கருமேகங்களால் இருள் சூழ்ந்திருந்திருந்தது பட்டவிளாகம் கிராமத்து வறண்ட வயல்கள். அந்தர வானெங்கும் காகங்கள் வட்டமிட்டுச் சுற்றிக்கொண்டிருந்தன. காகங்களின் பதட்ட இரைச்சல் காதுகளை அளந்தது. முழு கிரகணத்தின் போதான அப்பகல் இருட்டில் ஒரு கற்பனைச் சிறுமியைப் போல் நடு வயலில் நின்று கொண்டு இருந்தாள் சுபா. இம்முறை பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையில் இங்கே மாட்டிக் கொண்டாள்.
தூரத்தில்
ஒரு காளை மாடு நிற்பதை கண்டாள் சுபா. கூர்க் கொம்புகளில் கருப்பு வண்ணம் பூசப்பட்ட
அந்த மாடு சுபாவை நோக்கி உக்கிரமாக ஓடி வந்தது. தன் பள்ளிப்பையைத் தூர வீசிவிட்டு வயக்காட்டில்
விழுந்தெழுந்து பயந்தோடினாள் அச்சிறுமி. வரப்புகளும், வயல் வெடிப்புகளும் பலமுறை தடுக்கி
விட்டு உள்ளங்கைகளைச் சிராய்த்தது. ஓடிவரும் காளையின் குளம்போசையும், கழுத்து மணியோசையும்
சுபாவை அதட்டியது. மாட்டின் வேகத்துக்கு ஈடு தர முடியாமல் மூச்சிரைத்து முழங்கால் பிடித்து
நின்றாள்.
விரட்டி
வந்த மாடு சுபாவை முட்டி ஆழ்துளைக்குள் தள்ளியது. குழிக்குள் விழுந்தவள் தலைக்கு மேலே
தெரியும் வட்ட வெளிச்சத்தைப் பார்த்து வீலென்று கத்தியபடி, படுக்கையிலிருந்து திடுக்கென்று எழுந்தாள்.
இன்னிக்கும் அதே கனவா என்று
கட்டிலில் கிடந்த சுபாவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அம்மா நளாயினி.
ஊரிலேயே பெரிய கல்லுவீடு
பட்டாளத்தார் வீடு. ஊரின் முதல் மற்றும் ஒரே கல்லுவீடும் அது தான். வெள்ளக்காரன் காலத்திலேயே
ஜமீன் பங்களாக்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் உள்ளூர்க்காரர்களைக் கொண்டே எழுப்பிய
முதல் கல்லு வீடு. வீடு எழும்பிய இரண்டு தலைமுறைகளுக்கு பிறகும் இன்று வரை அந்த வீட்டுப்
பெண்களுக்குக் கல்லுவீட்டு பெரியம்மா, கல்லுவீட்டு ஆச்சியக்கா என்பது தான் அடையாளப்
பெயரே! வீட்டு பெரியவர் பட்டாளத்தார் ஓமியப்பன் மிலிட்டரியில் இருந்தவர். ஆனால் வீட்டு
ஆபிசர் என்னவோ பட்டாளத்தம்மா நளாயினி தான்.
வாசலின் இரண்டு பக்கமும்
தோள் உயர திண்ணைகள். திண்ணையில் நின்று எக்கினாலும் உத்திரம் கையில் ஆப்புடாது. முடிப்பையில்
இருந்த சொச்சச் சுண்ணாம்பில் மூனாவது வீட்டு
வீராசாமியய்யா எப்போதோ போட்ட ஆடுபுலியாட்ட கோடுகள் இன்னமும் அப்படியே திண்ணையில் இருக்கிறது.
உச்சி வெயில் நேரத்தில் தெருவின் வயசான ஆம்பளைங்க கூடி ஆடுபுலியாட்டம் ஆடுவது அவற்றில் தான். அவர்களில் சிலர் சாய்ந்து
கொள்ள திண்ணையின் ஆறு தூண்களில் மூன்று வசதியாயிருக்கும். அவர்கள் குடிக்க எப்போதும்
ஒரு பானை தண்ணி பக்கத்திலேயே இருக்கும். தண்ணி ஏதும் தீந்து போனால் திரும்ப நிரப்பி
வைப்பது பட்டாளத்தார் மகள் சுபா தான். திண்ணையை அலசும் போது கூட அந்த சுண்ணாம்புக்
கோடுகள் அழியாமல் மேலாக்கவே தான் அலசுவாள்.
ரெண்டு மாசமாக சுபாவுக்குத்
தூக்கத்தில் மாடு முட்டும் கனவு. தொடர்ந்து தினசரி வரும் ஒரே கனவால் ரொம்பவே தொந்தரவாகிப்
போயிருந்தாள் சுபா. வீட்டு மாட்டிடம் பால் கறக்கக் கூட மாட்டுக்கொட்டகை பக்கம் போக
அஞ்சுவதானாள். ரெண்டு மாசம் முன்ன தான் சுபாவுக்கு மஞ்சத்தண்ணி ஊத்தி கன்னித்துணி கட்டிட்டுப்
போனான் முறைமாமன் சுந்தரம். அதற்கு அப்பறம் தான் தொடர் மாடு முட்டும் கனவுகள். சாமிக்குத்தம்
ஆயிருக்குமென பட்டாளத்தம்மாவுக்கு ஒரே அச்சம். அதனால் வாக்கு கேட்டு நேத்திக்கடன் ஏதாவது
இருந்தாலும் பண்ணிவிடுவது என்று வாக்கு சொல்லும் வீராயி பாட்டியை வரச் சொல்லி நேற்றிரவே
ஆள் அனுப்பிச் சொல்லி விட்டு விட்டாள் பட்டாளத்தம்மா.
பட்டாளத்தார் அப்போது தான்
சங்கர் கடைக்குப் போய் டீ குடித்து விட்டு வந்திருந்தார். வெள்ளி மங்கிக்கொண்டிருந்தது.
விடியற்காலை வாசலில் சாணி கறைச்சு ஊத்தும் நேரமே கல்லுவீட்டுக்கு வந்துவிட்டாள் வீராயி.
சாமி வாக்கு சொல்பவள் மட்டுமல்ல; ஊரின் ஒரே நாவிதச்சியும், பொம்பள சாமியாடியும் வீராயி
தான். அதனால் வீராயிக்கு ஊரில் எல்லோரிடமும் ஒரு பெருமதிப்பும் எல்லார் வீடுகளிலும்
அந்த வீட்டுக்கார பெரிய பொம்பளையைப் போல நடந்து கொள்ள உரிமையும் இருந்தது. கருத்த ஒல்லியான
தேகம். அடி மூங்கிற்போத்து போல் தலையிலிருந்து கால் வரை அகலத்தில் ஒரே அளவிலான உடல்வாகு.
ஊர் சின்னப்பயல்களிடம் சொரைக்காக் கெழவி என்றொரு பட்டப்பெயரும் அவளுக்கு உண்டு. வாசலிலிருந்த
வேப்பமரத்தில் ஒரு கொத்து வேப்பிலையை முறித்து எடுத்துக்கொண்டு போய் வீட்டு சாமி மூலையில்
உக்கார்ந்து விளக்கேற்றினாள் வீராயி.
வீட்டின் ஓரத்தில் சமையலறையிலோ,
பத்தாய இடுக்கிலோ, அகல் வெளிச்சத்துக்குக் காத்து கிடக்கும் இருட்டு மூலையில், சுவற்றில்
தாழ ரெட்டைக் கையகல அளவில் மஞ்சளால் வட்டங்கள் பூசப்பட்டிருக்கும். வட்டத்தில் பதினொன்னு
பதிமூனென்று கணக்காக சிவப்பு பொட்டுகள் வைக்கப்பட்டு இருக்கும். எல்லாவற்றிலும் முதல்
மஞ்சள் வட்டம் வீட்டு குலசாமி. அதற்குப் பக்கத்திலேயே
பூசியிருக்கும் ஏனைய வட்டங்களை வீட்டில் தவறிப்போன பெரியவர்களாக வேண்டிக்கொள்வது வழமை.
