Tuesday, November 15, 2016

சூலி

தினசரி காலை என்னை எழுப்ப அவள் தரும் பெட்கிஸ்ஸுக்காக
முன்கூட்டியே விழித்திருந்தாலும்
தூங்குவதை போல் பல நிமிடங்கள் மயங்கி நடித்திருக்கிறேன்.
ஆதாமிற்கு ஆப்பிள் ஊட்டியே அதே இதழ் தீண்டல்.
நான் நடிப்பதையறிந்தும் அறியாதவளை போல் பலமுறை
தலைவருடி முத்தமிட்டு எழுந்திருடா நேரமாச்சுயென செல்லமாய் மிரட்டியிருக்கிறாள்.

அப்படியொரு விளையாட்டிற்கான காத்திருப்பில் தான் ஒருமுறை
மூச்சுக்காற்று உணரயென் அருகே வந்தவள்,
திடீரென சத்தமாய் சிரித்தபடி ந்ந்நடிக்க்க்க்காதடா எனக்கு தெரியும் எழுந்திரு என்றபடி காதை கிள்ளி விலகியோடினாள்.
வலித்திருக்கவில்லை.
இருப்பினும் ஒரு குட்டி பழிவாங்களுக்காக தலையணையால் அறைந்தபடி பொய்க்கோப வேடமிட்டு  நில்லென விரட்டினேன்.

டைனிங்டேபிளை சுற்றி கபடியாடியும்,
சோஃபாவில் ஏறி கீழே விழுந்தும்,
ஓரமாய் இருந்த ஹெல்மட்டை என் மீது வீசியும்,
ஃப்ரிட்ஜுக்கு பின் பதுங்கியும்,
எதேர்ச்சையாய் என் கைகளில் சிக்கிய சேலை முந்தாணையை வலுக்கட்டாயமாய் வெடுக்கென பிடுங்கியும்
தப்பியோட முயற்சித்தவளை
இனியும் வழியில்லையென சமையலறையில் தான் மடக்கி பிடிக்க முடிந்தது.

மாட்டுனியா!? இப்போ எங்கடி ஓடுவ?? எங்க.... ஓடு பாக்கலாமென நெருங்க,
ஏய்.... கிட்ட வராதடா.... கொன்றுவேன் உன்னயென தோசைக் கரண்டியை நீட்டி மிரட்டியபடி புன்னகைச் சிணுங்கள் மறவாமல் அடியடியாய் பின்னே நகர்ந்தாள்.
இதற்கு மேல் அசைய காலிஞ்ச் இடமில்லையெனும் தருணம்,
சமையற்கட்டு மேடையவளை முதுகு முட்டி மேலே ஏற்றி அமர்த்தியது.
இரு பக்க சுவர்களிலும் கையணைக்க
இடையில் சிக்கியவளுக்கினி அங்குமிங்கும் திரும்ப கூட வாய்ப்புகளில்லை.

இருவருக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியில் ஒரு காகிதம் மட்டும் வேண்டுமானால் நுழைந்து மறுபக்கம் வெளியே வரலாம்!
ஓகே ஓகே ஓகே..... ஒரு டீல் வெச்சுக்கலாம் என்ன சொல்ற.?? என சரண்டர் ஆனவளின் குரலின் சத்தம் வழக்கத்தை விட பல ஹெட்ஸ் கம்மியாகி ஒலித்தது.

என்னடி கிட்ட வந்ததும் வால்யூம் குறைஞ்சுட்டு??? வாய்க்குள்ள ஹஸ்கில பேசிக்கிற? ஹாஹா
சரி உனக்கு ஒரு வாய்ப்பு தரேன், என்ன இம்ப்ரஸ் பண்ணுற மாதிரி எதாவது டீல் வெச்சுருந்தா சொல்லு??யென குழைந்தேன்.

அலைஐஐஐஐஐஐயாதடா என முகத்தை சுறுக்கி சின்னதாய் தலையையாட்டி நுனிநாக்கை மெலிதாய் கடித்தபடி நக்கலடித்தாள்.
சோ சிம்பிள்... நீ என்ன இப்போ விட்டனாஆஆஆஆ........ உனக்கு நான் ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லுவேன்?
டீலா நோ டீலா??

இந்த கேள்வியே கொஞ்சம் மகிழ் போதையூட்டி மயங்கிவிழச் செய்வதாய் தான் இருந்தது.
இமை சிமிட்டாமல் சில நொடிகள் சிலையாகியிருந்தேன்.
அவள் சொல்ல வருவதை என்னால் முழுவதுமாகவே கணிக்க முடிந்திருந்தது.
கணிப்பை தவறாக்கி விடாமல்
அவளும் அதையே சொல்லிவிட வேண்டுமென்று மனதிற்குள் பிராத்தித்துக் கொண்டு,

டீல் டீல்....... சொல்லு சொல்லு சொல்லு....

டேட் தள்ளி போயிருந்துச்சுனு நானும் அத்தையும்...............நேத்து ஹாஸ்பிடல் போயிருந்தோம்.!
ரிஸல்ல்லல்ட்......................என இழுத்தவள் காதின் ஓரமாய்
பாஸிட்டிவ் என்பதை மட்டும் ரகசியமாய் கூசிப் புன்னகைத்தாள்.

