வீட்டை நோக்கி ஓடினாள் நிலா.
வாசலில் கட்டியிந்த பொம்மேரியன் நாய்
கீழ் தாடை உடைந்து ரத்தம் ஒழுகியபடி இறந்து கிடந்தது.
வாசற்கதவு உட்புறமாக தாழிட்டிருந்தது.
ஜன்னலை உடைக்கலாம்...
வலுவான எதையாவது தேடினால் நிலா.
நாயிற்கு அருகில் இருந்த பூந்தொட்டியை தூக்க நெருங்கினாள்.
சட்டென கண்களை திறந்த நாய்
கிடந்த கிடப்பில் நிலாவை பார்த்து ர்ர்ர்ரென்னது.
உடலில் எந்த அசைவும் இல்லை ஆனால் அதன் கண்களில் தன் எஜமானனை காக்க விரையும் கோபம் இருந்தது.
பூந்தொட்டியை நெருங்க நெருங்க கோபம் பெருக்கெடுத்ததாய் உறுமியது.
வெடுக்கென பூந்தொட்டியை தூக்கி கண்ணாடி சன்னலில் வீசினாள் நிலா.
உடைந்து போன ஜன்னல் வழியே உள்ளே குதித்தாள்.
உள்ளே ஒருவரும் இல்லை.
மேசையில் இருந்த ரேடியோ பாட ஆரம்பித்தது.
60களின் வேறொரு தமிழ் பாடல்.
இன்னும் அதிகம் பதட்டப்பட்டவளானால் நிலா.
எல்லா அறைகளையும் திறந்து கத்தினாள் விளித்தாள்...
ஶ்ரீ........ ரீனா......
பின்வாசல் கதவை திறந்து தோட்டத்தில் குதித்தாள்.
காலில் ஏதோ தட்டுப்பட்டவளாய் குனிந்து நோக்கினாள்.
அது ஒரு கண்ணிவெடி.
இதற்கு முன் அவள் கண்ணிவெடியை பார்த்தது கூட கிடையாது.
இயல்பிற்கு மாறானதாய் தானே உணர்ந்ததால் அவ்விடமே அசையாது நின்றாள்.
பக்கத்தில் எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.
மேடம் நகராதீங்க... You triggered the landmine அசையாம அப்படியே நில்லுங்க....
நிலாவின் பதட்டம் பயமாய் அழுகையாய் மாறியது.
யாரு?? எங்க இருக்கீங்க??
அருகில் இருந்த தண்ணீர் தொட்டியின் பின்னாலிருந்து ஒரு ராணுவ வீரன் தரையில் ஊர்ந்தபடி நிலாவை நோக்கி வந்தான்.
ஆயுதங்கள் ஏந்திய ஒரு இந்திய இராணுவ வீரன்.
கால நகர்த்தாதீங்க....
இது M14 AP landmine... அதிகமா அழுத்தம் கொடுத்தாலும் இக்னைட் ஆகிடும்... என்றபடி நிலாவின் ஷூவை ஒற்றை கையால் அழுத்தியபடி ஷூவிலிருந்து காலை வெளியே எடுக்க செய்தான்.
பின் தன் கைக்கத்தியால் வெடியின் கான்வெக்ஸ் ப்ளேட்டை துண்டித்து டீஆக்டிவேட் செய்தான்.
Dark team நான் சொல்லுறது கேக்குதா?
Landmine deactivated... திரும்பவும் சொல்லுறேன் landmine deactivated நீங்க வரலாம் என்றதும் வீட்டின் கூரையிலிந்து நான்கு பேரும்
மரத்தின் மேலிருந்து இருவரும் சடசடவென குதித்தனர்.
நிலா பதட்டத்தின் உச்சத்திற்கு சென்றாள்.
வந்தவர்களில் ஒருவன்,
மேடம்... உங்க கிட்டருந்து இப்போதைக்கு எங்களுக்கு ஒரேயொரு தகவல் மட்டும் தான் வேணும்.
மொத்தம் எத்தன பேர் உள்ள வந்தீங்க??
நான் அப்பரம் என் ஃப்ரென்ட்ஸ் ரெண்டு பேரு...
ஶ்ரீதேவி அப்பரம் ரீனா... என்றாள் குளறுமொழியில்.
Shadow team நான் சொல்லுறது கேக்குதா??
மொத்தம் மூனு பேரு... நாங்க ஒருத்தர சேவ் பண்ணிட்டோம்...
