Saturday, November 22, 2014

மனுநீதியும் வினோத ஜந்துவும் - சிறுகதை

மனுநீதிசோழன் ஒரு இருபது வயது நாத்திகன்..!
கடவுளை வெறுமனே வெறுப்பது,
காரணமில்லாமல் மறுப்பது என்பதை மட்டுமே முற்போக்கு சிந்தனையாக எண்ணிக்கொண்டு,
தன்னை தானே பகுத்தறிவாளனாக
காட்டிக்கொள்ள முயற்சிக்கும் ஒரு முட்டாள் இளைஞன்..!

ஒவ்வொரு நாத்திகனுக்குள்ளேயும் இருக்கும் கடவுள் எனும் கோட்பாட்டின் இருப்பு சார்ந்த சிறு அச்சம்
அவனுக்குள்ளேயும் வந்ததன் காரணமோ என்னவோ,
கடவுள் அல்லது அதன் எதிர்வினையை
காண வேண்டுமென்ற ஒரு இனம்புரியாத ஆவல்,
அவனை கடவுள் என்ற விடையறியா/விடையில்லா ஒரு
தேடலை நோக்கி செலுத்தியது..!

தேடல் தொடங்கிய கருவிலேயே எழுந்த முதல் குழப்பமானது,
தான் தேடப்போவது இந்துமத கடவுளையா,
இஸ்லாமியமத கடவுளையா அல்லது
கிருஸ்தவ மத கடவுளையா என்பது..!

இந்த முதன்மை குழப்பத்தை தவிர்க்க,
மதம் சார்ந்த எல்லா புராண இதிகாச கட்டுகதைகளை மூட்டைக்கட்டி விட்டு,
இறுதியில் தான் காணப்போகும்
அல்லது
இல்லையென நிரூபிக்கப் போகும் கடவுளெனும் சக்தியானது
பூமி அண்டம் பேரண்டத்தில் இருக்கும் எந்த உயிரின கூட்டமைப்புகளின் மதத்தையும் சாதியையும் சாராதது என தனக்குள் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தான்.!

பிறகான அவனது தேடல் அறிவியலாக நீண்டது.!

பெரும்பாண்மை ஆத்திகர்களின்
கடவுள் இருப்பு வாதமானது,
அறிவியல் ரீதியாக கண்டுப்பிடிக்கப்படாத பிரபஞ்ச காரணங்களை சுட்டிக்காட்டுவது சார்ந்ததாகவே இருந்தது!!

மனிதனின் கண்களுக்கும் அறிவிற்க்கும் புலப்படும் மற்றும் புலப்படாத விஷயங்களில்,
அவிழ்க்கப்படாத முடிச்சுகளான சில மர்ம கேளிவிகளையும்,
அறிவியல் கேள்விகளுக்கு சம்மந்தமேயில்லாத அல்லது முரணான சில பதில்களையும்
தன் சின்னஞ்சிறு அறிவிற்கு
எட்டியவாறு வரிசையாக தொகுத்தான்..!!

தொகுத்த வரிசையின் படி ஒவ்வொரு கேள்வியின் சரியான மற்றும் திருப்தியான
இறுதி பதிலின் போதும் கடவுளை இருக்கிறது
அல்லது
இல்லையென நிரூபித்துவிடலாம் என்ற கோட்போடு,
அதை யார் கண்டுபிடித்ததோ.!
அதற்கு "மனுநீதி கேள்வி கோட்பாடு" என பெயர் சூட்டி
தொகுப்பின் முதல் சர்ச்சைக்குரிய கேள்வியான பூமி எப்படி உருவானதென்ற கேள்விக்கு பதிலை தேட தொடங்கினான்..!

பலப்பல அறிஞர்களும் விஞ்ஞானிகளும் தத்துவ மேதைகளும் அக்கேள்விக்கு
ஆளுக்கொரு பதிலாக சொல்லிச்செல்ல,
முதல் கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்
முன்னோர்களால் சொல்லப்பட்ட கருத்துக்களில் சிலவற்றை ஆராய்ந்து புரியவே வருடம் ஐந்தாகி,
வயது இருபத்தைந்தானது!!

தேடல் நோக்கிய பயணத்தின் பாதை ஒருவழியானது தான் என்றாலும்,
ஒவ்வொரு புதிரும் ஒவ்வொரு கேள்வியும்
பலப்பல துனைக்கேள்விகள் கிளைக்கேள்விகள் என குட்டிப்போட்டு வட்டிப்போட்டு நட்சத்திர எண்ணிக்கைகளாயின..!

ஐந்து வருடகால முயற்சி புரிதல் தேடலுக்கு பின்,
மனுநீதி இன்னும் தொகுப்பின் முதல் கேள்விக்கே பதிலை தேடிக்கொண்டிருக்க,
பின்னே அணிவகுத்திருக்கும்
மற்ற 728கேள்விகளும் தங்களின் வீரியத்துக்கு தகுந்தாற்போல் ஆளுக்கு சில
வருடங்களை தனக்குள் கணக்கிட்டுக்கொண்டு,
எங்களை (கடவுளை) புரிய நீ இன்னும்
இரண்டாயிரத்து இருநூற்றி நான்கு வருடங்கள் தேட வேண்டுமென சொல்லி நக்கலாய் நகைத்தன..!!

இந்த முதல் கேள்வி(க்கே) பதிலை கண்டறிய மனுநீதிக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன..
ஒன்று
Quantum physics - Einstein theory என இதற்கு முன் சொல்லப்பட்ட 7846அறிஞர்களின் 67ஆயிரம் கருத்துக்களையும் படித்து அதில் ஏதோ ஒன்றை ஏற்க வேண்டும்..!
அல்லது இரண்டாவதானது,
அனைத்தையும் படித்து மறுத்து தானாக ஒரு பதிலை உருவாக்கியாக வேண்டும்..!

முதலாவதானதிற்கான வாய்ப்பு 50/50 சதவீதம்..!
அதாவது அதில் பூமி/பிரபஞ்ச உருவாவாக்கத்திற்கான அறிவியல்பூர்வமான ஏதோ ஒரு பதிலை ஏற்று, பிரபஞ்சம் சில அறிவியல் காரணங்களால்
உருவானதென சொல்லி
கடவுள் இல்லை என முடிக்கலாம்..
அல்லது
அதற்கு நேர் முரணான மற்றும் எதிர்மறையான பதிலை ஏற்று கடவுள் தான் இவையனைத்தையும் படைத்ததென
அர்த்தம் கொள்ளலாம்..!

எப்படியானாலும் தனக்கு திருப்திகரமான
பதிலை கண்டறிய இந்த சாமானிய இளைஞனுக்கு சில நூறு வருடங்கள் ஆகலாம்!!
அடிப்படையில் நாத்திகனாதலால் பெரும்பாலும் கடவுள் இல்லை என்பதை நோக்கியே அவன் தேடலும் இருந்தது..!

இவ்விதமான இந்த தேடல் ஆராய்சிகள்
நேரம் காலம் காணாமல் வருடக்கணக்கில் சென்றுக்கொண்டு இருக்க,
ஒரு சாதாரண நம் பக்கத்து வீட்டு இளைஞனின் தினசரி நடவடிக்கைகளாக அல்லாமல்,
அவனது வாழ்க்கை முறையானது
தேடல் என்ற ஒரு வரையறுக்கப்பட்ட
கோட்டின் மேலேயே பயணித்துக் கொண்டிருந்தது..!

தத்துவ காகிதங்களுடனும் அறிவியல் ஆராய்ச்சிகளுடனும் பல ஆண்டுகளுக்கு மேலாக குடித்தனம் நடத்தினான்!
இப்படியாகவே பத்து வருடங்கள் கடந்தன.!

அன்றொரு நாள்-செவ்வாய்கிழமை நல்லிரவு மணி தோராயமாக 1.30 இருக்கலாம்.!
படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்தான் மனுநீதி..!

திடீரென ஏதோ முணுமுணுத்த அவன் உள்ளுனர்வு எழுந்து தோட்டத்திற்கு வாவென அழைத்தது..!

போர்வையொன்றை எடுத்து போர்த்தியபடி வசீகரித்த பாதையில் நடந்தான்.!
நடக்கும் இந்த நேரத்தில் யார் தன்னை அழைத்ததென்ற கேள்வியும்,
எதற்காக நான் இந்நேரத்தில் இங்கே செல்ல வேண்டுமென்ற தயக்கமும்
அவனுக்கு ஒருபோதும் எழாமல் பார்த்துக்கொண்டது அந்த அழைப்பு.!

ஏதோ ஒரு கட்டளைக்கினங்க நடந்து வந்தவனை
தோட்டத்தில் இங்கே நிற்க வேண்டுமென ஒரு உள்ளுணர்வு சொல்ல,
ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் வந்து நின்றான் மனுநீதி..!

