Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டு அவசியம் நமக்கு தேவை தானா!? ஏன்!?

ஜல்லிக்கட்டு 360

#####
திசை1 - ஜல்லிக்கட்டு எனும் மரபு கலாச்சாரம்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின்(!) மரபா, பண்பாடா, பாரம்பரியமா, கலாச்சாரமா!?
குயில் ஊளையிடாமல் கூவுவதற்கும்
சிங்கம் கூவாமல் உறுமுவதற்கும் காரணம் கிடையாது.
இது மொழி வழக்கு மரபு.
ஜல்லிக்கட்டு இதை போலல்லாமல் ஆரம்பக் காலங்களிலிருந்தே (ஒவ்வொரு நிலப்பரப்பிலும் ஏற்புடையதோ இல்லையோ) பலப்பல காரணங்களுக்காக நடந்தப்பட்டதாக அறிகிறோம்!


ஒரு பண்பட்ட சமூகம் மிருகங்கள் மற்றும் சகஜனம் மீதான ஒரு நேரடி அல்லது மறைமுக
வதைப்பை அல்லது சீண்டலை ஆதரிக்குமா/முன்னிருத்துமா/செயல்படுத்துமா?
நிச்சயம் இல்லை.
காளைகள் ஏருழுவதும், பசுக்கள் பால் தருவதும் வதைப்பில் சேராது.
தர்க்க ரீதியாக நோக்க இதை ஐந்தறிவு ஆறறிவு "ஜீவன்களிடையே" நிகழும் ஒரு பண்ட மாற்று முறையாக கொள்ளலாம் (புல்லுக்கும் வைக்கோலுக்கும் மாற்று பாலும் உழைப்பும். இது ஒரு பெயர்க்காரண தற்விளக்கம் மட்டுமே. இதையை தற்போது பீட்டா நமக்கு எதிராக திருப்பியுள்ளது குறிப்பிடதக்கது)
மாடுகள் பழக்கப்பட்டதும் இந்த கருத்து பின்னணியில் தான்.
இது ஒரு சமூக அறிவியல் & அரசியல் நோக்கு.
ஆனால் ஒரு காளையை நூறு பேர் கூடி மள்ளுக்கட்டுவதென்பது மனிதனின் வீரத்திலும், காளையிடம் நட்புறவாடுவதிலும் சேராது.
(ஏறித்தழுவதல், சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு வேறுபாடு அறிதல் அவசியம். இங்கே நான் ஜல்லிக்கட்டென குறிப்பிடுவதைனைத்தும் சமகால விளையாட்டு முறையை)

பாரம்பரியம் என்பது தமிழராயினும்
சாதிவாரியாக, நிலவாரியாக, தொழில்வாரியாக அவருள் குறிப்பிட்ட குழுக்களால் பின்பற்றக்கூடிய வழக்கமாக அர்த்தம் கொள்ளலாம்.
காட்டாக, அனைவரும் அறிந்த பட்டுப் பாரம்பரியம் எனும் நெசவாளர் மேற்க்கோள்.
இதில் வாழ்க்கைமுறை, வழிபாடுகள், தொழிற்முறைகள் & சூட்சமங்கள், சமையல், கலை என எல்லாமே கிளைப் பிரிவுகளாக  அடங்கும்.


மேற்கண்ட மூன்று காரணங்களை விளக்கவே ஜல்லிக்கட்டு தமிழர் கலாச்சாரமாக அறியப்படுகிறது.
கலாச்சாரம் ஒரு அடையாளம்.
அது குழு மக்களின் உணர்வுகளோடு ஆரம்பத்திலிருந்தோ இடையிலோ திட்டமிட்டோ எதேச்சையாகவோ மூலமாக பிணைக்கப்பட்டுள்ளது.
தற்போதும் ஒவ்வொரு ஆண்டும் மக்களிடையே வெளிப்படும் எழுச்சியானது ஒரு மரபு கலாச்சாரமென புரிகிறேன்.
இந்த மரபு & கலாச்சாரமெனும் இரு சாரங்களை ஒன்றாக முடிவது பலரின் கருத்திற்கு ஏற்பற்ற வாதமாக அமைந்தாலும் தற்போது ஜல்லிக்கட்டு ஆதரவாக எழும் குரல்கள் அனைத்தும் இதையே குறிக்கிறது.
தற்செயலான இந்நிகழ்வு
பிற்காலத்தில் மரபு கலாச்சாரமென கருத்தியல் ரீதியாக மறைமுகமாக வலுபெற்வதற்க்கான எல்லா காரணிகளும் மக்களிடையே தற்போது வெளிப்படுவதை காணலாம்.

######
திசை2 - ஜல்லிக்கட்டு ஆதரிக்கப்படுவதற்கான நோக்கம் #1.
 
தற்போது ஆதரவாக எழும் குரல்களில் ஒன்று, இது காலாகாலமாக நடக்கும் கலாச்சார கூறு என்பதாலும்,
குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே நடத்தப்படுவதாலும்
அதை கைவிடாக்கூடாது என்பதாலும் மட்டுமே ஆதரிப்பதாக
நடத்த முற்படுவதாக சொல்லப்படுவது.
ஏதோ ஒரு ஆதிமுதற் காரணத்தை முன்னிருத்தாமல் கலாச்சாரமென பெயர்ப்படுத்தி ஒரு சம்பவத்தை ஆதரிப்பதென்பது மரபு கிளையையே சாரும்.
இங்கு மரபு என்பது வலுவற்ற ஒரு வரலாற்று பின்னணி.
அதை தேசமன்றி ஒரு மக்கட்குழுவாலும் கூட எளிதில் நிகழ்த்தி விட முடியும்.
அதனால் இதை ஜல்லிக்கட்டு செயல்முறை தாக்கத்திற்கு ஏற்பற்ற ஒரு காரணமாகவே கருதுகிறேன்.
கலாச்சாரம் என்பது பழக்கம் வழி வழக்கம், வழக்கம் வழி மரபு, மரபு வழி பாரம்பரியம் & கலாச்சாரமெனவே பரிணாமித்திருக்கிறது.
எனவே
கலாச்சாரம் என்பதற்காக மட்டுமே ஆதரிக்கப்படுவதென்றால் பெண் அடக்குமுறை, உடன்கட்டை ஏறுதல், மறுமணம் தவிர்த்தல், சிறுவர் சிறுமியர் திருமணம், குலத்தொழில் மற்றும் அதன்வழி சாதியமென அத்தனையையும் ஆதரிக்க வேண்டுமென்பதே கருத்தியல்.
இதில் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்கிறேன் என்றால் ஜல்லிக்கட்டு எவ்வகையில் எந்தளவு நமக்கு தேவையானதென அறிதல் அவசியம்.