இன்றைய பொழுது இனிதே விடிந்தது,
காலை டிஃபனுக்கு இட்லியென்பது மாதிரி சில சமாச்சாரங்களை சட்டென சுலபமாய் கேட்டதும் சொல்லி விட முடிகிறது.
கயல் கண்கள், சிப்பாய் விரல்கள், மிட்டாய் இதழ்கள் என சில விஷயங்களை ரசிக்கும்படியாய் விளக்க எளிதாய் பல  உவமைகளும் கிடைத்து விடுகிறது.
ஆனால் சில சம்பவங்களை சிறப்பானதாக சித்தரிக்க மட்டும் எத்தனை தேடியும்
மெச்சிடும் வர்ணனை வாக்கியங்கள் கிடைப்பதேயில்லை.
அப்படியொரு திக்குமுக்காடும் திருப்தியற்ற வார்த்தை தேடலில்
நான் அப்பா ஆகப் போறேன் என சிம்ப்பிளாக தனக்குள் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்ள,

சுவரில் அணைத்திருந்த கரத்தை தட்டி விட்டு இறங்கியோடியவள் தூரத்தில் படுக்கயறை கதவின் பின் ஒளிந்து நின்றபடி,
ஆனந்த்... இன்னொரு விஷயம் சொல்லவா??? என்றாள்.

இதேதோ இலவச இணைப்பு எக்ஸ்ட்ரா சர்ப்ரைஸோவென எண்ணி என்ன என்னயென்றபடி ஆர்வத்தில் நெருங்க,

முதல்ல போய் பல்ல விலக்குடா...... ஊத்த வாயோட ரொமாண்ஸ் பண்ண வந்துட்டான்.......என்றவளை

ஏய் நில்லுடியென திரும்ப வீடு முழுவதும் விரட்டியது ஞாபகம் இருக்கிறது.

எனக்கும் மகாவுக்கும் இடையேயான இந்த இரண்டு வருட இல்லற வாழ்க்கையோடு சேர்த்து 16வருட காதல் காலமும் ரியாலிட்டிக்கு கொஞ்சமும் தொடர்பின்றி
நானே பொறாமைப் பட்டுக்கொள்ளுமளவிற்கு முழுக்க முழுக்க சினிமாத்தனமாகவே தான் இருந்திருக்கிறது.
திருமணமான தினத்திலிருந்து அவளை விட்டு ஓரிரவும் விலகியதில்லை!

இத்தனை காலத்தில் மகாவை பிரிந்து இந்த மூன்று மாதம் மட்டும் நொய்டாவில் தனிமை.
இது அவளது நிறை மாதம்.
கருவில் இருக்கும் என் மகளை உணர வாங்கி வைத்த அந்த நாடிமாணியை
நான் காதில் வைத்து ஒரு முறை கூட பயன்படுத்தியிருக்கவில்லை!

தினசரி வீடியோச்சாட்டில் நான் டேப்லட் ஸ்க்ரீனை காதலோடு வருடியதையெல்லாம்
அவள் அடிவயிறு உணர்ந்திருக்க வாய்ப்புகளில்லை.
இந்த மூன்று மாதங்களாய் அலைபேசியும், முத்தத்தின் ஈரம் உலர்த்தி சத்தத்தை மட்டுமே அவளுக்கும் பார் காண கருவில் காத்திருக்கும் என் மகளுக்கும் கடத்தி வந்தது.
பின்வரும் நாட்களில் எங்களுக்குள் செல்லச் சண்டைகள் சில ஏற்பட்டு மறைய இதுவொரு காரணியாக கூட இருக்கலாம்.
வரியில் விவரிக்க வேண்டுமெனில் என் குழந்தை பதின்ம வயதை தாண்டிருந்த பின்னும் கூட,
நீ என் வயித்துல இருந்தப்போ நான் அவ்வளோ கஷ்டப்பட்டப்போ ஒரு ஹெல்ப்புக்கு கூட உங்கப்பா என் கூட இல்லடா, மூனு மாசம் எங்கேயோ வெளியூரு போயிட்டாரு என குற்றம்சாட்டி கூண்டில் நிறுத்த சிறந்ததொரு வாய்ப்பை தருணத்தை அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன்.

இன்று நான் வீட்டுக்கு வந்திருப்பது அவளுக்கு தெரியாது.
ஒரு சர்ப்ரைஸ் விசிட்.
85நாட்களுக்கு பிறகு என்னை காண்பவள் ரியாக்ஷன் என்னென்னவாயிருக்குமெனும் கற்பனைகளோடு செருப்புகளை வாசலில் உதறி வீசியவாறு காலிங் பெல்லை அழுத்தினேன்.

கதவை திறந்தது மகா தான்.
கைகளில் பைகளும் கண்களில் காதலுமாய் சர்ப்ரைஸ்ஸ்ஸ் என புன்னகைக்க,
மேலும் கீழுமாயொரு முறை நோக்கியவள்
ஏதும் பார்க்காதவள் போல் டக்வாக்கில் போய் அமைதியாய் அமர்ந்தாள்.
காதலுமில்லை, கோபமுமில்லை, சந்தோஷமுமில்லை, சங்கடமுமில்லை.
எந்த பாவமுமில்லா ஒரு நியூட்ரல் ரியாக்ஷன் அது.

