Saturday, July 23, 2016

பா.ரஞ்சித்தும் நானும்

மங்காத்தாவின் ஒரு இன்டெர்வ்யூவின் போது வெங்கெட்பிரபு ஒருவரை அழைத்து,
இவன் என் அஸிஸ்ட்டன்ட்....இப்போ படம் பண்ணிட்டுருக்கான் தனியா... சின்சியரான பையன்... ஃப்யூச்சர்ல பெருசா வருவான் பாருங்க என்றபோது கிடைத்தது ரஞ்சித்துடனான எனது முதல் அறிமுகம்.

அதன் பிறகு 4-5மாதங்களில் அட்டகத்தி ரிலீஸ்.
இது மெட்ராஸா என பலரையும் வியப்படைய செய்யும் கதைக்களம்.
முதல் படத்திலேயே தமிழ் திரைப்படத் துறையின், எழுத்தாளர்களின் இயக்குநர்களின், பெரும்பாண்மை மக்களின்/ரசிகர்களின்
மெட்ராஸ் மற்றும் அதன்சார் ஜனங்களின் வாழ்வியல் சூழல் மீதான பார்வையை பெரிதாய் சாடியிறுந்தார்.

இத்தனை காலமாக ஒரு குறிப்பிட்ட பகுதிசார் பிரிவுசார் ஜனங்கள் மீதான தமிழ்சினிமாவின் காட்சி மற்றும் கதாப்பாத்திர சித்தரிப்பு & கட்டமைப்பு மீதான பெருங்கோபமது.
மதுரக்காரன் திருநெல்வேலிக்காரன்னா வீரனுங்க ரோஷக்காரனுங்க என்பது மாதிரியான கட்டமைப்புகளும்
வடசென்னை மக்கள் பொறுக்கிங்க பொண்ணுங்க மூஞ்சில ஆசிட் அடிக்கிறவனுக, 3வது 4வது கட்ட அடியாளுங்க என்பது மாதிரியான சித்தரிப்புகளும் 70-80களிலேயே வர தொடங்கிவிட்டன.

அந்த பார்வையை மாற்ற முயற்சித்து
நீங்க நினைக்கிற மாதிரி இல்ல....நாங்க வேற....என்பதை ஜாலியான ஒரு திரைக்கதையில் அழுத்தன உண்மைகளுடன் பிண்ணியிருப்பார் ரஞ்சித்.

அட்டகத்தியின் ரிலீஸுக்கு பிறகு
வெகுசில ரசிகள்களின் பார்வையில் மெட்ராஸ் வேறு மாதிரி தெரிந்திருக்கலாம்.
வடசென்னையும் அட்டகத்தியும் ஒரே நேரத்தில் எனக்கு அறிமுகமான விஷயங்கள் என்பதால்
பர்ஸ்னலாக அட்டகத்தி என் மனதிற்கு நெருக்கமான படமானது.

அதன்பிறகு மெட்ராஸ் பட ரிலீஸ்.
பரவலாக எல்லாத் தரப்பட்ட மக்களிடையேவும் பெரியதாய் பல்வேறு விதமாகவும் விமர்சிக்கப்பட்ட திரைப்படம். உயர்குலத்தை சேர்ந்த நாயகன் குழந்தையில் இடம் மாறி தாழ்த்தப்பட்டவனாக வளர்ந்து பின்
அதே உயர்குலத்தை எதிர்ப்பான் என்பது ஒரு டெம்ப்ளேட்.
இத்தனைக்கால தமிழ் சினிமாவில் அதிகபட்ச தாழ்த்தப்பட்டோரை ஆதரிப்பது மாதிரியான காட்சிகள் என்றால் அது,
கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு அந்த உயர்சாதியினனாக கருதப்படும் குற்றவாளியையே கல்யாணம் செய்து வைப்பது, பண்ணையார் பிறந்தநாளன்று அனைவரையும் வரிசையில் நிறுத்தி கோல்டன் பேப்பர் ஒட்டிய மிட்டாயை கைநிறைய அள்ளிக் கொடுப்பது, பந்தியில் அமர்த்தி சோறு போடுவது
மாடியிலிருந்து பணத்தை பொறுக்கிக்கோங்க என அள்ளி வீசுவது & வேட்டி சேலை தருவதாக மட்டுமே இருந்தது.
அதோடு பல எஜமான்களின் காலடி மண்ணெடுத்து பூசிக்கொள்வதையும்
நாயகன் வண்டி வருவதை கண்டு துண்டை எடுத்து அக்குளில் சொறுகிக்கொள்வதையும் நாயகன் பெரும் மரியாதைக்குரியவனென சொல்கையில் அதை நாம் ஆர்கசமாகி ரசித்துக்கொண்டிருந்த அதே காலத்தில்
இரணியன் மாதிரியான தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக குரலெழுப்பும் அதே சாதியை சார்ந்த நாயகன் மாதிரியான படங்களும் அவ்வபோது அத்தி பூத்தாற்போல் வந்தது.

இந்த டெம்ப்ளேட்டுகளின் வெகுகால இடைவெளிக்கு பின் வந்த மெட்ராஸ் பலரையும் கவர காரணமிருந்தது.
கதைப்படி நாயகனான அன்பு கேரக்டரின் அறிமுக காட்சியிலேயே,
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதிலேயே நம்ம ஜனங்களின் வெற்றியும் முன்னேற்றமும் இருக்கு எனக் கூறுவதோடு
அன்புவை சார்ந்த பிற கேரக்டர்களையும் அதே பாதையிலேயே பயணிக்க செய்திருப்பார் ரஞ்சித்.
மக்களை புரட்சியெனும் பெயரில் கலகத்திற்குட்படுத்தி சண்டையிட்டு சாவதெனும் சிந்தனையை தவிர்த்து
அரசியல் அதிகாரத்தை பிடிக்கவேண்டுமென்பதையும்
கற்பித்து தம் மக்களை
உயர்குலமாக தம்மை எண்ணிக்கொள்வோர்க்கு சமமான இடத்தில் அமர்த்த வேண்டுமென்பதையும் அது தான் உண்மையான புரட்சியென்பதையும் கூறியிருப்பார். உரிமை கேட்டு பெறுவதல்ல எடுத்துக்கொள்வது.
இப்போதைய சூழலில்
அதை கல்வியால் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியுமென்பதை அன்பு கேரக்டர் பெரிதாய் பிரதிபலித்தாலும்
அடக்குமுறைக்கெதிரான குரலையும் சுவர்சார் பிரச்சனைகளின் வழியாக அவ்வபோது எழுப்பிக்கொண்டிருக்கும்.

