Saturday, February 28, 2015

கனா காணும் காலங்கள் - ver ராஜ்குமார்

நம் ஒவ்வொருவரின் பள்ளிப்பருவ மனதும் ஒருகாலத்தில்
ஏதேதோ சினிமாக்களைப் பார்த்து பற்பல ஆசைகளை
தன் எதிர்கால கல்லூரி வாழ்க்கை மேல் வளர்த்து வைத்திருந்திருக்கும்!

அப்போது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை,
இப்போது வெறுத்துக்கொண்டிருக்கும்
இந்த பள்ளி வாழ்க்கை ஞாபகங்களை தான்
நாம் எதிர்காலத்தில்
நினைத்து ஏங்கி/புன்னகைத்து அசைபோட்டுக்கொண்டிருக்கப் போகிறோம் என்று..

-முதல் காதல்
-கணக்கு வாத்தியாரின் பிரம்பு
-பள்ளி சைக்கிள் ஸ்டாண்டு
-கையில் காம்ப்பஸ் குத்து
-திருடி சாப்பிட்ட தோழியின் புளிச்சாதம்
-சாப்பிட்டுவிட்டு அவளிடம் வாங்கிய திட்டு
-பேப்பர் திருத்திக் கொடுத்த தமிழ் டீச்சர்
-Annual dayல் நடனம் ஆடிய பாடல்
-பேச்சுப் போட்டியில் வாங்கிய பரிசு
-ஆண்டு விடுமுறை மாமா வீடு என
இன்றளவும் நம் அனைவரது ஞாபகத்திலும்
இப்படி ஏதோ ஒரு சம்பவம் வந்து ஊசலாடிக்கொண்டிருக்கும்!

அப்படிப்பட்ட ஏதோ ஒரு ஞாபகம் தான் என்னுடைய இந்த பதிவு!

இவர்களது செய்கைகளை அதிகப்பிரசங்கித்தனம் - குறும்பு - சேட்டை என இந்த ஏதோ ஒரு பெயரில் கண்டிப்பாக
அழைக்கலாம்..

வகுப்பில் 100 மாணவர்கள் இருந்தாலும்
ஏதோ ஒரு கேங் மட்டும்
(வேற யாரு நானும் என் தோஸ்த்ங்களும் தான்)
செய்தது மட்டுமல்லாமல் செய்யாத குறும்புகளுக்கும் நந்தா லொடுக்கு பாண்டியாகி தண்டனை வாங்கி சந்தோஷப்படும்!

இங்கே சேட்டைகளுக்கு வாங்கிய ஒவ்வொரு தண்டனையும் ஒவ்வொரு மெடல் மாதிரி!
வாங்கிய தண்டனைகளை பொறுத்து
அது கோல்டு மெடலா
அல்லது
சில்வர் மெடலா என கேங் கூட்டு ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு பின் கூடி அனைவராலும் சிலாகித்துக் கொண்டாடப்படும்!

குடியரசுதினவிழா நாளன்று காலை கொடி கம்பத்தை உடைத்தது,
பிடிக்காத P.E.Tயின் ஸ்கூட்டி சைலன்சரில்
பேப்பர் அடைத்தது,
தீபாவளிக்கு மிஞ்சிய பட்டாசை கொண்டு வந்து பள்ளி இடத்தின் தர்மகர்த்தா சமாதியில் வைத்து வெடித்து ஒரு பக்கம் சுவரை கீழே சரித்தது,
தமிழ் மிஸ் சைக்கிள் ட்யூபை காம்பஸால்
சல்லடையாக்கியது,
பிரின்சிபால் அறையை திறந்து எக்சாம் கொஸ்ட்டின் பேப்பரை நகலெடுத்து திருடியது
(பின்னாள்ல நண்பன் படம் பார்த்து இது எங்க கதைனு ஹிரானி மேல
கேஸ் போடலாமானு யோசிச்சேன் - என் பேரு வெச்ச ஆளுங்கறதால அப்புறம்
மன்னிச்சுட்டேன்)
என்பது ஒரு நீளமான லிஸ்ட்!!