ஏய்!! என்னடி புருஷன் வந்துருக்கேன் இத்தன நாள் கழிச்சு..! கடங்காரன பாத்தவள போல மூஞ்ச திருப்பிட்டு போற!?

சர்ப்ரைஸ்ஸ் என்றபடி முதுகுக்கு பின் குதித்தாள் அனு!

உஸ்ஸ்ஸ்.... நான் வரேன்ங்கறத உன்கிட்ட மட்டும் தான் சொல்லியிருந்தேன்.
நீ வந்து இங்க போட்டு கொடுத்துட்டியா??

மாசமாயிருக்குற பொண்டாட்டி அவள வீட்டுல விட்டுட்டு நொய்டால என்ன பாணிப்பூரி விக்கவாடா போன?
அவ சம்ம கோவத்துல இருக்கா.... நீயாச்சு அவளாச்சுயென கோர்த்து விட்டாள் அனு.

அனுபமா நான் மகா மூவருமே பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்கள்.
மூவரையும் எங்கள் அண்டை வீட்டாரும் சொந்தக்காரர்களும் பள்ளி கல்லூரி ஏனையவர்களும் சிறு வயதிலிருந்து ஒருசேர பார்த்தே தான் பழகியிருந்திருந்தார்கள்.
இன்னும் சொல்லப் போனால் எங்கள் காதலுக்கு தூது போனவளும் அனு தான்.

எல்லாம் உனக்காகவும் என் குட்டி பொண்ணுக்காகவும் தான்டி,
அப்பா வேலைக்கு போய் சம்பாதிச்சா தானடா செல்லம் உன்ன நல்ல ஸ்கூல்ல சேத்து......நல்லா படிக்க வெச்சு......டாக்டராக்கி...... நீ எல்லாருக்கும் ஊசி போட்டு........என மகாவின் வயிற்றை நெருங்கினேன்.

ஹ்ம்ம்.... உனக்கு கொஞ்சவும் கொழயவும் தான் தெரியும்!! மத்தபடி எங்க மேல உனக்கென்ன அக்கர?
இந்த 15நாளா ஒரு ஃபோன் கால் இல்ல, மெசேஜ் இல்ல ஒன்னுமேயில்ல!

நானளிக்கும் சமாதானத்திற்காகவே அடிக்கடி என்னிடமவள் பிணங்குவதுண்டு!
தானே போய் சமாதானம் செய்வதற்காகவே நானும் பலமுறை அவளிடம் சண்டை பிடித்ததுண்டு.

வேலைல கொஞ்சம் பிஸிடி...
உன் மெடிக்கல் ரிப்போட்ஸ்லாம் நான் மெயில்ல ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன்!

மெடிக்கல் ரிப்போட்ஸ் ஃபாலோ பண்ண டைம் இருக்கு!? ஒரு கால் பண்ண டைம் இல்லயா? சரி!!
என்னத்த ஃபாலோ பண்ண?? சொல்லுடா என்ன ஃபாலோ பண்ண?

கேக்குறால்ல...!! சொல்லுடாயென கண்ணை காட்டி அருகிலிருந்து ஏற்றிவிட்டாள் அனு.

இப்படியொரு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கப்போவதாய் முடிவு செய்ததுமேவே
முன்னொரு பத்து நாட்களுக்காவது தொடர்பில்லாமல் இருந்தால்,
இந்த சில நாள் பிரிவின் பின்னாலான திடீர் சந்திப்பில் அவள் பெரிதாய் திகைப்படைவாளென எண்ணியே திட்டமிட்டு அவளை தவிர்த்தேன்.
கோபமிருப்பினும் காதலந்த வெற்றிடத்தை நினைவுகளோடு நிரப்பியிருக்குமென நம்பினேன்.
அவளை பெரு களிப்பில் தள்ள நினைத்து நான் செய்யும் பல கோமாளித்தனங்களும் எனக்கே இப்படி ரிவர்ஸாவதும் உண்டு.
நான் தொடங்கியதை நானே தானே முடித்தாக வேண்டும்!

ஹ்ம்ம்....  BPய கண்ட்ரோல் பண்ண டெய்லி யோகா பண்ண சொன்னாங்களே பண்ணுறியா நீ?
வீக்லி வன்ஸ் தைராய்டு டெஸ்ட் எடுக்குற, லாஸ்ட்டா 3நாள் முன்ன எடுத்த டெஸ்ட்ல நார்மல்னு வந்துருக்கு.
டெய்லி காலைல இன்ஸுலின் எடுத்துக்கனும், ப்ரெக்னன்ஸி டயபிட்டிஸ் இருக்கு, போன வாரம் எடுத்த ஸ்கேன்ல பேபி வெயிட் 3.8 கேஜினு சொல்லிருக்காங்க.
ப்ரீ-எக்லாம்ப்ஸியா வேற!!
சோ, நார்மல் டெலிவரி கஷ்டம்னு இந்த வீக்ல சிசேரியனுக்கு டாக்டர் டேட் கேட்டுருக்காங்க.
நாளைய மறுநாள் காலைல பூசம் நட்சத்திரம்னு எங்கம்மா, அதான் உன் மாமியார் ஆப்ரேஷன அன்னிக்கே வெச்சுக்கலாம்னு டேட் சொல்லிருக்காங்க, நாளைக்கு ஈவ்னிங் விவேகானந்தா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகனும் அலாட்டட் ரூம் நம்பர் 11...
போதுமா?