இதில் காளி கையாளும் வன்முறை கூட நண்பன் மீதான பாசத்தில் உணர்ச்சிவசப்பட்டு நடப்பதாகவே காட்டப்பட்டிருக்குமே தவிர
அதில் சாதிய வன்மம் எங்குமிருக்காது.
ஒவ்வொரு வன்முறை காட்சியும் (காளி கண்ணனை தாக்க செல்வது தவிர, அதுவும் அன்புவின் பிரிவு காரணமான விரக்தியினாலேயே தான் இருக்கும்) தாக்க வருபவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள திருப்பியடிப்பதாக மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும்.

மாரியின் துரோகம் அறிந்தவுடனும் கூட தாக்காமல் அவனை அரசியலிலிருந்து அகற்றி அநாதையாக்க வேண்டுமென்றே சொல்வான் காளி.
மெட்ராஸை பொறுத்தவரை க்ளைமேக்ஸை சுவற்றில் பெயின்ட் ஊற்றுவதோடு முடித்திருக்கலாமென்பது மட்டும் உறுத்தல்.
கமர்ஷியலிசத்திற்காக க்ளைமேக்ஸ் சண்டைகாட்சி தேவையற்றதாக தோண்றியது.
கண்டிப்பாக இது அடக்குமுறைக்கு எதிரான ஒரு படம் தான்..
மற்றபடி மெட்ராஸ் தலித்திய பெருமை பேசுவதாக கூறுபவர்கள் இதில் பெருமை என்பது எது, எதை சார்ந்தது என்பதை விளங்கிக்கொண்டு எனக்கும் விளக்கினால் நன்றாக இருக்கும்.

போ அங்க.... அடங்கி போறதெல்லாம் அந்த காலம் என்பது மாதிரியான வசனங்களை துணை பாத்திரங்களை பேச வைத்த ரஞ்சித் ரஜினியை எப்படி கையாண்டிருப்பார் என்ற பயம் டீசர் ரிலீசின்போதே பலருக்கும் இருந்தது.

தலித்தியம் பேசுபவராக, அவர்களில் ஒருவராக மட்டுமே ரஞ்சித்தை தமக்குள் ரிஜிஸ்டர் செய்துவிட்டவர்களுக்கு மத்தியில் எனக்கு அவர் அடக்குமுறைக்கு எதிரானவர் எனும் வகையறாவில் தான் தெரிந்தார்.
மெட்ராஸிலும் அட்டக்கத்தியிலும் நான் கவனித்தது அப்படியொரு கோவக்காரனையும் கலகக்காரனையும் தான்.

மலேசியவாழ் தமிழர்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான படம் கபாலி.
100% இது ரஞ்சித்தின் ஏரியா தான்.
ப்ளாட்ஃபாம் இது தான்.
அதை தான் ஒரு கம்யூனிசவாதியாக பொறுப்பேற்று அதற்கான வேலையை செய்திருக்கவேண்டும் ரஞ்சித்.
ஆனால் மக்களின் தம் மீதான எதிர்பார்ப்பு என்னவென்பதை அறிந்திருந்ததாலோ என்வோ ஏற்பட்ட சறுக்கல் தான் திரைக்கதையை சொதப்பியிருக்கிறது.
கூடுதலாக ரஜினியெனும் கமர்ஷியல் ஜெய்ன்ட்டை உருவகப்படுத்த
தமக்குள் கட்டுப்படுத்த எடுத்த முயற்சி சின்னதாய் சறுக்கியிருக்கிறது.
கதையோட்டத்தில் ஆங்காங்கே திணிக்கப்பட்ட தேவையற்ற வசனங்களும் காட்சியமைப்புகளும் கதைப்போக்கை சலனப்படுத்தியிருக்கிறது.

பாடல்கள் ரிலீசாகி அனைவராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு
வரிகளெல்லாம் ஏனோ மெட்ராஸ் படத்திற்கு முரணாகவே தெரிந்தது.
நிச்சயம் இரண்டும் வெவ்வேறு கதைக்களம் கொண்ட படங்கள் தானெனினும்
வன்முறை அரசியலில் ஆர்வமில்லாதவராக நான் நினைத்துக் கொண்டிருந்த ஒருவர்
இவ்வளவு அடிதடியான வரிகளை பாடல்களில் புகுத்தியிருப்பது ஆச்சர்யமளித்தது.
மெட்ராஸோடு ஒப்பிட்டு பார்த்ததில்
ஆரம்ப காட்சியில் வரும் சண்டை ரஜினியிசத்திற்கானதென்றும்
க்ளைமேக்ஸ் சண்டை காட்சி கமர்ஷியலிசத்திற்கானதென்றும் புரிந்துக்கொள்ள முடிந்தது.
குமுதவள்ளியை சுடுவதற்கு பின்னாலான சண்டைகாட்சி கூட எமோஷனல் டேமிற்கு கீழே தான் வருகிறது.
ஆளுமையை அழிக்கும் புரட்சியென்றால்
வில்லனில் முழு நெட்வர்க்கையும் அழித்ததோடு மட்டும் நிறுத்தியிருக்கலாம் தான்.
ஆனால் அங்கே வேலை செய்த ரஜினியிசம் தான் க்ளைமேக்ஸ் வன்முறையை கையிலெடுத்திருக்கிறது.