பார்த்த மாத்திரத்தில் ஓமியப்பனும்,
நளாயினியும் பின்னாடியே போய் வீராயி முதுகுக்குப் பின் கை கட்டி நின்று கொண்டனர். கொஞ்ச
நாழி கண்களை மூடி உக்காந்திருந்தவள், கண்களைத் திறக்காமலேயே "ஆயாள கூப்புடு"
என்றாள்.
பாதி உறக்கத்தில் வந்து
வீராயி முன்பு உக்காந்தாள் சுபா. கண்களை திறந்து சுபாவை பார்த்தாள் வீராயி. சுபாவும்
பார்த்தாள். இந்த விடியற்காலை பூசைகளையெல்லாம் சுபா எப்போதும் அவள் வீட்டில் கண்டதேயில்லை.
பனிவெளியான சாம்பிராணி மூட்டத்துக்கு நடுவே முகம் முழுவதும் மஞ்சளும், நெற்றியில் பெரிய
குங்குமப் பொட்டுமாய் உக்காந்திருந்த கிழவியைப் பார்த்து கொஞ்சம் பயந்தும் போயிருந்தாள்
சுபா.
சுபாவை பார்த்து,
"என்ன கனா கண்ட ஆயா" என்றாள் பாட்டி.
"மாடு முதுவுல முட்டி
குழில தள்ளி வுடுது ஆத்தா...”
"மாடு தொரத்துச்சா?
முட்டுச்சா?”
"தொரத்தி முட்டுச்சு...”
"குழில வுழுந்த நீ
செத்தியா? பொழச்சியா?”
"சாகல… காப்பாத்துங்க
காப்பாத்துங்கனு கத்துனேன்...”
கண்களை மூடி வேண்ட ஆரம்பித்தாள்
வீராயி.
வடக்க நின்னு ஊரக் காக்கும் ஆச்சியக்கா ஆச்சியக்கா...
ஆச்சியக்கா கூட நிக்கும் பெரியண்ணன் பெரியண்ணன்...
புள்ள பயத்துக்குக் காரணம் என்ன முன்ன வந்து சொல்லிடு
நீ...
வடக்க வயக்காடு பனங்காடு நடுவ நின்னு...
அருவா நீட்டி குதுர மேய்க்கும் வீரண்ணன் வீரண்ணன்...
புள்ள பயத்துக்குக் காரணம் என்ன முன்ன வந்து சொல்லிடு
நீ...
எல்லை தாண்டி ஏதோ ஒன்னு கல்லு வீடு வந்துருச்சு...
ஊருக்குள்ள குந்திக்கிட்டு நோட்டம் வுடும் செல்லியாயி...
செல்லியாயி மகமாயி....
நீயும் ஆத்தா வுட்டுட்டியே உன் புள்ளய எது கிட்டயோ...
என்ன ஆச்சு எது வெரட்டுச்சு... சொல்லிப்புடு சொல்லிப்புடு...
கண்ணு முன்ன காட்டிப்புடு...
கூட காவ நின்னுப்புடு...
உருவி ஆய்ந்த கொத்து வேப்பிலையில்
பாதியை அள்ளி, "சாமி பக்கத்தாப்ள வைய்யாயா" என்றாள் பாட்டி. வலது கையில் பாதியை அள்ளி, இடது பக்க விளக்கோரம் வைத்தாள் சுபா.
எடுத்து வைத்த இலைகளை ஒவ்வொன்றாக
எண்ணிப் பார்த்தவள், "பதினேழு… ஒத்தப்படையில வருது" என்றாள். பிறகு சோழி
உருட்டி பார்த்தாள். பொறையேறி இருமினாள். சிலுப்பினாள். கோவமாய் உறுமினாள். "சாமியை
ஏய்ய்" என அதட்டினாள். பிறகு வாக்கு சொல்லத் துவங்கினாள்.
கொள்ளவாச வடக்கால....
ஐயங்கண்ணு பொறத்தால...
கெணறொன்னு இருந்துச்சு ரொம்ப காலம் முன்னால...
பொறந்து விளையாண்ட கன்னுக்குட்டியொன்னு
தண்ணியில்லா கெணத்துல வுழுந்துடுச்சு...
தொப்புள்க்கொடி காயல சீம்பாலும் சப்பல...
பச்சப்புள்ள உசுரு போச்சு பொறந்த செத்த நேரத்துல...
கூட ஆட ஆளக் கேக்குது வயசுப்புள்ள உசுரு கேக்குது...
அமாவாச முடியக்குள்ள படையல் ஒன்ன போட்டுப்புடு...
சூலாடொன்னு குத்தி போடு ஆச்சியக்கா கோயிலுல...
அதுக்கப்பறம் அது பாடு கெணத்தடியில ஆச்சிப் பாடு...
கண்ணு போய் ஒறங்கிப்புடும் வூட்டவுட்டு ஓடிப்புடும்...
துண்ணூரை அள்ளி சுபா தலையில்
அதக்கிவிட்டு, தட்டிலிருந்த வெத்தலைப்பாக்கை எடுத்துக்கொண்டு, "கிளம்புறேன் ஆயா"
என்று எழுந்தாள் வீராயி.
"போய் கேளு....” என்று
பட்டாளத்தார் தோளைத் தள்ளினாள் நளாயினி.
"அமாவாசைக்கு இன்னும்
மூனு கெழம தான் ஆத்தா இருக்கு, இப்புடி சொன்னா நான் என்னத்தா பண்ண…?” என்றார் பட்டாளத்தார்.
"ஆத்தாவுக்கும் என்ன
கொற வெச்சியோ! இல்லனா நீ படையல் போட்டு கேக்குற வரையா உன்ன விடுஞ்சாமி? இப்ப வுட்டா
அடுத்த ஆறாநா மகமாயி காப்பு கட்டு... அடுத்த நாப்பத்தஞ்சு நாளுக்குக் குலசாமி கெடா
வெட்டு போட முடியாது. நாள கெடத்தாம ரெண்டாநா சோக்கரு பேரன் காது குத்தோட சேத்து முன்னாடியே
பண்ணிப்புடு ஓமியப்பா.”
"இல்லத்தா... மேச்ச சந்தையும் நேத்து முடிஞ்சு போச்சு, இப்ப செனையாட்டுக்கு
அதுவும் வெள்ளாட்டுக்கு நான் எந்தக் கிடையில போய் நிக்க? எந்த யாவாரிய கேக்க?”
குங்குமப் பொட்டு நெற்றி
சுருங்க யோசித்த வீராயி, "ஒரு சேதி சொல்றேன் கேப்பியா?” என்றாள்.
"சொல்லுத்தா, என் வம்சத்துக்கே
புள்ளப்பேறு பாத்த பொம்பள நீ, உன் வாக்க மறுப்பனா!?”
"இன்னிக்கு மருமொவ
வளக்காப்புனு அம்சம் வந்து நேத்து கூப்புட்டுப் போனா, அவ பட்டில ஒரு ஆடு பாத்த நெகா...
உன்னட மருளாளிப்பய தான? கூட்டுக்கும், வாக்குக்கும் ஆப்புடுற பய தான், அவங்கிட்ட கேளு,
நான் இப்ப அங்க தான் போறேன், கொஞ்ச நேரஞ்சென்டு வா பேசி பாப்போம்"
"சரித்தா... சரித்தா…”
என்ற பட்டாளத்தார் வீராயியை வழியனுப்ப, வீராயி திண்ணையைத் தாண்டும் வரை அமைதியாயிருந்த
நளாயினி பிறகு துவங்கினாள்.