இதன்பின் இவன் காணப்போகும் காட்சிகளானது மனிதயினத்தில்
யாரும் இதுவரை கண்டிராத மற்றும் காண வாய்ப்புகள் கிடைத்திடாத சில விஷயங்கள்.!

ஆகாயம் நோக்கிய இரைச்சல் - அங்குமிங்குமாய் பறந்த ஒளிக்கீற்று..
பறந்து வந்த
சிகப்பு நிற பறக்கும் தட்டு ஒன்று
இருபதடி தூரத்தில் சத்தம் குறைத்து நின்றது..!

மனதில் குழப்பம்-மெல்லிய அதிர்ச்சி-கண்களில் பயம்-கால்களில் பதட்டம் என அனைத்து உணர்வுகளும் ஒரு சேர ஆட்கொள்ள,
அடுத்து நடக்கப்போவதை எண்ணிய ஆர்வம் பயத்தை ஓரங்கட்டி மனுநீதியை
அந்த தட்டை நோக்கி நடக்க செய்தது.!!

எட்டடி உயரம் - மனிதனை போன்ற ஒரு உருவம் - கருத்த உடல் - பெருத்த வயிரு - ஆணுமல்ல பெண்ணுமல்ல - காட்சிக்கு பிரம்மிப்பாய் ஒரு ஜந்து..!

ஒரு விஞ்ஞானி இதை ஏலியன் எனலாம் - பயமுறுத்தியிருந்தால் பேய் எனலாம் -
அரவணைத்துயிருந்தால் கடவுள் எனலாம்..!
மொத்தத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு பிறகு பரிணாம வளர்ச்சியடைந்த மனிதனோ அல்லது பூமியின் வேறு ஒரு மிருகமோ இப்படியாக காட்சியளிக்களாம்.!
எது எப்படியோ வெளியே வந்த அந்த உருவம் இந்த நடைமுறை உலகுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒன்று..!

அதன் அருகே சென்ற மனுநீதிசோழன் திகைப்பிலிருந்து வெளிவரும் முன்னரே,
அடுத்த அதிர்ச்சியானது "என்ன பாத்து பயப்படாத மனுநீதி" என தன் கரகரத்த குரலில் தமிழில் பேசியது!

உனக்கு சில விஷயங்களை காட்டவே நான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறேன் - எங்கிருந்து யாரால் எனும் கேள்விகளை விடுத்து என்னுடன் வாவென அழைத்தது..!

மனுநீதி அமைதியாக தலையாட்டி தன் ஓப்புதலை தெரிவிக்க, கைப்பிடித்து தோட்டத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றது அந்த ஜந்து..!

முதலாவதாக சென்ற இடமானது மனுநீதியின் வீட்டு படுக்கையறை..!

அங்கே தன் அழகிய மனைவியுடன் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் ஒரு முப்பத்தி ஐந்து வயது ஆண்.!
கலவியின் பிசுபிசுப்பில் கூட காதலையும் காமத்தையும் உணராமல்
அரைகுறை ஈடுபாட்டுடன்
இரண்டாம் நிலை சிந்தனையை வேறெங்கோ வைத்திருந்தான்.!

இவன் நானே தானென உணர்கிறான் மனுநீதி..

பார்க்க உன் போல் இருந்தாலும் இவன் நீயல்ல..! இது எதிர்காலமுமல்ல என கூறுகிறது ஜந்து..!
அதே கையோடு வாசலுக்கும் அழைத்துச் சென்றது.!

வாசலில் பத்து வயது சிறுமி ஒருத்தி வேகவேகமாய் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்..!
நாற்பது வயது மதிக்கத்தக்க அவளது தந்தையின் பெயரும் மனுநீதிசோழன் தானாம்.!

தனது பைக்கில் உட்கார்ந்து கொண்டு மகளை அழைக்க,
நான் அப்பா கூட ஸ்கூலுக்கு போக மாட்டேன்மா எல்லாரும் பைத்தியம்னு கிண்டல் பன்னுவாங்கவென தன் அம்மாவிடம் முறையிடுகிறாள் அந்த சிறுமி..!

பின்னே ஜந்துவுடன் நின்று இவையனைத்தையும் கவனித்த மனுநீதி இதைக்கேட்டு கொஞ்சம் ஆடித்தான் போயிருக்க வேண்டும்..!

இதன் பிறகு மூன்றாவதாக செல்லப்போகும் இடம் இதைவிட மோசமான காட்சியை காட்டிவிட கூடாதென மனதுக்குள் சொல்லிக்கொண்டான்..!

இதையடுத்து இருவரும் வீட்டின் மேல்மாடி அறைக்கு சென்றனர்..!!
அறுபது மீட்டர் நீளமுள்ள நீண்ட அறையது..!

அறையின் இரண்டு பக்கங்களிலும் கட்டு கட்டுகளாய் காகிதங்கள் அடுக்கியிருந்தன..!
காகிதங்கள் முழுவதும் சமன்பாடுகள் தத்துவங்களென நிறைந்திருந்தன..!
மட்டுமின்றி அந்த அறை காற்றையும் காகிதங்களையும் மட்டுமே தன்னகத்தே கொண்டிருந்தது!
தவிர வேறாரும் வேறேதும் இல்லை!!

ஏனோ அதில் எழுதியிருந்தது எதையும்
மனுநீதியால் படித்து புரிய முடியவில்லை..!

கையிலிருந்த காகிதங்களை தூக்கிப்போட்டு விட்டு அறுபது-எழுபது வயது தன்னை அந்த அறை முழுவதும் தேடினான்..!
பின்னர் அறையின் ஜன்னல் வழியே வெளியே எட்டி பார்க்க,
மனுநீதிசோழன் தோற்றம் மறைவு என எழுதப்பட்ட ஒரு கல்லறை
தோட்டத்தில் இருப்பதையும்
அவன் ஜாடையில் ஒரு பெண்ணும் ஆணும் அருகே அமர்ந்து அழுவதையும்
காண்கிறான்!

அது ஏதோ ஒரு வருட நினைவஞ்சலியாக இருக்க வேண்டுமென உணர்கிறான்!

நான் வந்த வேலை முடிந்தது - நீ பார்த்த இந்த காட்சிகள் யாவும் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் -
ஆனால் கண்டிப்பாக இது உன் எதிர்காலம் கிடையாது - அப்படி இருக்குமானால் அது நீயாக ஏற்படுத்திக்கொண்டது -
முற்று உன்கையில் என கூறி பறக்கும் தட்டுடன் பறந்தது அந்த ஜந்து..!!

நடந்து முடிந்த யாவும் ஓரிரு நிமிடத்தில் நடந்திருக்க வேண்டும் -
காகித வார்த்தைகளை என்னால் படிக்க முடியவில்லை - இந்த பயணம் தொடங்கிய இடமும் மறந்து போனது -
ஒவ்வொரு காட்சியிலும் நானே என் கண் முன் நிற்கிறேன்..!
இவையாவும் கனவா நனவாயென குழம்பிக்கொண்டான்..!

இது கனவாக இருப்பின் யாரோ ஒருவர் என்னை எழுப்பும் முன் நானே எழ வேண்டும் - யாராவது எழுப்புவார்களாயின்
கண்ட இந்த காட்சிகள் யாவும் 0.0002 நொடியில் எனக்கு மறந்து போகலாம்.!

இந்த கனவுக்குறிப்புகளை தக்கவைத்துக் கொள்ள,
தூக்கத்திலிருந்து தானே எழ முயற்சி செய்தான் மனுநீதி!

தனக்கு பழக்கப்பட்ட இடத்தில் இதுவரை செல்லாத இடமொன்று இருக்குமாயின் அங்கே போக முற்பட
கனவிலிருந்து
தூக்கத்திலிருந்து விடுபடலாம் என்பது
அவன் ஏற்கனவே பலமுறை பரிசோதித்துப் பார்த்த ஒரு
செயல்முறை ஆராய்ச்சி..!

சுற்றியும் முற்றியும் பார்க்க வீட்டின் பின்
மாட்டு கொட்டகை..
தன் வாழ்நாளில் இதுவரை பார்த்திராத
இடம் அது!
தன் வீட்டில் மாடுகள் இருந்ததாகவும் அவனுக்கு ஞாபகமில்லை!!

கண்ட காட்சிகள் யாவையும் மனதுக்குள் உருவகப்படுத்திக்கொண்டே வேகமாக
கொட்டகையை நோக்கி ஓடினான்!

அந்த கொட்டகையை நெருங்க நெருங்க கால் முட்டிகள் இரண்டும் பலமாக
வலித்தன!
கடிகாரமுள் சத்தமும் காற்றாடி சத்தமும்
அரக்கத்தனமாய் ஒலித்தன!!