இவ தான் இன்ஃபர்மேஷன்ஸ் பாஸ் பண்ணிருப்பா என,
டக்கென திரும்பி அனுவை முறைத்தபடி
என்ன சொன்னாலும் உன் கிட்ட நானும் என் பொண்ணும் ஒரு மாசத்துக்காவது பேசப் போறதில்ல போடாயென கடிந்தாள்.

அய்யோ நான் எதுவும் அவன்கிட்ட சொல்லலடியென தலையாட்டி பயந்தாற்போல் நடித்து,
டைம் ஆச்சு நான் கிளம்புறேன்ப்பா என ஜூட் விட முயற்சித்தாள் அனு.

இருடி அதுக்குள்ள கிளம்புற என நிறுத்தினேன்.
உடனடியாக புறப்படுவதற்கு சொல்ல அவளிடம் ஒரு காரணமிருந்திருந்தது.

நீ வரவனு தான்டா இவ்வளோ நேரம் வெய்ட் பண்ணேன், இல்லனா எப்போவோ கிளம்பியிருப்பேன்.
ஈவ்னிங் ப்ராஜக்ட் விஷயமா பேங்லூர் போக வேண்டியிருக்கு இப்போ போனா தான் கிளம்ப முடியுமென்றபடி கையசைத்து நகர்ந்தாள்.

வாசலிலிருந்த செருப்பை மாட்டி கதவை தாழிட்டு படியில் இறங்கி கீழ்த் தளம் செல்லும் வரை
ஆனந்த் மகாவின் சண்டைக்குரல்கள் காதில் கேட்டபடியேயிருந்தது.
அவர்கள் எப்போதுமே முட்டிக்கொள்வதும் கட்டிக்கொள்வதுமாய் அப்படித்தான்.!

வீடு வந்ததில் இருந்து அனுவின் முகத்தில் ஏதோ ஒரு கலக்கம்.
மனதில் ஒரு சலணம்.
திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் அனுவிற்கு குழந்தை இல்லை.
எல்லா பிரபல டாக்டர்களையும் பார்த்தாகிவிட்டது.
இந்த செக்கப் அந்த செக்கப்பென எல்லாமே செய்தாகிவிட்டது.
வெகு நாட்களாக குழந்தையில்லை என்றாலும் கனவன் ஒரு நாளும் அவளை தவறாக பேசியதோ நடத்தியதோ இல்லை.
எல்லா நேரமும் உடனிருந்து உருதுணையாகவே இருந்திருக்கிறான்.

வேற்றுலக சிந்தனையில் அமைதியாய் அமர்ந்திருந்தவளை
என்ன அனு வந்ததுலருந்து ஒரு மாதிரியிருக்கயென தோள்களில் அணைத்தான் பிரகாஷ்.

இன்னிக்கு மகாவ பாக்க போயிருந்தேன்ங்க.
அதுலருந்து மனசே சரியில்ல.!

புரியுது அனு... எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடும்... மகாவ போல நீயும் சீக்கிரமே...........

ச்ச ச்ச... அதுயில்லங்க.... மகா என் ஃப்ரெண்டு... அவள நினைச்சு நான் எப்பவும் ஏக்கமோ பொறாமையோ பட்டதில்ல....
நான் வேற விஷயத்த பத்தி நினைச்சுட்டு இருந்தேன்!

என்னத்த வேற விஷயம்?
எப்போதும் நினைச்சு கவலப்பட்டுட்டு இருக்க உனக்கு ஏதாவது ஒரு விஷயம் கிடச்சுட்டேயிருக்கு..!. மைண்ட முதல்ல ரிலாக்ஸா வெச்சுக்க பழகிக்கோவென அக்கரை அட்வைஸை தொடங்க,

நான் சொல்றத கொஞ்சம் காது கொடுத்து கேக்குறிங்களா?யென நிறுத்தி, தொடர்ந்தாள்.
இன்னிக்கு மகா வீட்டுக்கு கீழ இருக்குற ஹோட்டல்ல இருந்து ஒரு சின்ன பையன் சாப்பாடு பார்சல் கொண்டு வந்தான்.
அந்த ஹோட்டல் ஆந்திரா மெஸ்ஸு.
அந்த பையன ஹோட்டல்க்காரங்க அம்பதாயிரத்துக்கு வாங்கிட்டு வந்தாங்களாம் ஹைட்ராபேட்ல இருந்து!
அவன் வயசே ஆறு தான்ங்க இருக்கும் பாவம்.!

என்ன? சைல்டு லேபர்னு கம்ப்ளைன் கொடுத்து ஹோட்டல சீல் வெச்சுடலாமா?

அதெல்லாம் இல்லங்க....
நமக்கும் ரொம்ப வருஷமா குழந்தை இல்ல......
நாமலும் அதுபோல எதாவது குழந்தைய வாங்கிட்டு வந்து............

ஹோட்டல்க்காரன உள்ள தள்ளவானு கேட்டா, நீ என்னயே களி திங்க வைக்க ப்ளான் போடுறியா??வென சத்தமாய் சிரித்தான் பிரகாஷ்.