இன்னும் ரெண்டு பேர் உள்ள இருக்காங்க... ஓவர்... என்றான் தோளில் தொங்கிய மைக்கில்.
நீங்க இங்கிருந்து கிளம்புங்க...
மத்தவங்கள நாங்க பாத்துக்கறோம் என்றது Earplugல் எதிர்குரல்.
Dark team... usual tactics தான்,
Mission - rescue target என்றான் ஒருவன். துப்பாக்கியை தோளில் சாய்த்து குறி பார்த்தபடி
முன்னால் இருவரும் இடது மற்றும் வலது பக்கம் இருவரும்,
பின்னால் இருவரும் சூழ்ந்து நகர
நிலா நடுவே ஒருவன் தோளில் ஒளிந்து வந்தாள்.
வெளியே செல்ல வீட்டின் வழியாக தான் போயாக வேண்டும் என்பதால்
ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக உள்ளே நுழைந்தனர்.
வீட்டின் நடுக்கூடத்திற்கு வந்ததும் பச்சை நிற புகை அறையை சூழ்ந்தது...
இரு வீரர்கள் மயங்கி விழுந்தனர்.
மற்றவர்கள் இடுப்பில் இருத்த கேஸ் மாஸ்க்கை முகத்தில் மாட்டினர்..
வீரர்களின் ஒருவன் தன்னுடைய மாஸ்க்கை நிலாவின் முகத்தில் மாட்ட,
நிலா உங்களுக்கு என்றாள்...
We are trained to tackle this situations, நீங்க கவலப்படாதீங்க என்றான்.
வேகமாக நிலாவை அனைத்து வெளியே கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.
கதவுகளுக்கு பின் நின்றுக்கொண்டிருந்த வீரன் ஜன்னலுக்கு பின் நின்ற இருவருக்கு கண் ஜாடை காட்டினான்.
இருவரும் ஐன்னலை உடைத்து வீட்டின் வெளியே குதித்தனர்.
சரமாரியான துப்பாக்கி சூடு சத்தம் காதுகளில் அலறியது.
சமயம், நிலாவிற்கு மாஸ்க்கை அளித்த வீரன் மூச்சு திணற ஆரம்பித்தான்.
நிலா ஓடி சென்று தன் துப்பட்டாவை தண்ணீரில் முக்கி அந்த வீரனின் முகத்தில் கட்டினாள்.
வெளியிலிருந்து Clear all clear என்று சத்தம் கேட்டது.
கதவுகளை திறந்து நிலாவோடு மற்றவர்கள்
வெளியே வந்தனர்.
ஜன்னல் வழியே குதித்தவர்களில் ஒருவன் உயிரிழந்திருந்தான்.
சுற்றியும் பல மனித உருவ ரோபோக்கள் சுடப்பட்டு சிதறிக் கிடந்தன.
எல்லாவற்றையும் கவனித்தவாறு துப்பட்டாவால் முகம் மூடியிருந்த வீரனின் முதுகில் பதுங்கியிருந்தாள் நிலா.
TCAPSல் ஒரு செய்தி வந்தது.
Dark team.... நீங்க இருக்குற லொகேஷன்ல இன்னும் 5.20நிமிஷத்துல மழை வரதுக்கான வாய்ப்பு இருக்கு..
Situation hyper emergency..
உடனே எல்லாரும் அங்கிருந்து வெளியேறுங்க....
வீரர்களின் ஒருவன்...
Yes sir, copied என் சொல்ல அனைவரும் நிலாவை நகர்த்தி ஓடினர்.
தூரத்திலிருந்து ஶ்ரீதேவின் குரல்..
நிலா........ எங்கள மன்னிச்சுடு.....
அழுகையுடன் கலந்திருந்த உச்சரிப்பில் கலங்கிப் போனால் நிலா...
அங்கிருந்து என் ஃப்ரெண்டோட வாய்ஸ் வருது.. அவளயும் காப்பாத்துங்க என்று கெஞ்சினாள்..
அதுக்கெல்லாம் இப்போ நேரமில்ல மேடம்...
அவங்களயும் மத்தவங்களயும் ஷேடோ டீம் காப்பாத்திடுவாங்க....
நாம முதல்ல இங்கிருந்து தப்பிச்சாகனும்.....என்றான் உயர்ந்த குரலில்...
இல்ல... நான் என் ஃப்ரெண்ட்ஸ் இல்லாம இங்கிருந்து வர மாட்டேன் என்று கத்தினாள் நிலா...