"ஏன்யா? அவ வாசக் கோலத்துல
புள்ளியை எண்ணுனதுக்கே தண்ணி மோந்து ஊத்தி மொத்தக் கோலத்தையும் அழிச்சுப் போட்டு, தாட்டியம்
காட்டுனவ அந்த அம்சம்... அவளா நீ போய் கேட்டு இந்தானு ஆட்ட குடுக்கப் போறா??”
"புள்ளைக்கி வேணும்னா
கேட்டுத்தான்டி ஆவனும்... காரியம் யாருக்குனு நெனப்பு இல்லையா?”
"என்னமோய்யா!!! போவக்குள்ள
ஆறுமுகம் அத்தானக் கூப்புட்டுப் போ... அவரப் பேசச் சொல்லி நீ சும்மா நில்லு... உன்
சொல்லுக்கு இல்லனுட்டா கேக்காது எனக்கு…” கண்களில் நீர் அதக்கிக்கொண்டாள் நளாயினி.
"நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்...
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்....
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே...
வெள்ளங்கள் ஒன்றல்லவா.... ஆஆஆ... ஆஆஆஆ...”
பாடிக்கொண்டே கல்லுவீட்டுக்குள்
வந்த தேவி, பின் வாசலில் உட்காந்திருந்த சுபாவை சீண்டினாள்.
"வாடி, கொடுக்காப்புளி
புடுங்க போகலாம்"
"இம்மோங்காலைலயா? அம்மா
கேட்டா வைய்யும், நான் வரல.” என்றாள் சுபா.
"அப்ப வா கல்லாங்கா
வெள்ளாடலாம்…” சுபாவின் கையைப் பிடித்து இழுத்தாள் தேவி.
"விடிஞ்சா கல்லாங்கா,
பொழுது சாஞ்சா செல்லிக்கோடு, நான் வரல, நீ போய் அமுதா கூட விளையாடு..”
"ஏன் மினுக்கி மூஞ்சுல
தேனு வழியுது??? என்னாச்சு மயிலுக்கு??”
"தெனம் ராவாணா மாடு
முட்டு கனா, உறக்கமே போச்சு… வீராயாயா வந்து பரிகாரம் சொல்லிட்டுப் போச்சு, வெள்ளாடு
வாங்கி சூலாடு குத்தனுமாம். அப்படினா என்ன??”
"அது தெரியாதா? வீடுவாச
கழுவி... செனையாடு ஒன்னு புடிச்சு.... படையல் போட்டு... தண்ணி தெளிச்சு... கூர் தொரட்டியெடுத்து
ஆட்டு வயித்துல குத்தி... குட்டிய எடுத்துத் தலையத் திருகி ஆச்சி முன்ன வெச்சு உருமியடிப்பாங்க...”
கொஞ்சிக்கொஞ்சி வண்ணவண்ணமாய்க் கதை சொன்னாள் தேவி.
"போதும்... போதும்....போதும்...”
கண்களைக் கைப்படாமல் கசக்கி மூடினாள் சுபா. தேவி விவரித்து முடிக்கும் முன்னரே அச்சத்தில்
வெளிர்ந்து விட்டது அவள் முகம்.
"யாருடி உனக்கு இதெல்லாம்
சொல்லுறா?”
"வெத்தலக்காம்பு கிள்ளி
பாக்கு ஒடச்சுக் குடுத்தா எங்க அம்மாயி நெதம் இப்படி எதாவது ஆட்டஞ்சொல்லும். அதுமில்லாம
போன திருவிழாக்கு வண்டிக்காரு மாமா ஊருக்குப் போயிருந்தப்போ அங்க ஒருத்தர் சூலாடு குத்திப்
படையல் போட்டாரு பாத்தேன்.”
"சின்ன சிசு காவு ஏக்குமா?
அது என்ன பாவம் பண்ணுச்சு??”
"முந்தாநேத்து, குளுருக்குத்
தலைல துண்டக் கட்டிட்டுக் கறுக்கல்லயே போய் நின்னு, ஊரு திடல்ல வெட்டுன ஆட்டுல மூனு
கிலோவப் பட்டாளத்தார் மாமா தான் வாங்கியாந்தாருனு கேள்வி!! அப்ப தெரியலயோ பாவம்னு?”
"அது வேற இது வேற...”
"நீயுந்தான மத்தியானமா
கொல்லைல உக்காந்து ஊக்கக் கொண்டு பல்லக் குத்திட்டுருந்த?? கொன்னா பாவம் தின்னா போச்சு…”
என்று கையை விரித்துக் காட்டிச் சிரித்தாள் தேவி.
"உனக்கு புரியலடி விடு...”
"உனக்கு தான்டி புரியல,
ஆத்தா கேட்டா குடுத்துத் தானே ஆவணூம். அவ காவ காத்து வளத்தது அவளுக்கு இல்லனா வேற யாருக்கு?
சரி நீ சாப்புட்டு முடிச்சுட்டு சத்தம் போடு வாரேன், குமுளித் தோப்புல கொடுக்காப்புளி
உலுக்க போவோம்", என்று பின்வாசல் வழியே வெளியே கிளம்பினாள் தேவி.
சுபாவுக்கு ஏதோ ஒன்று உறுத்திக்
கொண்டே இருந்தது. தனக்காக ஏதுமறியா ஒரு தாயும், சேயும் உயிர் விடப்போவதை எண்ணி நொந்து
கொண்டு இருந்தாள். 'அம்சம் பெரியம்மா பலிக்கு ஆட்டை கொடுக்கக் கூடாது, கொடுக்க கூடாது…'
என்று உள்ளுக்குள் ஆச்சியக்காவிடம் வேண்டிக் கொண்டே இருந்தாள். ஆமாம்... ஆட்டைப் பலி
கொடுக்கப்போகும் அதே ஆச்சியக்காவிடம் தான்.
உண்மையில் சுபா இத்தனை இளகிய
மனசுக்காரியெல்லாம் கிடையாது. புற்றீசல்களைப் புகை வைத்துப் பிடித்து பொடியரைத்திருக்கிறாள்.
தட்டான்களை பிடித்து வால்களில் நூல் கட்டித் தோரணமாக்கி விளையாடியிருக்கிறாள். தேவி
சொன்னது போல், மூன்று கிலோ ஆட்டுக்கறியை தானே கழுவி சமைத்து ஒரு சலனமுமின்றி உண்டு
உறங்கும் ஒருத்தி தான் அவள். இருந்தும் அந்த சூலாடு குத்து ஏனோ அவளை உள்ளுக்குள் தொந்தரவு
செய்து கொண்டே இருந்தது. கொக்கிப்புழுவிடம் சிக்கிய கெண்டை மீன் போல அச்சிந்தனையில்
சிக்கிப்போனாள் சுபா.
"ஆடெல்லாம் வேணாம்
ஆத்தா, சனிக்கெழம ஆனா வந்து நெய்விளக்கு போடுறேன்...” என்று ஆச்சியக்காவிடம் வேண்டிக்
கொண்டாள்.
காற்றில் ஜன்னல் அடிக்கும்
சத்தத்துக்கும், அம்மா பத்தாயத்தாழை திறக்கும் சத்தத்துக்கும், சுவற்றில் சாத்தியிருந்த
கயித்துக் கட்டில் கீழே சாய்ந்த சத்தத்துக்கும், வாசலில் கோலமாவுக்காரன் தராசை உலுக்கும்
சத்தத்துக்கும் அப்பா வந்துவிட்டாரோ என்று வாசலை எட்டிப் பார்த்தாள். கைகளை கோத்து
உள்ளுக்குள் அடிக்கடி ஏதோ முனகிக்கொண்டாள். நாமுச்சுரும் வேண்டிக் கொண்டிருந்தது வீணாகவில்லை.
கடைசியாக, சுபாவின் வேண்டுதல் பலித்து தான் போனது.