பெருமூச்சு விட்டு படுக்கையிலிருந்து எழுந்தான் மனுநீதி!!
#மணி 2.15 - அருகிலிருந்த தினநாட்காட்டியில் திங்கள்கிழமை தாள் கிழிக்கப்படாமல் காற்றில் பறந்துக்கொண்டிருந்தது!!

எழுந்து அங்குமிங்கும் வீட்டினுள் கொஞ்ச நேரம் நடந்தான்!!

நடந்தவை யாவும் கனவுகளென புரிந்து ஐந்து நிமிடம் கழிந்து மூளைக்கு ஆறுதல் சொன்னான்!!

கனவில் வந்தது கடவுளாக இருக்குமோ என தனக்குள் சந்தேகம் கொ‌ண்டான்!!

பிரபஞ்சத்தின் ஒற்றை கேள்விக்கே பத்து வருடங்களாக திணறி பதில் கண்டுபிடிக்க முடியாத என்னால் எப்படி கடவுளை
பறக்கும் தட்டு, எட்டடி உயரமென
அவ்வளவு சுலபமாக வரையறுத்து விட முடியுமென கேட்டுக் கொண்டான்!!

கடவுளே வந்து நேரில் நின்றாலும்
இந்த சின்ன மனித மூளையால் அந்த சக்தியை-கோட்பாட்டை உணரவோ உருவகப்படுத்தவோ முடியுமாவென சந்தேகித்து
முடியாது வாய்ப்பில்லையென மறுத்தான்!!

இந்த பிரபஞ்சத்தின் ரகசியம்
மற்றும்
உருவான காரணமானது
எண் "49" என்பதை கடவுளே வந்து சொன்னாலும்
அந்த காரணம் மனித அறிவிற்கு எட்டுமா!!?
அல்லது
இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை புரியுமளவுக்கு மனிதயினமானது தான்
அறிவு-அறிவியல் ரீதியாக வளர்ச்சியடைந்து விட்டதா!!

இறுதியாக கண்ட கனவு காட்சிகள் யாவும் என்னால் உருவாக்கப்பட்டவையே!
அவை எனக்கு நானே சொல்லிக்கொண்ட அறிவுரைகள் என உணர்ந்தான் மனுநீதி!

வாழ்க்கைக்கான புரிதல் இறையிலோ
அல்லது அது சார்ந்த நம்பிக்கையிலோ இல்லையென்பதையும்,
அது நம்மை சுற்றியுள்ளவர்களோடு நாமானதாக தான் இருக்கிறதுவென
தான் உணர தான்
இந்த கனவு விளையாட்டு அரங்கேற்றப்பட்டதாக நம்பினான்!!

இந்த கனவின் பாதிப்பின் பின்னும் மனுநீதிசோழன்
தன் ஆராய்ச்சியை தொடரலாம் அல்லது கைவிடலாம்!!

ஆனால் கிடைத்த இந்த ஒரேயொரு வாழ்க்கை வாழ்வதற்காக தானே தவிர,
கண்டதை தேடி நேரம் வயது குடும்பம் சந்தோஷம் அனைத்தையும் விரயம் செய்து வீணடிக்கவல்லவென புரிய ஒவ்வொருவரும் இப்படியான ஒரு கனவு வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்ன!!

கடவுள் எனும் கோட்பாட்டிற்கு
நாத்திகத்தின் பதில் "இல்லை" -
அறிவியலின் பதில் "இருக்கலாம்" -
ஆன்மிகத்தின் பதில் "இருக்கிறது" -
இச்சிறுகதையின் முடிவு "தேடல் தேவையற்றது"

-நன்றி
பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன
-இவன்
ராஜ்குமார் ராஜதுரை aka RajiTalks

########
மனுநீதிசோழன் கனவு என உணர்ந்த பின் அமைக்கப்பட்ட எல்லா காட்சிகளும் என் சொந்த கனவு குறிப்புகளாதலால் சில
அறிவியல் ரீதியான முரண்கள் இருக்கலாம்!
முடிந்தால் அவைகளை நீங்களும் முயற்சிக்கவும்!
#####

Thursday, August 14, 2014

பாரத மாதா - தமிழ்தாய்

விரலில் மைவைத்து ஓட்டு போடுவதை தாண்டி நாட்டின் குடிமக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் சமுதாயம் சார்ந்த ஒரு கடமை பொறுப்பு இருப்பதை எவரும் கவனிப்பதுமில்லை ஏற்றுக்கொள்வதுமில்லை..!!

அப்படி இங்கே சமுதாய பொறுப்புகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது தன்னை சுற்றி நடக்கும் அநீதிகளை எதிர்ப்பது போராட்ட போர்கொடி ஏந்துவது மாதிரியானவையல்ல...

சமூகம் சார்ந்த நம் ஒவ்வொருவரின் பார்வையையும் விசாலப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் பற்றிய பதிவே இது..

சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு புள்ளிவிவரம் என்னை மிகவும் அதிர்ச்சிக்கும் அவமானத்துக்குமுள்ளாக்கியது...!

National Crime Records
Bureau வெளியிட்ட அறிக்கையின்படி 2011ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் பதிவான பெண்கள் மீதான கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 24,206

அவற்றில் தண்டனை கிடைத்தவை சுமார் 5,724 மட்டுமே...!





அதேபோல் 2010ல் பதிவானவை 22,172 அவற்றில் தண்டனை கொடுக்கப்பட்டவை 5,632...!

தண்டனைகள் முறையாக கிடைக்காததற்கு சட்டம் சார்ந்த பல்வேறு காரணங்களை முன் வைக்கலாம்..!

ஆனால் இத்தகைய தவறுகள் தினசரி நடப்பதன் காரணம் என்ன.?!!

ராசிபலன், வானிலை அறிக்கை,
தங்கம் வெள்ளி விலை நிலவரம்,
தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு,
மாதிரி
பெண்களின் மீதான வன்கொடுமை,
சிறுமியர் கற்பழிப்பு மாதிரியான செய்தியும் தினசரி நாளேடுகளிலும்
தொலைக்காட்சி செய்திகளிலும் தவறாது இடம் பிடித்துவிடுகிறது..!

கற்பழிப்புகளின் பிண்ணிகளாக பெண்களின் ஆடை, ஒழுக்கம் மாதிரியான
சிலவற்றை முன் வைப்பதற்கு முன்
தன் மீதான தவறுகளை
எண்ணி களைய யாரும் தயாரில்லை...!!

பெண்கள் பற்றிய நம்முடைய பார்வை இச்சமூகத்தினிடையே எத்தகையானதாக இருக்கிறது என்பதும் கேள்விக்குறிய விஷயமே..!

பெண் என்பவள் ஆணின் இச்சைக்கும் மற்றும் அதற்கு பின் குழந்தை பெற்றெடுக்கவும்,
வீட்டில் மட்டுமே ஒடுங்கிக்கிடக்கும்,
சதையும் ரத்தமுமடைய ஆண்டவனால்
படைக்கப்பட்ட ஒரு ஜீவனாக மட்டுமே
அனைவராலும் பார்க்கப்பட்ட காலங்களையும் தாண்டி,
இன்று பல்வேறு, கிட்டத்தட்ட எல்லா துறைகளிலுமேயே
அவர்கள் சாதித்துக்கொண்டிருந்தாலும்,
பெண் என்பவள் உடல் ரீதியாக ஆணை விட பலவீனமாவள்
என்ற
பெரும்பான்மையினரின் எண்ணங்களை இன்னும் மாற்ற தான் முடியவில்லை...!

இந்த எண்ணமே அந்த பெரும்பாண்மையினரின் பார்வையில் பெண் என்பவளை கேளிக்கைக்குரியவளென எண்ண வழிவகுக்கிறது..!

பாரதமாதா தமிழ்த்தாய் கங்கை காவிரி யமுனை என இந்தியாவுக்கும் இயற்கைக்கும் பெண்களின் பெயர்களை சூட்டி அழைக்கும் நாம் பெண்களை சரியாக நடத்துகிறோமா என்றால் இல்லை என்பதே நேர்மையான பதில்..


ஒரு மருந்தகத்தில் வாங்கிய நாப்கினை அப்பெண் பேப்பரிலோ கருப்பு பையிலோ சுற்றி கொண்டு செல்கிறாள்..
தீவிரவாதி வெடிகுண்டுகளை பாதுகாப்பது போல ஓளித்து கையாள்கிறாள் என்றால் அதற்கு யார் காரணம்.!?

இத்தகைய நேரங்களில் அவர்களது மனதில் செலுத்தப்படும் குற்றவுணர்ச்சி மற்றும் அவமானம் மாதிரியான தேவையற்ற சிந்தனைகளுக்கு காரணம் நம்மையன்றி யாரகவும் இருக்க முடியாது...?!!?

