Sunday, December 20, 2020

நீண்ட இரவு

ராவா பகலான்னே தெரியாத மாதிரி வானம் இருட்டிக் கிடக்கு...
ரெண்டு நாளாக நிக்காத மழை..
ஊர் அல்லிக்குளம் நிரம்பி ரெண்டு படித்துறையும் மூழ்கிருச்சு... 
சுத்திருக்குற கருவக்காடு முழுக்க ஏரிக் கணக்கா தண்ணி...
ஆளு யாரும் வயக்காட்டுக்கு போகனும்னா கூட மேடு பள்ளம் தெரியாது.
காலுக்கு கீழ நழுவுறது பாம்பா தவக்களையானு யூகிக்க முடியாது.

ஆடு மாடெல்லாம் கொட்டாயில கட்டுன மொளக்குச்சிய தாண்டி ரெண்டடி கூட நகர முடியாம சேறு வேற சாணி வேற தெரியாம  ஒன்னுமண்ணா விழுந்து கிடக்கு...
அடிச்ச காத்துல முருங்கமரத்துலருந்து மூங்கிமரம் வரைக்கும் அத்தனையும் அங்கங்க கெளக்கெளயா சாஞ்சு கிடக்கு..
நிறைய இடத்துல கரண்ட்டு கம்பி அறுந்து போனதுல ரெண்டு நாளா எல்லா வீட்டுலயும் மண்ணெண்ண விளக்கு தான்.

மழைக்கு முன்னயே விறகையும் வரட்டியையும் கூரைக்குள்ள அடுக்கிக்கிட்ட வீடுங்கள்ல மட்டும் வயித்துக்கு கொஞ்சம் சோறு பொங்க முடிஞ்சுது.
மத்த வீட்டுலயெல்லாம் கஞ்சிக்கு என்ன கதியோ!! பக்கத்து வீட்டுக்காரனுக்கே தெரியாது. 

தண்ணி நிரம்ப வரப்பை உடைச்சு விடனுமேனு ஒருத்தரும் கவலைப்பட வேண்டாத மாதிரி, கம்மா காவா மட்டத்துக்கு நாத்தாங்கா மொத நட்டது வரை அத்தனையும் மூழ்கி கிடக்கு.
மொத்த ஊருமே வேலை வெட்டிக்கும் போகாம கடைகன்னிக்கு போகாம வீட்டுக்குள்ளயே முடங்கி போச்சு.


ஆடியோடு நீலாவுக்கு வயசு இருவத்தி மூனு.
கனுக்காலுக்கு கீழ பாவாடை தரையை கூட்டும்.
இறுக்கிக் கட்டும் தாவணிக்கட்டில் கழுத்துக்கு கீழ் நூலளவு தோலை கூட தேடினாலும் தவறியும் பார்த்திட முடியாது.
தெருவில் நடந்து போனால் விடலைகள் சொக்கி நிற்பார்கள்.
அவ எனக்கு தான் எனக்கு தான் என்று அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வார்கள்.
அதற்காக தனியே தங்களுக்குள்  பந்தயங்கள் வைத்துக்கொள்வார்கள்.
பங்காளி பயலுக சில பேர் இவளுக்கு அண்ணன் முறைல பொறந்து தொலைச்சுட்டோமேயென தமக்கு தாமே நொந்துக்கொள்வார்கள்.

புயலோடு
ஒத்தவிளக்கு வெளிச்சத்தில் ரேடியோ கேட்டுக்கொண்டு இருந்தாள் நீலா.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புயலால் தமிழகத்தில் எல்லா கடலோர மாவட்டங்களிலும் இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
பிஓபி பூஜ்ஜியம் மூன்று என்று பெயரிடப்பட்ட இந்த புயல் நாளை காலை கரையை கடக்கும் என்று,

ரேடியோவை நிறுத்திவிட்டு பூட்டியிருந்த கதவருகே சென்றாள்.
அப்பாவும் கைக்காரு சித்தப்பாவும் பேசிக்கொண்டு இருந்தனர்.