இதில் மாரி வேண்டியும், ஊரில் நோயொழிய இங்குருதி மண்ணில் சிந்த வேண்டுமென்பதையும் காரணமாய் காட்டி ஜல்லிக்கட்டை ஆதரிப்பதென்பது முழுக்க முழுக்க பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டதென்பதால் இவற்றின் வாதங்களை தவிர்க்கிறேன்.

#####
திசை3 - ஜல்லிக்கட்டு ஆதரிக்கப்படுவதற்கான நோக்கம் 2.
பீட்டா எதிர்ப்பு

ஜல்லிக்கட்டை சுட்டி எப்படி தமிழர்கள் பீட்டாவாலும், பிற விலங்கின ஆர்வலர்களாக தங்களை கருதிக்கொள்பவர்களாலும் காட்டுமிராண்டிகளாக வடக்கே சித்தரிக்கப்படுகிறோமோ,
அதே போல் தான் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களால் பீட்டா ஒரு கார்ப்ரேட் மாஃபியாவாக நமக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கின்றனர்.
(அவை உண்மையாயினும் ஒரு புறமிருக்க)
இது பீட்டா விஷயத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு தமிழுணர்வை தாண்டி, தமிழர்களுக்கு பீட்டா மீதிருக்கும் ஒரு தன்மானம் தொடர்புடைய காழ்ப்பு மற்றும் நீயாநானா போட்டியையே காட்டுகிறது.
இதில்தான் போராட்டத்திற்கான மூலக்காரணம் அடிபட்டுப்போக,
இருவருக்குமிடையேயான ஈகோ தலை தூக்கி நிற்கிறது.
இந்த மனப்போக்கு உணர்வுகளை முன்னிருத்தி எதிர்காலத்தில் தேவையற்ற இன்னும் பல சாதிவாரி இனவாரி மொழிவாரி வன்முறைகளை தூண்ட வழிவகுக்குமென்பதால்
இந்த எதிர்ப்பு நேரடியானதாக அல்லாமல் ஜல்லிக்கட்டை ஒரு இணைப்பு கருவியாக தொடர்புப்படுத்தி போராட வேண்டியது அவசியம்.


######
திசை4 - காளையினங்களை காத்தல்.

சுமார் 60ஆண்டுகளுக்கு முன்பு வரை நூற்றுக்கு மேற்பட்ட காளையினங்கள் இருந்த ஊரில் இப்போது ஏழு அல்லது எட்டு மட்டுமே இருப்பதாகவும் அவற்றை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாகவும் சொல்கிறோம்.
இதை ஒரு பொறுப்பற்ற பார்வையாகவே கருதுகிறேன்.
ஜல்லிக்கட்டை நடத்துவதால் மட்டுமே காளையினங்கள் காக்கப்படுமெனில் கடந்த 5-6வருடங்கள் தவிர முன்பு வரை ஜல்லிக்கட்டு தடையின்றி நடத்தப்பட்டு தான் வந்திருக்கிறது.
இவர்களுடைய சான்று படி இத்தனை காளையினங்களும் அழிந்திருக்க கூடாதென்பெது தானே தர்க்கம்!?
அல்லது இத்தனை காளையினங்களும் கடந்த 5-6வருடங்களில் தான் அழிந்துவிட்டனவா!?

நவீனமயமாக்கப்பட்ட வேளாண்மையில் ஏரு செய்த வேலையை எந்திரங்கள் செய்யத் தொடங்கிவிட்டன.
இந்த எந்திர புரட்சி விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி குறைந்தது 20ஆண்டுகள் ஆகின்றன.
காளையினங்களை காக்க தவறிய தம் இயலாமையை மறந்தும் மறைத்தும், நவீனமயமாக்கலில் தாமே சிக்கி (தற்செயலாக சிக்க வைக்கப்பட்டுள்ளனர் எனலாம்) காளையினங்களை இழந்ததை தந்நிலையில் ஏற்காமலும் பிறரை சாடுவது மக்களுக்கு பிரதானமாகிப் போயிருக்கிறது.
இது ஒரு தவிர்க்கவே முடியா சமூகநிலை மாற்றம்.
ஒரு வளர்ந்து வரும் நாட்டில்
இது ஏதோ ஒரு தருணத்தில் நடந்தே தான் தீரவேண்டும்.
இதில் விழிப்புணர்விண்மை, விளைவுகளை கணிக்க (திட்டமிட்டு) தவறியதென அரசு & விவசாயி அல்லாத சாமாணியன் பங்கும் உண்டு.
இதற்கு அத்தனை பிரஜையும் பொறுப்பேற்றே ஆக வேண்டும்.
மீதமிருக்கும் காளையினங்கள் காக்கப்பட ஜல்லிக்கட்டு ஒரு செயலூட்டியாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.
இது ப்ராபப்லிட்டி சார்ந்தது.
ஆனால் இதை மட்டுமே ஒரே பிரதான காரணமாக முன்னிருத்துவது வேளாண் அரசியலிலும் செயல்முறையிலும் குறைந்தளவே சாத்தியமான ஒன்று.
ஜல்லிக்கட்டு இன்றியும் (ஜல்லிக்கட்டை விட வீரியத்துடனும் கூட) காளையினங்களை காக்க பல வழிகள் உண்டு.
அவற்றில் ஒன்றே விழிப்புணர்வெனும் பெயரில் தற்போது நிகழ்ந்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன்.

###
திசை5 - இந்திய பால் வணிகம்.
சல்லிக்கட்டை தவிர்ப்பது நாட்டு மாட்டினங்களை முற்றிலும் அழித்தொழிக்குமா!?

பால் உற்பத்தியில் இந்தியளவில் தமிழகம் 9வது இடத்தில் உள்ளது.
தனக்கு மேலிருக்கும் 8இடங்களில் ஆந்திராவை தவிர பிற மாநிலங்கள் அனைத்துமே சல்லிக்கட்டிற்கு கொஞ்சமும் தொடர்புடைய இடங்கள்.
மற்றும் இந்த புள்ளிவிபரமானது காமதேனு திட்டத்தின் கீழ் நாட்டு மாடினங்களின் நிலையறிதல் & கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
சல்லிக்கட்டின்றி இந்த முன்னிலையை இதர மாநிலங்களால் கொண்டு வர முடியுமென்றால் தமிழகத்தாலும் முடியும்.
நாட்டு மாடின வழி அதற்கொரு பெரு முயற்சி தேவையாயிருக்கிறது.
வடமாநிலங்களின் பால் உற்பத்தியின் பெருவாரியான பங்கானது ஜெர்சி கலப்பின மாடினத்தின் உற்பத்தியாகவும் கருதப்படுவதுண்டு.
அது அதிகபட்சம் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதெனும் பட்சத்தில், அரசே அதற்கு துணை போகும் சம்பவங்களும் வட மாநிலங்களில் தொடர்ச்சியாய் நடந்ததையோட்டி தற்போது 5ஆண்டுகளாய் தமிழகத்தில் வேறு பரிணாமத்தில் நிகழ்வதாய் எண்ணுகிறேன்.
நிற்க, இதற்கர்த்தம் சல்லிக்கட்டின்றி நாட்டு மாடினம் அழியவே அழிதாதென்பதல்ல.
அப்படி நிகழ்ந்தால் அதன் காரணம் சல்லிக்கட்டை மறுத்ததாக மட்டுமே இராது என்பதே.
தவிர்த்து உலகிலேயே தமிழக மாட்டின பால்களே A1 ரக பால் வகை, பிறவை கோமியத்திற்கு ஒப்பானவையெனும் கருத்து ஏற்புக்குரியதல்ல.