தும்மல், இருமல், பசி மாதிரியான பெண்ணின் ஒரு சாதாரண உடல்நிலை மாற்றம் அல்லது நிகழ்வை கூட சாதாரணமான ஒன்றாக ஏற்றுக்கொள்ள இந்த சமுதாயம் அதாவது நாம் தயாரில்லை..!

நிமிடத்திற்கு நான்கு நாப்கின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டாளும்
இதை பற்றிய ஒரு தெளிவான முன்னோக்கு பார்வை சிந்தனை நம்மிடையே இல்லை..

புத்தகங்களில் இது பற்றிய பாடங்கள் இருந்தும் நடத்த முன் வராத அல்லது நடத்த விரும்பாத பள்ளிகளே தமிழகத்தில்/இந்தியாவில் அதிகம்...

மாதவிடாய் பற்றிய அறிவியல் சார்ந்த ஒரு விளக்கத்தை ஒரு முகநூல் பக்கத்தில் பதிவிக்கும் பட்சத்தில் கூட இத்தகைய
(கீழ்கண்ட) பதில்கள் வருகிறது என்றால்
சாதாரணமானவர்களின் பார்வையில் தான் பெண் என்பவள் யார்??





இன்னும் பலரின் பார்வையில் இது பற்றி பேசுவதும் கூட ஆபாசத்திற்குறிய
விஷயமாக தெரிவது வருத்தமளிக்கிறது..!

நாப்கின்கள் இல்லாத காலங்களில் கிழிக்கப்பட்ட கந்தல்கள் பயன்படுத்தப்பட்டதும்,
ஆண்கள் குழந்தைகள் என மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைக்க பெண்கள் பட்ட பாடு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
அந்த துணிகளை வெய்யிலில் கூட காய வைக்க கூடாதென்பது கூடுதல் மூடநம்பிக்கை...
பின் தங்கிய சில கிராமங்களில் இந்த அவலங்கள் இன்னும் நடப்பதாக கூட கேட்டதுண்டு..

அதற்கும் பின்னோக்கிய
காலங்களில் மாதவிடாய் நேரங்களில் தவிடுகளை பயன்படுத்தி நோய்வாய் பட்டு அவதிப்பட்ட/இறந்த பெண்களை பற்றி படித்திருக்கிறேன்...!

இது மாதிரியான பல கஷ்டங்களுக்கிடையே கடத்தப்படும் பெண்களின் மாதத்தின் அந்த மூன்று/இரண்டு நாட்களானது கண்டிப்பாக கேளிக்கைக்குரிய விஷயமாக பார்க்கப்பட வேண்டியதல்ல..!

இந்தியாவின் பல்வேறு தேவைகளில் இப்போதைய தேவை கண்டிப்பாக செக்ஸ் கல்வியாக இருக்கலாம்..!

நாப்கினை அல்லது விளம்பரங்களை பார்த்து இது என்னவென கேட்க்கும்
குழந்தைகளிடம் தெளிவான மற்றும்
தேவையான மட்டும் பதில்களை (வயசுக்கேற்ப)
அளிக்க வேண்டியது பெற்றோர்களாகியவர்களின் கடமை..

உண்மையாகவே ஆபாசமான விஷயங்கள் சில உண்டு எனில்,
அதை நீங்களே நியாயமாக விளக்கும்போது
சிறுவயதிலும் மற்றும் வளர்ந்த பிறகும் கூட அதை பற்றிய தொலைநோக்கு எண்ணம் அவர்களது மனதில் உருவாக்கப்பட்டிருக்கும்...!

Good touch, bad touch பற்றி
பெண் குழந்தைகளுக்கு
சொல்லிக்கொடுப்பதை விட
ஆண் குழந்தைகளுக்கு அதிகமாகவே சொல்லிக்கொடுங்கள்..
ஏனெனில் அதன் அவசியம் அவர்களுக்கு தான் உண்மையாகவே அதிகம்..!

கறாரான பெற்றோராய் இல்லாமல் பெண்/ஆண் இரு குழந்தைகளிடமும் அன்பாக பழகுங்கள்...

சமகாலத்தில் நிகழும் சராசரி சீண்டல்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு
பெண்கள் மீதான ஏளனம், குறுகிய பார்வை,
கேளிக்கை எண்ணம் மாதிரியனவையாலேயே என்பதை உணருங்கள்..

பெண்களை கைநீட்டுவது தவறென்பதையும், வன்கொடுமைகள் கூடாதென்பதையும் சிறிய வயதிலேயே அவர்களின் அபிமானத்திற்குறிய
பெற்றோர்களாகிய நீங்களே குழந்தைகளின் மனதில் ஆழமாக விதையுங்கள்..

மற்ற பெண்களை அடிக்கடி உங்களோடே நல்ல முறையில் ஒப்பிட்டு பேசுங்கள்..
தன் அம்மா தான் உலகிலேயே சிறந்த,
நல்ல பெண் எனும் ஒரு ஆண்குழந்தையின் எண்ணத்தை ஒட்டி அனைவருமே
அம்மாவைவிட
மற்றும்
அம்மாவை போல சிறந்த பெண்கள் என்பதை உணர வையுங்கள்...!

பள்ளியில் படிக்கும் சக தோழியிலிருந்து
காய்கறி விற்க வரும் பெண் வரை அனைவரையும் மதிக்க கற்றுக்கொடுங்கள்..


இச்சமுதாயத்திற்கு நம் பிள்ளையை ஒழுக்கமுடையதாக அளிக்க வேண்டியது பெற்றோர்களாகியவர்களின் கடமை..
அப்பிள்ளை ஆண்பிள்ளை எனில் உங்கள் பொறுப்பு ஒரு படி கூடுதலானதென அர்த்தம்..!


பெண்களின் மீதான மதிப்பு உயரும் போது அவர்களுக்கெதிரான
சீண்டல்களும் வன்கொடுமைகளும் குறையும் என்பதே உண்மை...!!

அம்மதிப்பை உருவாக்குவது பெற்றோர்களாகியவர்களின் உங்கள் கடமை..!

இனியாவது விழிப்பீர்..
-நன்றி



Saturday, August 2, 2014

யார் தமிழன்?? - ஒரு குழந்தை கேள்வி

ஐன்ஸ்டீனை விட அதிகமான, புத்திசாலிதனமான அவரால் கூட பதிலளிக்க முடியாத 50கேள்விகளை ஒரு  நான்கு வயது குழந்தையால் இரண்டு நிமிடத்திற்க்குள் கேட்க முடியும் என்பது சாத்தியமே..!

அப்படிப்பட்ட ஒரு குழந்தை கேள்வியை உங்கள் முன் வைக்கும் போது,
முதலில் அது உங்களுக்கு சாதாரணமாக
பதில் அளிக்க கூடிய
அசட்டுத்தனமான ஒரு கேள்வியாக தெரியலாம்..!
கேள்வியை முன் வைத்தவர் உங்கள் பார்வையில் ஒரு முழு முட்டாளாக கூட தெரியலாம்..!

ஆனால்,

அப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கவே அக்கேள்விகள் கூடவே சில உபரி கேள்விகளையும் சுமந்து வரும்..
ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்து வர  வரிசையாக இன்னும் பல கேள்விகள் பதிலுக்காக அணிவகுக்கும்..

அடுத்தடுத்து வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் பல புத்தகங்களையும் வலைப்பக்கங்களையும் புரட்ட வேண்டிய தேவை ஏற்படும்..!
ஒரு கட்டத்தில் கேள்விக்கான  உங்களது ஒவ்வொரு பதிலும் முன் அளித்த அல்லது அடுத்து அளிக்கப்போகும் பதிலுக்கு முரணாக அமையும்..!

அப்படி அமையும் பட்சத்தில் நீங்கள் இதற்கு முன் அளித்த ஒவ்வொரு பதிலும் தவறானதென்ற நிலைபாடு ஏற்படும்..

இருதியில் அந்த குழந்தை கேள்வி உங்களையே பதில் சொல்ல முடியாமல் செய்து திணறடித்து விடும்..!!

அப்படிப்பட்ட கேள்விகள் கேட்பவர் உலகில் ஆகச்சிறந்த புத்திசாலியுமல்ல..!
பதில் சொல்ல முடியாதவர் முட்டாளுமல்ல..!
இருப்பினும் அவை உண்மையெனில் அவற்றை இங்கு கேட்கப்படும் கேள்விகளே தீர்மாணிக்கின்றன...!!

அப்படிப்பட்ட ஒரு குழந்தை கேள்வி தான் இங்கே விமர்சிக்கப்பட உள்ளது..!

"யார் தமிழன்???"

எந்தெந்த தகுதிகள் இருந்தால் என்னை நான் தமிழன் என அடையாளப்படுத்திக்கொள்லாம்..?

இது யார் வேண்டுமானாலும் பதிலளிக்க கூடிய ஒரு சாதாரண கேள்வியாக தெரியலாம்..!