கைக்காரோட நிஜப்பெயர் வேல்முருகன்.
நாப்பத்தஞ்சு வயசாகியும் கல்யாணம் பண்ணிக்காத மனுசன்.
யாரும் அவருக்கு பொண்ணு கொடுக்க தயாரில்லை.
அதான் நிஜம்.
எப்ப பாரு குடி... மதியம் ஆகிட்டாலே மூட்டைய உடைச்சு முழுங்கிட்டு எங்கேயாவது விழுந்து கிடப்பவருக்கு யாரு பொண்ணு கொடுப்பா!?
ஒரு கால் வேற நடக்க வராது.
ஒரு பக்கமாக ஊணி ஊணி நடப்பார்.
எப்பவும் கோவில் வாசல்ல சின்னப்பசங்களை உக்கார வெச்சு வம்சம் பரம்பரை என்றெல்லாம் மும்முரமாக கிளாஸ் எடுத்துக்கொண்டு இருப்பார்.
ஊருல கிரிக்கெட் தோரணமெண்ட் வந்துட்டா போதும்... தெரு பசங்களுக்கு புது பேட் பந்தெல்லாம் வாங்கி தந்து அமர்க்களப்படுத்தி விடுவார்.
வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்.
அவர மாதிரி ஒரு மேஸ்திரி ஊருல கிடையாது.
அதனால கைக்காரன்ங்கறது அவர் தொழிலுக்கு கிடைத்த பட்டப்பெயர்.

கதவிடுக்கு வழியே காதில் வாங்கினாள் நீலா,

எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன்டா...
கேக்குற மாதிரியே தெரியல...
போன வாரம் குளத்தாங்கரைல அந்தப் பய கூட நின்னு பேசிட்டுருந்தானு சுந்தரம் வந்து சொல்றான்..
வெளிய தல காட்ட முடியல...
மெரட்டியும் பாத்துட்டேன் கால்ல விழுந்து கெஞ்சியும் பாத்துட்டேன்‌‌...
புடிச்சப் புடில நிக்கிறா...
சொந்தக்காரப் பயளுக எவனுக்காவது பாத்து கட்டிக்கொடுத்துடலாம்னாலும், ரெண்டாநாளே தாலியத்துட்டு வீட்ட விட்டு அவன் கூட ஓடிருவேன்றா ஓடுகாலிக் கலுத...
அப்டியெதும் நடந்துட்டா நான் நாண்டுக்கிட்டு தொங்குறத விட வேற நாதியில்ல கைக்காரா...

நீ நிச்சியமா சொல்லுணே...
அப்பறம் போனா வராது...

அப்புடி எதும் பெத்த பாசம் இருந்தா நான் ஏன்டா உன்ன கூப்புடுறேன்!?
முடிச்சு வுட்ரு...

பெருமழைக்கு நடுவே ஒரு பேரிடி இடித்தது...

மேல் தாழ்ப்பாளையும் சேர்த்து சாத்தினாள் நீலா.
பக்கத்திலிருந்த பீரோவை நகர்த்தி கதவோடு சேர்த்து அணைத்தாள்.
பதட்டத்தில் கைகள் உதறின.
சொம்பில் இருந்த தண்ணீரை ரெண்டு மொடக்கு முழுங்கினாள்.
தொண்டைக்கு கீழ் தண்ணீர் இறங்க மறுத்தது.
வீட்டிலிருந்து தப்பிக்கவே முடியாது.
அது ரொம்ப நல்லாவே தெரியும்.
தெருவை தாண்டி ஓடும் முன்னரே விரட்டி பிடித்து விடுவார்கள்.
அப்பறம் அவர்கள் விரும்பியபடியே கழுத்தையறுத்தோ விஷம் ஊற்றியோ தூக்கில் தொங்க விட்டோ கொண்று விடுவார்கள்.
நிச்சயம்.!
தான் கொல்லப்பட்ட பிறகு சந்துருவும் இவர்களால் கொல்லப்படலாம்.
அது ரொம்ப சுலபம்.
பாவம் அவனுக்கு கேட்பார் கிடையாது.
தான் தற்கொலை செய்துக்கொண்டு விட்டதாக மட்டும் யாரும் நினைத்து விட கூடாது.

ஒரு லெட்டர் எழுத வேண்டும்.
பேப்பரை தேடினாள்.
எதுவும் அகப்படவில்லை.
நேற்று வாங்கிய ராணி கிடந்தது.
ஏதோ ஒரு பக்கத்தை கிழித்தாள்.
கிழித்த பக்கத்தில் சிரித்துக்கொண்டு இருந்த நடிகையின் நெற்றியிலிருந்து எழுத ஆரம்பித்தாள்,

அன்புள்ள சந்துருவுக்கு,
என்னய கொலை செய்ய என் அப்பா திட்டம் தீட்டுகிறார் காலைல எப்படியும் நான் உயிரோடு இருக்க மாட்டேன் நீ பத்திரமாக இரு எங்காவது வெளியூருக்கு போய் விடு இந்த சமூகத்தில் நாம் வாழ்வு

பென்சில் உடைந்தது.