####
திசை6 - பீட்டா ஒரு கார்ப்ரேட் அடியாளா!?

இந்தியாவில் குண்டூசி விற்க வரும் அயலியனையும் சந்தேகப்பட வேண்டுமெனும் மார்க்ஸிய சிந்தனை பீட்டாவின் நடவடிக்கையை எதிர்ப்பதில் ஐயமில்லை.
முன்பே சொன்னபடி இது தமிழர்களுக்கும் பீட்டாவிற்குமான நீயாநானா போட்டியாகிவிட்ட போதும்,
இதன் பின்னுள்ள உலகளாவிய பொருளாதார அரசியல் ஆராய வேண்டியது.
கடல் கடந்து வந்து பிற தேசத்தினனிடம் ஜீவகாருண்யம் பேசுவதென்பது யாரோ ஒருவருக்கு ஆதாயமற்ற முன்நோக்கில் நடக்க வாய்ப்புகளில்லை.
இதில் ஆதாயம் காண்பவர் யார் யாரென்பதெல்லாம் வெளிச்சமானது.
பெரும் முதலாளி நாடுகளின் மறைமுக தூண்டுதல் பெயரில் பல ஏஜன்ஸிகலென்றும்,
ஏஜன்ஸிகளின் வழி மறைமுக அமைப்புகளென்றும், மறைமுக அமைப்புகள் வழி ஆர்வலர் இயக்கங்களெனும் நேரடி அடியாட்களென்றும், அவ்வடியாட்கள் வழி இவ்வரசியல் அறிந்த மற்றும் அறியா இந்தியரென்றும் விரிகிறது இந்த சுரண்டலமைவு.
இதில் செல்வமானது எல்லா அடுக்குகளிலும் பாரபட்சமின்றி இரைக்கப்படுகிறது.
சாதகப்போக்கு உயர்மட்டமெனும் பிற ஆளுமை அரசு வரை நீள்கிறது.
இந்த ஆளுமைச் சுரண்டல் சமீபக்காலமாக ஏதோ பீட்டா வழியாக மட்டுமே நிகழ்வதாக
கருதக் கூடாது.
இச்சுரண்டல் அல்லது ஏய்ப்பு கால் நூற்றாண்டு முன்னரே நம்முள்(வளரும் நாடுகள் மீது) மெல்ல புகுத்தப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன்.
இதன் பிள்ளையார்சுழியானது டிவியெனும் வஸ்துவை சாமாணியனிடம் சேர்த்ததில் தொடங்குகிறது.
அது விளம்பர பின்னணியெனும் வேறொரு சக ஏஜன்ஸியின் வியாபார சூட்சமம்.
பின் அதுவே ஒரு சமூகத்தின் முற்போக்கிற்கு(ம்) காரணமாயமைய ஆர்வலர் போர்வையை போர்த்தியிருக்கிறது இவ்வாளுமைகள்.
இதில் உயர்மட்ட அரசியல்வாதிகள் முதல் தாழ்மட்ட சாமாணியன் வரை சம்மந்தப்பட்டிருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை.
இவற்றிற்கு நேரடி சான்றுகளேதும் கிடையாதெனினும் வெற்றுக் கற்பனையென தவிர்த்துவிடக் கூடியதுமல்ல.


#####
திசை7 - ஜல்லிக்கட்டும் வன்முறையும்!?

ஜல்லிக்கட்டில் வன்முறையே கிடையாதென்று சொல்லிவிட்டால் நான் முட்டாள்.
போட்டியில் கலந்துக்கொள்வோர் காளைகள் மனிதர்களென இரு சாராருக்கும் இதில் உடல்ரீதியான பாதிப்பு உண்டு.
இந்த ஒரு காரணத்தை மட்டுமே சுட்டி இதை நிறுத்த வேண்டுமென்பது ஆர்வலர் நோக்கமெனில் அதில் தவறில்லையென்றே சொல்வேன்.
விளையாட்டுகளில் விழுப்புண்கள் சகஜம்.
கிரிக்கெட் மைதானத்திலும், குத்துச்சண்டை மைதானத்திலும், கராத்தே குங்ஃபூ போட்டிகளென எல்லாவற்றிலும் விளையாட்டின் போதுமே மைதானத்திலேயே விழுந்து இறந்தவர்கள் உண்டு.
இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் மேற்கண்ட இவ்விளையாட்டுகள் மட்டுமின்றி para gliding, mountain climbing போன்ற சாகசங்களில் கூட இந்த மரணங்கள் ஏற்படுவதுண்டு.
ஆனால் இவைகளில் மரணமோ அல்லது அதையொட்டிய காயங்களோ ஏற்படும் வாய்ப்பு நிச்சயம் உண்டென அறிந்து விளையாடுபவர்கள்(இங்கே வீரர்களெனும் வார்த்தை பிரயோகத்தை தவிர்க்க விரும்புகிறேன்) அதை அனுகுவதில்லை.
அவையெல்லாம் தற்செயலாகவே அமைகின்றன. அவற்றை ஜல்லிக்கட்டோட ஒப்பிட முடியாது.
மட்டுமின்றி இவையாவும் மனிதன் மட்டுமே தொடர்புடைய விளையாட்டுகள்.
அவற்றில் எதிலும் காளைகளோ சிங்கங்களோ எரும்புத்திண்ணிகளோ மூஞ்சூருகளோ பங்கேற்கவில்லை.

இந்த விஷயத்தில் முதலில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரியது பீட்டாவோ அல்லது இன்ன பிற இயக்கங்களோ அல்ல என்பதை நாம் அறிய வேண்டும்.
ஜல்லிக்கட்டில் மரணமடைந்த ஒரு இளைஞரின் தந்தையே முதலில் இந்த தடையை நீதிமன்றத்தின் கோரியிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு எந்தளவு தமிழர்களின் உணர்வுகளோடு பிணைக்கப்பட்ட ஒன்றோ
உறவும் அது சார்ந்த நேசமும் அதற்கிணையான அல்லது அதற்கு ஒருபடி மேலான ஒரு விஷயம் தான்.
அதை தமிழர்களெனும் குழுவிற்கு சகமனிதன் செய்த தியாகமாக கருதி கடந்துவிட முடியாது.