கோட்டு போடுவதற்கு காரணம் சொல்வதிலும்
வில்லன் அதை கழட்ட சொல்வதிலும் மறைமுக காரணம் சொல்லியிருந்தாலே நாங்கள் விளங்கியிருப்போம். அதை நேரடியாக சொல்லியது கதைக்கு ஒப்பாக படவில்லையே தவிர சொல்லக்கூடாத விஷயமெல்லாம் கிடையாது இது.

மற்றபடி ரஞ்சித் தமக்குள் எந்த சமாதானமும் செய்துக்கொள்ளாமல் சொல்ல வந்ததை சொல்லியிருக்கிறாரா என்றால் கிட்டதட்ட......

கண்டிப்பாக ரஜினி கரியரில் இது ஒரு முக்கியமான க்ளாஸிக் எமோஷனல் ட்ராமா,
ரஞ்சித்துக்கு ஏற்பட்ட சிறு சறுக்கல்.
மீண்டு(ம்) வரவாரென நிச்சயம் நம்புகிறேன்.

இன்ன சாதியிலிருந்து எல்லாத்தரப்பட்ட மக்களுக்கும் பொதுவாக போராடிய உதவிகள் செய்த தலைவர்களையே சாதிய அரிதாரம் பூசுவதை வழக்கமாக கொண்ட நம் மக்கள், சந்தானம் கஞ்சாகருப்பு வரலாற்றை கூட தேடி பிடித்து போஸ்டர்களில் சாதிப்பெயரை மேற்கோள் காட்டும் மனநிலையில் தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆயிரமாயிரமாண்டு காலமாக அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த ஜனங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த
தன்மானத்துடன் வாழ வழிவகைச் செய்த ஒருவர்
அதே பிரிவை சாராதவர் என்றாலும் கூட
பலனடைந்த குறிப்பிட்ட பிரிவு ஜனங்களால் கண்டிப்பாக கொண்டாடப்பட வேண்டியவர் தான் என்பதில் ஐயமில்லை.
அதை சாதியமாக எடுத்துக்கொண்டாலும் சரி
நன்றியாக எடுத்துக்கொண்டாலும் சரி.

தேவர் காலடி மண்ணே என்பதும், எஜமான் காலடி மண்ணெடுத்து என்பதும் சாதியம் தான்,
மக்களின் வெற்றி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதிலேயே உள்ளது என்பதும் சாதியம் தான்.
ஆனால் இது இரண்டையும் ஒருசேர் சமநிலை நேர்கோட்டில் வைத்துப் பார்க்கும் மனநிலையை தான் நான் எண்ணி வியக்கிறேன்!!
அடங்குடா என கத்துபவன் சத்தத்தையும்
குட்டு வாங்கியவன் வலியால் கத்தும் சத்தத்தையும் கூச்சல் என்று பொதுவாக எப்படி இவர்களால் சொல்லிவிட முடிகிறது என்பது ஆச்சரியமே!
இந்த கோபம் தான் வசனங்களில் ஆங்காங்கே அம்பேத்கரை புகுத்தியிருப்பதாக பார்க்கிறேன்.

காட்சிகளில் அம்பேத்கர் எனும் வசனம் வருவதையே
தலித்தியமாக எண்ணினால் சாதி ஒழிந்துவிட்டதாக தான் உங்களால் எப்படி சொல்லி விட முடியும்.
அதை தாண்டி அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவதில் உங்களுக்கு வரும் கோவத்தின் காரணம் தான் என்ன?
அப்படியொரு கோபம் வந்தாலும் சரி அதை தான் இவர்கள் விறும்பவும் செய்கிறார்கள்.
இவர்களில் ஒருவன் வெறும் இயக்குநனாக வளர்ந்துவிட்டதை கூட சகித்துக்கொள்ள முடியாமல் தான் எத்தனை வெளிப்படையான சாதிய காழ்ப்புகள்!!
(நிற்க கபாலியை எதிர்ப்பவர் "அனைவரையும்" இதன்கீழ் கொண்டு வர நான் விறுப்பவில்லை)

###படத்த வெறும் படமா மட்டும் பாருங்கடா என குரூப்பு வரும்.... அவர்களுக்கும் ஒரு சின்ன பதிலை சொல்லி முடித்துக்கொள்கிறேன்.

இந்தியாவை பொறுத்த வரை இங்கு யாரும் திரைப்படத்தை வெறும் படமாக மட்டும் பார்ப்பதில்லை.
இங்கு ஆட்சியை மாற்றியது சினிமா.
புரட்சிகள் பல செய்தது சினிமா.
தமிழக அரசியல் கட்சிகளை சார்ந்த பெரும்பாண்மை அரசியல்வாதிகள் சினிமாக்காரர்கள்.
நாட்டுக்கு நான் நல்லது செய்ய ஆசைப்படுறேன் அதனால படம் நடிச்சு பெரியாளாகி கட்சி தொடங்கனும்ங்கறது ஆசை என நீயாநானாவில் ஒருவன் சொல்கிறான் என்றால் சினிமா என்பது அரசியலுக்கான ஒரு அடிப்படை தகுதியாகிவிட்டது.
மக்களும் அவர்களை தான் தலைவனாக குடும்பத்தில் ஒருவனாக பார்க்கின்றனர்.
சினிமாவையும் அடிப்படை வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்க தெரிந்தோர் வெகுசிலரே.!
இவர்களுக்கு மத்தியில் சினிமாவை ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக்கொண்டு போய்விட முடியாது என்பதே உண்மை!!

-ராஜ்குமார் @RajiTalks

பிணைக்காவல்

சீலிங் ஃபேன் சத்தத்தை தவிர வேறெந்த சின்ன கூச்சலும் என்னை சீக்கிரம் தூங்க விடாது.
ஒருவழியாக சன் டிவியின் நாகினி சீரியல் முடிய,
அம்மா டிவியை நிறுத்தினார்.
பக்கத்து தெருவில் யாருக்கோ கல்யாணம் போலிருக்கிறது.
ஸ்பீக்கரில் ஏதேதோ பாடல்கள்
இடைவிடாது ஓடிக்கொண்டிருந்த வண்ணமாய் இருந்தன.

##பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல முல்லைப்பூ##
கடந்து போன பல பாடல்களுக்கு பிறகும் முனுமுனுக்கச் செய்து
சிந்தனைகளை போட்டு
ஊசலாயாட்டிக் கொண்டிருந்தது.

தூங்க வேண்டுமென்பது இலக்காதலால்
மனதை களைப்படையச் செய்ய வெகுநேரமாக
சம்மந்தமில்லாத பல நிகழ்வுகளையும் எனக்குள்ளேயே ஓட்டி, செல்லரித்துக்கொண்டிருக்கும் பாடலை விரட்டிவிட முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

நேரம் 12.30 இருக்கலாம்.
எஸ்.ஐ பூபதியிடமிருந்து தொலைபேசி அழைப்பு.

சொல்லுங்க சார்....இந்த நேரத்துல??

எங்கய்யா இருக்க?

வீட்டுல சார்..

உன் வீடு எங்க அரசூர் தான!? சரி...
செல்வத்துக்கு கால் பண்ணு... பக்கத்துல தான் இருக்காப்ள..
டீட்டெய்ல் சொல்லுவாரு என்னனு கேட்டுக்க..

சரிங்க சார்.....என்றதும் பிரதி பதில் எதிர்பாராமல்
எனக்கு முன் அழைப்பை துண்டித்தார்.

இந்நேரத்திலென்றால் ஏதாவது இன்வெஸ்டிகேஷனாக இருக்க வேண்டும்.
நான் போஸ்ட்டிங்கிற்கு வந்து 2மாதங்கள் தான் ஆகிறது.
இரண்டு மாதங்களென்பது
கான்ஸ்டபிள்கள் படும் கஷ்டங்களை டிபாட்மெண்ட்டிலிருந்து நன்கு அறிந்துக்கொள்ள கிடைத்த
மிக நீண்ட கால அவகாசம்.

செல்வம் என் சீனியர்.
அழைத்து விபரம் கேட்டபோது
என் வீட்டறுகிளுள்ள ஒரு முகவரிக்கு அவசரமாக வரச் சொன்னார்.
அது அந்த தெருவிலேயே ஒதுக்குப்புறமாக தள்ளியிருக்கும் ஒரு ஓட்டு வீடு.
வீட்டை ஒட்டியிருக்கும் கொஞ்சம் கருவேலப் புதர்களை தவிர
சுற்றி 100மீட்டர்களுக்கு எதுவுமே கிடையாத வெட்ட வெளித் திடல்.

நான் போவதற்குள் மணி ஒன்றாகி விட்டது.
செல்வம் வாசலிலேயே தான் நின்றுக்கொண்டிருந்தார்.
கோபத்திலிருப்பார் போல தெரியவில்லை.

வாடா... இந்தாருக்குற தெருவிலிருந்து வர இவ்வளோ நேரமாச்சா உனக்கு.!?
உன்னையெல்லாம் என்ன சொல்றதுனு தெர்ல..

இல்லணே... காத்துல சைக்கிள் மிதிச்சுட்டு வர கொஞ்சம் கஷ்டமாகிருச்சுண்ணே!
அதான் கொஞ்சம்... என இழுத்து சமாளித்தேன்.

ஒன்னும் பிரச்சனையில்ல...
ஒரு சூசைட் கேஸு... பாடி உள்ள தான் கிடக்கு...
நான் செக் பண்ண தான் வந்தேன்.. சூசைடா கொலையானு தெரியல... டீம் வருதுடா நீ வெய்ட் பண்ணு... எனக்கொரு வேலயிருக்கு முடிச்சுட்டு வந்துடுறேன்....

இல்ல்ல சார்.....எனக்கு கொஞ்சம் இதெல்லாம்.........

டேய்... வெக்கமாயில்ல..?
போலீஸ்க்காரன் தான நீ?
உக்காந்துருக்க தான போற கொஞ்ச நேரம்?
வேறென்ன சொன்னாங்க உன்ன?
போ....
வேறெதாவதுனா எனக்கோ பூபதி சாருக்கோ....... இல்லல்ல.... எனக்கே கால் பண்ணு....
என்றவர் தைரியம் சொல்கிறாரா திட்டுகிறாரா என யூகித்துக்கொண்டிருக்கும்போதே பைக்கை எடுத்து ஜூட் விட்டார்.

நெரிசலான பேருந்தில் உட்கார இடமின்றி நின்றுக்கொண்டிருக்கும் அம்மாவின் கைகளிலிருந்து,
இருக்கையில் அமரந்திருக்கும்
முகமறியா யாரோ ஒருவரின் மடிக்கு கடத்தப்படும் ஒரு குழந்தையின் மனநிலை.
கிளை வாய்ப்புகள் ஏதுமின்றி சிக்கிக்கொண்டேன். இதை நான் செய்துத்தானாக வேண்டும்.
தன்னைத் தானே தைரியசாலியாக ஊக்குவித்துக்கொண்டு
கதவை திறந்தேன்.

மின்சாரமின்றி அமைதியாயிருந்தது சுற்றம்.
பிணங்களிருப்பது மயானமென்றால் இதை மயான அமைதியென்றும் கூறலாம் தான்.
பழைய கதவு..
திறக்கும்போதான கிரில்ல்ல்லெனும் சத்தம் கொடுத்த நடுக்கம் கால் கட்டைவிரல் நரம்பைக் கிள்ளிச் சென்றது.
அந்த நானோ நொடி திகிலை மற்றொரு முறை அனுபவிக்க விறும்பாமல் கதவை மூட தனக்குள் திட்டமிட்டு மறந்தேன்.

கொஞ்சம் பெரிய ஹால்...
அப்படியாக தான் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
கதவை திறந்து உள்ளே நுழைந்ததிலிருந்து
இந்த இரண்டு நிமிடத்தில்  இரண்டடி முன்னோக்கி நகர்ந்திருப்பேன் அவ்வளவு தான்.
கால்களை பார்த்தவாறு குணிந்த நான் தலையை தூக்கவேயில்லை.
அதை செய்ய எனக்கு தைரியமுமில்லை.