பளாரென நிலாவின் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.
கன்னத்தில் கை வைத்தபடி கீழே சரிந்தாள்...
அவளை தோள்களில் சாய்த்து அங்கிருந்து நகர்ந்தனர்.
ஶ்ரீயின் கதறல் சத்தத்தை கேட்டு அழுதவாறே வீரர்களுடன் நடந்தாள் நிலா.
தொடர்ந்து ஶ்ரீதேவின் குரல் தூரத்தில் ஒலித்துக்கொண்டேயிருந்தது.
எங்கிருந்தோ தலையில் சுடப்பட்டு ஒரு வீரன் கீழே விழுந்தான்.
கீழ படுங்க கீழ படுங்க என்று மற்றவன் ஆணையிட நிலாவும் மற்ற மூன்று வீரர்களும் கீழே படுத்தனர்.
மேலிருந்து இரண்டு ரோபோக்கள் பறந்து வந்து சுட ஆரம்பித்தன.
வீரர்களும் அவற்றை நோக்கி சுட்டபடியே பதுங்கு குழி நோக்கி நகர்ந்தனர்..
ரோபோக்களில் ஒன்று இறந்த வீரனின் இடுப்பில் தொங்கிய கம்யூனிகேஷன் ட்ரான்ஸ்மிட்டரை எடுத்து உற்று நோக்கியது.
மற்றவர்களில் தகவல் தொடர்பு சாதனங்கள் உய்ங்ங்ங் என்ற சத்தத்துடன் துண்டிக்கப்பட்டன..
பதுங்கு குழியில் இருந்த வீரன் மைக்கில் பேச முயற்சித்தான்.
ஷேடோ டீம்... கேக்குதா?? ஷேடோ டீம்??
ச்ச... TCAPS failure ஆகிடுச்சு என்று தலையில் அடித்துக்கொண்டான்.
துப்பட்டாவில் முகம் மூடிய வீரன்,
நான் மேல போய் அதுங்கள திச திருப்புறேன் நீங்க பின்னாடி வழியா தப்பிச்சு போங்க என்று கைகளில் சைகை காட்டினான்...
மற்ற இருவரும் thumbs up காட்டினர்.
நிலாவை ஒளித்துக்கொண்டு மற்ற இருவரும் பின் வழியாக நகர,
அந்த வீரன் பதுங்குகுழியிருந்து எழுந்து ரோபோக்களை நோக்கி தொடர்ந்து சுட்டவாறு ஓடினான்.
ரோபோக்களில் ஒன்று சிதைந்து கீழே விழுந்தது.
பின்னாலிந்து வந்த மற்றொரு ரோபோ அந்த வீரனின் கருத்தை பிடித்து மேலே தூக்கியது.
நிலா திரும்பி பார்த்தாள்.
ரோபோ அந்த வீரனின் கழுத்தை நெரித்தபடி தோளிலிலிந்த துப்பாக்கியால் அவன் தலையை குறி வைத்தது.
நிலா மற்றவர்களிடம் அவர காப்பாத்துங்க என்று கத்தினாள்.
பிடிபட்டிருந்த வீரன் தன் கையில் அழுத்தி பிடித்திருந்த கையெறி குண்டின்
ஹேன்டிலில் இருந்து கையை விலக்கினான்.
குண்டு வெடித்து ரோபோ சுக்கு நூறானது.
மற்ற இருவரும் நிலாவை வெளியே அப்புறப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தனர்.
தூரத்தில் ஶ்ரீதேவின் குரல்...
மூவரும் திரும்பி பார்த்தனர்.
ரோபோ ஒன்று ஶ்ரீதேவியை துப்பாக்கி முனையில் இழுத்து வந்துக்கொண்டிருந்தது.
தெரியாம பண்ணிட்டோம் எங்கள மன்னிச்சுடு நிலா என அழுதுக்கொண்டிருந்தாள் ஶ்ரீதேவி..
இரு வீரர்களும் நிலாவை முதுகில் பதுக்கி
துப்பாக்கியை ரோபோவின் திசை நோக்கி நீட்டி நின்றனர்..
என் ஃப்ரெண்டு... ஶ்ரீக்கு ஏதும் ஆகிடப்போகுது சுடாதீங்க என்று அழுதாள் நிலா...
ஶ்ரீதேவியை பிடித்து இழுத்தவாறு நிலாவையும் வீரர்களையும் நோக்கி நடந்து வந்தது ரோபோ...