மட்டுமின்றி இதில் நிகழும் மிருகங்கள் மீதான சீண்டலே இதை பண்பாடு எனும் சமாச்சாரத்திலிருந்து தள்ளி வைப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்ததை இங்கே நினைவுப்படுத்துகிறேன்.

#####
திசை8 - ஜல்லிக்கட்டு பெண்கள் மீதான அடக்குமுறை & சாதியத்தை ஆதரிக்கிறதா?

ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தில் அதன் ஆதிமூலக் காரணமாக சொல்லப்படுவதில் ஒன்று தமிழக ஆயர் யாதவ சமூகத்தினர் இதை ஒரு சுயம்வர நிகழ்ச்சியாக(போட்டியென்பது இங்கே ஒப்பான வார்த்தை பிரயோகம்) நடத்தியது.
இங்கேயே இது ஒட்டுமொத்த தமிழர்களின் கலாச்சாரம் தானா, அல்லது குறிப்பிட்ட சாதியினரின் வாழ்வியல் நிகழ்ச்சியாயெனும் சந்தேகம் எழுகிறது.
இவ்விடத்தில் தான் குறிப்பிட்ட சாதியின ஜனத்தின் ஒரு சமூக வாழ்வியல் சம்பவம் ஒட்டுமொத்த தமிழர் கலாச்சாரமாக திரிக்கப்பட்டிருக்கவும், கைமாறியிருக்கவும், பகிரப்பட்டிருக்கவும், உரிமை கொண்டாடவும் பட்டிருக்க வேண்டும்.
இவ்வொக்குழு நிகழ்ச்சியே மொழிவாரி பொதுத் தகுதியின் கீழ், ஐந்திணைகளில் ஒன்றாய் பகுக்கப்பட்டு முழு தமிழரின் சொத்தாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கவும் வேண்டும்.

திருமணத்திற்கு ஆணுக்கான தகுதி வீரமாக மட்டுமே பார்க்கப்பட்டிருந்த காலம்.
ஆணும் பெண்ணும் இணைய அது மட்டுமே போதுமானதாக கருதப்பட்டிருக்கிறது.
பெற்றோர் எண்ணங்களை தவிர்த்து பெண்களுக்கும் அப்போது அதில் பெரிய உடன்பாடு இருந்திருக்க வாய்ப்புகளில்லை.
போட்டியின் முதல் நாள் பெண்கள் கும்மி பாடி போட்டியாளர்களை ஊக்குவித்ததாக சொல்வது பெண்களிடம் நிகழ்ந்த திணித்தல், அறியாமை, மரபு காரணமாக நடந்த நிகழ்வாக இருந்திருக்க வேண்டுமென்பது கணிப்பு.
நிற்க, ஒரு பெண்ணை அடைய பல ஆண்கள் போட்டியிடுவதும் அதில் உடல் வலிமையுடையவன் வெல்வதுமாய் இதை அக்காலத்தில் ஆதரித்ததென்பது மிருகத்தனத்தின் எச்சம். (ஐந்தறிவு நாய்களும் நரிகளும் புலிகளுமே அதை தான் செய்கின்றன)
"இந்த காரணத்தின்படி" இச்சம்பவத்தை வீரத்தின் வெளிப்பாடென மார்தட்டுவது கேவலம்.
இங்கு பெண்மை போட்டியில் வென்றாருக்கு ஒரு பரிசுப் பொருளாக மட்டுமே கருதப்பட்டிருக்கிறது.
வெற்றிப்பெற்ற ஆண் அவளை எப்படி கருதினான் என்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்தது.
மொத்தத்தில் இச்சம்பவத்தால்
மனதளவில் தன் துணையை தேர்ந்தெடுக்க வாய்ப்பற்றவளாய் இருந்திருக்கிறாள் பெண்.
(ஜல்லிக்கட்டு அன்றியும் அப்போது இதே நிலவரம் தானெனினும் இதுவும் ஒரு காரணியாக இருந்திருப்பதை மறுக்க முடியாது)
ஆயர்களின் வாழ்வியலில் மாடுகள் ஒன்றாய் ஒன்றிவிட்ட தருணத்தில், தன் நண்பனாகிய அவைவழி தன் கனவனை தேர்ந்தெடுக்கிறாள் பெண் எனும் வாதமெல்லாம் சமாளிப்புகள்.

திருமணத்திற்கான சுயம்வரம் என்றுவிட்ட போதிலே இதில் சாதியம் சர்வ நிச்சயமாக தலை தூக்கிவிடுகிறது.
தொண்மை தமிழர் வாழ்வியலில் சாதியமென்ற பெயரில்லையே தவிர அது நிலம் தொழில் என்ற வகை குழுக்களால் அறியப்பட்டே வந்திருக்கிறது.
இங்கு பரிசுப் பொருளை அடைய அதாவது இப்பெண்களை திருமணம் செய்து பெற விரும்புவோர், அக்குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக மட்டுமே இருந்திருக்கவும் அவர்கள் மட்டுமே காளைகளை பிடிக்க அனுமதிக்கவும் பட்டிருக்க வேண்டும்.
பிற்காலத்தில் மூலக்காரணமான சுயம்வர நிகழ்வு காணாமல் போய் இது ஒரு விளையாட்டாக மட்டுமே பார்க்கப்பட சாதியம் பிணைந்து மாடுபிடி கலாச்சாரம் மட்டும் எஞ்சியிருக்கிறது.

இவ்வகையிலல்லாமல் இப்போது கூட சில ஊர்களில் குறிப்பிட்ட சாதியினர் குறிபிட்ட மாடுகளை பிடிப்பதில் சில பிரச்சனைகள் இருப்பதாக அறிகிறோம்.
முன்பே சொன்னது போல காளைகள் குடும்ப உறுப்பினராக கருதப்பட்டுவிட்ட பின்,
அவைகளை அதே சாதியை சார்ந்தோர் அடக்குவதென்பது குடும்பத்தினருக்குள் சண்டையிடுவது அல்லது எதிர் நிற்பது மாதிரியானது.
சிலவற்றில் பங்காளிகள் தவிர்த்து மாமன்-மச்சான் உறவுகள் போட்டியிடலாம் என்ற விதிமுறை உண்டு.


