Saturday, August 2, 2014

யார் தமிழன்?? - ஒரு குழந்தை கேள்வி

ஐன்ஸ்டீனை விட அதிகமான, புத்திசாலிதனமான அவரால் கூட பதிலளிக்க முடியாத 50கேள்விகளை ஒரு  நான்கு வயது குழந்தையால் இரண்டு நிமிடத்திற்க்குள் கேட்க முடியும் என்பது சாத்தியமே..!

அப்படிப்பட்ட ஒரு குழந்தை கேள்வியை உங்கள் முன் வைக்கும் போது,
முதலில் அது உங்களுக்கு சாதாரணமாக
பதில் அளிக்க கூடிய
அசட்டுத்தனமான ஒரு கேள்வியாக தெரியலாம்..!
கேள்வியை முன் வைத்தவர் உங்கள் பார்வையில் ஒரு முழு முட்டாளாக கூட தெரியலாம்..!

ஆனால்,

அப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கவே அக்கேள்விகள் கூடவே சில உபரி கேள்விகளையும் சுமந்து வரும்..
ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்து வர  வரிசையாக இன்னும் பல கேள்விகள் பதிலுக்காக அணிவகுக்கும்..

அடுத்தடுத்து வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் பல புத்தகங்களையும் வலைப்பக்கங்களையும் புரட்ட வேண்டிய தேவை ஏற்படும்..!
ஒரு கட்டத்தில் கேள்விக்கான  உங்களது ஒவ்வொரு பதிலும் முன் அளித்த அல்லது அடுத்து அளிக்கப்போகும் பதிலுக்கு முரணாக அமையும்..!

அப்படி அமையும் பட்சத்தில் நீங்கள் இதற்கு முன் அளித்த ஒவ்வொரு பதிலும் தவறானதென்ற நிலைபாடு ஏற்படும்..

இருதியில் அந்த குழந்தை கேள்வி உங்களையே பதில் சொல்ல முடியாமல் செய்து திணறடித்து விடும்..!!

அப்படிப்பட்ட கேள்விகள் கேட்பவர் உலகில் ஆகச்சிறந்த புத்திசாலியுமல்ல..!
பதில் சொல்ல முடியாதவர் முட்டாளுமல்ல..!
இருப்பினும் அவை உண்மையெனில் அவற்றை இங்கு கேட்கப்படும் கேள்விகளே தீர்மாணிக்கின்றன...!!

அப்படிப்பட்ட ஒரு குழந்தை கேள்வி தான் இங்கே விமர்சிக்கப்பட உள்ளது..!

"யார் தமிழன்???"

எந்தெந்த தகுதிகள் இருந்தால் என்னை நான் தமிழன் என அடையாளப்படுத்திக்கொள்லாம்..?

இது யார் வேண்டுமானாலும் பதிலளிக்க கூடிய ஒரு சாதாரண கேள்வியாக தெரியலாம்..!

"தமிழ் என்பது ஒரு மொழி..
அதை பேசுபவர்கள் தமிழர்கள்"...
என்ற இந்த பதிலை
படிப்பறிவில்லாத செருப்பு தைக்கும் ஒருவரோ,
ஒரு பள்ளி மாணவனோ,
ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிவரோ,
ஒரு மாவட்ட ஆட்சியாளரோ,
ஒரு கிராமத்து இல்லத்தரசியோ,
அல்லது
இலக்கணம் இலக்கியம் வரலாறு தெரியாத ஒரு சாதாரண கூலித்தொழிலாளியோ
இவர்களில் யாரால் வேண்டுமானாலும் சொல்ல முடியும்..!

மேற்கண்ட அந்த பதில் சரியானதே என்றாலும் நீங்கள் சொன்ன அந்த பதிலை சரியென நிரூபிக்க அல்லது ஒழுங்கு படுத்த அடுத்து வரும் சில கேள்விகளுக்கு நீங்கள் கட்டாயம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்..!

"தமிழ் பேசுபவன் தமிழனா?" "தமிழ் மட்டுமே பேசுபவன் தமிழனா?" "தமிழ் பேசுபவன் மட்டுமே தமிழனா?"

இந்த கேள்விகள் சிலரை கொஞ்சமாக குழப்பலாம்..!

அதாவது தமிழன் என்ற ஒரு இனத்தின் அடையாளம், பேசும் மொழியை சார்ந்ததா? அல்லது வாழும் நிலத்தை சார்ந்ததா??

பெரும்பாலான மொழிப்பற்றாளர்கள்
அவ்வினம் நிலத்தை சார்ந்தது என்பதை ஏற்க மாட்டார்கள்..

ஒரு ஜப்பானியர் இரண்டு தலைமுறைகளாக தமிழ் பேசுகிறார் என்பதற்காக
அவரை நாம் தமிழர் என ஏற்றுக்கொள்வதில்லை..
வேண்டுமானால் தமிழ் பேசும் ஜப்பானியர் எனலாம்..