சூசைட் தான்... டெட்பாடி எந்த நிலையில் எப்படி கிடக்கிறது மாதிரியான எந்த விபரமும் அறிந்திடாத போது
என் சுயஅனுமதியேதுமின்றியே
கற்பனை காட்சிகள் பலவற்றை தனக்குள் ஓட்டி,
என்னை மிரட்டுவதாய் எண்ணி,
தன்னை தானே பயமுறுத்திக் கொண்டிருந்தது முட்டாள் மூளை.
இத்தனை காலம் நான் பார்த்த அத்தனை பேய் படங்களும் இத்தருணத்தில் எனக்கு ஞாபகம் வந்திருக்க கூடாது!

இன்று தேய்பிறை முதல் நாள்.
ஜன்னல்கள் திறந்திருக்க முன்னிருப்பதை காணுமளவு ஓரளவு வெளிச்சம்.
உண்மையில் மையிருட்டை விட இந்த மெல்லிய வெளிச்சம் ஒரு டீஸ்பூன் அளவேனும் அதிகம் மிரட்சிப்பதாய் தானிருந்தது.

மெதுவாய் விழிகளை மட்டும் உருட்டி தரையெங்கும் தேடினேன்.
பார்வைக்கு எதுவும் அகப்படவேயில்லை.
படுத்துறங்கும் ஒரு நாற்காலியை தவிர.
கொஞ்சம் கொஞ்சமாய் பக்கவாட்டில் நகரந்தவாறே நிமிர்ந்தேன்.
ஐந்தடி தூரத்தில் என் இடுப்புக்கு நேரான உயரத்தில் ஆணின் இரு கால்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

சட்டென இறுக்கமாய் கண்களை மூடிக்கொண்ட ஆறேழு நொடிகளில்
இதயத்தின் அதிர்வும்
சுவர்கடிகார நொடிமுள் நகர்வும் மண்டைக்குள் ஒலிக்கடிகையாய் ஓலமிட்டதோடு,
மூச்சுக்காற்று உள்ளுக்குள் பிரயாணிக்கும் பாதைகளையும் ஒரேசேர உணர முடிந்தது.

100மீட்டர் ஓட்டப்போட்டியில் முன்னோடும் அனைவரையும் துரத்திப்பிடிக்க,
முயன்றும் முடியாமல் கடைசியில் வந்தவனைப்போல மேலும்கீழும்
பெருமூச்சு வாங்கி
கண்களை திறந்தபடி தள்ளாடி சோஃபாவில் சரிந்தேன்.
முதுகு படர்ந்த இடத்தில் ஸ்விட்ச்போர்டு.
பதட்டத்தில் எல்லா ஸ்விட்களையும் தட்டினேன்.
கரண்ட் இல்லாமல் போனதை நான் மறந்திருக்க கூடாது.!

உள்ளே வரும்போதே இப்படியான ஒரு பதட்டத்திற்கு தயாராகத் தான் வந்தேன் என்றாலும் கூட
இந்த காட்சியை உளவியல் ரீதியாக சமாளிப்பதற்கான வழிகளை நான் திட்டமிட்டிருக்கவில்லை.
அதற்கான சூத்திரங்களேதும் அப்போது என்னிடம் இல்லை.

திறும்ப கண்களை மூடி டீப் ப்ரீத் எடுத்து
பதட்டத்தை குறைக்க முயற்சித்தேன்,
சோஃபாவிலிருந்து சறுக்கி சாய்ந்தபடி தரையில் அமர்ந்தேன்.
இப்போது கொஞ்சம் பரவாயில்லை தானெனினும் விரல்களின் நடுக்கம் இன்னும் குறைந்த பாடில்லை.
இடுப்பில் ஒரு டார்ச் லைட் வைத்துக்கொள்வது எப்போதும் வழக்கம்.
உண்மையில் சொல்லப்போனால் அது என்னுடைய ஒரு குணமாகவே இருந்தது.
ஆனால் இன்று அதை கொண்டு வர மறந்ததை எண்ணி
இன்னும் 10ஆண்டுகளுக்காவது வருத்தப்படுவேன்.

சோஃபாவின் கால்களை இறுக்கி பிடித்துக்கொண்டேன்.
முழு வீட்டிலும் இது பாதுகாப்பான இடமாக தோண்றியது.
ராமசாமியே பெயரிட்டவனையும் ஓம் என உச்சரிக்க வைத்துவிடுமொரு திகில்.
கால் மணிநேரமாக அடிக்கடி மெல்லியதாய் அன்னார்ந்தவன்
தொங்கிக்கொண்டிருப்பவன் முட்டிக்கு மேலாக இன்னும் பார்க்கவில்லை.
நீல நிற பேண்ட் அணிந்திருக்கிறான்... கொஞ்சம் நனைந்திருக்கிறது...
அவ்வளவு தான்...

நல்லவேளை முகம் நான் அமர்ந்திருக்கும் திசையை நோக்கியதாக இல்லை.
புறமுதுகு காட்டியபடி தொங்கிக்கொண்டிருக்கிறான் என்பதில் மகிழ்ச்சி.
கோழை மட்டும் யாரென்பது கேள்வி.!
லத்தியால் தரையில் தாளமிட்டபடி,
நேரமறிய கைபேசியை எடுத்தேன்.
1.50
கூடவே வந்த க்ளிங் எனும் சத்தம் பேட்டரி லோவென்பதையும் அறிவுறுத்தியது.!

நா
வரண்டெல்லாம் போயிருக்கவில்லை என்றாலும் கூட
கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் போல் தோண்றியது.
சின்ன வயதில் யூரின் போவதற்கு நான் யாரையும எழுப்பியதில்லை
ஆனால் இப்போது யாராவது என் அருகில் இருந்திருக்கலாம்.

தடிமாடு மாதிரி வளந்துருக்கியே நாயே..!?
இதுக்கெல்லாம் போய் பயப்படுறியே அசிங்கமாயில்ல? என தனக்கு தானே நம்பிக்கை கேட்டுக்கொண்டு எழுந்து நகர்ந்தேன்.
நகர்தலென்றால், பண்டிகைக்கால பஜார் தெருக்களில் பைகள் சுமந்து நகரும் பெரும்பாண்மை வாடிக்கையாளர்களில் ஒருவன் மாதிரியான இஞ்ச் பை இஞ்ச் நகர்வு.