நான் கேக்குறது உங்களுக்கு சிரிப்பாயிருக்குல்லயென கோபித்து கண் கலங்கினாள் அனு.

இங்க பாரு அனு.... நான் சொல்றேன்ல! இன்னும் கொஞ்ச நாள்.... எல்லாம் சரியாகிடும்.... இல்லனா நாமலே ஒரு ஆர்ஃபனேஜ் போலாம்... போய் ஒரு குழந்தைய லீகலா தத்தெடுத்துக்கலாம் சரியா?வென கண்களை துடைத்து சமாதானப்படுத்தினான் பிரகாஷ்.

நேரத்திற்கு தகுந்தாற்போல் வரலாமா என்றபடி உள்ளே நுழைந்தாள் சித்ரா.

சித்ரா எங்கள் எதிர் ப்ளாட்டிற்கு குடித்தனம் வந்து நான்கு மாதங்களாகின்றன.
சிறிது காலத்திலேயே அவள் எனக்கு நெருங்கிய சிநேகிதி ஆகிவிட்டாள்.
திருமணமான கொஞ்ச நாட்களிலேயே அவள் கனவர் ஒரு விபத்தில் தவறிவிட்டாராம்.!
வயதும் அவளுக்கு 20தான்.
கனவனை விழுங்கியவள் என்ற ஊரார் பேச்சிற்கு அஞ்சியும் அவளுடைய மனஅமைதிக்காகவும் கிருஷ்ணகிரியிலிருந்து இங்கு குடி பெயர்ந்து வந்ததாக ஒருமுறை சித்ராவின் அம்மா என்னிடமும் பிரகாஷிடமும் சொல்லியிருக்கிறார்.
மகாவை போலவே அவளும் தற்போது நிறை மாத கர்ப்பிணி.
அதனாலேயே என் மாமியாருக்கு அவள் மீது தனி கரிசணமும் உண்டு.
ஆதரவில்லாத புள்ளத்தாச்சிப் பொண்ணுக்கு பணிவிடை பண்ணா கோடி புண்ணியம்... பலனா நம்ம வீட்டுலயும் ஒரு நல்ல காரியம் நடக்குமென சொல்லி
ஊருகாய் போட்டு தருவதும், துணி காயப் போட உதவி செய்வதுமாய அவளுக்கு செய்யும் சிறு நற்பணிகளுக்குள்ளும் பெரு சுயநலம் அவருக்கு.

என்னிடமும் அக்கா அக்காவென அக்கரையாய் நெருங்கவாளாதலால் நானும் அவளை ஒரு சகோதரியாகவே பாவித்திருக்கிறேன்.
என்னுடனான பழக்கத்தில் அவளிடத்தில் நான் எந்த சுயநலத்தையும் கண்டதில்லை, ஆனால்
என்னைவிட ரொம்ப சின்னவள் என்பதாலோ என்னவோ மகாவை போலல்லாமல் சித்ராவை காணும்போது மட்டும்
குழந்தையேக்கம் என்னை தொற்றிக்கொள்ளும்.

வந்தவளும் சும்மாயில்லை!
பக்கத்தில் அமர்ந்து அழாதீங்கக்காவென என் கண்களை துடைத்தபடி தொடங்கியவள் வழக்கம்போல் தன் ஆறுதல் உரைகளை அள்ளி வீச ஆரம்பித்தாள்.
பாராட்டை விட பெரிய போதை ஆறுதல்.
இவள் ஆறுதலில் மட்டும் ஏனோ நான் விரும்பி தானே சிக்கிக் கொண்டேன்.

ஹ்ம்ம்... உங்களுக்கு ஒரு அன்பான ஹஸ்பன்டு ஃப்ரெண்ட்ஸுங்கனு சுத்தி ஆயிரம் நல்லவங்க இருக்காங்க...
என்ன பாருங்க.! கல்யாணமாகி கொஞ்ச நாள்லயே கட்டுன புருஷன இழந்துட்டு
சொந்த ஊருல வாழ வழியில்லாம நிம்மதியில்லாம, ஊர விட்டு ஓடி வந்து....... நீங்கலாம் கொடுத்து வெச்சவங்கக்கா!
உங்கள பாத்தாலே எனக்கு எப்போதும் பொறாம தானென ஒரேயடியாய் சலித்துக்கொண்டாள்.

அவள் எப்போதுமே அப்படித்தான்... இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை நான் நன்கறிவேன்.
ஆனால் கனவனின் மரணத்தை மட்டும் ஏனோ அவள் பெரிய இழப்பாக நினைப்பதற்கான அறிகுறிகளை அவள் பேச்சு செயல்களில் நான் எப்போதுமே கண்டதேயில்லை.!
வாழ்க்கையில் நாம் கடக்கும் ரணம் மிகு சம்பவங்கள் மனதை இத்தனை கரடாக்கிவிடுமா!

விடுங்கக்கா.... உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்... ஏதோ மனக் குழப்பத்துல இருக்கீங்க போல! இப்போ எதையும் பேசி உங்கள மேலயும் குழப்ப விரும்பல என கூறி விடைபெற்றாள்.