நீலா... கதவை திற... அப்பா கதவை தட்டினார்.

இருங்கப்பா வரேன்...

பேப்பரை நான்காக எட்டாக மடித்துக்கொண்டே
ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள்.
பேய் மழை பெய்துக்கொண்டு இருந்தது.

தலையில் கோணியை சாத்தியபடி லாந்தர் விளக்கோடு எங்கோ சென்றுக்கொண்டு இருந்தான் செல்வராசு.
அவனுக்கும் ஜன்னலுக்கும் ஏழெட்டடி தான் தூரம் இருக்கும்.
ஆனால் அடிக்கும் சாரலிலும் காற்றிலும் நீலா கத்தினாலேயொழிய அவள் அழைப்பது அவன் காதில் விழாது.

சத்தமாகவும் கூப்பிட வேண்டும், கதவுக்கு பின்னால் இருக்கும் அப்பாவுக்கும் அது கேட்க கூடாது...

செல்லம்.... டேய்... செல்லம்...

பக்கத்திலிருந்த வலையல் பெட்டியை தூக்கி ஜன்னல் வழியே வெளியே வீசினாள்...

செல்வராசு சுதாரித்தான்..

என்னம்மா?? என்னாச்சு??

இந்தா டா... இதை புடி...  பேப்பரை செல்வராசு கையில் திணித்தாள்...

எவ்ளோ நேரம் நீலா??? உள்ள என்னா பண்ற???


வரேன்.... மாட்டுக்கு வெக்க அள்ளி போட கொட்டாப்பக்கம் போனேன்... துணி நனைச்சுருச்சு... அதான் வேற தாவணி மாத்திட்டுருக்கேன்...

சீக்கிரம் ஆகட்டும்....


டேய்... இதை எப்படியாவது கொண்டு போய் கீழத்தெரு சந்துரு அண்ணன் கிட்ட குடுத்துடுடா... அக்காவுக்காக இதை பண்ணுடா செல்லம் கெஞ்சிக்கிறேன்டா...

என்னம்மா இது பேப்பரு??

 எதுவும் கேக்காத... இதை எடுத்துட்டு முதல்ல இடத்தை காலி பண்ணு.... போ... விரட்டினாள்.


செல்வராசு எதிர்வீட்டு முருகேசன் சித்தப்பா புள்ள.. சித்தப்பா தான் ஆனா கொஞ்சம் தூரத்து பங்காளி முறை ஆகும்.
செல்வராசுக்கு ஒரு வயசு ஆகுறதுக்கு முன்னவே அவன் அம்மா தீக்குளிச்சு செத்து போச்சு.
பொண்டாட்டி மேல சந்தேகம்.
நெதம் புருசன் பேசுற சொல்லுக்கு அஞ்சியே உசுர மாய்ச்சுக்கிச்சு பாவம்.
சித்தப்பாவோட கேள்விய விட
சாவுற அன்னிக்கு மொத்தமா சுடுற கங்கு பெருசா வேக வெச்சுடாதுனு நினைச்சுதோ என்னவோ தெரியல. 
ஆனா அந்த சித்தி ரொம்ப தங்கமானவங்க..
நான் எப்போ வீட்டுக்கு போனாலும் பானைல போட்டு வெச்ச அவங்க தோட்டத்து மாம்பழம், நெல்லிக்கானு என்னையே பவுனா  பாத்துப்பாங்க.

அவங்க செத்ததுக்கு அப்பறம் செல்வராசு பாதி கிழமை எங்க வீட்டுல தான் வளந்தான்.
பாதி கிழமை ஸ்கூல்ல என் பக்கத்துல தான் உக்காந்துருப்பான்.
தீவாளிக்கும் பொங்கலுக்கும் ஜவுளி போட போனா அவனுக்கும் சேத்து தான் ஒரு சட்டை எடுப்போம்‌.
அவனுக்கு மூனு வயசு இருக்கும்போது எங்க பெரியாத்தா அவன் கிட்ட ஆயாவ கட்டிக்கிறியானு கேட்டப்ப, இல்ல நான் நீலாக்காவ தான் கட்டிப்பேன் அப்டினான்.
என் மேல அவ்ளோ பிரியம்.
ஊரு பசங்க ஸ்கூல் பசங்கனு எனக்கு வந்த லவ் லெட்டர்ல பாதிக்கு அவன் தான் போஸ்ட்மேன்.