மூஞ்சை தொங்கப் போட்டுக்கொண்டு
வீட்டுக்குள் நுழைந்தார் பட்டாளத்தார். ஆட்டை கேட்டு போன அப்பாவிடமும், ஆறுமுகம் சித்தப்பாவிடமும்
ஆட்டை தர முடியாது என்று மறுத்து அனுப்பிவிட்டாள் அம்சம்.
புளிசோறு, எலுமிச்சஞ்சோறு,
தயிர்சோறு, எள்ளுசோறு, தேங்காசோறோடு சேர்த்து உளுந்தவட கடப்பா, சட்டினி, மல்லாக்கொட்ட
சாந்து, கோணாரப்பளம், கொத்தரவத்தயென்று அம்சம் வீட்டு கொல்லப்பக்கமே வளையக்காப்பு விருந்துக்கு
மணந்து கொண்டிருந்தது. கதவோரம் அம்சத்தின் பெரிய மக கோதை அம்மியில் மொளாசாந்து அரைத்துக்
கொண்டிருந்தாள், அதற்குப் பின்னாடி நாத்தனார் மக தமிழரசி வட தட்டிக் கொடுக்க, மாலா
சின்னம்மா கொப்பரையில் போட்டு எடுத்துக் கொண்டிருந்தாள். கோதை மகன் பெரியவன் துருவி
வைத்திருந்த தேங்கா சீவலை அள்ளி வாயில் போட, இந்தாயென்று அதட்டினாள் மாலா.
"ஏம்மா… இந்த வேலையெல்லாம்
ஒரு ஆளு வெச்சு செஞ்சுட்டா சுலுவாருக்கும்ல? அடுப்படில வெந்து நோகுது…” அலுத்துக் கொண்டாள்
கோதை.
"முறையா அவுங்க வீட்டுலருந்து
இதெல்லாம் ஆக்கிக் கொண்டாறணும்... உந்தம்பி இங்கிருந்து இருநூறு மைல் தாண்டிப் பொண்ணு
கட்டிட்டு வந்தா அப்பறம் இதெல்லாம் நம்ம கடன் தான. அதுக்குனு தவுசுப்புள்ள வெச்சு பொங்கியிறக்கி
ஒன்னொன்னு வாய்ல வெக்க முடியாம போனா என்ன பண்ண? வூட்டுக் கை பக்குவம் வருமாத்தா??”
என்றாள் அம்சம்.
"அவுங்க வூட்டுலருந்து
எல்லாம் வந்துட்டாங்க, இன்னும் அஞ்சு நிமிசத்துல புள்ளயார் கோவில்ல சூடம் காமிச்சுட்டு
வந்துருவாங்க" என்று கொல்லப்பக்கம் வந்து சேதி சொன்னார் அம்சம் வீட்டுக்காரர்
முத்து. சேலை முந்தானையை இழுத்துக் கழுத்தை துடைத்துக்கொண்டு வாசல் பார்த்து ஓடினாள்
அம்சம்.
"கழுத்துல மாவு ஒட்டிருக்கு
ஒழுங்கா தொடச்சுட்டுப் போமா" என்று கத்தினாள் பெரியவ கோதை.
வாசலிலேயே பெரிய கீத்து
பந்தல் நட்டு நூறாளு கால நீட்டிக் குந்த பெரிய இடம் உண்டு. சீரா, செனத்தியா, பூவா,
பழமா இருவத்தியஞ்சு முப்பது தாம்பாலம் வந்து பந்தலை நிரப்பியது. அதிரசமும், எள்ளடையும், சீனியுருண்டையும் அவற்றில்
பெரிய தட்டு. ஆண்கள் எல்லாம் பின்னாடி அடுக்கி இருந்த நாற்காலிகளில் போய் உக்கார்ந்து
விட்டனர். பெண்களும், பெண் பிள்ளைகளும், நண்டு சிண்டுகளும் கீழே விரித்திருந்த தார்ப்பாயில்
உக்காந்திருந்தனர். கிழவியொருத்தி வாயிலிருந்த
வெத்தலையைத் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்தாள்.
அம்சத்தின் சின்ன மருமக
லெச்சுமி புது சேலையும், முழு சிரிப்புமாக வந்து முன்னால் கிடந்த பலகைக்கட்டையில் உட்கார்ந்தாள்.
மடியில் வைக்க அம்மிக்கொழவி, தோளில் வைக்க வாழைத்தட்டு, கன்னத்துல பூச மஞ்சளும், வாயில
போட சக்கரையுமென எல்லாமே ரெடி. முதல் ஆளாய் நலங்கு செய்யக் கூடயிருந்த வீராயி பாட்டியை
அழைத்தாள் அம்சம்.
பிரசவம் பார்க்கப் போகும்
பெண்ணே வளக்காப்பிலும், பிரசவம் பார்த்த பெண்ணே புள்ள பதினாறிலும் முதல் நலங்கு செய்வது
வழி. அம்மிக்கொழவியை தூக்கி லெச்சுமி மடியில் வெச்சு, "புள்ள உருளுது புடி"
என்று கன்னத்தைக் கிள்ளினாள் வீராயி.
கங்க நதி தண்ணியெடுத்து...... பட்டவிளாக நதி தண்ணியெடுத்து......
கங்க நதி தண்ணியெடுத்து...... பட்டவிளாக நதி தண்ணியெடுத்து......
கங்க நதி தண்ணியெடுத்து...... பட்டவிளாக நதி தண்ணியெடுத்து......
பாட்டு பாடி, வாழைத்தட்டைத்
தூக்கிக் காட்டிவிட்டு, கழுத்திலிருந்த மாலையின் ஒத்த பூவை பிச்சு "இந்தா ஆத்தா
எடுத்துக்க" என்று சாமிக்காக மேலே தூக்கிப் போட்டாள்.
"பட்டவிளாகத்துல ஏது
ஆத்தா நதி" எனக் கூட்டத்தில் கன்னிப்பெண்ணொருத்தி பரிகசித்து கேள்வியெழுப்பினாள்.
"பொறக்கப்போற புள்ள
வீட்டுல நாலு தூணுக்கும் ஒன்னுக்கு அடிக்கும் அப்ப பாப்ப தாயி பட்டவிளாகத்து நதிய"
என்று பதிலுக்கு எதிர் விட்டு பறக்க விட்டாள் வீராயி.
வேப்பிலக்காப்பை மாட்டிவிட்டு,
மஞ்சளை அள்ளிக் கன்னத்தில் பூசி, "ரெண்டு கண்ணும் மினுக்குதே பேறுக்கு பொம்பளப்புள்ள
தான்னு நெனைக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டாள் கிழவி.
"ஏன்த்தா, ஆம்பளப்புள்ள
பொறந்தா தூக்கிப் போட்டுட போறோமா?” என்றாள் மாலா பதிலுக்கு.
"தூக்கியெல்லாம் போட
வேணாம், என்கிட்ட குடுத்துடு நான் வெச்சுக்கறேன்" என்றாள் கோதையின் தோழி சித்ரா.
"நீ பத்து நாள் வெச்சுக்க,
நாங்க பத்து நாள் வெச்சுக்கறோம்" என்றார் முத்து.
"இந்தா… என்ன?? என்
பேரப்புள்ளய மாத்தி மாத்தி எல்லாம் ஏலம் வுட்டுட்டு இருக்கீங்க???” சிரித்தாள் அம்சம்.
அப்பறம் ஒருத்தொருத்தராக
வந்து நலங்கு முடிக்க பந்தி ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தது. கடைசியாக வந்து பின்னால்
இரண்டு நாற்காலிகளில் அமர்ந்தனர் பட்டாளத்தாரும், ஆறுமுகமும். தூரத்திலிருந்து கண்களில்
ஜாடை காட்டி "கொஞ்ச நேரம் இரு" என்றாள் வீராயி.