இவளுக்கு இது தான் வேலை!
நிறையவே வெகுளி.
திடீரென உள்நுழைவதும் கிழவி போல் ஏதேதோ பேசி சலித்துக்கொள்வதும் பின் அப்பேச்சை அப்படியே தொடரத் தெரியாமல் குழந்தை போல் திணறி திரும்புவதுமாய் தினசரி இவள் வருகை பதிவு பத்திற்கு மேல் என் வீட்டில் பதிந்துவிடும்.

எத்தனை சங்கடங்கள் வந்தாலும்
சுய சமாதானத்தில் ஆறுதல் அடைபவள்.
நேரமாச்சுங்க என்ற பொய் அவசரத்தில் பிரகாஷோடு பெங்கலூர் கிளம்பினாள் அனுபமா.

செல்வது என்னமோ வியாபாரம் விஷயமாக தான்.
ஆனால் இந்த பயணம் அவளுக்குள் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூட அமையலாம்.!

பிரகாஷோடு தனிமையில் கைக்கோர்த்து கடந்த தருணங்களே அவளுக்கு பிரம்மாண்ட மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
அப்போதெல்லாம் அவள் குழந்தைப்பேறை பற்றி கவலையாய் சிந்தித்ததேயில்லை.
இந்த ஆறு நாட்களும் அனுவிற்கு அப்படித்தான் கடந்தது.
முதல் இரண்டு நாள் ப்ரசண்ட்டேஷன்,  கமிட்டி கண்சல்ட்டிங் மீட்டிங்கென முழுவதும் அஃபிஷியலாக நகர,
புதுமண தம்பதிகளின் ஹனிமூன் கணக்காக
பஜார் தெருக்களில் அலைந்து சுற்றி சேலை சுடிதார் வாங்கவும், குல்ஃபி பஞ்சுமிட்டாய் பாணிப்பூரி சிக்கன் கபாப் சாப்பிடவும், நடையோ நடையென லால்பாகில் நடக்கவும்,
பாப்கான் கொறித்தபடி ஏதோ ஒரு வசனம் புரியா கன்னட படம் பார்க்கவும்,
ஒரு மாலை வேளையில் இஸ்க்கான் டெம்ப்பிள் செல்லவும்
முழுவதுமாய் நான்கு நாட்கள் இருந்தன.
மனதை கவலையின்றி சலணமின்றி புத்துயிர்த்துக்கொள்ள
பெங்கலூர் அன்றி திருச்சிக்கோ சண்டிகருக்கோ ராமேஸ்வரத்திற்கோ பாம்பேவிற்கோ அடிக்கடி இப்படி ஏதோவொரு பயணம் அவளுக்கு அத்தியாவசியம் தான்.

பெங்கலூரில் இருந்து காரில் மெட்ராஸை நெருங்க இப்போது தான் ஞாபகம் வந்தது.
இந்த ஒரு வார குதூகலத்தில் அத்தனையும் மறந்துப் போனோம்!

ஏங்க! மறந்தேஏஏஏப்போயிட்டேங்க!!
மகாக்கு குழந்தை பிறந்திருக்கும்!
நாளு நாள் முன்னவே அட்மிட் பண்ணுறதா சொல்லிருந்தா!
ஒரு கால் கூட பண்ணலனு திட்டப் போறா என தலையில் அடித்துக்கொண்டு மொபைலை எடுத்து மகாவின் எண்ணை அழைத்தாள்.

வெகுநேரமாகியும் அழைப்பிற்கு பதிலளிக்கவேயில்லை.
ரொம்ப கோபத்தில் இருக்கிறாளென புரிந்தது.
நேராக மருத்துவமனைக்கே சென்றோம்.

ரூம் நம்பர் பதிணொன்னு!
வாசலிலேயே நின்னுக்கொண்டிருந்தான் ஆனந்த்.

என்ன அனு? மூனு நாளா ஒரு ஃபோன் கால் கூட இல்ல!?

சாரிடா..... ரொம்ப கோவத்துல இருக்காளா?

கோபமெல்லாம் இல்ல! ஆனா ரொம்ப மனசு உடைஞ்சுருக்கா!
நீ போய் பேசு!

கதவை திறந்து உள்ளே நுழைய என் குரலையே கேட்காதவள் போல் சுவற்றை முறைத்திருந்தாள்.

தொட்டிலில் கிடந்த குழந்தையை ஏந்தி ஜெஜெலிக்கா பப்புமா சோனுடாலியென சில கொஞ்சல் வார்த்தைகளோடு சேர்த்து
அவளையும் சமாதானம் செய்வதாய்,
மம்மிக்கு என்ன கோவம்?? அத்தை வந்து பாக்கலனு உங்க மம்மி கோவத்துல இருக்காங்களாவென குழந்தையை கொஞ்சுவதை போலவே நானும் பிரகாஷும் மகாவை ஒருசேர வார்த்தைகளால் சீண்டினோம்.

திரும்பியவள் கண்களில் கண்ணீர் குளமென தேங்கியிருக்க,
தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தாள்.

வழக்கமாக இப்படியான தருணங்களில் பிறரே வந்து சமாதானம் செய்யும் வரை கோபத்தில் பேசாதிருப்பாளே தவிர இப்படி குழந்தையை போல் அழுகலாகாள்.