மற்றும் இந்த சுயம்வர காரணத்தை கலாச்சார மூலமாக முன்னிருத்தி ஜல்லிக்கட்டை ஆதரிப்போர், திருமணத்தையும் இவ்வகையிலேயே செய்தல் மட்டுமே உண்மையாக கலாச்சாரத்தை பின்பற்றுவதாக அர்த்தமாகும்.
அப்படி திருமணம் செய்தல் சமகால வாழ்விற்கு ஏற்படுடையதல்ல என்போர் அதே வகையில் ஜல்லிக்கட்டும் சமகாலத்திற்கு ஏற்பற்றதே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

#####
திசை9 - திட்டமிட்டு நாட்டுவகையல்லா கலப்பின மாடுகளை குடியேற்றல்.

இந்த அரசியலானாது பத்து பதினைந்து வருடங்களாகவே வீரியமுடன் நடந்து வருவதாக அறிகிறேன்.
சந்தைமயமாதல், MNC தலையீடு, ஜனத்தொகைப் பெருக்கம், சாமாணியனின் பேராசை இவையனைத்தும் சேர்ந்தே இந்த கலப்பின பசுக்களை நேரடியாக இங்கே அனுமதித்துள்ளது.
கலப்பின பசுக்களை இந்தளவு எதிர்க்கும் நாம், அதற்கு முதற்மூலமான கலப்பின பயிர்களையும் செயற்கை உர வேளாண்மையையும் எதிர்க்கவில்லை.
மாறாக நேரடியாகவே அதை ஆதரிக்கிறோம்.
எதிர்க்கிறோம் என்றாலும் அதன் வீரியம் இந்தளவானதாக இல்லை.
கலப்பின பசுக்களால் நாட்டு வகை மாடு அழிவதாக உணரும் நம் இந்த விழிப்புணர்வு, பயிர்களிடத்தில் எப்போதோ வந்திருக்க வேண்டும்.
அது அழிவு நோக்கிய மெதுவான ஒரு நகர்வு என்பதாலோ, கடைசி நேரத்தில் உரிமைக்குரல் எழுப்பிக் கொள்ளலாம் என்பதாலோ, பீட்டா போன்ற சர்வதேச இயக்கங்கள் இன்னும் அதை கையிலெடுக்கவில்லை என்பதாலோ அதை தள்ளிப்போடுகிறோமோ என்னவோ!
(ஐயா நம்மாழ்வார் அவர்களின் இது மீதான பார்வை வேறோரு பரிணாமத்தை சார்ந்தது அதை தனியே பார்க்கலாம்)
நிற்க, இந்த நாட்டு மாடின அழித்தொழிப்பானது ஜல்லிக்கட்டை முடக்குவதால் வலுப்பெற்றுவிடப் போவதில்லை.
எதிர்விணையானது எதிர்பார்ப்புக்கு மாறாக இதன்பின்னரே நாட்டு மாடின பாதுகாப்பும் இனவிருத்தியும் பெருகுமென கருதுகிறேன்.
காரணம் தற்போது மக்களிடையே (இங்கே மக்களென்பவர் விவசாயிகள்) ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு.
தமிழகத்தின் வெகுசில இடங்களில் மட்டுமே நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு தற்போது அறிமுகம் கூட இல்லாத நூற்றுக்கணக்கான ஊர்களிலும் கர்வத்துடன் நடத்தப்படுவதே இதற்கு சான்று.
(அதிலும் முழு விழிப்புணர்வன்றி சில இடங்களில் இவ்வாண்டு நடத்த முற்பட்டு ஜல்லிக்கட்டிற்கு பழக்கப்படுத்தப்படா சில ஏருழு காளைகளை கடுமையாக வதைக்கப்பட்டது குறிப்பிடதக்கது)

#####
திசை10 - பீட்டாவின் கருத்தியல் பிழைகள் என்னென்ன!?

விலங்கின ஆர்வலர் வட்டாரமாக தங்களை முன்னிருத்திக்கொள்ளும் பீட்டா ஜல்லிக்கட்டிற்கு "மட்டும்" தலை தூக்குவதும் குறிப்பாய் தமிழருக்கெதிராய் எழுவதுமே இங்கு பலரை பெருங்கோபமடைய வைத்திருக்கிறது.
திமிலேறி சறுக்கும் காளை விளையாட்டை, வண்டியோட்டமான ரேக்ளாவை தடை கோரிய இயக்கம், முதுகிலேறி கோர்ஸில் பறக்கும் குதிரை பந்தயங்களுக்கு தடை கோரவில்லை.
சிட்டுக்குருவிகள் தொலைந்து போக காரணமாயிருக்கும் செல்ஃபோன் டவர்களுக்கு தடை கோரவில்லை.
நகரமயமாக்கல் பெயரில் காடுகளை சுரண்டி மிருகங்களை உணவிற்கு அல்லாட வைப்பதை எண்ணி கவலையுறவில்லை.
உணவிற்காக மட்டுமே வளர்க்கப்படும் பிராய்லர்களை பற்றியும்
உலகலாவிய மாட்டிறைச்சி ஏற்றுமதி பற்றியும் வாயையே திறக்கவில்லை.
மாறாக ஐவகை காளை பெயர் கூட அறியாத இந்த அயல் கும்பல்
தெருநாய்களை தத்தெடுப்பது போன்ற மழலை கோமாளித்தனங்களாலும், ஜல்லிக்கட்டு, சாவ சண்டை, கத்திக்கட்டு, நரிக்கட்டு போன்ற சாமாணியன் உணர்வுகளை சீண்டிப் பார்ப்பதாலும் ஜனத்தை கோபமடைய செய்திருக்கிறது.
இவர்களில் மிகப் பெரும்பாண்மைக்கு ஜல்லிக்கட்டு மீதான அடிப்படை அறிவு கூட இல்லையென்பது கூடுதல் விஷயம்.
இதன் முன் எங்கிருந்ததென்றே அறியப்படா ஒரு இயக்கம்
இப்பிரச்சனையை இத்தனை வீரியத்துடன் கையிலெடுத்து செயல்படுவதே
அவற்றை ஒரு கார்ப்ரேட் மாஃபியாவாக தெரிய வைத்திருக்கிறது.

முன்பே சொன்னது போல் அந்த காழ்ப்பும் கோபமும் ஈகோவும் அதிகமடைய இந்த கருத்தியல் மீறலும் மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

இவற்றின் நோக்கமறிந்து உடன் செல்லும் இந்தியர் & தமிழர் மீதான கோபத்திற்கு மேல்,
காரணமறியாமல் குருடாக உடன் செயல்படும் தமிழர் & இந்தியர் மேல் பரிதாபமே எஞ்சுகிறது.