தூக்கில் தொங்கியவர்கள் பற்றிய நாக்கு நீண்டுவிடும் கண்கள் பிதுங்கிவிடும் மாதிரியான பல வர்ணனைகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதனாலேயே அந்த முகத்தை பார்க்க நான் துளியும் ஆர்வம் காட்டவில்லை.
பக்கத்து அறைக்கு செல்லும்வரை
பெண் பார்க்க வந்தோருக்கு காபி கொண்டு வரும்
70-80களின் தமிழ்சினிமா கதாநாயகியை போலவே தான் தலை குணிந்து நடக்கலானேன்.

முதலில் கண்டது பூஜையறை.
அறை அளவிலான ஒரு அலமாரி.

மணிகள் தொங்க விடப்பட்ட திறந்த இரு கதவுகளின் நடுவே,
மேகக்கழிவுகள் கொட்டித் தீர்த்த மாலைவேளையில்
மேற்கின் மடிசாய அவசரப்படும் ஒளிப்பிழம்பின் சாயலில்,
அணைவதற்கு எத்தனிக்கும் விளக்கொன்று
தத்தளித்து உமிழும் வெளிச்சத்தில்
புகைப்படங்கள் ஓவியங்களின் வாயிலாக பல்வேறு முகங்கள் என்னை
முறைப்பதை காண்கிறேன்.
அவைகளில் எந்த ஜோடி கண்களிலும் கடவுளுக்கான கருணையில்லை.!(?)
அதிகம் புழங்கிடா அநாதையான தெருவின்,
மெர்குரி விளக்கின் கீழ் நான்.

யாருமில்லா கோவிலுள்
இரவில் தனியே நடமாடிய அனுபவம் உள்ளவராயின்,
நான் விவரித்த இந்த அனுபவம் உங்களுக்கு புரிந்திருக்கலாம்.
பொம்மாயி ரக பிசாசுகள் உலாவுகள் ஒட்டடை படிந்த குப்பை பங்களாக்களை கடப்பதை விட அதிகம் பயமுறுத்தும் அனுபவமது.

இஞ்ச இஞ்ச்சாக நகர்ந்தவன் சட்டென ஒரு குட்டி ஓட்டம் பிடித்து
தடதடவென பூட்ஸை பதித்து பக்கத்து அறைக்குள் தஞ்சமானேன்.
உபரி திகிலேதும் அடைய வாய்ப்பின்றி அதிஷ்டவசமாக நான் நுழைந்தது சமையலறையே தான்.!

அறையின் ஓரமாய் காவல் காத்துக்கொண்டிருந்த ஒரு காலி சிலிண்டர் மேல் அமர்ந்து சில நிமிடம் தன்னை தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
தானொரு பிணக்காவலன் என்பதை இன்னும் மறவேன்.
அவ்விரு ஊசலாடும் கால்களும்
கண்முன் வந்து வந்து போயின.

எதுக்கு இப்போ இங்க வந்தோம்.!!
ப்ச்ச்.... ஹாஆம்....
சமையலறை வந்ததன் காரணம் மறக்கும் முன் டம்ளரொன்றை கைக்குட்டையில் கவ்வி தண்ணீர் பிடித்தேன்.
தவறுதலாக அது கீழே விழும் சத்தத்தை கூட தாங்கிக்கொள்ள முடியாதென்பதை அறிந்திருந்ததால்
டம்ளரை கையில் கொஞ்சம் அதிகமாய் தான் இறுக்கியிருந்தேன்.
இரண்டாம் ஔன்ஸ் தண்ணீர் தொண்டைக்குழியை கடக்கும் முன்,

எங்கோ தூரத்தில்
இணை தேடும் ஆண் வண்டொன்று  ரீங்காரமிடும் சத்தம்.
ரீங்காரத்தின் மேலே
இரை சுமந்து முதுகிலூறும் எறும்பு சாரையாய் ஏதோ ஒரு பாடல்.

தண்ணீரை குடித்தபடியே
அறையை விட்டு நகர்ந்து சத்தத்தை பின் தொடர்ந்து ஹாலுக்கு வர,
ரீங்காரமும் பாடலும் ஒலியை கூட்டிக்கொண்டு கூடவே நடந்து வந்தன.
நகரும் ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பாய்ண்ட் வால்யூம் ஏற்றப்படுகிறது.

இத்தருணத்தில் அன்பின் காதலியும் காட்டேரியாய் தான் காட்சியளிப்பாள்.
காலை வேளையில் தெரு முனை கேசட் கடையை கடக்கயில் ஓடும்,
மனதின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் பள்ளி பருவ காதலையும் கிளர்ச்சியூட்டிவிடும், ரகத்திலான ஒரு பாடல்
இப்போது பெரிதாய் மனதில் திகிலூட்டிக்கொண்டிருந்தது.

காதல் ரோஜாவே பாடலின் தொடக்க 20நொடிகளில் வரும் ஒரு ஹம்மிங்....
அது வண்டல்ல...
பாடத்தெரிந்த ஏதோ ஒரு மின்மினிப் பூச்சியாய் இருக்க வேண்டும்.!!!

விர்ர்ர்ரெனும் ரீங்கரத்துடனான பாடலும்
விட்டுவிட்டு எழும் கையடக்களவு மின்னலும் வருவது தொங்கிக்கொண்டிருப்பவன் பேண்ட்டிலிருந்து..!!
அதை பார்த்தபடியே சில நொடிகள் நடுங்க நின்றுக்கொண்டிருந்தேன்.
அதை பைபிலிருந்து எடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் வியாபித்திருக்கும்போதே ஒலியும் ஒளியும் நின்று போனது.

உஸ்ஸ்ஸெனும் பெருமூச்சு....