தமிழ் இலக்கிய இலக்கணங்கள் யாவையும் கரைத்து குடித்த ஒருவன் மூன்று தலைமுறைகளாக அமெரிக்காவில் வாழ்கிறான் என்றால் அவன் யார் என்ற கேள்விக்கு பெரும்பாலான பதில்கள் அமெரிக்க வாழ் தமிழன் என்பது...

தமிழ் பேசுபவர்கள் மட்டுமே
அதாவது தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்றால்,
போன தலைமுறை வரை தமிழ் பேசிய ஒரு மனிதன், அதாவது ஒரு தமிழன்
இப்போது தமிழை மறந்து
அமெரிக்காவில் குடியுரிமை பெற்று
ஆங்கிலம் பேசுகிறான் என்றால் அவன் யார்??
அவன் தமிழனா?? அவன் தன்னை தமிழன் என அடையாள படுத்திக்கொள்ளலாமா??

இதற்கு உங்கள் பதில் தமிழக பூர்வீகம் கொண்ட அமெரிக்கன் என்பதானால்,
தமிழன் என்ற இனம் நிலத்தை சார்ந்தது மட்டுமே என பொருள் படும்..!!

சரி இப்படியாக வைத்துக்கொள்ளலாம்..!

தமிழை பேசி தமிழகத்தில் இருப்பவன் மட்டுமே தமிழன் என்பது உங்கள் கூற்றானால்,
நான்கு தலைமுறைக்கு முன்பு வாணிகம் செய்ய தமிழகத்துக்கு குடிப்பெயர்ந்த ஒரு தெலுங்கனின் இப்போதைய தாய் மொழி தமிழ்..!
அவனுடைய அடையாளம் இப்போது என்னவாக இருக்கலாம்??
தமிழனா?? தெலுங்கு தமிழனா??

சில நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்த இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்களின் இப்போதைய அடையாளம் என்ன??

இப்படிபட்டவர்கள் கலப்பின தமிழர்கள் என்பது உங்கள் பதிலானால்,
ஆண்டாண்டு காலமாக மொழி உருவான காலத்திலிருந்து தமிழகத்திலேயே நம் கொள்ளு எள்ளு மூதாதையர்கள் வாழ்ந்து இப்போது நாமும் இங்கேயே வாழ்கிறோமானால் நாம் மட்டுமே தமிழர் என்பதே பொருளாகும்..!!

சரி ஆண்டாண்டு காலமாக தமிழை தாய் மொழியாக கொண்ட ஒரு தமிழன்,
இப்போதும் தமிழ் பேசுகிறான் ஆனால் நூறு ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் வாழ்கிறான் என்றால் அவன் யார்??

இது பதிலளிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கலாம்..!!

ஆக ஒரு இனமென்பது இடத்தையும் மொழியையும் இரண்டற சார்ந்தது என்பது தெளிவாகிறது..!

குமரிகண்டம் முழுவதும் வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்பதையும்,
ஆஸ்திரேலியாவையும் மடகாஸ்கரையும் இணைத்த அந்த நிலப்பரப்பு கடலில் மூழ்கியதையும் நாம் அறிவோம்..

குமரிகண்டம் முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் சிலர் மடகாஸ்டர்/ஆஸ்திரேலியாவில் வேறு நிலப்பரப்பின் இனப்பெயரில் இப்போதும் வாழ்கிறார்கள் என்பது ஒப்புக்கொள்ள தவிர்க்க முடியாதது..

ஒரு ஆஸ்திரேலிய பழங்குடியினரின் வழக்கு மொழி ஏறத்தாழ அறுபது சதவீதம் தமிழோடு ஒத்துப்பொவதாகவும்,
மாடுகளுக்காக
தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருவிழாவை குதிரைகளுக்காக சராசரியாக அதே காலகட்டத்தில் அவர்களும் கொண்டாடுவதாகவும்,
தமிழர் புராணங்கள் சொன்ன தாயம் மற்றும் வேறு சில விளையாட்டுகளை
அவர்களும் விளையாடுவதாகவும்,
"புரம்" மாதிரியான கடைச்சொற்கள் கொண்ட ஊர்களின் பெயர்கள் அங்கேயும் சில இருப்பதாகவும்
ஒரு ஆய்வு சொல்கிறது..!

ஆக காலாகலமாக தமிழகத்தில் வாழ்ந்து,
தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றி,
ஏறத்தாழ தமிழையே பேசி,
நேற்றைய தமிழ் நிலப்பரப்பில் இப்போது வாழ்பவர்களின் அடையாளம் என்ன??

இலங்கையில் வாழும் நம் உடன்பிறப்புகள் கூட இலங்கை தமிழர் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறார்கள்..!!