####
திசை11 - இந்தியளவில் எங்கே ஜல்லிக்கட்டு ஆதரிக்கப்பட்டிருக்கும்!?

மொழி - இனம் - மதம்

மத்தியில் ஆளும் தலைவர் அல்லது அதற்கு இனையான வேறு சில பதவிகளில் உள்ளோர் தமிழராக இருந்திருப்பின் இது சுலபத்தில் சாத்தியப்படும் ஒரு விஷயமாக அமைந்திருக்கும்.
அன்றி,
ஜல்லிக்கட்டு ஒரு மொழிசார் இனக்குழுவின் அடையாளமாக கலாச்சாரமாக ஆகிவிட்ட பொழுதில் இதற்கான உரிமைக்குரல் இந்த பிராந்தியத்தினிடையே மட்டுமே ஒலித்துக்கொண்டிருப்பதாய் இருக்கிறது.
இது எப்படியெல்லாம் ஒரு சூழ்நிலையில் நாடு ஆதரிக்கப்பட்டிருக்குமென கணிக்க மதம் முட்டி முன்னிற்கிறது.
ராமன் வில்லை வலைத்ததற்கு பதில் காளையை அடக்கி சீதையை மணந்திருந்தாலோ,
குதிரைகளுக்கு பதில் மாடுகள் பூட்டிய வண்டியை கண்ணன் செலுத்தியிருந்தாலோ நிச்சயம் இந்தியா முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரிக்கப்பட்டிருக்கும்.
தமிழர் கலையன்றி திராவிடர் (சாத்தியமற்ற போதும் ஒரு கற்பனை) கலையாக அறியப்பட்டிருந்தால் உரிமைக்குரல் குறைந்தபட்சம் தென்திசை நிறைந்தாவது எழும்பியிருக்கும்.
ஆனால் அவையாவுமின்றி இருப்பதே இக்கலாச்சாரத்தின் மிக முக்கிய சிறப்பாகவும் கருதுகிறேன் மற்றும் கிட்டதட்ட தமிழரின் வாழ்வியல் முறை பலவற்றையும் களவாண்ட இந்து மதமானது ஜல்லிக்கட்டு ஏருதழுவுதல் சாவ சண்டைகள் போன்றவற்றை விட்டு வைத்ததும் ஆச்சர்யப்பட வைக்கும் ஒன்றே!

###
திசை12 - இளைஞர்கள் இப்பிரச்சனையை எப்படி அணுகுகிறார்கள்.!?

மகிழ்ச்சியான விஷயம் இளைஞர்களிடையே இது குறித்து எழுந்திருக்கும் எழுச்சி & விழிப்பு.
#பாராட்டு.
இந்தி எதிர்ப்பு, 2010 தமிழீழ கிளர்ச்சிக்கு பிறகு எழுந்த மிகப்பெரிய மாணவர் & இளைஞர் புரட்சியெனினும் இதை அவைகளோடு நிறைந்து ஒப்பிட சில தயக்கங்கள் இருந்தன.
ஆரம்பத்தில் இங்கே கூடியவர்கள் பலருடைய நோக்கம் தேவை ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதாக இருப்பினும், அதன் வழி இவர் எதிர்பார்ப்பு பீட்டாவை தடை செய்ய வேண்டுமென்பதா, உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென்பதா, ஜல்லிக்கட்டு குறித்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டுமென்பதா அல்லது துணை கோரி தமிழக அரசை வலியுறுத்துகிறோமா என்ற குழப்ப மனநிலையிலேயே பலர் இருப்பதையும் காண முடிந்தது.
அவை ஓரிரு தினங்களிலேயே மாறி தற்போது விசாலமான ஒரு பார்வையுடன் இளைஞர்கள் இதை அணுகி வருவதை காண்கிறோம்.
இதை தமிழீழ & இந்தி எதிர்ப்பு போராட்டங்களோடு ஒப்பிட காரணம் இவை மூன்றும் உணர்வு ரீதியாக தொடர்புப்படுத்தப்படுவது மட்டுமே.
தொடர்பு படுத்துதல் என்பதை விட, தமிழரெனும் உணர்வு வழி காட்சிப்படுத்தப்பட்ட, தூண்டிவிடப்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே நாம் பல காலமாய் கொதித்து போராடியிருக்கிறோம் என்பதே உண்மை.
நிற்க,
தாமாக தலைவனின்றி கூடிய இளைஞர்களை தவிர்த்து பார்க்க இன்ன பிறவை பலவும் அரசியல் கட்சிகள் தூண்டுதல்கள் பெயரில் நிகழ்த்தப்படுவதாகவும்
அல்லது சாமாணியப் போராட்டத்தை கட்சிகள் பங்கிட்டும் பயன்படுத்தியும் காட்சிப்படுத்திக் கொள்வதாகவும் அறிகிறேன்.
எல்லா அரசியல் கட்சிகளும் இதை ஆதரிப்பதும் முன்னின்று நடத்துவதும் ஆரோக்கியமான ஒரு சூழ்நிலையேயாயினும், அதே அரசியலுக்காக இப்பிரச்சனை வளக்கப்படுவதாகவும் ஒரு எண்ணம் உண்டு.
பல இடங்களில் இப்போராட்டம் அரசியல் ஆதாயப்போக்கின் மையத்தை ஏந்தியே நகர்வதை போராட்டக்காரர்கள் செயல்பாடுகள் வெளிப்படையாகவே காட்டிக்கொடுத்து விடுகின்றன.
மற்றும் பல ஆரம்பக்கால சாமாணிய சுயம்பு போராட்டங்களும் அரசியல் கட்சிகள் தலையீடால் கட்சி சாயம் ஏறி நீர்த்துப் போனதை நேரடியாகவே கண்டிருக்கிறேன்.
கொள்கைகள் கட்சிகளாகும் போது வலுவற்றேப் போகுமெனும் பெரும் நம்பிக்கை உடையவன்.
இதன்படி உரிமைக்கோரும் இளைஞர்கள் கட்சி சார்புகளில் சிக்குவது வருத்தமளிக்கிறது.
பெரும்பாண்மை இளைஞர்கள் பல இடங்களில் உணர்வு ரீதியாக அரசியல் கட்சிகள் சார்பிலும், சாதிய இயக்கங்கள் சார்பிலும் விஷமிகளால் தூண்டிவிடப்படுவதை காண்கிறேன்.
ஜல்லிக்கட்டெனும் உணர்வை ஏந்தி பல பொய் பிராமணிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் சாதிய பிரிவிணைகளை தூண்டுவதாய் ஆங்காங்கே உலவுகின்றன..