கைநிறைய வளையல்களோடு லெச்சுமி
பிறந்த வீடு அனுப்பி வைக்கப்பட்டாள். லெச்சுமி வீட்டுக்காரர்களும் விழா முடிந்த கையோடு
வந்த வண்டியிலேயே திரும்பிவிட்டனர். சொந்த ஊர் பெருசுக சிலர் மட்டும் பந்தலில் உக்காந்து
வெத்தல சீவல் போட்டுக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டு சித்ரா, கோதையின் சிறுவத்திய
சிநேகிதி. இப்போதும் தான். சின்ன வயசிலிருந்து கோதையோடு ஒன்னு மண்ணாக விளையாடி கிடந்தவள்.
கல்யாணம் முடிஞ்சு ஒம்போது வருசமாகியும் பிள்ளைப்பேறு இல்லாத சித்ராவை உக்கார வைத்து
வளக்காப்பு நலுங்கு வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தனர் கோதையும், இளம்பெண்கள் சிலரும்.
ஆறுமுகம் மட்டும் திண்ணையில்
போய் உக்காந்து முத்து அண்ணன் காதில் லேசாய் விஷயத்தைப் போட்டார்.
"சுபாவும் உனக்கு மக
மொற தான் ஆவுது. ஆச்சிக்குக் கொடுக்கணும்னா அது பட்டாளத்தாரண்ணன் கொடுத்தா என்ன நீ
கொடுத்தா என்ன முத்து? என்ன யோசிக்கிற?”
"யோசிக்க ஒன்னுமில்லய்யா...
வீட்டம்மாகிட்ட ஒரு வாய் கேட்டுக்கிட்டு...”
கதவுக்கு பின்னாலிலிருத்து
எல்லாத்தையும் காதில் வாங்கிக்கொண்டிருந்த அம்சம் இடையில் குறுக்கிட்டு, "என் வூட்டுல ஒரு மாசமான புள்ளய
வெச்சுக்கிட்டு செனையாட்ட நான் பலிக்குக் குடுப்பேனா? கதவ சாத்துனா அறுகா இடுக்குலருக்கற
கொளவிக்கூடு துண்டுப்படும்னு கள்ளன் வந்தாலும் ஆச்சுனு கதவ சாத்தாம தலைமாட்டுல அருவாள
போத்திட்டு தெனம் தூங்குறாரு ஏம்புருசன்… இங்க வந்து துவளக்குட்டி கேக்குறியே நல்லாவா
அத்தான் இருக்கு ஒனக்கு? அந்தப் பெரிய மனுசன் தான் வந்து நிக்கிறாருனா ஒனக்கு எங்க
போச்சு பொறக்கன?”
"இந்தா... வீட்டம்மா
கிட்ட ஒரு வாய் கேக்குறேன்னு சொன்னா... நீ வாய்க்கு வந்ததக் கேட்டுட்டு இருக்க? குணத்துல சொக்கன் அந்த மனுசன்...
வீடு தேடி வந்தவங்கள வாச காட்டி அனுப்பவா கேக்க? ஒரு மருளாடிக்கெழவி வாச தேடி வந்து
நிக்கிறா அந்த கெழவிக்கு மட்டில்ல??” அதட்டினார் முத்து.
"வுடுண்ணே! ஆசையா வளத்துருக்கும்,
பொசுக்குனு கேட்டா ஆதங்கப்பட தான் செய்யும்... சாயங்காலமா பொழுது போய் என்னனு பேசிட்டு.......”
மறுபடியும் குறுக்கிட்டாள்
அம்சம்,
"பொழுது போய் கேட்டாலும்,
எப்ப கேட்டாலும் இதான் எஞ்சேதி. இதுக்கு மேல பேசாதத்தான் நீயி... இத இப்டியே வுடுறது
நல்லது...” கதவைக் கட்டிக்கொண்டாள்..
ஆறுமுகத்தையும், பக்கத்தில்
உக்காந்திருந்த பட்டாளத்தாரையும் கையறுநிலையில் ஒரு பார்வை பார்த்தார் முத்து.
'பரவால்லய்யா...’ என்று
கண்களிலேயே பதிலளித்தார் பட்டாளத்தார். கையிலிருந்த சொம்பு தண்ணியைக் குடித்துவிட்டு
நடையைக் கட்டினர் இருவரும்.
அம்சத்துக்கு இது ஒரு இக்கட்டான
தருணம். ரொம்ப பெரிய தர்மசங்கடம். பட்டாளத்தாரோடோ, ஆறுமுகத்தோடோ அல்ல. அம்சத்துக்கும்,
ஆச்சியக்காவுக்கும் இடையே தான் அது. வாக்கப்பட்டு வந்த வீட்டுக் குலதெய்வம் தான் என்றாலும்,
ஆச்சியக்காவுக்கும் அவளுக்கு இடையே ஒரு நீண்ட பந்தம் உண்டு. கொஞ்ச வருசத்துக்கு முன்பு
அம்சத்தின் அண்ணனுக்கு ஒரு விபத்து. உடைந்து போன கால் எலும்புகள் கூடவே கூடாது என்று
டாக்டர்கள் சொல்லிவிட்ட பிறகு ஆச்சியக்காவுக்கு நேந்திக்கிட்ட பிறகே அண்ணன் கால் சரியானது
என்பது அவள் நம்பிக்கை. யாருக்கு எது செஞ்சாலும் பிறந்தவீட்டு ரத்தத்தை காப்பாற்றிய
சாமியில்லையா!?
ஆனாலும் இப்போது அந்த ஆட்டைத்
தர முடியாத சூழ்நிலை. முத்துவின் பரம்பரையிலேயே எல்லா மருமகள்களுக்கும் முதல் குழந்தை
ஆறேழு வருஷம் கழித்தே தான் பிறந்திருக்கிறது. லெச்சுமி மட்டும் தான் இதில் விலக்கு.
அதனால் வீட்டிலிருக்கும் இன்னொரு சூலுயிரைப் பலிக்குக் கொடுப்பதில் அவளுக்குப் பெரும்
தயக்கம். அந்த ஆட்டின் மீது அவளுக்குத் தனிப்பட்ட கரிசனம் ஏதும் இல்லையென்றாலும், ஒரு
உயிரை தாங்குவதாலேயே அதைத் தன் மருமகளோடு ஒத்து நினைத்துக்கொண்டாள்.
அதே சமயம் தன் எல்லா இக்கட்டான
சூழ்நிலைகளிலும் பெரிய நம்பிக்கையாக உடனிருந்து காத்த ஆச்சிக்கென்று வந்ததைத் திருப்பியனுப்பியதில்
ஒரு இயலாமை. இரண்டும் சேர்ந்து அம்சத்தை பெரிதாய் வாட்டியது. நீந்தப் போன ரெண்டு புள்ளைங்க
ஆத்துல போனா தாய் மனசு, தான் புள்ளய தானே முதல்ல போய் தூக்கும்!
"சரி, நீ சாப்புட்டு
முடிச்சுட்டுச் சத்தம் போடு வாரேன், குமுளித் தோப்புல கொடுக்காப்புளி உலுக்க போவோம்"
என்று பின்வாசல் வழியே வெளியே கிளம்பினாள் தேவி. சுபா வீட்டுப் பின் வாசலிலிருந்து
வாய்க்காலைக் கடந்தால் போஸ்ட்மேன் வீட்டு மாந்தோப்பு, அதற்குப் பின்னால் கரும்பு காடு.
வழியெல்லாம் காஞ்சூரு செடி மண்டிக் கிடக்கும். கணுக்காலுக்கு மேலே ஒத்திவிட்டால் மண்ணெண்ணெய்
ஊத்தி சொறிஞ்சாலும் அரிப்பு அடங்காது. அதனால் அந்தப் பாதை முழுக்க கண்காணியா நடக்கணும்.
கரும்புக்காட்டு ஓரமாய் நடந்து போவது தேவி வீட்டு போர்செட்டுக்குப் போகும் குறுக்கு
வழி.