"தமிழ் என்பது ஒரு மொழி..
அதை பேசுபவர்கள் தமிழர்கள்"...
என்ற இந்த பதிலை
படிப்பறிவில்லாத செருப்பு தைக்கும் ஒருவரோ,
ஒரு பள்ளி மாணவனோ,
ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிவரோ,
ஒரு மாவட்ட ஆட்சியாளரோ,
ஒரு கிராமத்து இல்லத்தரசியோ,
அல்லது
இலக்கணம் இலக்கியம் வரலாறு தெரியாத ஒரு சாதாரண கூலித்தொழிலாளியோ
இவர்களில் யாரால் வேண்டுமானாலும் சொல்ல முடியும்..!

மேற்கண்ட அந்த பதில் சரியானதே என்றாலும் நீங்கள் சொன்ன அந்த பதிலை சரியென நிரூபிக்க அல்லது ஒழுங்கு படுத்த அடுத்து வரும் சில கேள்விகளுக்கு நீங்கள் கட்டாயம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்..!

"தமிழ் பேசுபவன் தமிழனா?" "தமிழ் மட்டுமே பேசுபவன் தமிழனா?" "தமிழ் பேசுபவன் மட்டுமே தமிழனா?"

இந்த கேள்விகள் சிலரை கொஞ்சமாக குழப்பலாம்..!

அதாவது தமிழன் என்ற ஒரு இனத்தின் அடையாளம், பேசும் மொழியை சார்ந்ததா? அல்லது வாழும் நிலத்தை சார்ந்ததா??

பெரும்பாலான மொழிப்பற்றாளர்கள்
அவ்வினம் நிலத்தை சார்ந்தது என்பதை ஏற்க மாட்டார்கள்..

ஒரு ஜப்பானியர் இரண்டு தலைமுறைகளாக தமிழ் பேசுகிறார் என்பதற்காக
அவரை நாம் தமிழர் என ஏற்றுக்கொள்வதில்லை..
வேண்டுமானால் தமிழ் பேசும் ஜப்பானியர் எனலாம்..

தமிழ் இலக்கிய இலக்கணங்கள் யாவையும் கரைத்து குடித்த ஒருவன் மூன்று தலைமுறைகளாக அமெரிக்காவில் வாழ்கிறான் என்றால் அவன் யார் என்ற கேள்விக்கு பெரும்பாலான பதில்கள் அமெரிக்க வாழ் தமிழன் என்பது...

தமிழ் பேசுபவர்கள் மட்டுமே
அதாவது தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்றால்,
போன தலைமுறை வரை தமிழ் பேசிய ஒரு மனிதன், அதாவது ஒரு தமிழன்
இப்போது தமிழை மறந்து
அமெரிக்காவில் குடியுரிமை பெற்று
ஆங்கிலம் பேசுகிறான் என்றால் அவன் யார்??
அவன் தமிழனா?? அவன் தன்னை தமிழன் என அடையாள படுத்திக்கொள்ளலாமா??

இதற்கு உங்கள் பதில் தமிழக பூர்வீகம் கொண்ட அமெரிக்கன் என்பதானால்,
தமிழன் என்ற இனம் நிலத்தை சார்ந்தது மட்டுமே என பொருள் படும்..!!

சரி இப்படியாக வைத்துக்கொள்ளலாம்..!

தமிழை பேசி தமிழகத்தில் இருப்பவன் மட்டுமே தமிழன் என்பது உங்கள் கூற்றானால்,
நான்கு தலைமுறைக்கு முன்பு வாணிகம் செய்ய தமிழகத்துக்கு குடிப்பெயர்ந்த ஒரு தெலுங்கனின் இப்போதைய தாய் மொழி தமிழ்..!
அவனுடைய அடையாளம் இப்போது என்னவாக இருக்கலாம்??
தமிழனா?? தெலுங்கு தமிழனா??

சில நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்த இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்களின் இப்போதைய அடையாளம் என்ன??

இப்படிபட்டவர்கள் கலப்பின தமிழர்கள் என்பது உங்கள் பதிலானால்,
ஆண்டாண்டு காலமாக மொழி உருவான காலத்திலிருந்து தமிழகத்திலேயே நம் கொள்ளு எள்ளு மூதாதையர்கள் வாழ்ந்து இப்போது நாமும் இங்கேயே வாழ்கிறோமானால் நாம் மட்டுமே தமிழர் என்பதே பொருளாகும்..!!

சரி ஆண்டாண்டு காலமாக தமிழை தாய் மொழியாக கொண்ட ஒரு தமிழன்,
இப்போதும் தமிழ் பேசுகிறான் ஆனால் நூறு ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் வாழ்கிறான் என்றால் அவன் யார்??

இது பதிலளிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கலாம்..!!

ஆக ஒரு இனமென்பது இடத்தையும் மொழியையும் இரண்டற சார்ந்தது என்பது தெளிவாகிறது..!

குமரிகண்டம் முழுவதும் வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்பதையும்,
ஆஸ்திரேலியாவையும் மடகாஸ்கரையும் இணைத்த அந்த நிலப்பரப்பு கடலில் மூழ்கியதையும் நாம் அறிவோம்..

குமரிகண்டம் முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் சிலர் மடகாஸ்டர்/ஆஸ்திரேலியாவில் வேறு நிலப்பரப்பின் இனப்பெயரில் இப்போதும் வாழ்கிறார்கள் என்பது ஒப்புக்கொள்ள தவிர்க்க முடியாதது..

ஒரு ஆஸ்திரேலிய பழங்குடியினரின் வழக்கு மொழி ஏறத்தாழ அறுபது சதவீதம் தமிழோடு ஒத்துப்பொவதாகவும்,
மாடுகளுக்காக
தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருவிழாவை குதிரைகளுக்காக சராசரியாக அதே காலகட்டத்தில் அவர்களும் கொண்டாடுவதாகவும்,
தமிழர் புராணங்கள் சொன்ன தாயம் மற்றும் வேறு சில விளையாட்டுகளை
அவர்களும் விளையாடுவதாகவும்,
"புரம்" மாதிரியான கடைச்சொற்கள் கொண்ட ஊர்களின் பெயர்கள் அங்கேயும் சில இருப்பதாகவும்
ஒரு ஆய்வு சொல்கிறது..!

ஆக காலாகலமாக தமிழகத்தில் வாழ்ந்து,
தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றி,
ஏறத்தாழ தமிழையே பேசி,
நேற்றைய தமிழ் நிலப்பரப்பில் இப்போது வாழ்பவர்களின் அடையாளம் என்ன??

இலங்கையில் வாழும் நம் உடன்பிறப்புகள் கூட இலங்கை தமிழர் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறார்கள்..!!

ஏழு தலைமுறைக்கு முன் வாழ்ந்த என் மூதாதையரின் தாய்மொழி தமிழ் தான் என்பதன் உத்திரவாதம் அல்லது ஆதாரம் என்ன??

சில நூறு தலைமுறைகள் பின்னோக்கி நம் ஒவ்வொருவரின் வரலாறையும் ஆராய்வோமானால்
நம்மில் பலரும் தமிழனென்ற அடையாளம் தொலைத்து அநாதையாகவே நிற்போம்..

இதன்படி பேச போனால் பல டார்வின் தியேரிகளையும் களைய அவசியம் ஏற்படும்..

திராவிடர்கள் போக தமிழர்கள் பிறக்க,
தற்போதைற மொழி, இன, புவியியல், அரசியல் காரணங்களால் இன்னும் சில நூற்றாண்டுகளில் தமிழனென்ற இனம்
இதே அல்லது வேறேதோ நிலப்பரப்பில்,
இதே அல்லது வேறேதோ பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் அல்லது அடையாளங்கள் அழிந்து காணாமலேயே போயிருக்கலாம்..!!

நம் கண் முன் அழிந்த மொழிகள் பலவை போல மொழி சார்ந்த இனத்தின் அடையாமும் கூட என்றோ ஒரு நாள் அழியப்போவதே..!

மேற்கண்ட எல்லா இடத்திலும் தமிழனென சுட்டிக்காட்டியிருந்தாலும்,
இது எல்லா இனத்தவருக்கும் பொருத்தமானதே..!!

ஒரு இனத்தின் ஆயுள் அல்லது அடையாள தற்காப்பு விகிதமானது நிலத்தையன்றி மொழியின் வீரியத்தை சார்ந்தது..

நாம் தமிழை பேச மறக்க சில நூறு ஆண்டுகளில் மொழியை பிரிந்த தமிழனென்ற இனம் தன் அடையாளத்தை இழக்க நேரிடலாம்..!!

பயண்படுத்தபடாத விரல்கள் நாட்பது தலைமுறைகளுக்கு பின் எப்படி முடமாகுமோ அதே போல் தான் மொழியானதும்..!!

தமிழனென்ற கர்வம் அணைவருக்கும் உண்டு...