டம்ளரை மேசை மேல் வைத்துவிட்டு
மெதுவாய் நகர்ந்து பிணத்தினருகே செல்ல,
மீண்டும் ஒலியும் ஒளியும்.
எடுக்கலாமா வேண்டாமா என்ற பயத்துடனே கர்ச்சீப்பை சுத்திக்கொண்டு பாக்கெட்டில் கைவிட்டேன்.
ஆம்.
அது ஒரு கைபேசி.

Private Number calling....
Private Number calling...

அழைப்பை எடுத்து பேசலாமா வேண்டாமா என்ற சந்தேகம் நிச்சயம் வரவில்லை.
கைபேசியை பையிலிருந்து எடுக்கும்போதே அழைப்பை இனைத்து பேசப்போவதாய் மனதில் உத்தேசமில்லை.!
தயங்கினேன்....
ஆழ்மனதின் உபதேசங்கள் கட் பண்ணு.... ஸ்விட்ச்ஆஃப் செய்யென மிரட்டி பரிந்துரைத்தது.
சோஃபாவில் சாய்ந்தபடி திறும்ப அதே இடத்தில் வந்து அமர,
ஒலியும் ஒளியும் நின்றது.

You have received 26 missed calls from Private Number.
51 unreaded messages from Private Number.

அடுத்த அழைப்பு வருவதற்கு முன் கைபேசியை ஸ்விட்ச்ஆஃப் செய்து வைத்தேன்.
அழைத்தவர் யார், எதற்கு அழைத்தார், இறந்தவனுக்கும் அழைத்தவருக்கும் ஏதும் தொடர்பிருக்குமா என்ற ரீதியில் யோசித்துக் கொண்டிருக்க,
இவற்றையெல்லாம் குழப்பிக்கொள்வதற்கு முன் நான் சிபிஐயெல்லாம் கிடையாதே வெறும் கான்ஸ்டபிள் தானே என தனக்கே தான் பதிலளித்தேன்.
இத்தனை யோசிப்பதற்குமான ஒத்துழை மனநிலை என்னுள் இருந்ததே வியப்பு.!

சக நேரத்தில்
பக்கவாட்டிலிருந்த ஜன்னலை தென்றலொன்று உரசி செல்ல,
ஜன்னல் சீலை சுதந்திர நாள் தேசியக்கொடி போல அங்குமிங்கும் நடனமாடியதோடு,
தொங்கிக்கொண்டிருந்த பிணத்தின் கால்களை லேசாய் சுழற்றி விட்டது.
மெல்லியதாயொரு அசைவை கண்டதும் உள்ளுக்குள் மீண்டுமொரு வைப்ரேஷன்.

முதன்முதலில் உள்ளே வந்ததும் நிச்சயம் கைகளை கவனித்தேன்.
அவை இடையோடு கிடந்ததாய் ஞாபகம்.
இப்போது கைகள் சில கோணங்கள் மேலே தூக்கியவாறு தெரிறது.
காணுமிது இல்யூஷனாகவோ ஹாலுசினேஷனாகவோ இருக்க வாய்ப்பில்லை.!
கொஞ்சம் தயங்கி, நிறைய யோசித்து
மொபைலை எடுத்து ஸ்க்ரீன் வெளிச்சத்தை காட்டினேன்.

...க்ளிங்.........க்ளிங்......க்ளிங்....

சரியாக அதே நேரத்தில் வலதுக்கை இன்னும் ஒரு இஞ்ச் மேலே தூக்க
ஆட்காட்டி விரல் சுட்டுவது என்னைத்தான்.
இந்த முறை என் உடலுதறலை தெளிவாகவே உணர முடிந்தது.
கனவாயிருக்குமோயென கிள்ளிப் பார்க்க நேரமில்லை.
யாராவது என்னை எழுப்பினால் மகிழ்ச்சியடைவேன்.
வைத்த கண்ணை மாற்ற மறந்து அவனையே நோக்கிக்கொண்டிருக்க,

திடீர் பளீர் வெளிச்சம் விட்டுவிட்டு கண்களை கூசின,
அராஜகமான ஒரு சத்தம்.
ஒரு உதைபந்து மைதானமே கோரசில் பாடுவது போல......
##ஜீவன் நதி...காதல் கடல்.... நெஞ்சே.!!
பிறவிப் பிழை.... காதல் திருத்தம்...நெஞ்சே..!!##

இதை நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை.
கரண்ட் வந்துவிட்டது.
பதட்டத்தில் எல்லா ஸ்விட்ச்களையும் போட்டவன் மின்சாரமில்லை என தெரிந்ததும் அவையனைத்தையும் அப்போதே அணைத்திருக்க வேண்டும்.

டகடகவென அணைந்தெறிந்த ட்யூப்லைட்,
பக்கவாட்டிலிருந்த டிவியில் ##இருதயம் கல்.... காதல் சிற்பம் நெஞ்சே..!!##
பிணன் வழிநீட்டும் திசை நோக்க, என் மார்.
சடாரென மின்சாரம் திறும்பவும் போனது.

தனிமையிலக்க நொடிக்காலத்தில்,
என்னுடல் உறைநிலை.

இவையனைத்தும் 10 முதல் 12 நொடிகளில் நடந்து முடிந்திருக்கக் கூடும்.

நடைபடிகளில் கவனம் குறைந்து
எதிர்பாரா சமயத்தில்
தடுமாற்றி விட்ட கடைசி படி
தருமொரு.....ஒரு....ஒரு..... ஒருமாதிரியான படபடபடப்பு.!
ஒரு கையளவு சதையால் எப்படி இவ்வளவு வேகமாக துடித்தெழ முடியும்.!
எனக்கும் ஆச்சர்யம் தான்.
சத்தமின்றி ஆறுதல் கூறி அமைதிப்படுத்த முயற்சித்தேன்.
எதற்கு வரிசையாய் இத்தனை பயமுறுத்தல்கள்.!!

கண்களை மூடிக்கொண்டு ஏதேதோ யோசித்து வார்த்தைகளை விழுங்கி நாவுதவியின்றி கத்தினேன் திட்டினேன் சபித்தேன்.
பூபதி சாரையும்....சாரு ஒரு கேடு அவனுக்கு... ஸ்டேஷன்ல வேற ஆளே இல்லையா.. இந்த செல்வம் பய தான் பக்கத்துல இவன் வீடு இருக்குனு இழுத்து விட்டுருப்பான் பொறம்போக்கு...