ஏழு தலைமுறைக்கு முன் வாழ்ந்த என் மூதாதையரின் தாய்மொழி தமிழ் தான் என்பதன் உத்திரவாதம் அல்லது ஆதாரம் என்ன??

சில நூறு தலைமுறைகள் பின்னோக்கி நம் ஒவ்வொருவரின் வரலாறையும் ஆராய்வோமானால்
நம்மில் பலரும் தமிழனென்ற அடையாளம் தொலைத்து அநாதையாகவே நிற்போம்..

இதன்படி பேச போனால் பல டார்வின் தியேரிகளையும் களைய அவசியம் ஏற்படும்..

திராவிடர்கள் போக தமிழர்கள் பிறக்க,
தற்போதைற மொழி, இன, புவியியல், அரசியல் காரணங்களால் இன்னும் சில நூற்றாண்டுகளில் தமிழனென்ற இனம்
இதே அல்லது வேறேதோ நிலப்பரப்பில்,
இதே அல்லது வேறேதோ பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் அல்லது அடையாளங்கள் அழிந்து காணாமலேயே போயிருக்கலாம்..!!

நம் கண் முன் அழிந்த மொழிகள் பலவை போல மொழி சார்ந்த இனத்தின் அடையாமும் கூட என்றோ ஒரு நாள் அழியப்போவதே..!

மேற்கண்ட எல்லா இடத்திலும் தமிழனென சுட்டிக்காட்டியிருந்தாலும்,
இது எல்லா இனத்தவருக்கும் பொருத்தமானதே..!!

ஒரு இனத்தின் ஆயுள் அல்லது அடையாள தற்காப்பு விகிதமானது நிலத்தையன்றி மொழியின் வீரியத்தை சார்ந்தது..

நாம் தமிழை பேச மறக்க சில நூறு ஆண்டுகளில் மொழியை பிரிந்த தமிழனென்ற இனம் தன் அடையாளத்தை இழக்க நேரிடலாம்..!!

பயண்படுத்தபடாத விரல்கள் நாட்பது தலைமுறைகளுக்கு பின் எப்படி முடமாகுமோ அதே போல் தான் மொழியானதும்..!!

தமிழனென்ற கர்வம் அணைவருக்கும் உண்டு...

இருப்பினும்

நிறம் ஜாதி மதம் மொழி நிலம் போல இனமென்ற ஒரு அடையாளமும் மக்களை பாகுபடுத்தும் ஒரு விஷயமே..!!

இலங்கை இனபடுகொலைக்கு குரல் கொடுக்கும் நாம்,
காஸா பகுகொலைக்கு அனுதாபப்படும் இஸ்லாமியர்கள் முகத்தில் மட்டும் மதச்சாயம் பூசுகிறோம்..

காணாமல் போன ஏதோ ஒரு நாட்டு விமானத்துக்காக கண்ணீர் வடிக்கும் நம்மில் பலரும் கூட
இன மொழி பாகுபாடுகளை நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரிப்பவர்களே..!!

மதத்தை மட்டுமின்றி மொழி இனத்தை தாண்டிய மனிதத்தை பிற இன மத மொழி நில மக்களிடமும் பார்க்க வேண்டுமென்பதற்காகவும்
அப்பா பெயர் முதல் இன சார்ந்த தனிமனிதனின் கர்வம் வரை எதுவுமே நிரந்தரமற்றது என்பதையும் உணர்த்தவே இப்பதிவு..!!

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் அவன்தன் இன மொழி மத ஜாதியின் அடிப்படையில் வெவ்வேறு நிற ரத்தம் ஓடும்போது இப்பிரிவிணைகளை படுகொலைகளை தலைத்தூக்க செய்யலாம் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம்..!

அதுவரை

எல்லா நாட்டவரிடமும் மொழியினரிடமும் இனத்தவரிடம் ஜாதி மதம் மறந்து மனிதம் பார்ப்போம்..!!

♡♥♡அணைவரையும் அரவணைப்போம்..!!
அன்பை நோக்கி பயணிப்போம்..!! ♡♥

உங்களில் ஒருவன்
ராஜ்குமார் ராஜதுரை

3 comments:

  1. // எல்லா நாட்டவரிடமும் மொழியினரிடமும் இனத்தவரிடம் ஜாதி மதம் மறந்து மனிதம் பார்ப்போம்..!! // நல்ல சிந்தனை :)
    // நிறம் ஜாதி மதம் மொழி நிலம் போல இனமென்ற ஒரு அடையாளமும் மக்களை பாகுபடுத்தும் ஒரு விஷயமே..!! // உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.. :-) தொடர்ந்து ஆதரவுங்க... :-)

      Delete
  2. அருமையான பதிவு

    ReplyDelete