இவற்றில் மெடல் வாங்கிய சேட்டைகளை விட, வாங்காமல் லாவகமாய் எஸ்கேப் ஆன சேட்டைகளே அதிகம்!
(எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்ங்கற வடிவேலு அண்ணனோட வார்த்தைய கரெக்ட்டா ஃபாலோ பண்ணுறவங்களாக்கும் நாங்க)

அப்படி வாங்கிய
ஒரு கோல்டு மெடலை பற்றி தான் கீழே சொல்லியிருக்கிறேன்! :-)

படித்தது அப்போது பத்தாம் வகுப்பு!
எங்கள் அனைவரையும் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே எப்படா இந்த லெசன் எடுப்பாங்க என ஆர்வமாக காத்திருக்க வைத்த ZOOLOGYன் மூன்றாவது LESSON..

ஆண்-பெண் என எல்லா(ருடையதையும்)வற்றையும் படம் போட்டு விளாவரியாக விளக்கியிருக்கும்
அந்த 160 பக்கம் கொண்ட
HUMAN REPRODUCTIVE SYSTEM என்ற தலைப்பு!

ஏனோதானோ என
நடத்தப்பட்டிருந்த அந்த பாடத்தில் ஏதோ ஒரு கேள்விக்கான பதிலை
மனப்பாடம் செய்துக்கொண்டிருந்த போது
வகுப்பில் ஒரு மாணவி மட்டும்
அனுமதி வாங்கிக்கொண்டு பாதியில் வீட்டுக்கு கிளம்பினாள்!

வழக்கத்துக்கு மாறாக நடந்த இந்த சம்பத்திற்கான காரணம் என்னவாக இருக்குமென ஒவ்வொருவரும் இப்டியிருக்குமோ அப்டியிருக்குமோயென
கூட்டுவிவாதம் செய்து கொண்டிருந்தோம்!

எங்கள் கேங்கில் உள்ள ஏதோ ஒரு அதிமேதாவி மட்டும் கரெக்ட்டான காரணத்தை எப்படியோ கேர்ள்ஸ் பெஞ்ச்களிலிருந்து வழக்கமாக கவ்வி வந்து விடுவான்!

அப்படி தான் இதற்கான பதிலும் வந்து சேர்ந்தது!

டேய் அந்த பொண்ணுக்கு இன்னிக்கு பீரியட்ஸ்டா அதான் வீட்டுக்கு போயிட்டா
என BREAKING NEWSஐ பரப்ப,
எங்களுக்குள் ஏதேதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தோம்!

கேங்கில் ஒரு அதிமேதாவி இருந்தால்
வழக்கமாக ஒன்றும் தெரியாத ஒரு மொக்க பீசும் இருக்க வேண்டும் என்பது UNIVERSAL FACT.
(ஆனா நான் மட்டும் ரெண்டும் கெட்டானான அரகொற)
அப்படி ஒருவன் தான் என் ஆருயிர் நண்பன் கார்த்திக்.

மேத்ஸ் மிஸ் ட்ரிக்னாமென்ட்ரியின்
ஏதோ ஒரு பிரச்சனைக்கான
தீர்வை போர்டில் தேடிக்கொண்டிருக்க,
எங்களை தீர்த்து கட்டுவதற்கான ஏற்பாடு கார்த்தியால் தொடங்கப்பட்டது!

ஏதுமே தெரியாத அந்த 5அடி குழந்தை
6கட்ட குரலில் பீரியட்ஸ்னா என்னடாயென
கேள்வியெழுப்பியது!

பேம்ப்பர்ஸ் விளம்பரத்தையும்
ஸ்டேஃப்ரி விளம்பரத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்ததில்
அந்த உன்னத துறையில் எனக்கு ஏற்கனவே கொஞ்சம் பொது அறிவு இருந்திருந்தது!
இதில் இவன் ஏகலைவன்!