போகும் வழியெல்லாம் பாம்புத்
தடம் பார்த்து நடப்பவள் போல் எதையோ தேடிக்கொண்டே நடந்தாள். வரப்புக்கு வெளியே போனவளின்
இடுப்பில் கையை விட்டுக் காட்டுக்குள் மறைவாய் இழுத்தான் சேது. இரு கைகளையும் இடுப்பில்
மடக்கிப் பிடித்ததில் மீள முடியாது மாட்டிக்கொண்டாள் தேவி.
தலையால் முட்டிப் பார்த்தாள்.
கால்களை பின்னே உந்திப் பிடியை அகற்ற முடியுமாயென முயற்சித்தாள். இன்னும் இறுக்கினான்
சேது. வேட்டைக்கண்ணியில் மாட்டிய சிறு முயல் போல சேதுவின் பிடியில் சிக்குன்றிருந்தாள்
தேவி. நெஞ்சோடு மடக்கியிருக்கும் கைகளை நீட்டி முழக்கி மீள முயன்று முடியாமல் சோர்ந்தாள்.
"சரி, இன்னிக்கும்
நீ தான் ஜெயிச்ச, விடு...” மேலே நிமிர்ந்து முகத்தைப் பார்த்து முறைத்தாள்.
"எப்பவும் நாந்தான்
ஜெயிப்பேன், பிடியின் இருக்கத்தை மட்டும் தளர்த்தி அகல விடாமல் கைகளை தேவிக்குப் பின்னால்
கோர்த்திருந்தான் சேது.
"அதுக்கென்ன இப்போ?
மெடலா குத்தணும்?? யாராவது பாத்துடப் போறாங்க விடு…”
"குத்துனா வேணாம்னு
சொல்லுவேனா? குருகு கண்ணும் காணாக்காடு இது, பயப்படாத...
அந்த மெடல குடு...” குனிந்து
கன்னத்தைக் காட்டினான்.
"இதுக்கொன்னும் கொறச்சலில்ல...
காலங்காத்தால வீட்டுல வேலை செஞ்சுட்டுருந்தவள இதுக்குத் தான் கண்ணக் காட்டிக் கூப்டியா?”
கன்னத்தில் அறைந்தாள் தேவி.
"ஆமான்னா மட்டும் கரிசனம்
காட்டவா போற??”
"கண்டிப்பா மாட்டேன்...
திருவிழாக்குச் சீமசிலுக்குல தாவணி வாங்கித் தரேன்னியே வாங்கி தந்தியா?”
"நெஞ்சுக் கொண்டார
சிங்கப்பூருக்கு ஆளு முடிச்சுருக்கேன். அடுத்த அப்பிய கார்த்தியல்ல கப்பல்ல வந்து சேரும்
பாரேன்...”
"அப்ப அந்தக் கரிசனமும்
கப்பல் கரை தட்டுனதுமே கிடைக்கும்...”
"இன்னிக்கே கிடைச்சா
என்ன பண்ணப் போறியாம்??”
"ம்ம்ம்??? அடுத்த
வாரம் திருவிழாக்கு மொளப்பாரி தூக்கும்போது நீ வாங்கி தர அந்த சீமசிலுக்கயே உடுத்திக்கிறேன்,
இப்ப விடு...” முதுகுக்குப் பின்னால் கோர்த்திருந்த சேதுவின் கைகளை உதறிவிட்டு நகர்ந்தாள்.
"ஏய்ய்... அஞ்சு நிமிசம்
பேசிட்டாவது போடி...”
"இன்னும் செத்த நாழில
எங்கப்பா வயலுக்குத் தண்ணி பாய்ச்ச வருவாரு... வேணும்னா அஞ்சு நிமிசம் அவருகிட்ட பேசு…”,
ரெண்டு பாய்ச்சலில் மாந்தோப்பைச் சேர்ந்துவிட்டாள்.
'தாவணி வாங்கப் போதுமான
காசு கையில் இல்லை. சட்டப்பையில் இருந்த ரெண்டு ரூபாவைக் கூட நேற்று அடுப்பு விறகுக்குத்
துடைத்து விட்டாள் அம்மா. உண்டியல் செருவாடு கொஞ்சம் உண்டு. ஆனால் அது மட்டும் போதாது.
முருகேசன் இல்லனா அப்புரு யாருகிட்டயாவது கைமாத்து கேக்கலாமா?? கைமாத்து வாங்கி சிநேகிதிக்கு
தாவணியா? ச்சீ ச்சீ…’ இன்னிக்குக் கடையில் ஆத்தின அத்தனை டீயிலும் இதே ஞாபகம். ஒரு
யோசனையும் சிக்கின பாடில்ல.
'சங்கர் மாமாவக் காசு கேட்டா
குடுப்பாரா?’
'கண்டிப்பா மாட்டாரு...’
வேற என்ன தான் பண்ணுறதுனு
நூத்தியம்பதாவது முறை யோசிச்சு முடிக்கும் போது மணி ராத்திரி பதினொன்னு ஆகியிருந்தது.
கல்லாக் காசை எண்ணி டிரவுசர் பையில் அதக்கிவிட்டார் கடை ஓனர் சங்கர். வடை அடுக்கும்
கண்ணாடி பெட்டியின் எண்ணெய் பிசுக்குகளைத்
துடைத்து முடிச்சாச்சு. கடைசி கிளாஸைக் கூட கழுவியாச்சு. யோசித்துக்கொண்டே வீட்டை நோக்கி
நடந்தான் சேது. பட்டணத்திலிருந்து வேலை முடிந்து வீடு திரும்பிய அப்புருவும், சேதுவோடு
சேர்ந்து கொண்டான்.
வழக்கமாக இருவரும் வெட்டிப்
பேச்சை ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. போன வாரம் ராஜா கொட்டாயில் பார்த்த ரஜினி
படத்தில் ஆரம்பித்து, வயக்காட்டுக்கு வரப்பு வெட்டிய கதை, பனங்காட்டுல நுங்கு சீவிய
கதை, ஊருல யாருக்கு யாரு கூட வம்பு, யாருக்கு யாரோட சிநேகிதமென்று நீண்டு கொண்டே போகும்.
புறணியில் பெண்கள் தோற்றுப் போவார்கள். அதிலும் கள்ளுக்காட்டு பக்கம் செத்த நேரம் ஒதுங்கி
விட்டால் அவ்வளவு தான். ராத்திரி ரெண்டு பேரும் வீடு சேர மாட்டார்கள்.
டீக்கடையிலிருந்து அல்லிக்குளத்தைத்
தாண்டி பொறவாய்க்காலைக் கடந்தால் அம்சம் மற்றும் முத்துவுக்குச் சொந்தமான கள்ளுக்காடு
வந்துவிடும். அங்கிருந்து ரெண்டெட்டு தூரம் நடந்தால் முந்திரித் தோப்பு அப்பறம் மகமாயி
கோவில் தான். அதுக்குப் பின்னாடி நாலாவது மனை சேது வீடு, அதுக்கடுத்த மனை அப்புரு வீடு.
இன்று அல்லிக்குளத்தைத்
தாண்டும் வரை அப்புரு பேச்சுக்கு உம்ம் கொட்டிக்கொண்டு மட்டுமே வந்தான் சேது. வாயில்
பீடி ஒன்றைப் பற்ற வைத்துவிட்டு, தன் பணத்தேவையைச் சொன்னான்.
"ஒரு யோசனை இருக்கு
மாப்ள.…” என்றான் அப்புரு. வாயிலிருந்த பீடியைக் கையிலெடுத்துப் புகையை வெளியே தள்ளினான்
சேது.
"சொல்லு மச்சான்…”
நாளன்னைக்கு ஆச்சி கோயில்ல சோக்கரு தாத்தா பேரன் காதுக்குத்து வருது…"
"ஆமா... நான் தான்
கடா வெட்டுறேன்…” திரும்ப பீடியை வாயில் வைத்து ஒரு இழு இழுத்தான் சேது.