குழந்தையை பிரகாஷ் கைகளில் மாற்றிவிட்டு சத்யாவை மார்பில் சாய்த்து கட்டியணைத்தேன்.

அழுகைக் குரலின் வலியுணர்த்தியது.
நிச்சயம் நான் வந்து பார்க்காதிருந்ததற்கான எதிர்விணையல்ல இதுவென.

ஆப்ரேஷன் பண்ணிட்டு வர வரைக்கும்........எதுவும் தெரியலடி....
ஆனா.......வந்ததுக்கப்பரம் இத என்னால கொஞ்சமும் ஏத்துக்க முடியலயென திணறிய ஒவ்வொரு வார்த்தையும் பிரிக்க முடியாத அழுகைக்குள் ஒன்றோடு மற்றொன்றாய் பிண்ணியிருந்தது.

இவள் சொல்ல வருவதை முழுவதுமாக கொட்ட வைத்து விடவாவது இந்த கண்ணீரை முதலில் ஆற்ற வேண்டும்.!

உறங்க மறுக்கும் குழந்தையை தாலாட்டிடும் தாயாகி கட்டி,
முதுகில் இதமாய் தட்டிக்கொடுத்தேன்.

தவறிழைத்தேன்.
நான் அவள் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும்!
இப்படியான தருணத்தின் தனிமை, இந்த நான்கு நாட்கள் ஆனந்த் உடனிருந்தும் இவளை இத்தனை தளர்வாய் சிந்திக்க செய்திருக்கிறது!
நான் வரும் முன்னரே நிறைய அழுதிருந்ததால் மனதோடு சேர்த்து குரலும் கொஞ்சம் குழம்பித் தான் போயிருக்கிறது!
முழுதாய் ஐந்து நிமிடம் எடுத்துக்கொண்டாள் ஆசுவாசமடைய.!
கண்ணீரை விழுங்கி கொஞ்சம் குரல்வளை நனைத்தாள்.

இப்போ சொல்லு மகா..... என்ன பிரச்சன??

எனக்கு குழந்தய பெத்துக்கிட்ட போலவே இல்லடி!
இந்த சிசேரியன்!!
இடுப்பு வலிக்கல..... வலிக்குதேனு கொஞ்சமும் அழல..... அழுறப்போ ஆனந்த் என் பக்கத்துலயும் இல்ல..... குழந்த கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ளயிருந்து வெளிய வரத நான் ஃபீல் பண்ணவும் இல்ல!
ஏதோ அப்பரண்ட்டிஸ் ஆப்ரேஷன் பண்ணி படுத்துருக்குற மாதிரியும்.......ஏன்!!  இது என் கொழந்தன்ற ஃபீலே வர மாட்டேனுது அனுவென புலம்பினாள்.

இவளை சமாதானப்படுத்த பிரகாஷும் எத்தனித்தார்.

சிசேரியனும் சும்மா இல்லயேம்மா!
அதுக்கு பின்னாடியும் ஒரு வலியும் போராட்டமும் இருக்குல்ல!
சுகப்பிரசவத்துல குழந்தைக்கு ஆபத்து இருக்குங்கற டிஃபிகல்ட்டில தான இந்த சாய்ஸுக்கே வந்தோம்!
இதுல உன் தப்பு எதுவும் இல்லமா!

உங்களுக்கு ஏன்ணா புரில!
என்னால தாய்மைய முழுசா உணரவே முடியல!
கிட்டதட்ட அனுவோடது தான் என் நிலமையும்... அவ கைல புள்ள இல்ல என் கைல இருக்கு அவ்வளவு தான் வித்தியாசம் என தேம்புவதை தொடர்ந்தாள்.

மகா!! என்ன பேசுற??வென கண்டிப்புடன் குரலுயர்த்தினான் ஆனந்த்.

விடுடா... அவ விரக்தில இருக்கா அவ கிட்ட கோச்சுக்காதவென ஆனந்தை சமாதானப்படுத்தினேன்.

மருத்துவமனையில் இருந்த ஒரு மணிநேரமும்,
மகாவை ஆறுதல்படுத்தவே போதுமானதாகயில்லை!
அவளுக்கு கோபம் அவள் மீதே தான்.
அர்த்தமற்ற ஆத்திரம்.

ஸ்லீப்பிங் பில்ஸ் எடுத்துக்கொண்டவள் கொஞ்சம் உறங்கட்டுமென தொந்தரவு செய்யவில்லை.
நான் கிளம்புவதற்கு முன், சாரி அனு அவ ஏதோ சுயநினைவுல இல்லாம அப்டி பேசிட்டாவென தொடர் மன்னிப்பு கோரிய ஆனந்திடம்,
இப்போனு இல்லடா,
அவ பேசுறத நான் எப்போவுமே தப்பா எடுத்துக்கிட்டதேயில்ல! நீ அத பத்தி எதுவும் சங்கடப்பட்டுக்காதவென கூறி நகர்ந்தேன்.