ஆனால் ஏனோ அந்த விவரங்களை அவனுடன் பகிர்ந்துக்கொள்ள நான் விரும்பவில்லை!
இவற்றைப் பற்றி பேசுவதே பொறுக்கித்தனம் என்ற எண்ணம் என்னுள் இருந்திருந்தது!

அப்புறம் பேசிக்கலாம் க்ளாச கவனிடாயென காதை கிள்ளி தலையில் கொட்டி உட்கார வைத்தேன்!

ஆனால் க்ளாசுக்கே தெரிந்த கிசுகிசு பற்றி தனக்கு தெரியவில்லையே என்ற ஆதங்கம்
அவனை சும்மா விடுவதாகயில்லை!

எங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டு பதில் கிடைக்காத கடுப்பில்
அவனது நெருங்கிய தோழியான ஒருத்தியிடம் போய் அப்டினா என்னவென கேட்க......
(பாவம் அந்த பொண்ணு பாவம் எந்த கடுப்புல இருந்துச்சோ)
உங்க அம்மா கிட்ட போய் கேளுடானு சொல்லிட்டு போயிடுச்சு!

இதன் பிறகு அவனை அழைத்து அப்டினா இதுதான்டா என எனக்கு தெரிந்த அரைகுறை அறிவியலை விளக்க,
பையன் கண்ணுல தண்ணி..!

கண்ணில் தேம்பிய கண்ணீர் கருவளையத்தை க்ராஸ் செய்வதற்குள்
க்ளாஸுக்குள் நுழைந்த ப்யூன்
எங்கள் கேங் ஆறு பேருடைய பெயரையும் சத்தமாய் வாசித்து ப்ரின்சிபால் கூப்டாருப்பா என அழைத்தார்!

க்ளாசுக்கும் ப்ரின்சிபால் ரூமிற்கும் இடையேயிருக்கும் 21படிகளை இறங்குவதற்குள் ஒவ்வொருவனின் கைகால்களும் பயத்தில் பரதநாட்டியம் ஆடின!

இருபது நிமிஷம் - குய்யோ முய்யோவென கத்துவற்கு வாயை மட்டும் விட்டுவிட்டு ஆறு பேர்
பாடியில் இருக்கும் ஐம்புலன்களையும் பாரபட்சமின்றி பதம் பார்த்தது P.E.Tயின் பிரம்பு!

அடுத்த இருபது நிமிஷத்தை தனக்காக வாங்க்கொண்ட ப்ரின்சிபால்
மம்மி பாவம்...நோநோ..டாடி பாவம் டாடி பாவம் என
கதறுமளவிற்கு காதிலேயே கழுவி ஊத்தினார்!

குத்துயிரும் கொலையுயிருமாய் ரெண்டு கால்களில் போன நாங்கள்
நான்கு கால்களில் தவழ்ந்துக்கொண்டே திரும்பினால் ZOOLOGY மிஸ் - தி வில்லன் என்ட்ரி!!
நான் எதிர்பார்க்காத ஒன்று..
அங்கே நடந்துவிடக் கூடாதென பயந்த ஒன்று!


நான் மட்டும் சீலிங்கை பார்க்க,
ஃப்ளாஷ்பேக் கொசுவர்த்தி 360டிகிரியில் நான்கு சுற்று சுற்றியது!
#ஒரு வாரத்திற்கு முன்

அதே க்ளாஸ்ரூமுக்கு வந்த ZOOLOGY மிஸ்
HUMAN REPRODUCTION SYSTEM LESSON எடுக்க மாட்டேன் நீங்களே தான் படிச்சுக்கனும் என்றார்!

அதெப்டி முடியும்!? அந்த HRS லெசன் என்பது எங்கள் ஒரு வருஷ கனவாயிற்றே!