வாய்க்காலுக்கு அந்தப் பக்கம்
ஒரே தாவாகத் தாவினான் அப்புரு. முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி மறுபக்கம் நடந்து வந்தான்
சேது.
"ஆட்டுத் தலையும் காலும்
வெட்டுறவனுக்கு தான...???”
வாயிலிருந்த பீடியைப் பக்கத்திலிருந்த
ஒத்தப்பனை மரத்து கறுக்கிடுக்கில் சொறுகிவிட்டு வேட்டியை மேலே ஏத்திக் கட்டி சேற்று
காலை அலம்பினான் சேது.
"ஆமா மச்சான், ஆனா
அது பத்தாது…” என்று சேது சொல்ல, இருவரும் கள்ளுக்காடு பார்த்து நடக்கத் தொடங்கினர்.
"அது பத்தாது தான்
மாப்ள, சோக்கரு சொந்த பந்தமெல்லாம் கூடி இருவது கடாக்கு மேல வெட்டுதுங்க. தோல உரிக்கிறவன்
கொடல கழுவறவனுக்கு காலு குடலு போக, தலை உனக்குத் தான???”
"ஆமா...”
"நாளைக்கு வெட்டுற
நீ ஒரேயோரு காரியஞ்செய்யி, தலையோட சேத்து நாலு வெரக்கட கழுத்தைச் சேத்துப் போடு, கடாவுக்கு
அரக்கிலோனாலும் போதும். மொத்தமா கசாப்பு கடைல போட்டு காசு வாங்கிருவோம்.”
"ஆனா இது ஏய்ப்பில்லயா?
சாமிக்குத்தம் ஏதும் ஆயிப்போனா?”
"எல்லாம் யாவாரம் தான்
மாப்ள... தொழில் தந்திரம் இதெல்லாம், பூ விக்கிற பொம்பள மொழம் போடுற மாதிரி, காய் விக்கிறவன்
அளந்து போடுற மாதிரி, ஒன்னும் தப்பில்ல...”
'இது ஏச்சு சம்பாதிப்பதில்லையா!?’
'அப்புரு சொன்னதும் சரி
தான்... இதெப்படி தப்பாகும்?? இது தொழில் தந்திரம் தானே!?!!!’, இரவெல்லாம் உறக்கமின்றி ஒரே சிந்தனையாக ஓடிக்கொண்டிருந்தது.
கட்டிலில் பல முறை புரண்டு படுத்தான். இழுத்துப் போத்திக் கொண்டான். சுற்றி கேட்கும்
தவளைகள் சத்தத்தையும், ஈசல்கள் ரீங்காரத்தையும் கொஞ்ச நேரம் கவனித்தான். நட்சத்திரங்களை
முறைத்தான். 'இதெல்லாம் தப்பில்ல' என்று தனக்குத் தானே சுய ஆறுதல் சொல்லித் தன்னை தயார்ப்படுத்திக்
கொள்ள முயற்சித்தான். ஆனாலும் தூக்கம் வந்த பாடில்லை.
கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குப்
பின்னால் ஜனங்கள் கூச்சல் இரைத்தது. அரக்கப்பறக்க ஒரு கூட்டமே குடம் வாளியோடு ஓடிக்கொண்டிருந்தது.
என்னயேதென்று கூடவே சேதுவும் எழுந்து ஓடினான். பொறைவாய்க்கால் வழித்தடம் ஓரமாய் இருந்த
அம்சம் வீட்டு ஒத்தப்பனை மரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
ஒத்தப்பனை மரம் என்பது பனந்தோப்பிலிருந்து
வெளியே தனியாக நிற்கும் எல்லை மரம். தோப்புக்கு வழிகாட்டி அது தான். அந்த ஒற்றை மரத்தில்
கருப்பு துணி கட்டியிருந்தால் பின்னாலிருக்கும் தோப்பில் கள் இறக்கப்படுகிறது என்பது
குறிப்பு. கள் இறக்கும் கூலிகள் அதை வணங்கிவிட்டு மரம் ஏறுவதும் ஒரு மரபு.
ஊரே கூடிவிட்டது. ஆளுக்கொரு
வாளியில் தண்ணீரை வாரி, தூரத்திலிருந்து வீசிப் பார்த்தனர். ஒரு சொக்கப்பனை அரக்கனைப்
போல அடியிலிருந்து தலை வரை அணல் பற்றி எரிந்தது மரம். பனந்தலையை அணைப்பது அத்தனை எளிய
காரியமில்லையே!!
கறுக்குகள் வெடித்துப் பொறிகளாக
நாலாப்பக்கமும் சிதறின. பொறிகள் விழும் திசையெல்லாம் சிறுசிறு தணல்கள் பற்றின. சுற்றியிருந்த
தணல்களை அணைக்கவே ஜனம் பெரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தது.
"டேய்... ஓடிப்போய்
முதல்ல ஊரு முக்குலருக்கற ட்ரான்ஸ்பாரத்த அணைங்கடா...” தன் சின்ன பையன் செந்திலை ஏவினார்
சங்கர். "சரிப்பா" என்று ஓட்டம் பிடித்தான் செந்தில்.
"தூரத்துலருந்தே தண்ணிய
வீசுங்கடா, பக்கத்துல போயிக் கறுக்கு தெறிச்சா கண்ண ஒத்திடும்" விடலைகளை வேலை
வாங்கிக்கொண்டு இருந்தார் சுபாஷ் வாத்தியார். முத்து ஒரு பக்கம் வாளியோடு ஓடிக்கொண்டு
இருந்தார். அம்சம் தலையில் அடித்துக்கொண்டு அழுதுக் கொண்டு இருந்தாள்.
கூட்டத்தில் ஒருவன் “காலைல
ஆச்சிக்குக் கேட்டதுக்கு ஆட்ட தர மாட்டேன்ன இப்ப பாரு ஆச்சி கொள்ளி வெச்சுருச்சு” என்றான்.
அதைக் காதில் வாங்கி, ஆதங்கத்தை அடக்க முடியாது விசும்பினாள் அம்சம். தோளில் சாய்த்து
அம்சத்தை வீட்டுக்கு அழைத்துப் போனாள் கோதை.
நூறு பேரில் ஒருவனாய் சேதுவும்
வாளியும் கையுமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்தான். ஊரே கூடித் தீயை அணைக்க விடியற்காலை
ஆகிவிட்டது. பட்டவிளாகம் அல்லிக்குளம் தாண்டி ஏழாம் ஊரு காப்புக்குடி வரை மேல்வானத்தில்
புகை மூட்டம் தெரிந்தது.
ராமுச்சுரும் கூடித் தீயணைத்ததில்
காலை ஒன்பது மணி வரை பலரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எதையோ பறிக்கொடுத்தவள்
போல் அடுப்பங்கறையில் உக்காந்திருந்தாள் அம்சம். டீ போட்டு ஒரு டம்ளரில் கொண்டு வந்து
அம்சத்திடம் கொடுத்தாள் கோதை. நிமிர்ந்து கோதை முகத்தைப் பார்த்தாள் அம்சம்.
என்ன நினைத்தாளோ தெரியாது.
நேராகப் பட்டிக்குப் போய் அந்தச் சூலாட்டை நடத்திக் கொண்டு போனாள். பட்டாளத்தார் வீட்டு
வாசல் வேப்பமரத்தில் கட்டிவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் வீட்டுக்குப் போய்விட்டாள்.
காரணத்தை கணித்துவிட்ட பட்டாளத்தார்
இதற்காக சந்தோசப்படவில்லை. "ஆட்டுக்குக் காசக் குடுத்து விட்டுடுங்க" என்று
பட்டாளத்தார் கையில் காசைத் திணித்தாள் நளாயினி. காசை எடுத்துக்கொண்டு நாளைக்கு நடக்கப்போகும்
சூலாடு குத்துக்கு சாமான் வாங்க, கடைத்தெரு கிளம்பினார் பட்டாளத்தார்.