தொடர்ந்து எங்கள மன்னிச்சுடு நிலா... நீ சொன்னப்போவே அங்கிருந்து கிளம்பிருக்கனும் எங்க தப்பு தான் என புலம்பிக்கொண்டே இருந்தாள் ஶ்ரீதேவி...
ரோபோவ சுடுறேன்னு அவள சுட்டுடப்போறீங்க வேணாம் என்று வீரர்களிடம் கெஞ்சினாள் நிலா...
ஶ்ரீ...... ரீனா எங்க??? அவளுக்கு என்னாச்சு என்று கத்தினாள்...
பதிலாக அழுகையை மட்டுமே தந்தாள் ஶ்ரீதேவி...
இராணுவ மருத்துவமனை சிறப்பு பாதுகாப்பு மற்றும் மருத்துவ அறையிலிருந்து அழுதுபடி வெளியே வந்தாள் ஶ்ரீதேவி...
வாசலில் ரீனா நின்றுக்கொண்டிருந்தாள்..
ரீனாவின் தோளில் சாய்ந்து அழுதபடி புலம்பினாள் ஶ்ரீதேவி..
அவ அப்போவே சொன்னா உள்ள போக வேண்டாம் வேண்டாம்னு...
நாம தான் கேக்காம போனோம் பாரு எப்டி ஆகிடுச்சுனு என்று கத்தினாள்...
இராணுவ பாதுகாப்பு துறை அதிகாரிகள் இருவர் வந்து ரீனாவையும் ஶ்ரீதேவியையும் அழைத்து விசாரித்தனர்.
என்னாச்சுனு விளக்கமா சொல்லுங்க என்றார் ரீனாவிடம் ஒருவர்..
சும்மா விளையாட்டா உள்ள போய் பாக்கலாம்னு தான் சர் உள்ள போனோம்... அங்கிருந்த தந்திகம்பம் வரைக்கும் போயிட்டு திரும்பி வந்துடலாம்னு தான் போனோம்... ஆனா அங்க போறதுக்கு முன்னாடியே கீழ சுருண்டு விழுந்து ஏதேதோ பொலம்ப ஆரம்பிச்சுட்டா.... உடனே வெளிய தூக்கிட்டு வந்தோம்... அதுக்குள்ள CCTVல பாத்துட்டு ஆஃபிசர்ஸ் வந்து இங்க கூட்டி வந்துட்டாங்க..........
சரி அஃபிஷியல் இன்வெஸ்டிகேஷன் ப்ரொசிஜர்லாம் இருக்கு... கொஞ்சம் எங்க கூட வாங்க என்றார்...
கண்ணாடி கதவின் வழியே உள்ளே எட்டிப்பார்த்தாள் ஶ்ரீதேவி...
கைக்கால்கள் படுக்கையோடு கட்டப்பட்டிருந்த நிலா அரை கண்களில் புலம்பிக்கொண்டிருந்தாள்,
ஆஃபிசர்.... என் ஃப்ரெண்டு அங்க இருக்கா... சுட்டுடாதீங்க...ப்ளீஸ்....
/////////////////////////////////////////
60வருடங்களுக்கு முன்பு.
இராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படை சோதனை மையம்.
(தற்போதைய கைவிடப்பட்ட இடம்)
டாக்டர் சுந்தர்... எத்தனை நாளுக்கு உங்களோட இந்த வெத்து ஆராய்ச்சிக்கு அரசு பணம் செலவு செய்துட்டு இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?
ப்ராஜக்ட்டோட எஸ்டிமேஷன எப்பவோ தாண்டி போயிடுச்சு உங்க ஆராய்ச்சி...
இன்னும் நீங்க ரிசல்ட்டும் காட்டல என்று பேப்பர்களை சுந்தர் முகத்தில் வீசினார் ஜென்ரல்.
கிட்டதட்ட எல்லாமே முடிஞ்சுருச்சு ஜென்ரல்...
இதெல்லாம் ஏற்கனவே சக்ஸஸ் ஆன சேம்பிள்ஸ் என்று அறை கதவை நகர்த்தினார் டாக்டர்.
பின்னால் டெஸ்ட் ட்யூப்களில் அடைக்கப்பட்டு ஆயிக்கணக்கான பயோ ரசாயண மருந்து மாதிரிகள் அறை முழுவதும் நிரப்பட்டிருந்தது.