அஞ்சு வயசு வரைக்கும் அவனுக்கு பேச்சு வராது..
அதனால அவனுக்கு ஊமப்புள்ளனு பேரு. இப்பவும் கூட எங்க பெரியாத்தா அவன அப்படி தான் கூப்பிடும்.
சின்ன புள்ளையாருக்குறப்ப மடில தூக்கி வெச்சுட்டு வாய்ல பச்சரிசிய அள்ளி போட்டுக்கிட்டு நான் தான் அவனுக்கு பேச்சு பழக்குனேன். 
என் உள்ளங்கைலயே வளந்த புள்ள..
பத்தாவது பரீட்சைக்கு அப்பறம் தான் இப்பலாம் ரெண்டு மூனு வருசமா வீட்டுக்கெல்லாம் வரதில்ல.
நான் அவன செல்லம்னு தான் கூப்டுவேன்.. அவன் என்ன அம்மானு கூப்பிடுவான்..

இப்ப கதவ திறக்குறியா இல்லையா நீ???

இருங்கப்பா வரேன்...

பீரோவை சன்னமாக நகர்த்தி விட்டு கதவை திறந்தாள்.

இப்ப எதுக்கு நொய் நொய்னு கதவ தட்டிட்டு இருக்கீங்க??

செல்லியாயி கோயிலு படையல் கஞ்சி கொண்டாந்தான் கைக்காரன்... இந்தா குடிச்சுட்டு போ...டம்ளரை நீட்டினார்.

இல்ல எனக்கு பசிக்கல...

கோயில் கஞ்சி... 
ராவுக்குள்ள மொடக்கனும்... குடிச்சுட்டு படு...

எனக்கு பசிக்கல... வேணாம்னு சொல்றேன்லா!?

வெளிக்கதவை தாழிட்டு விட்டு சேலை முந்தானையில் வாயை மூடி சமையற்கட்டு பக்கம் ஓடினாள் அம்மா.

பளாரென்று நீலாவை கன்னத்தில் அறைந்தான் கைக்காரன்.

கையிலிருந்த டம்ளரை தட்டி தூக்கியெறிந்தாள் நீலா..

கழுத்திலிருந்த துண்டை எடுத்து நீலாவின் கைகளை பின்னால் கட்டினான்.

ஐய்யயோ என்ன கொல்லுறாங்களே.... கேக்க ஆளில்லயா.... கத்த ஆரம்பித்தாள்... கொலை பண்ண பாக்குறாங்களே... அம்மா நீயாவுது கேளேன்மா... அடிக்கிறான்மா... ஐயோ... காப்பாத்துங்களேன் யாராவது... அப்பா.... உன் முன்னயே அடிக்கான்ப்பா.. கேளுப்பா அப்பா....

அடிக்கும் புயலில் அவள் கத்தியது எதுவும் வெளியே கேட்கவில்லை.

சத்தம் வராமல் தலையில் அடித்துக்கொண்டு வெளியே கிளம்பினார் நீலாவின் அப்பா...


நீலாவின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து
கால் முட்டியை மடக்கி
மல்லாக்க கிடந்தவளின் கழுத்தில் அணைத்தான் கைக்காரன்.

குரல்வளை இறுகி கண்கள் வெளியே பிதுங்கின...
இருமினாள்... திமிரினாள்... திணறினாள்...இரைத்தாள்..
 மூச்சு விடுவது முடியாமல் தலையை சிலுப்பினாள்.. கண்ணீர் கசிந்தாள்...

கையிலிருந்த கொல்லித்தண்ணியை  வாயில் ஊற்றினான்.

என்ன கொண்ணாலும் என் கட்ட வேகாதுடா....என்ன மாச்ச  எல்லா பயளும் மண்ணா தான்டா போவிங்க... கஷ்டப்பட்டு அரை தொண்டையில் பேசினாள்...

இன்னொரு பளார்...
கால் முட்டியால் நெஞ்சில் ரெண்டு இடி இடித்தான்.

முழுவதும் காலியான மருந்து பாட்டிலை தூக்கி தூரம் வீசினான்.

அரை மயக்கத்தில் இருந்தாள் நீலா...

கையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தன் தலையில் கட்டிக்கொண்டு வெளியே வந்தான் கைக்காரன்.

அம்மா... என்ன காப்பாத்தேன்மா... தண்ணி குடுமா தொண்டயெல்லாம் எரியுது.... தாங்க முடிலமா... 
நெருப்பு வெச்சாப்ள இருக்கு... தண்ணி ஊத்துமா... நெஞ்சு கரிக்கிம்மா... முடியலம்மா... பச்சத்தண்ணிக்கி பிச்ச கேக்க வெக்கியேம்மா...தண்ணிம்மா... ம்மா...