இருப்பினும்

நிறம் ஜாதி மதம் மொழி நிலம் போல இனமென்ற ஒரு அடையாளமும் மக்களை பாகுபடுத்தும் ஒரு விஷயமே..!!

இலங்கை இனபடுகொலைக்கு குரல் கொடுக்கும் நாம்,
காஸா பகுகொலைக்கு அனுதாபப்படும் இஸ்லாமியர்கள் முகத்தில் மட்டும் மதச்சாயம் பூசுகிறோம்..

காணாமல் போன ஏதோ ஒரு நாட்டு விமானத்துக்காக கண்ணீர் வடிக்கும் நம்மில் பலரும் கூட
இன மொழி பாகுபாடுகளை நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரிப்பவர்களே..!!

மதத்தை மட்டுமின்றி மொழி இனத்தை தாண்டிய மனிதத்தை பிற இன மத மொழி நில மக்களிடமும் பார்க்க வேண்டுமென்பதற்காகவும்
அப்பா பெயர் முதல் இன சார்ந்த தனிமனிதனின் கர்வம் வரை எதுவுமே நிரந்தரமற்றது என்பதையும் உணர்த்தவே இப்பதிவு..!!

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் அவன்தன் இன மொழி மத ஜாதியின் அடிப்படையில் வெவ்வேறு நிற ரத்தம் ஓடும்போது இப்பிரிவிணைகளை படுகொலைகளை தலைத்தூக்க செய்யலாம் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம்..!

அதுவரை

எல்லா நாட்டவரிடமும் மொழியினரிடமும் இனத்தவரிடம் ஜாதி மதம் மறந்து மனிதம் பார்ப்போம்..!!

♡♥♡அணைவரையும் அரவணைப்போம்..!!
அன்பை நோக்கி பயணிப்போம்..!! ♡♥

உங்களில் ஒருவன்
ராஜ்குமார் ராஜதுரை

Friday, August 1, 2014

கூமுட்டை - ஒரு பேருந்து பயணம்

மாடுகள் பூட்டிய கட்டவண்டியோ, பள்ளி பருவத்தில் புத்தக மூட்டை சுமந்த சைக்கிளோ,
சம்பாதித்து வாங்கி புது பைக்கோ,
கால் வைக்க கூட இடம் கிடைக்காமல் ஃபுட் போர்ட் அடிக்க செய்த அரசு பேருந்தோ,
முதன் பயணத்தில் சிலாகிக்க செய்த பிரம்மாண்ட விமானமோ
இப்படி ஏதோ ஒரு வாகணப் பயணம் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எப்போதாவது அல்லது அடிக்கடி ஒரு மறக்க முடியாத சுவாரஸ்யமான அனுபவத்தை ஏற்படுத்திச் செல்லும்..

அது மாதிரியான ஒரு  பேருந்து பயணம் தான் இது..

ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் ஊர் சுற்றலாம், இரண்டு நாள் கிடைத்தால் அக்கா வீட்டுக்கு போகலாம், மூன்றோ அதற்கு மேலோ கிடைத்தால் யோசிக்காமல் அம்மா கையில் சாப்பிட சொந்த ஊருக்கு நடையை கட்டலாம் என்ற மனநிலை கொண்ட வெளியூரில் தங்கி படிக்கும் ஒரு கல்லூரி மாணவன்...

வெள்ளி-சனி-ஞாயிறு தொடர் விடுமுறை கிடைத்தும் வியாழன் இரவு 7மணி வரை சொந்த ஊர் செல்லும் சிந்தனையில்லை..

இருப்பினும்
இரண்டு நாட்களுக்கு முன் கடந்து சென்ற ரம்ஜான் என் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது..
பக்கத்தில் இரண்டு வீடுகளுமே இஸ்லாமிகளாக இருந்தும் ரம்ஜானன்று ஓசி பிரியாணி கிடைக்காமல் கடையில் காசு கொடுத்துவாங்கி சாப்பிட்ட பரிதாபம்-கோபம்-ஏக்கம்... (கடையில் வாங்கவும் தெரு தெருவாக வா-குவாட்டர் கட்டிங் சிவா போல அலைந்தது வேறு விஷயம்)

இந்த வாரம் அம்மா கையாள பிரியாணி சாப்பிட்டே தீர வேண்டுமென்ற எண்ணம் என்னை ஊருக்கு செல்ல தூண்டியது..
பைகளை எடு-துணிகளை மடி-சட்டையை போடு-எடுடா ஓட்டம் என சொந்த ஊர் செல்ல ஆயத்தமானான் அந்த தற்காலிக சென்னைவாசி-பரதேசி..
அதே வேகத்தில் MTCஏறி, ஒன்பது ரூபாய், டிக்கெட்டும் எடுத்து கோயம்பேடும் வந்தாச்சு..

அது சரி.. கைல எம்புட்டு காசு இருக்கு..!!

பர்சை களைந்தால் ஒக்கடே ஒக்கட நூறு ரூபாய் நோட்டு..
ஊருக்கு போக இது பத்தாதேடா..!! என்ன செய்ய..!!!
அட..! இருக்கவே இருக்கு ஏ.டி.எம்..!

வியர்த்து அலைந்து ஓடி வந்தவனுக்கு ஒன்றரை நிமிட ஏசி இளைப்பாற்றல்..
முன்னூறு ரூபாய் பணம் பர்சில் நுழைய ஏ.டி.எம் கார்டு மட்டும் சட்டை மேல் பாக்கெட்டில் அடைக்களம் புகுந்தது..

அடுத்த வேளையாக வேளாங்கண்ணி பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு செல்ல, வரிசையாக அணிவகுத்தன ஐந்து SETC சொகுசு பேருந்துகள்..

இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டு ஏதோ ஒரு பேருந்தில் ஏறுவதாய் முடிவு செய்து, இங்க்கி பிங்க்கி பாங்க்கீ "கீ" என இரண்டாவது கீ வந்த வேதாரண்யம் பேருந்தில்
(ஏன்னா அது தான் முதல்ல கிளம்புமாம்) ஏறி ஜன்னலோர சீட்டையும் பிடித்தான் அந்த கல்லூரி குழந்தை...!!

ஏற்கனேவே நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்த பேருந்தில் நான் ஐந்தாவது ஆள்..!
பேருந்தில் ஏறி அமர்ந்ததுமே காதுகள் ஹெட்போனுடன் ஐக்கியமாகின..
லேசாய் தூறும் மழைச்சாரல், ஜன்னலோ பேருந்து இருக்கை, ட்விட்டரில் நண்பர்களுடனான அரட்டை, ஹெட்போனில் ரஹ்மான் இசை....!
வேறென்ன வேண்டும் ஒரு பேருந்து பயணிக்கு..!
இவையணைத்தும் சேர்ந்து சுற்றத்தை கவனிக்க விடாமல் என்னை கைப்பேசியுடன் கட்டிப்போட்டது..

ஒன்றன்பின் ஒருவர் ஏறி இருக்கைகளை நிரப்ப பேருந்தும் புறப்பட தயாரானது..

அரை இஞ்ச் மட்டுமே நகர்ந்த பேருந்தில் திடீரென ஏதோ ஒரு சலசலப்பு...
பயணச்சீட்டை வாங்கிவிட்டு சாப்பாடு வாங்க போன யாரோ ஒருவரை காணோமாம்..!

"ஏன்யா அவனுக்கெல்லாம் வெய்ட் பன்னுறீங்க..!? நேரத்தோட பஸ்ஸ எடுங்கயா ச்சை" என கோபத்தில் எனக்குளேயே சலித்துக்கொண்டேன்....!
ஆனால் ஓட்டுநரோ அந்த குறிப்பிட்ட ஆள் வராமல் பேருந்தை எடுப்பதாயில்லை போல..!

முதல் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது மனைவி கைபேசியில்  ஏதேதோ கூச்சலிட,
சில நிமிடங்களில் கையில் மூன்று பாலிதீன் கவர்வகளோட பேருந்தில் ஏறினார் ஒரு ஆசாமி..
விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் முகம் தெரியாத போதும், இவர் தான் சாப்பாடு வாங்க போன ஆள் என என் மனதுக்குள் ஒரு பட்சி சொன்னது..

அதே போல பத்து நிமிடம் தாமதமான பேருந்து ஒருவழியாக கோயம்பேட்டை விட்டு வெளியேறியது..!

ஹப்பா....!! ஒரு வழியா வீட்டுக்கு போக போறோம் என்ற சிந்தனை எனக்குள் ஒருவித கிளுகிளுப்பை தூண்டியது..

ஒவ்வொருவரும் தங்கள் பயணச்சீட்டை
பெற்றுக்கொள்ள என்னிடம் வந்த நடத்துனரிடம் பாடல் சத்தத்தை கூட குறைக்காமல் "ஒரு சீர்காழி" என இரண்டு நூறு ரூபாய் தாள்களை நீட்டினேன்..