மற்றும் விவசாய ஆதரவின் போர்வையில் எழும் ஜல்லிக்கட்டு ஆதரவுக்குரலானது, மாடுகளை விட மிக முக்கிய & அதன் மூலமான விவசாயத்தை & விவசாயியை காக்க எங்கேயும் எழுவதாய் தெரியவில்லை.
இவ்விடத்தில் நாட்டு காளையினங்கள் அழியக்கூடாது என்பதற்காக மட்டுமே ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் அல்லது போராடும் நமக்கும், காளைகள் துண்புறுகிறதென கூறி அதை எதிர்க்கும் பீட்டா & ஆர்வலர் வட்டத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.
இருக்குழுவுமே ஒரே விலங்கின பாதுகாப்பெனும் ஆர்வலர் போர்வையில் சிறு வித்தியாசங்களுடன் வெவ்வேறு தளத்தில் இயங்குவதாகவே கருதுகிறேன்.
இங்கே தான் நம் போராட்டம் & தேவை எதை நோக்கியதாக இருக்க வேண்டுமெனும் வெளிப்படையான & தெளிவான பார்வை இருக்க வேண்டியது அவசியமாகிறது.

####
திசை13 - ஜல்லிக்கட்டு உண்மையாவே மாடுகள் மீதான வதைப்பு எனில் அரசும் ஆர்வலரும் இதை எப்படி அணுகியிருக்க வேண்டும்!?

முன்பே சொன்னது போல் இது ஒரு இனத்தவரின் கலாச்சாரமாக உரிமையாக பார்க்கப்படும் விஷயமாகி விட்ட பின்,
ஒரே நாளில் இதை தடுத்துவிடுவது என்பது நிச்சயம் புரட்சிக்கும் கலவரத்திற்கும் தூண்டும் ஒரு விஷயம் தான்.
காலாகாலமாக ஜல்லிக்கட்டு பல செயல்முறை மாற்றங்களை எதேர்ச்சையாகவும் திட்டமிட்டும் கடந்து தான் வந்திருக்கிறது என்பதால், சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளோடும் தளர்த்தப்பட்டு நடத்த அனுமதித்திருக்க வேண்டும்.
(ஏற்கனவே அப்படி அனுமதிக்கவே, வாடிவாசலில் காளைகள் மீது நடந்து சில வன்முறை சம்பவங்கள் வீடியோ ஆதரமாகவும் அது ஆர்வலர் வட்டத்திற்கு ஆதாயமாகவும் நீதிமன்றம் ஜல்லிக்கட்டை தடை செய்ததை நினைவு கோருகிறேன். சில வருடங்களாக ஜல்லிக்கட்டு கமர்ஷியலைஸ் ஆகிப் போனதின் விளைவே இது)
அதன் பின் மக்களிடையை சில பிரசங்கங்கள் மூலம் அதை கைவிடக்கோரி அணுகியிருக்கலாம்.
தமிழக மக்கள் அடங்கி செல்பவர்கள் என்பதாக எண்ணியதாலும்,
இவர் நோக்கம் உண்மையாகவே விலங்கின பாதுகாப்பு குறித்தது அல்ல என்பதாலும்,
இந்திய அரசியல் அமைப்பு அத்தனை தளர்வானதென்பதாலும் அதை செய்ய முடியாதென்ற நிலை இத்தனை அராஜகப் போக்கை கட்டவிழ்த்துவிடச் செய்திருக்கிறது. அதன்வழி
நீதிமன்றத்தின் இப்படியொரு நேரடி தடை மக்களை கொதித்தெழவும் செய்திருக்கிறது.
இதில் நிகழும் மத்தியரசின் அரசியல் போக்கும், மாநிலரசின் அலட்சியப் போக்கும் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

####
திசை14 - ஜல்லிக்கட்டு நமக்கு நிச்சயம் அவசியம் தானா!?

ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு என் கலாச்சாரம் அது எனக்கு தேவை என்பதாய் எழுந்த குரல்கள் தற்போது,
என் உரிமை எனும் குரலில் எழுவது கவனிக்க வேண்டியது.
தற்செயலாகவோ மறைமுக தூண்டுதல் பெயரிலோ இந்த உரிமையெனும் விஷயம் பரிணமித்திருக்கிறது.
இது ஏதோ போன வாரம் தொடங்கி இன்று நிகழ்ந்து விட்டதாய் அல்லாமல்,
முல்லைப்பெரியாறு, காவிரி நதிநீர் பிரச்சனைகளில் தொடங்கி தமிழர் மீதான பிற மாநிலரசு & மக்களின் காழ்ப்பு, மத்தியரசின் அலட்சியமென பல கால பிற கோபங்களின் வெளிப்பாடாகவே நிமிர்ந்து நிற்கிறது.
இதில் பிரதான விஷயமாகியிருக்கும் அந்த ஈகோ தமிழர், கலாச்சாரம், தேவையெனும் விஷயங்களை தாண்டி சுற்றம் சமூகம் சார்ந்த விசால கோபமாகியிருக்கிறது.
இந்த கோபம் மேற்கண்ட அத்தனை விளக்கங்களையும் உடைத்து ஜல்லிக்கட்டு மீதான அவசிய வேண்டுகோளை புரட்சியாக வெடிக்க செய்திருக்கிறது.
இக்கட்டுரையை எழுதத் தொடங்கியதற்கு முன்னிருந்த ஜல்லிக்கட்டு மீதான என் பார்வை எழுதி முடித்த பின் பல மாற்றங்களை அடைந்திருப்பதை உணர முடிந்தது.
ஜல்லிக்கட்டை பல்வேறு பார்வைகளில் நோக்கியதன் காரணமாய் விழுந்ததே இது.
பல கருத்து முரண்பாடுகள் இருக்கலாம்.
என் தனிநோக்கில் கலாச்சார உணர்வு பின்னணிகளுக்காக மட்டுமன்றியும்,
வஞ்சமிழைக்கும் சக இந்தியர் & MNC கொலையாட்களுடனான ஈகோ யுத்தத்தில் நாம் வெற்றியடைந்திட வேண்டும் என்பதற்காகவாவது

ஜல்லிக்கட்டின் தடைகள் உடைத்திட இப்போராட்டம் வலுப்பெற வேண்டுமென எண்ணுகிறேன்.
கைக்கோர்ப்போம் - போராடுவோம்
#JusticeForJallikkattu

posted from Bloggeroid

Sunday, January 15, 2017

62Aல் பயணம் செய்யும் போது செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்ன??!

கி.மு 33ம் நூற்றாண்டிலேயே முதன்முதலில் ஐபாட் பயன்படுத்தியவன் தமிழன் தான் என்பதும் அதற்கான குறிப்புகள் அகநாநூறு குண்டலகேசி தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டிருப்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!? என்பது மாதிரியான அறிய தகவல்களை ஃபேஸ்புக்கில் படித்து தமிழ் வரலாற்றறிவை வளர்த்துக்கொள்ள முடியாது.