எத்தனை கசமுசா கனவுகளை வளர்த்திருந்திப்போம்!
எத்தனை கதைகளை கிசுகிசுத்திருப்போம்!!

குபீரென கோபம் கொப்பளித்து
மனசாட்சி கொஞ்சம் சத்தமாக கொக்கரிக்க
அதெல்லாம் எங்களால மனப்பாடம் பண்ண முடியாது மிஸ் - நீங்க எடுங்க இல்லனா
நான் போலீஸ கூப்டுவேன் என அதுஇதுஎது ராமர் வாய்சில்
ப்ரின்சிபால் கிட்ட போவேன் என
கத்தினேன்!

கோட்டு கோபி வைத்து தீர்க்கவேண்டிய அளவிற்கு டெவலப் ஆன இந்த நீயாநானா சண்டை
நாட்டாமை சரத்குமாரான ஸ்கூல் ப்ரின்சிபாலிடம் போக
அவரும் எங்களுக்கு சாதகமாக
அந்த லெசன எடுத்துடுங்க மேடம் என ஆர்டர் போட்டார்!

ஒருவழியான அந்த மிஸ்ஸும்
தொட்டும் தொடாமல்
பட்டும் படாமல்
புரிந்தும் சுத்தமாக புரியாமல்
(இது தான் மேண்டில் - இதுலருந்து தான் பளீர்னு வெளிச்சம் வரும் என்பது போன்ற விளக்கம் கூட இல்லாமல் க்ர்ர்ர்ர்)
நேரா போய் லெஃப்ட்ல திரும்புங்க என பக்கத்து தெருவிற்கு வழி சொல்வது போல்
பக்கத்துக்கு ரெண்டு வரியென
அரைமணிநேரத்தில் மொத்த லெசனையும் கடமைக்கு வாசித்து முடித்தார்!

அடேய்!! இது என்ன மாதிரி லெசனு!!
எப்படி நடத்த வேண்டிய டாபிக்கு என அடிமனதில் ஒரு ஆதங்கம்!

(இருந்தாலும் இந்த சம்பவத்துக்கு அப்புறம்தான் மத்த பசங்கயெல்லாம்
என்ன ஒரு டான் போல பாத்து,
அரபேகானோ பாட்ட போட்டு கைல முத்தம் கொடுக்க ஆரம்பிச்சானுங்க - சில பொண்ணுங்களும் இதுல உண்டு ஹிஹி)

ப்ளாஷ்பேக்கிலிருந்து நான் வெளியே வர,
இந்த ஈகோ யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர
இத்தருணத்தை பயன்படுத்திக்கொண்ட கயல்விழி மிஸ்
இவங்களையெல்லாம் சும்மா விட கூடாது சார்,
பேரண்ட்ஸ கூப்டுங்கு என்றார்!
(அதே அதுஇதுஎது ராமர் வாய்சில் போலிசை கூப்பிடுவேன் தான்)

இப்போதான் ஒவ்வொருத்தனுக்கும் உள்ள விட்டுச்சு அள்ளு!!
இது மாதிரியான விஷயங்கள் சேட்டையில் சேராது என எனக்கே தெரியும்!
எங்கப்பாவுக்கு தெரிந்தால் நான் அவர் பிள்ளையே இல்லையென எழுதி கொடுத்துடுவாரு -
எங்கம்மா சத்தம் போடாம சாப்பாட்டுல விஷம் வெச்சுடுவாங்க!!


ஆமா அது தான் சரியாயிருக்குமென ப்ரின்சிபாலும் முடிக்க,
தீந்தோம்டா நாம என மனதுக்குக்குள் அழ தொடங்கினேன்!

அப்போது தான் எங்கள் அபிமான
எபிட்டா மிஸ் காஞ்சிகாமாட்சி உள்ளே வந்தார்!
(கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்ஸ், வில்லி கடைசியாக ஹீரோயின் என இன்ட்ரோ வரும் வித்தியாசமான கதை இது!)