நடத்துனர் பயணச்சீட்டை கிழிக்கும் அந்த ஒரு நிமிடத்தை கூட நான் வீணடிப்பதாய் இல்லை...
கைபேசியை பார்த்தவாறு ஊருக்கு வந்துக்கிட்டுருக்கேன்டா என சந்தோஷ தகவலை நண்பனுடன் பரிமாறிக்கொண்டேன்..

பேருந்தும்  ட்ராஃபிக்கை தாண்டி சென்னையை விட்டு வெளியேற மணியும் பத்தை எட்டியது...

அரைத்தூக்கத்தில் ஹெட்போனில் ஒளித்தது என்ன பாடல் என சரியாக ஞாபகமில்லை..
என்றாலும் அது என் அன்புக்குறிய யாரோ ஒருவர் பாடும் தாலாட்டை போல கேட்க, மனம் லேசானது..!

தூக்கம் விழிகளை தட்ட, தூங்குடா என் செல்லமே என யாரோ காதுகளில் கிசுகிசுக்க, நித்திரையில் ஆழ்ந்த அந்த தருணம்........!
வீஈஈஈஈஈல் என ஒரு அழுகை சத்தம்...???!!!
என்னடா இது..! நான் ஊருக்கு போறதுக்குள்ள இவ்வளவு பிரச்சனைகளா..!!
நிமிர்ந்து பார்க்க ஒரு இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை..
ஆமாம்.. இரண்டு வயது இருக்கலாம்...
இல்லை இரண்டு வயதே தான்..!

பாடுறவன் பாட்ட கெடுத்தான், பஸ்ல போறவன் தூக்கத்த கெடுத்தாங்கற கதையா, தூக்கத்தை கெடுத்த அந்த குழந்தை என் கண்ணுக்கு ஒரு ஜூனியர் சைத்தானாகவே தெரிந்தது...!

எவ்வளவோ ஓய்ச்ச முயற்சித்தும் இருபது நிமிஷம் மள்ளுக்கட்டி அழுத அந்த குழந்தைய நிணைச்சு "உனக்கு நல்ல குரல் வளம் இருக்கு.. நீயெல்லாம் எதிர்காலத்துல நல்ல பாப் சிங்கரா வருவ ஆத்தா"என எனக்குள் இருந்த அனந்த் வைத்தியநாதன் அட்வைஸ் சொன்னார்...
முதலில் எரிச்சலில் உச் கொட்டிக்கொண்டிருந்த எனக்கே ஒரு சமயத்தில் வேகம் தலைக்கேற எழுந்து போய் ஜன்னல் வழியா தூக்கி வெளிய போட்டுடலாமா என்றளவு கோபம்...!

யார் ஆப்ரா கடாப்ரா சூ மந்திரகாளி சொன்னார்களோ, பாப்பாவின் அழுகை சத்தம் சடாரென நின்றது..!!!?????
நல்லதுடா சாமி.. நாம தூக்கத்தை தொடர்வோமென என் வேலையை நான் தொடர்ந்தேன்..!(நமக்கு நம்ம வேலை)

தூக்கம் மறுபடியும் இமைகளை தட்ட,
கழுத்தை சுற்றி பட்டாம்பூச்சி, தேவதைகள்...!! அடடே..!!
நல்ல தூக்கம்..!

எவ்வளவு மணிநேரம் பயணித்திருப்போம் என்ற கணிப்பேதும் இல்ல..!
விழித்து பார்க்க, பேருந்து பாண்டிக்கு முந்தய இடைநிருத்தத்தில் நின்றுக்கொண்டிருந்தது..!!

ஏதாவது குடிக்கலாமே..!! கோக் பெப்சி...!?? ஏண்ணே.. வாட்டர் பாட்டில் ஒன்னு கொடுங்க என்றேன் கடைக்காரரிடம்..
இதோ தம்பினு எடுத்து கொடுத்தார் அவரும்..

எப்போதும் கையோடு தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வது வழக்கம்..
இந்த முறை மறந்து விட்டதால், வெளியே வாங்க வேண்டிய நிலை..
வாங்கியதற்கு காசு 20ரூபாயை நீட்டினால்,
அம்மாடியோவ்.. விலை 30ரூபாயாம்..

வீட்டுல 25லிட்டர் வாட்டர் கேனே 28ரூபாய்க்கு தான் வாங்குறோம்.. இவரென்ன 1லிட்டருக்கு 30ரூபாய் கேக்குறாரு..!!
இதெல்லாம் இரவு கொள்ளைய்யா யோவ்னு எனக்குள்ள இருக்குற கம்யூனிஸ்ட் வெளிய வந்து கூச்சலிட, கடைக்காரருக்கும் எனக்கும் ஒரு ஐந்து நிமிட பொருளாதார தகராறு..

விளக்கி விட வந்தவரோ இஷ்டம் இருந்தா வாங்கு தம்பி, ஓவரா வாய் சவடால் விடாதனு சொல்லாமல் சொல்லி சமாதானப்படுத்தினார்...

என்ன செய்ய..! சொன்ன விலையை கொடுத்து வாங்கி தான் ஆகனும் போலயே.!
தாகம் காதையடைத்தது..
திமிரை மறந்து(வெக்கத்தை விட்டு) வாங்கி விட்டேன்..

ஒட்டப்பட்ட மூடிய திறந்து, பாதியில் திமிரா முகம் கழுவி விட்டு(இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லனு எனக்குள்ளேயே த்துப்பிக்கிட்டது எனக்கு மட்டுமே தெரியும்) மிச்சத்தை குடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்து நின்றுக்கொண்டிருந்தேன்...

முதுகில் SETC என்ற எழுத்துக்கள் பதிக்கப்பட்ட, பச்சை நிற பேருந்து ஒன்று.. ஓட்டுநர் இருக்கையில் காக்கி உடையணிந்த ஒருவர்..எல்லாவற்றுக்கும் மேலாய் வேதாரண்யம் போர்டு ஒளிவிளக்குகளின் நடுவே மிண்ணுகிறது...

நான் இவ்வளவு நேரம் பயணித்து வந்த பேருந்து என்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உடைய ஒரு வாகணம் என்னை தவறவிட்டு நாற்பதடி தூரத்தில் சென்றுக்கொண்டிருப்பதை தெளிவாக பார்க்கிறேன்..

அது உண்மையே தான்... இது நீ வந்த பஸ் தான்டா..உன்ன விட்டுட்டு போயிடுச்சு என என் பட்சி தெளிவாக எனக்கு உணர்த்த ஐந்து நிமிடம் எடுத்துக்கொண்டது..
அந்த ஐந்து நிமிடத்தில் அந்த பேருந்து பத்து கிலோமீட்டர்கள் கடந்து சென்றிருக்கும் என எனக்கு தெரியும்...

எடுத்த டிக்கெட்டை தவற விட்டுவிட்டு MTCல் 300ரூபாய் அபராதம் கட்டியிருக்கிறேன்..
திருச்சி ரயில்வே ஜங்க்ஷனில் ஃபோட்டோ எடுத்ததற்கு நியூசன்ஸ் கேசில் 1600அபராதம் கட்டியிருக்கிறேன்..
அந்த வரிசையில் இதையும் இணைத்துக்கொள்ளலாம்... பிரச்சனையில்லை...
அடுத்து செய்ய வேண்டியதை மட்டும் யோசிடா என எனக்கு நானே அறிவுரை சொல்லிக்கொண்டேன்...

அடுத்த நிருத்தம் பாண்டிச்சேரி பங்க்.. பேருந்து அங்கே நெருங்கும் முன் யாரையாவது அழைத்து லட்கேஜ்களை கைப்பற்ற சொல்ல வேண்டும்..!
தெரிந்த எல்லா பாண்டி நண்பர்களுக்கும் ஃபோன் செய்தேன்..
இரவு 11.50க்கு யாரும் கைபேசி அழைப்பை ஏற்க தயாரில்லை போல..

சில நிமிட தொடர்போராட்டத்திற்கு பின் அழைப்பை அணுகிய நண்பன் தெய்வம்டா மச்சான் நீ என் சொல்லச் செய்தான்..
நடந்ததை சொல்லி லட்க்கேஜ்களை கைப்பற்ற சொன்னேன்...அவனும் சலித்துக்கொள்ளாமல் சரியென சொல்ல, கண்டிப்பா அவன் தெய்வமே தான்...
சரி.. ஒரு வேலை முடிந்தது...!

அடுத்து..!!???????

பேண்ட் பாக்கெட்டை தடவினால், தூங்க இடைஞ்சலாய் இருக்கிறதென பர்சை பேக்பேக்குள் வைத்தது ஞாபகம்...!