நீலாவை நோக்கி ஓடியவளை சவட்டி நிறுத்தினான் கைக்காரன்..
என்ன பண்ண போற??? ஒம்பொண்ணோடச் சேத்து ஒன்னயும் நசுக்கிருவேன்... .போய் ஓரமா உக்காரு என்றான்...

முந்தானையில் முகம் பதுக்கி ஓரமாய் உக்கார்ந்து மௌன ஒப்பாரி வைத்தாள் அம்மா...

இழுத்துட்டு கிடக்குணே!
இப்டியே கொண்டு பொய் கொளுத்திடுவோம்.. உசுரு போவுற வரை உக்காந்துருந்தா ஆவாது‌‌... காத்தோட காத்தா கொண்டு போய் தள்ளிருவோம்... புயல் காத்தோட போயிருச்சுனா சத்தமில்லாம முடிஞ்சுரும்.. அதாஞ்சரி...

என்னமோ பண்ணுடா என்ன கேக்காத என்று ஓரமாக போய் உக்கார்ந்து விட்டார் நீலாவின் அப்பா.

பின் வாசலை திறந்து வெளியே எட்டி பார்த்தான் கைக்காரன்.

பங்காளிக்கார விடலைக நாலு பேர் மரத்தடியில் நின்றுக்கொண்டு இருந்தனர்.

டேய்... பெருமாளு... கதிரேசா...சுரேசு...

ஓடி வந்தவன் மூன்று பேரும் ஆளுக்கொன்றாய் சொல்லு மாமா சொல்லு சித்தப்பா என்றார்கள்.

சேதி தெரியுமா???

அம்மா சொன்னுச்சு மாமா... இப்பவா காலைலயா?? என்றான் கதிரேசன்.

பாதி முடிஞ்சுருச்சு... இப்பவே அள்ளி போட்டுட வேண்டியது தான்... ஒருத்தன் மட்டும் வந்து கைய புடி... மித்த பேரு அங்கங்க கிடக்குற டயரு ட்யூபயெல்லாம் அள்ளிட்டு வாங்கடா.. கட்ட எப்டி வேகாம போகுதுனு இன்னிக்கு பாத்துடுறேன்...

கதிரேசனும் கைக்காரனும் ஆளுக்கொரு கையாக பிடித்து நீலாவை கயித்து கட்டிலில் கிடத்தினர்.

அதுவரை சத்தம் வராமல் சும்மா அழுதுக்கொண்டு மட்டுமே இருந்த அம்மா ஓடிப்போய் ஒரு இனுக்கு குங்குமத்தை கொண்டு வந்து நீலா நெற்றியில் வைத்துவிட்டு ஓவென்று ஒப்பாரி வைத்தாள்.

இதுக்கெல்லாம் இப்ப நேரமில்லந்தா... 
ஒரு வாரம் சென்டு எல்லாத்தையும் வெச்சுக்க....என்று விட்டு கயித்து கட்டிலை ஆளுக்கொரு காலாக பிடித்து தூக்கினார்கள்.

அரை மயக்கத்தில் பெனாத்திக்கொண்டே கிடந்தாள் நீலா.

அடிக்கும் மழை கட்டிலோடு சேர்த்து மொத்தமாக அனைவரையும் நனைத்திருந்தது.

ஊரே ஒரே இருட்டு..

பின் வாசல் வழியாகவே சுடுகாட்டுக்கு கட்டிலோடு தூக்கி சென்றார்கள்.

விரிந்திருந்த இருளுக்கு நடுவே மின்னலொன்று பளீரென விளக்கெரிக்க,
கட்டிலின் வலது பின்னங்காலை தூக்கி வருவது செல்வராசு என்று கவனித்தாள்..

உளறும் வாக்கியத்தில் கைகளை நீட்டி...

டேய்... செல்லம்... லட்தர குடுட்டியாடா???

நீட்டிய நீலாவின் கைகளை தட்டிவிட்டு செல்வம் சொன்னான்,

ஏன்டி தேவிடியா... உனக்கு இங்கன உள்ளவன்லாம் ஆம்பளயா தெரியல... கீழத்தெரு பய கேக்குதா?? செத்தொழிடி முண்ட...

அடுத்த நொடி வெட்டிய மற்றொரு மின்னலின் வெளிச்சத்தில் சுற்றியிருந்தவர் யார் முகங்களும் நீலாவுக்கு தெரியவில்லை.