அமைதி....அமைதி....அமைதி....
கொஞ்சம் டீப் ப்ரீத்..... சின்னதாய் ஒரு இருமல்...

வெளியே ஓடிவிடலாமா என யோசிக்க,
அதிகாரி பார்வையில் கோழையாக விறுப்பமின்றி,
ப்ரெஸ்ட்டீஜ் பார்த்து,
ஆஸ்தான இடத்திலேயே போய் அமர முற்பட,
கயித்துல போனவன் காத்துல திறும்பி அந்த பக்கமே தான் பாக்குறான்.!!

என்ன செய்ய.!! யோசிடா யோசி.!!

ஸ்விட்ச்களனைத்தையும் தேடி தடவி அனைத்து விட்டு
காற்றுற்புகுந்த ஜன்னலோரம்
சீலை வருட போய் அமர்ந்தேன்.

நிலா வெளிச்சம்.... நேரம் 2.40
தவளைகளின் கூக்குரல்...
ஈசல்களின் மரண ஓலம்...
எதிரில்
நான் சிரம்காணா நாநீண்ட,
பிரபஞ்சத்தின் இன்னுமொரு துகள்...
இதற்கிடையே
தூரத்திலிருந்து ஏதோ ஒரு அயல் அழைப்பு.

வீட்டிலிருந்தபோது ஒலித்தெழுப்பி கூசி சித்திரவதைத்தை அதே கல்யாண வீட்டு ஸ்பீக்கர் சத்தம் தான்.
இப்போது ஏரியின் அக்கரையிலிருந்து
ஒலித்துக்கொண்டிருந்தது.
மெல்ல்ல்லியதாய்.....காதருகே குழந்தைகள் கூறும் ரகசியம் போல்...

## காலம் எனக்குள் உறையுது....
கண்ணீர் கடலோடு கலக்குது...
உன் முகம் உன் உடல் தேடுது....
ஏனோ எனக்கென்ன கேடிது....##

எண்ணெய் தேய்த்து குளித்த நாளன்று கைகளை வருடிவிடும் தலைக்கேசம் போன்தொரு உணர்வாடல்.
கோபம் பயம் விரக்தி காதல் பிரம்மிப்பு திகிலென அத்தனை
எண்ணங்களையும்,
பல சார்பிலான பள்ளி குழந்தைகளையும் பாரபட்சமின்றி சம மனநிலையில் நடத்தும் தமிழ் வாத்தியார் போன்று
வித்தியாசங்களின்றி கட்டிப்போட்டது.

அதை தொடர்ந்து ## திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்....
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்...##
எல்லாம் காண்கிறேன்... அவ்விசை மட்டும் ஆதிக்கத்தில்.... இது ஒரு விழிநிலை மயக்கம்...

இந்த இசை தந்த உத்வேகம்,
உற்ற நண்பனின் துரோகத்தின் போது அழுது புலம்ப கிடைத்த
அம்மாவின் மடி போலானது.
பிரச்சனைகளின் போது தலையில் கைவைத்து எல்லாம் சரியாகிடும்டா என கூறும்
எல்லாமுமான தோழியின் சிறு ஆறுதல் போலானது.

இப்போது எனக்குள் தோண்றியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
நான் தொங்கிக்கொண்டிருப்பவன் முகத்தை பார்க்க வேண்டும்.
இரண்டு மணிநேரமாக இந்த வீட்டில் எனக்கு துணையாயிருந்த ஒரே நண்பன் முகத்தை காணாமல் வெளியேறக் கூடாது.!
பயமிருந்தும் தலை நிமிர்ந்தேன்.
கைபேசி ஒளியால்
அவன் முகம் அறைந்தேன்.
யார்யாரோ சொல்ல
கேள்விப்பட்ட அத்தனை வர்ணணைகளும் மிகச்சரியாய் இருந்தன.

கலையான முகம்.
காரணம் காதல் தோல்வியாயிருந்தால் கண்டிப்பாய் இவன் அவசரப்பட்டிருக்கிறான் தான்.
இவன் மூஞ்சுக்கு கண்டிப்பா நல்ல ஃபிகரு நாளு தேடாமலேயே மாட்டும்.

இருவரின் கண்களுக்குமிடையேயான உரையாடல் குறைந்தது 10நிமிடமேனும் தொடர்ந்திருக்கும்.
அவனை நோக்கி முறைத்தேன்
சிரித்தேன்
கொஞ்சமாய் அனுதாபப்பட்டேன்.
இப்படியொரு தைரியம் இரண்டு மணிநேரத்திற்கு பிறகு இப்போது தான் வந்திருக்கிறது.
என்னிச்செயலை நம்ப நானே மறுக்கிறேன்.!

நீல நிற ஒளி(லி)ப்பெருக்கியொன்று,
சிவப்பு நிற ஒலி(ளி)ப்பெருக்கியொன்று.

வாசலில் பூட்ஸ் நடைகளோடு லத்தி தட்டும் சத்தம்.
என் சகாக்களின் வருகை உறுதியாக,
வாசல் நாடி ஓடினேன்.
பூபதி சாரும் வந்திருந்தார்.
சல்யூட் வைத்து
அவன் பையிலிருந்து எடுத்த கைபேசியை ஒப்படைத்தேன்.

சரிய்யா நீ கிளம்பு என பெர்மிஷன் தர ஆள விடுங்கய்யா என நகர்ந்தேன்.!
சைக்கிள் ஸ்டான்டை தட்டி சீட்டில் அமர,
அருகிலிருந்த
ஆம்புலன்ஸின் லோ வால்யூமில் ஒரு பாடல்
##கண்ணே தடுமாறி நடந்தேன்.... நூலில் ஆடும் மழையாகிப் போனேன்... உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே... தொலைதூரத்தில் வெளிச்சம் நீ....##

-ராஜ்குமார் @RajiTalks