சட்டைப்பையில் தண்ணீர் வாங்கியது போக மிச்சம் இருபது ரூபாய் மட்டுமே..!
ஹாஹா.. நல்ல வேளை..
ஏ.டி.எம்ல் பணம் எடுத்து கார்டை சட்டைப்பையிலேயே வைத்திருந்தேன்...!
(இது தான் நீ புத்திசாலிடா ராஜியென எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்ட நிமிடம்)

சாப்பாடு வாங்க போனவன பத்து நிமிஷம் காத்திருந்து ஏத்தி வந்தவன், என்ன இப்டி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டானே..!! கோவம் தான்.. என்ன செய்ய..!! சரி விடு...! Don't be panicடா ராஜினு எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்..!

யாரையாவது உதவி கேட்கலாமென சுற்றி பார்த்து, நானாக ஒருவரை தேர்ந்தெடுத்தேன்...
ஒரு உயரமான மாநிற ஆள்..
அவர் ஒரு நடத்துநர்..!
அக்கா கல்யாணத்திலேயோ, சித்தி வலையக்காப்பிலேயோ, சின்ன மாமா நண்பர்களில் ஒருவரோ..!
எங்கேயோ பார்த்த முகமென நிணைக்க தோண்றியது..!

சடாரென முன்னே சென்று நடந்ததே கூறினேன்...
நீ என் பஸ்லயே வா தம்பி.. ஒன்னும் பிரச்சனையில்ல..
போற வழியில எதாவது ATMல நிறுத்துறேன்..
பணம் எடுத்து கொடு சரியா என ஆறுதல் சொன்னார்...

நல்ல மனுஷனா இருக்காரே..!! அப்பரம்ணே உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேனு கேக்க,
ஆமா தம்பி நானும் அதையே தான் நிணைச்சேன், உங்கள எங்கேயோ பார்த்த மாதிரியிருக்கேனு அவரும் கேட்டார்.. (அட சேம் பிஞ்ச்னு மனசுக்குள்ள நானே சொல்லிக்கிட்டேன்)

பேசிக்கொண்டே இருவரும் பேருந்தில் ஏறினோம்..

உள்ளே ஏறிய நான் ஏனோ கெக்க பெக்கவென சிரிக்க, கண்டிப்பா அவர் பயந்திருப்பார்..(ஙே.. ஒருவேளை பைத்தியமா இருப்பானோ)
அட.. இது தான்யா நான் வந்த பஸ்ஸு...!

உண்மையே தான்.. இது தான் நான் வந்த பஸ்ஸே தான்..
தண்ணீர் வாங்க கடைக்காரரிடம் சண்டையிட்ட நேரத்தில் பேருந்து இடம் மாற்றி பக்கவாட்டில் நிருத்தப்பட்டது எனக்கெப்படி தெரியும்..!!???

என் தூக்கத்தை கெடுத்த ஜூனியர் சைத்தான் தூங்கிக்கொண்டிருக்கிறது..
நான் உட்காந்திருந்த இடத்தில் என் லட்கேஜ்கள் இருக்கின்றன..
உறுதி செய்தேன்.. இது என் பஸ்ஸே தான்...!

வேற ஏதோ ஒரு பேருந்து புறப்பட்டதை பார்த்து,
என்னுடையதென ஏமாந்து திரிந்திருக்கிறேன்...

இப்படி ஒரு கேவலமான பல்பை ஆசியாவில் மட்டுமல்ல அமெரிக்கா ஆப்ரிக்கா ஆப்கானிஸ்தானில் கூட எவனும் வாங்கியிருக்க மாட்டான்டா கூமுட்டையென என்னை நானே கேவலமாக திட்டிக்கொண்டேன்..

ஓடிப்போய் நடத்துநரிடம் அசடு வழிய இப்டி இப்டிணே அப்டி அப்டிணே.. சாரிணே என் வழிந்தேன்...
அவரும் ஏன் தம்பி போங்க தம்பினு என்ன பார்த்து கேவலமாக சிரித்தார்..

(இப்போ புரியுது, எங்கேயோ பார்த்த ஞாபகமென ரெண்டு பேரும் ஏன் யோசித்துக்கொண்டோமென)
வாங்கிய பல்ப நிணைச்சு பத்து நிமிஷம் சிரிச்சேன்...

பேருந்து புறப்பட்டது...
ஃபோன் செய்து லட்கேஜை எடுத்து வைக்க சொன்ன நண்பனிடம் நடந்ததை கூறினேன்..
அவன் பங்குக்கு அவனும் கொஞ்சம் துப்பினான்...(பல்ல இளிச்சிக்கிட்டு வாங்கிக்கிட்டேன் ஈஈஈஈஈ)

வழக்கமான இது மாதிரியான பல்புகளை நெருங்கிய ட்விட்டர் நண்பன் ஒருவனிடன் பகிர்ந்துக்கொள்வது வழக்கம்..
(அவன் பங்குக்கு அவனும் கொஞ்சம் துப்பட்டுமே)

இடைநிருத்தத்திற்கு முன்பான அந்த பழைய நிலைக்கு செல்ல கொஞ்சம் நேரம் பிடித்தது...! எடுத்துக்கொண்டேன்..!

எல்லோரிடமும் பல்பை பகிர்ந்தளித்ததில் மொபைல் பேலண்ஸ் கட்டானது.. சார்ஜ் காலியானது..
கைபேசி இன்றைய பணியை நிறைவு செய்தது..

இந்த பயணம் இதை விட மோசமான பல்பு எதையும் தரவேண்டாம் என எனக்குள்ளேயே நிணைத்துக்கொண்டிருக்க ஒரு சற்று நேரத்தில் இன்னொரு விஷயம் விளங்கியது...

சீர்காழி அரசூர் பைபாஸ் ஒரு தன்னந்தனி திடல்..
அங்கிருந்து என் வீடு ஐந்து கிலோமீட்டர் தூரம்..
யாரையாவது கால் செய்து வரச்சொல்லி என்னை வண்டியில் பிக்கப் செய்ய சொல்ல வேண்டும்..
மொபைலில் சார்ஜும் இல்லை பேலன்ஸும் இல்லை..

இது எனக்கு பேருந்திலிருந்து இரங்கியதும் தான் விளங்கியது..

பேருந்து நின்ற இடத்தில் வந்த ஹைவே பேட்ரோலை நிருத்தினேன்..
சர்..ஃபோன் இருக்கா வீட்டுக்கு ஓரு கால் பன்னனும் என்றேன்..
ஒரு போலிஸ்காரரிடம் நான் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை, "சாரி தம்பி பேலன்ஸ் இல்லபா"என்றார்...

சரி... விதி யாரை விட்டுச்சு..!!
வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன்...

எதிரில் ஒரு வெளிச்சம்..

அது ஏதோ பைக்கின் ஹெட்லைட்...
அருகே நெருங்கியதும் தான் புரிந்தது அது என் பைக்..
வந்தது என் அப்பா..
ஐந்து கிலோமீட்டர் நடக்க விரைந்த நான் அப்பாவை பார்த்ததும்
கொஞ்ச நேரம்
வாயடைத்து தான் நின்றேன்...

இரவு மணி 3.. எப்படிபா என்றேன்..!
நீ கோயம்பேட்டில பஸ் ஏறினது 9மணிக்கு.. எப்படியும் இந்த நேரத்துக்கு இங்க வந்துடுவன்னு தெரியும்.. அதான்பா பிக்கப் பன்ன வந்தேன் என்றார்...
அந்த பதிலை கேட்டு கொஞ்சம் மிரண்டு தான் போனேன்...

அப்போவோட அறிவு இந்த பிள்ளைக்கு கொஞ்சம் கூட இல்லையே என என்னை நானே திட்டிக்கொண்டேன்..
இப்படி ஒரு அப்பாவிடம் என்னை சேர்த்ததற்கு அந்த இயற்கைக்கு கொஞ்சம் நன்றியும் சொன்னேன்...

இவ்வளவு தான்...
இவ்வளவு தான் என்னுடைய இந்த பயணம்..
சந்தோஷத்தில் தொடங்கி, சுவாரஸ்யமான அனுபவங்களை சில பதட்டங்களை கடந்து, ஆனந்தத்தில் என் பயணம் இதோடு முடிகிறது...!

என் ப்ளாக்கின் முதல் பதிவு இதுவாக இருக்குமென நான் எதிர்பாராக்கவில்லை..
இருந்தாலும் இதுவாக அமைந்ததில் மிக்க சந்தோஷம்...
எழுத்துக்களில் சில இலக்கண பிழைகள் இருந்திருக்கலாம்..
தவறுகளை உங்க வீட்டு பிள்ளை செய்ததாய் நிணைத்து மன்னிக்கவும்..
தொடர்ந்து  ஆரதரவளிக்கவும்...

நன்றி
இவன் உங்கள் அன்புள்ள
RajiTalks as ராஜ்குமார்.ரா