எங்கள் மேத்ஸ் மிஸ் - எல்லா சப்ஜெக்ட்களிலும் லெஃப்ட்ல இன்டிகேட்டர் போட்டு ரைட்டில் கைக்காட்டி நேராக போய் கலக்கும் தசாவதானி!

இதுல நம்ம தப்பும் இருக்கு சார் என தொடங்கியவர்,
இதோ ZOOLOGY மிஸ் - இவங்க அந்த HRS லெசன ஒழுங்கா எடுத்திருந்தா
அவங்களுக்கு அந்த சந்தேகமும் வந்திருக்காது,
ஒரு பொண்ணு கிட்ட இத பத்தி அவங்க கேட்டுருக்கவும் மாட்டாங்க!

இந்த வயசுல இவங்கள வழி நடத்த வேண்டியது நம்ம பொறுப்பு,
அதானால தான் அவங்க அப்பா அம்மா இங்க அனுப்பிருக்காங்க,
இதுல அவங்கள கூப்டு பேசி என்னாக போகுது.!?

இனி இவங்க இது மாதிரி MISBEHAVE பண்ணாம இருக்க நான் பொறுப்பு பேரண்ட்ஸ்லாம் வேண்டாமென சொல்லி எங்களுக்கு ஜாமீன் போட்டார்!

தலைக்கு பின் ஒளிவட்டம்
தோளில் பச்சைக்கிளியென
அப்போது எங்கள் கண்ணுக்கு உண்மையாகவே ஒரு வரம் தரும் காமாட்சியாக தெரிந்தார் எங்கள் எபிட்டா மிஸ்!

பின் எங்களை தனியாக அழைத்து சென்றவர்,
சுமார் இரண்டரை மணி நேரம் உட்கார வைத்து அந்த HRS லெசனை விளாவாரியாக A-Z விளக்கினார்!!
இதை மற்றவருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டுமென்ற கன்டிஷனுடன்!!


விளக்கத்தின் முடிவில்
அரைகுறை அறிவுகள் அனைத்தும் தெளிவு பெற்றன!

இத்தனை நாள் ஆபாசமாகவும்
கேளிக்கையாகவும் தெரிந்த விஷயங்கள் மேல்
அதன் பிறகு அத்தனைப் பெரிய மரியாதை வந்திருந்தது!

அப்படி கேட்டது நானில்லை எனினும்
ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி
கண்களில் நீரை நிரப்பியது!
(எமோஷ்னலி நான் கொஞ்சம் வீக் - டைட்டானிக் க்ளைமேக்ச பாத்தே விசும்பி விசும்பி அழுதுருக்கேன்னா பாருங்களேன்)

அப்புறம் என்ன!!
க்ளாஸ் பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல
க்ளாஸ்ரூம கூட்ட ஆயாம்மா வந்தாலும் ராஜமரியாதை தான்!

சிவகார்த்திகேயன் படம் பார்க்க போனாலும்
சமுத்திரகனி படம் போல க்ளைமேக்சில் மெசேஜ் தேடுவது நம்மவர் வழக்கம்!
#அது தான் அடுத்தது!

எனக்கு கிடைத்த இந்த எபிட்டா மிஸ் பலருக்கும் கிடைக்காமல் போயிருக்கலாம்!

ஆசிரியர் ஒரு குழந்தையின் இரண்டாவது பெற்றோர் -
பெற்றோர் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் என ஏதோ ஒரு ஃபார்வேடு மெசேஜ் படித்ததாக ஞாபகம்!

FTVக்கும் JETIX CHANNELக்கும் இடையே
வீட்டு டிவி ரிமோட் மாட்டித் தவித்துக்கொண்டிருக்கும் காலகட்டம்!
பால்ய மனம் தடம் மாறுவதற்கான
சரியான வயது!