ஃபேஸ்புக்கில் படித்த அந்த அறிய செய்தியை இருக்கும் ரெண்டு லட்சத்து முப்பத்திநாளாயிரம் வாட்சப் குரூப்பிலும் ஃபார்வேடு செய்து களிப்படைய முடியாது.
விடியவிடிய வாட்சப்பில் கேட்டியாக்கா சேதிய என்பது மாதிரி பைசா பிரயோஜனமில்லாத விஷயத்தை புறம் பேசி நேரம் போக்க முடியாது.
நுங்கம்பாக்கம் கொலை கேஸையும், தமிழக முதல்வர் மர்ம மரணத்தையும் இன்வஸ்டிகேட் செய்து ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்து உலாவ விட்டு மொத்த நாட்டையும் யார்ர்ரா இந்த இணைய ஜேம்ஸ் பாண்டென ஆச்சர்யப்பட வைக்க முடியாது.

அரிஸ்டாடில் அலக்ஸான்டர் மாதிரி
கண்ணு தெரியாதவங்களுக்கு ரோடு க்ராஸ் பண்ணி விடுங்க,
காது கேக்காதவங்களுக்கு வாக்மேன் வாங்கி கொடுங்க, முதியோர் இல்லத்துக்கு போய் வயசானவங்களுக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுங்க என்பது மாதிரியான உயரிய தத்துவங்களையெல்லாம் ட்விட்டரில் சொல்லி வழி தவறி போகும் இளைஞர்களை திருத்தி நல்வழிப்படுத்த முடியாது.
கொடிகாத்த குமரன், வஉசி, மா.பொ.சியெல்லாம் கூட செய்திடாத
நதிநீர் பிரச்சனை, மீத்தேன் எடுப்பு, ஜல்லிக்கட்டு புரட்சியெல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்து சின்ன பகவதி மாதிரி சின்ன சேகுவாரா ஆக முடியாது.

கதை சொல்லுறேன் பேர்வழியில் கண்டதை ப்ளாகில் கிறுக்கி,
ஒருவர் விடாமல் தனிச்சாட்டில் லிங்க் கொடுத்து அனைவரையும் படிக்க சொல்லி டார்ச்சர் செய்ய முடியாது.

தலையை சாய்த்த மாதிரி ஒரு 674 செல்ஃபி எடுத்து, அதில் ஒரளவு சுமாரான ரெண்டை மட்டும் ஃபில்ட்டர் செய்து இன்ஸ்ட்டாவில் போட்டு லைக் வாங்க முடியாது.
அதே இன்ஸ்ட்டாவில் உங்கள் ஸ்ரீலங்கன் க்ரஷின் புது ஃபோட்டோக்கு இன்னிக்கு இந்த ட்ரெஸ்ல நீ
சூப்பராயிருக்கனு கமாண்ட் பண்ணி பச்சையா ஃப்லிர்ட் பண்ண முடியாது.

உறுமும் வேங்க ஒரு மான் முட்டி தோத்தேனடி........ உங்களோட இந்த ஃபேரிட் பாட்ட நீங்க நினைக்கிறப்போ கேக்க முடியாது.
டிவில எஃப்எம்ல எப்போ போடுவான்னு ஒவ்வொரு சேனலையா பொழுது முழுக்க மாற்றிக் கொண்கொண்டேயிருப்பீர்கள்.

ஜிமேப்பில் வழி பார்த்து கொண்டே என்னால் மங்கோலியா காங்கோ நைஜீரியா வடகொரியா போன்ற உலகநாடுகளில் தெரியாத முகவரிக்கும் கூட நடந்தே சென்றடைந்துவிட முடியுமென்ற அதீத சூப்பர் பவருடைய நீங்கள்,
பக்கத்திலிருக்கும் கே.கே.நகரின் மேக்ஸ் ஷோரூமிற்கு வழி தெரியாமல் எங்கேயிருக்கென  ஆட்டோக்காரர் ஒருவரிடம் கேட்க போக,
தம்பி... இப்டியே நேரா போய் ஃபஸ்ட் ரைட் எடு அப்பரம் அங்கிருந்து ரெண்டாவது லெஃப்ட்ல ஒரு பிள்ளையார் கோவில் வரும், அங்க பகவான் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வெளிய வந்து ரைட் எடுத்தன்னா.......வென்று சுத்தலில் விட, நேரா நடந்திருந்தா இந்நேரம் நான் சிக்கிம் மிசோரம்க்கே போயிருப்பேனேடாவெனுமளவு நடந்திருப்பீர்கள்.

ராஜஸ்தானில் வசிக்கும் பள்ளி தோழிக்கு வீக்எண்டானால் வி.சாட் செய்து பேச முடியாது.
பிடிஎஃப் படிக்க முடியாது.
ஹாட்ஸ்டாரில் காதல்முதல் கல்யாணம் வரை பாக்க முடியாது.
அவசரத்துக்கு ஒரு மெய்ல் கூட செய்ய முடியாது.

புக்ஃபேருக்கு கம்பெனிக்கு ஆளில்லாமல் அநாதையாக தனியாய் போய் 700 ஸ்டாலையும் சுற்றி வர வேண்டிய நிலை வரும்.
ஓடாத சீலிங் ஃபேனை நடுஹாலில் படுத்துக்கொண்டு வெறிக்க வெறிக்க வேடிக்க பார்க்குமளவு நேரமிருக்கும்.
அந்த நேரத்தை கழிக்க சன் டிவியின் வம்சம் சீரியல் பார்க்க வேண்டிய நிலை கூட வரும்.

அகிலவுலக நாட்டாமை விஜயகுமாரும் சரத்குமாரும் சேர்ந்து, இந்த பயளோட நாட்டுல யாரும் அன்னந்தண்ணி பொழங்க கூடாதுடாயென தீர்ப்பு வழங்க, பூமியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு,
நெப்ட்யூன் யுரேனஸ் கிரகங்களில் குடியேறி தனியாளாய் உருளை பயரிடும் மார்ட்டினை போல் தனக்குள் உணர்வீர்கள்.

இவையெல்லாம் நிகழுமென முன் கூட்டியே அறிந்திருந்தால் அந்த 62ஏவில் ஏறும்போது மொபைலை எங்கே வைத்தோம் அல்லது வைத்திருக்கிறோமா என்ற சிந்தனை இருந்திருக்கும்.
விழிப்பின்றி மொபைலை தொலைத்திருக்கவும் மாட்டீர்கள்.

இனி அம்பத்தூரிலிருந்து ஆவடி செல்லும் எந்த பேருந்தில் ஏறும் போதும் கைபேசியை எங்கேனும் தொலைத்துவிடாமல்
கல்யாணமான புது பொண்டாட்டியை பசார் தெருவில் புது சுடிதார் வாங்க அழைத்து செல்பவனை போல அணைத்தவாறே பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

ஃப்ரீ அட்வைஸ்..... கேட்டா கேளுங்க....

-நெப்ட்யூனில் 20நாட்கள் தங்கியிருந்து பொங்கலன்று இந்தியா வந்திறங்கிய வயசு பையன் ராஜி

posted from Bloggeroid