என் மீதுள்ள காதலில் பிரகாஷ் மகாவை கோபித்துக்கொள்வாரோவென அஞ்சினேன்.
ஆனந்த் மகாவுடனான என் நட்பை பிரகாஷ் நன்கறிவார்.
காரில் வீடு செல்லும்போது  கூட மகா அப்படி பேசியதை பற்றி என்னிடம் அவர் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை!
மாறாக,
அவஸ்த்தையில்லாம கிழிச்சு புள்ளய எடுத்துக்க நினைக்கிற பொண்ணுங்களுக்கு மத்தியில மகா அப்டி பேசினது அவ மேல பெரிய மரியாதையவே ஏற்படுத்திடுச்சு அனுவென சிலிர்த்துக்கொண்டார்.

பயண முடிவில் உடலசதியை மறந்து சின்னதாய் எனக்குள் புன்னகைத்துக்கொண்டேன்.
உரிமையாய் அத்தையென தூக்கி விளையாட இனியென் கைகளில் மகாவின் குழந்தை தவழுமே.!

வீட்டிற்கு வந்ததும் சோஃபாவில் அசந்தார் பிரகாஷ்.
ஒரு மணிநேரமாகிறது.
சித்ராவின் வருகை தவறல் ஆச்சர்யமளித்தது!
நான் வந்த விட்டது தெரிந்திருந்தாலே இந்நேரம் வந்து ஒரு மணிநேரமேனும் வாயாடிக் கொண்டிருந்திருப்பாள்.

என்னவென்று என் மாமியாரை அழைத்து வினாவினேன்.

என்னத்த சித்ராவ ஆளயே காணோம்??
வீடும் பூட்டியிருக்கு? ஹாஸ்பிடல் எங்கேயும் போயிருக்காளா??

உனக்கு விஷயம் தெரியாதுல்ல!? மறந்தே போயிட்டேன் இங்க வாவென முழங்கையை கோர்த்து ரகசியமாய் காதில் கூசினார்.

அமுக்குளி மாதிரி இருந்துட்டு இத்தன நாள் நம்மளயெல்லாம் ஏமாத்திட்டு இருந்துருக்காடி அவ!
அவ புருஷன் சாகலாம் இல்லயாம்!
கதையே வேற!
இவ ஏதோ காலேஜ் படிச்சுட்டு இருந்தப்போ கூட படிக்கிற பையனோட சுத்தி வயித்துல புள்ள ஏறிட்டாம்!
அழுத்தக்காரி வீட்டுக்கு தெரியாம 4மாசமா மறைச்சுட்டு இருந்திருக்காடி.!
புள்ளைய களைக்க முடியாதுங்கற சிச்சுவேஷன்ல ஊருல தெரிஞ்சா அசிங்கமாகிடும்னு இங்கன ஓடி வந்துருக்காளுக அவளும் அவ ஆத்தாளும்.!
முந்தாநேத்து வலியெடுத்துடுச்சுனு ஹாஸ்பிடல் கொண்டு போனாங்க!
புள்ளய மட்டும் இங்கேயே எங்கயாவது போட்டுட்டு ஊர பாக்க போயிட்டு கையோட வேற எவன் தலைலயாவது இவள கட்டிடனும்னு ப்ளானாம்!
அந்த கொழந்த தான் பாவம்!
ஹ்ம்ம்ம்!
இன்னும் ரெண்டு நாள்ல எந்த குப்பத்தொட்டில கிடக்கப் போகுதோ இல்ல எங்க பிச்ச எடுக்கப் போகுதோ!

உனக்கு யாருமா இந்த நியூஸயெல்லாம் சொன்னதென அதிர்ச்சியுடன் குறுக்கிட்டான் பிரகாஷ்.

நேத்திக்கு வீட்ட காலி பண்ண அவளோட மாமங்காரன்னு எவனோ ஒருத்தன் வந்தான்டா!
அவன் தான் சித்ராக்கு நீங்க தான் ரொம்ப உதவியாயிருந்தீங்களாமேனு சொல்லி,
யாருகிட்டயும் சொல்லிக்க வேணாம்னு கேட்டுட்டு இதையெல்லாம் சொல்லிட்டு போனான்.

தன் மாமியார் காதில் ஓத ஆரம்பித்த இரண்டாவது வரியிலேயே அனு சுயநினைவை இழந்திருந்தாள்.

காற்றில் கரையும் முயற்சியில் எந்நேரமும்
கருவிழியிலிருந்து கீழே விழலாமெனும்படி இமை சிமிட்டும் தருணம் நோக்கி காத்திருந்தன சில நீர்த்துளிகள்.

மெதுவாய் நகர்ந்து போய் அறை கதவை தாழிட்டுக்கொண்டாள்!
வெகு நேரமாக உள்ளே எந்த கூச்சலுமில்லை.
அமைதியாய் அழுதுக் கொண்டிருக்கிறாளா, அப்படியானால் எதன் காரணத்தால் என்றெல்லாம் நிச்சயம் தெரியாது!

வெளியே வாவென கதவை தட்டிய பிரகாஷிடம்,
கால் அவுண்ஸ் தண்ணீரை குரல்வளையில் வைத்து பேசுபவளை போன்றதொரு கலங்கிய ஓசையில் அனு சொன்னது இவ்வளவு தான்.

என்ன கொஞ்ச நேரம் தனியா விடு பிரகாஷ் ப்ளீஸ்........




-ராஜ்குமார்.ரா @RajiTalks

(சூலுண்ட "மூன்று"  பெண்களின் உண்மையான வாழ்க்கை சம்பவங்கள்)


No comments:

Post a Comment