அட்வைஸ்கள் அறுவைகளாக தெரியும் பருவம்!
இவர்களை சரியாக வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் இருவர்
பெற்றோர்களும் ஆசிரியர்களும்!

பள்ளி என்பது வெறும் (a+b)^2 சொல்லிக்கொடுக்கும்
கட்டிடங்களாக மட்டும் இல்லாமல்
சரியான வழிகாட்டிகளாக இருக்கும்,
விடைத்தாளோடு சேர்த்து மாணவர்களையும் திருத்தி வழிநடத்தும் ஆசிரியர்களை கொண்ட
இடமாக இருத்தல் வேண்டும்!

மாணவர்களுக்கு மற்றவரை/பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்பதற்கு முன்
ஆசிரியர்களானவர்கள் முதலில்
அவர்களின் மரியாதைக்குரியவர்களாகவும்
அபிமானத்திற்குரியவர்களாகவும்
இருத்தல் வேண்டும்!

பாடப்புத்தகத்தை தாண்டி
ஆசிரியர்-மாணவர்களுக்கிடையே ஒரு நட்புறவு வேண்டும்!

(செக்ஸ் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பை பற்றி நான் ஏற்கனவே முந்தய பதிவில் சொல்லியிருந்தேன் - http://rajitalksindia.blogspot.in/2014/08/blog-post_14.html?m=1 )

மொத்தத்தில் மாணவர்களின் எதிர்காலத்திற்காக
அவர்கள் செய்யும் ஏதோ ஒரு விஷயம்
பல ஆண்டுகள் கழித்தும்
ஏதோ ஒரு மாணவனால்
நினைத்து நன்றி சொல்வதாக அமைந்தாலே போதுமானது!

-நன்றிகளுடன்
ராஜ்குமார்.ரா



பிழைத்திருத்தி - மணிமைந்தன்

10 comments:

  1. நல்ல பகிர்வு தம்பி! :)

    ReplyDelete
  2. பள்ளிப்பருவ குறும்புகளை, அறியா வயதின் ஆராய்ச்சிகளை,
    விடலைப்பருவத்து விளையாட்டுக்களை கோர்வையாக,
    ரசனையுடன் நன்றாக எழுதியுள்ளீர்கள். ரசித்தேன்.
    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ச்சியாக ஊக்குவிப்பதற்கு நன்றிங்க சகோ!! :-)

      Delete
  3. நல்ல பதிவு, கொஞ்சம் long :-))

    amas32

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா!! அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் சொன்னது போல நீளத்தை குறைக்க முயற்சிக்கிறேன்! :-)

      Delete
  4. செம :) பள்ளி பருவம் அறியா பருவம் அறிய துடிக்கும் பருவம். நம் எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பவையே. வருடங்கள் எத்தனையானாலும் மறக்க முடியுமா. படிப்பவர்கள் அத்தனை பேர்களையும் திரும்ப பால்ய நினைவுகளுக்கு கொண்டு செல்லும் உங்களின் இந்த பதிவு.
    "அட்வைஸ்கள் அறுவைகளாக தெரியும் பருவம்!
    இவர்களை சரியாக வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் இருவர்
    பெற்றோர்களும் ஆசிரியர்களும்! "

    சூப்பர். வாழ்த்துகள் :)

    ReplyDelete
    Replies
    1. ஒரு நீளமான பின்னூட்டம் - ரொம்ப சந்தோஷம் - நன்றி சகோ!! :-) ;-) :-D

      Delete
  5. அது ஒரு மறக்க முடியாத காலம், பள்ளி பருவம் கண் முன்னால் வந்து மறைந்தது
    நன்றி ராஜி @pethroz

    ReplyDelete
  6. ரொம்ப சந்தோஷம் சகோ!!!! :-) இதை கண்டிப்பா எதிர்பார்த்தேன்!! :-)

    ReplyDelete