ஒவ்வொன்றின் மேலும் P1ல் தொடங்கி P2, P3 என P750 வரை பல்வேறு தேதிகளின் குறிப்பில் எழுதியிருந்தது.
இது எல்லாமே நான் தயாரிச்ச ஸ்பெஷல் ஃபார்முலா ஆன்ட்டிகாலினர்ஜிக்ஸ்...
இது ஒரு மனுஷனோட மூளைல செயல்படுற நியூரோட்ரான்ஸ்மிட்டர்ஸ குழப்பும், அதிகபட்சமா செயல்பட விடாமலேயே கூட தடுக்கும்.
இதோட நான் கண்டுபிடிச்ச இன்னொரு ஃபார்முலாவான ஏஜன்ட் பேரடாக்ஸ கலக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.
இந்த மருந்த சுவாசிக்கறப்போ அதுல உள்ள ஆன்ட்டிகாலினர்ஜிக்ஸ் மூளைய குழப்பி நியூரோட்ரான்ஸ்மிட்டர்ஸ செயல்படவிடாம செய்து, அங்கேயே உடல செயலிழக்க வைக்கும்.
ஏஜன்ட் பேரடாக்ஸ் மூளை திரும்பவும் பழைய நிலைய அடைய விடாம பேரடாக்ஸ் இன்ஸிடன்ட்ஸ உருவாக்கிக்கிட்டே இருக்கும்.
இதுவரை நம்ம வாழ்க்கைல சுத்தமா நடந்துடாத நடக்க வாய்ப்பே இல்லாத நிகழ்வுகள உருவாக்கி தொடர்ந்து மூளைய குழப்பிக்கிட்டே இருக்கும்.
போர் சமயத்துல நம்மளோட வீரர்கள் இதோட ஒரு ஆண்ட்டி டோஸ போட்டுக்கிட்டு இதை எதிரிகள் மேல பிரயோகப்படுத்தினாலே போதும்.
பல எதிரிகள செயலிழக்க செய்து விழ வைக்கிறதோட தொடர்ந்து செயல்பட விடாமலும் தடுக்கலாம் என்று முடித்தார் டாக்டர் சுந்தர்.
சரி... இந்த ஆராய்ச்சி எப்போ முடியும்??? என்றார் ஜென்ரல்.
இன்னிக்கு இரவு கடைசி சோதனை....
நாளைக்கு இதோட மாதிரிகள இராணுவ பாதுகாப்பு துறையோட ஆராய்ச்சி மேம்பாட்டு குழு அதிகாரிகள் கிட்ட ஒப்படைச்சுடுவேன்..
பரிசோதனைய செய்து காட்ட உங்க சிறைச்சாலைல கிடக்குற ஒரு மனித ஆய்வுக்கூட எலி வேணும்...
அதோட நாளைக்கு வந்துடுங்க என்றார் சுந்தர்... சிரித்தபடி....
ஜென்ரலும் அங்கிருந்து கிளம்பினார்...
அடுத்த நாள் காலை எல்லா பத்திரிக்கைகளிலும் ஒரு செய்தி வெளி வந்ததது...
ஆவடியை அடுத்த இராணுவ மருத்துவ பரிசோதனை மய்யத்தில் நடந்த வெடிவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள இராணுவ பரிசோதனை கருவிகள் சேதமடைந்ததோடு 2ஆராய்ச்சியாளர்கள் உட்பட 12பேர் பலியாகினர்.
நள்ளிரவில் நடந்த ஒரு பரிசோதனையில் ஆராய்ச்சி தோல்வியடந்ததையடுத்து நடந்த வெடிவிபத்தில்,
சேகரித்து வைக்கப்பட்டிருந்த சிறப்பு ரசாயண கலவைகள் காற்றில் கலந்திருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதனால் விபத்து நடந்த பகுதி மட்டுமல்லாத சுற்றியுள்ள 5கிலோமீட்டர் இடம் முற்றிலும் இராணுவ கட்டுப்பாட்டில் சென்றதோடு வேலிகள் அமைப்பட்டு அங்குள்ள ஆட்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
காற்றில் பரவிய நச்சு செயலிழக்க குறைந்தது பல வருடங்கள் ஆகலாம் என செல்லப்படுகிறது.
விபத்து பற்றிய பிற ஆவணங்கள் எதையும் அரசு வெளியிடவில்லை.
@RajiTalks
arumai
ReplyDelete