சுபாவின் மகிழ்ச்சி தான்
ஒரு நாள் கூட முழுசாக நீடிக்கவில்லை. உன்ன போய் நம்பினேன் பாருனு ஆச்சியை ஏசினாள்.
"உன் காதுக்கு என் பேச்சு கேக்காது, ஆனா மூச்சுக்கு முழு ஆடு கேக்குதா?” என்று
புலம்பினாள்.
ஆடு கிடைக்காத போதென்றாலும்
பரவாயில்லை. இப்போது ஆடே வீடு தேடி வந்திருக்கிறது. இப்போது போய் வேண்டாம் என்றால்
அப்பா கேக்க கூட மாட்டார். 'ஆட்டை அவிழ்த்து விட்டுத் துரத்தி விட்டுவிடலாமா!!! அவிழ்த்து
விட்டால் நேராக அம்சம் பெரியம்மா வீட்டுக்கு தான் போகும். அப்பறம் திரும்ப இங்க தான்
வரும். வேறென்ன பண்ணலாம்?!?!’ சுபாவுக்கு ஒரு யோசனையும் கிடைக்கவில்லை.
கடைத்தெரு போன பட்டாளத்தார்
திரும்ப வந்தார். "என்னங்க ஆச்சு??” என்று வினவினாள் நாளாயினி.
"காசக் கொடுத்ததுக்கு
அம்சம் வாங்க மாட்டேனுடுச்சு, எஞ்சாமிக்கு தான!? சும்மா வெச்சுக்கனுது… இனாமா வாங்கிப்
பொலி போட நாம என்ன கீழயா கிடக்கோம்? இல்ல அத சாமி தான் ஏத்துக்குமா!?? முத்து கைல காசக்
குடுத்துட்டு வந்து சேந்துட்டேன்.” என்ற பட்டாளத்தார் சொம்பை வாங்கித் தண்ணீரைக் குடித்தார்.
"பூசாரி கிட்ட பேசுனிங்களா??”
தண்ணீர் குடிக்கும் வரை காத்திருந்து கேட்டாள் நளாயினி.
"அதெல்லாம் பேசியாச்சு...
சோக்கரு கடாவெல்லாம் சேது தான் வெட்டுறானாம், அவனே சூலாடும் குத்தி வெச்சுருவான்னாரு...”
"நீ வீட்ட அலசி விட்டு
மத்ததத் தோது பண்ணு, நாளைக்குக் காலைல கோயிலுக்குப் போகணும்…” என்று பட்டாளத்தார் சொல்லியதைக்
கேட்டுக் கொண்டிருந்த சுபாவுக்கு இருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது.
இனி அந்த ஆடும் குட்டியும்
பலியாகியே தீரும், வேறு ஏதாவது நம்மால் செய்ய முடியுமா??? வாய்ப்பேயில்லை. ஆனாலும்
ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. அந்த ஆடு எப்படியாவது பலியாகாமல் தப்பித்து விடுமென்று
அரைகுறையாக நம்பினாள். மறுபடியும் ஏசிய ஆச்சியையே வேண்டிக் கொண்டாள்.
"ஏன் ஆத்தா சோதிக்கிற???
அந்த ஆட்டை விட்டுத் தான் தொலையேன், நீ வேற என்ன கேட்டாலும் தாரேன்…” ராத்திரி முழுக்கத்
தூங்காமல் சுபாவின் மனசுக்குள் ஒரே அலைக்கழிப்பு.
விடியும்பொழுது பூசைக்கு
எல்லாம் தயாராகிக்கொண்டு இருந்தது. ஆளுக்கொன்றாக கையிலெடுத்துக் கொண்டு கோயில் பக்கம்
நடந்தனர். சுபா வீட்டில் தனியாகத் தான் இருந்தாள்.
ஏதாவது நடக்க வேண்டும்,
மழையோ, இடியோ, கோவில் குடிசை பத்தி எரிஞ்சாலும் பரவாயில்லை… இன்று எப்படியாவது அந்த
ஆடு குத்துப்படாது தப்பி விட வேண்டுமென்று மறுபடியும் மறுபடியும் வேண்டிக்கொண்டே இருந்தாள்.
கோவிலில் கூட்டம் கூடியது.
உறுமி சத்தம், கொட்டு சத்தமென்று ஒரே அலப்பரை. அங்காளிப் பங்காளி மருளாளிக கூடினர்.
தோரணம் கட்டுவது, கொழா கட்டுவது லைட்டு கட்டுவதென்று ஆளுக்கொரு வேலை. கோவிலுக்குப்
பின்புறம் மாமன் மச்சான்கள் கூடி கள்ளு குடித்துக் கொண்டு இருந்தனர். முறைப்பெண்களைப்
பசங்க சிலர் சுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர். சோக்கர் தங்கராசின் மருமகள்கள் இருவரும்
பொங்கல் வைத்துக்கொண்டு இருந்தனர். வாளி மோரைத் தூக்கிக்கொண்டு கிளாஸில் எல்லாருக்கும்
கொடுத்துக்கொண்டு இருந்தான் சங்கர் மகன் செந்தில். கட்டி வைத்திருந்த இருவது ஆடுகளுக்கும்
மாலை போட்டுச் சோடித்துக்கொண்டு இருந்தான் சேது. தூரத்திலிருந்து சேதுவைச் சொக்க வைப்பது
போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள் தேவி. அமைதியாக ஒரு ஓரமாக உக்காந்திருந்தாள்
அம்சம்.
காது குத்து முடிந்து எல்லா
ஆடுகளும் ஆச்சிக்கு முன் கொண்டு வரப்பட்டன. அரிவாளில் பட்டை அடித்து பூ சுற்றி சூடம்
காட்டினான் சேது. முதல் ஆட்டை கொண்டு வந்து தலையில் மஞ்சத்தண்ணி தெளித்தார் சேகர்.
ஆடு தலையைச் சிலுப்பியது...
ஓங்கிய அரிவாளை இறக்கினான்
சேது.
'பொத்த்த்...’
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
தாயொருத்தி பக்கத்தில் இருந்த தன் தலைச்சன் பிள்ளையைக் கண்களை மூடி வயிற்றோடு அணைத்துக்கொண்டாள்.
கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். காற்றசைவுக்குக் காம்பொடிந்து விழுந்த கனிந்த பழத்தை
போல எந்த அதிர்வுமின்றி வெடுக்கென விழுந்தது ஆட்டின் தலை. முண்டத்தின் கால்களை வெட்டி
ஆட்டுத் தலையின் வாயில் திணித்தான் சேது.
அடுத்து இரண்டாவது ஆடு கொண்டு
வரப்பட்டது...
தலையில் மஞ்சத்தண்ணி தெளித்தார்
சேகர்...
அப்புரு சொன்னது போல் சேதுவுக்கு
ஆட்டின் தலை நாலு வெரக்கட நீளமாகவே தெரிந்தது.
'பொத்த்...’
கூட்டத்திலிருந்த அம்சம்
திரும்பிப் பார்த்தாள். அவளது சூலாடு கடைசியாக நின்று கொண்டு இருந்தது. அந்தச் சம்பவத்தைக்
காண மனமில்லாதவாளாக அங்கிருந்து கிளம்பி வீடு பார்த்து நடக்கத் தொடங்கினாள் அம்சம்.
கோவிலிலிருந்து விலகிச் செல்லச் செல்லப் பெண்களின் குலவை சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து
கொண்டே வந்தது. கண்களில் நீர் இல்லை, ஆனால், தொண்டையைக் கவ்வுவதைப் போலொரு அழுகை, ஆத்திரம்.
தலையில் முக்காடு போட்டுவிட்டு வந்து வீட்டைச் சேர்ந்தாள் அம்சம்.
இன்னொரு பக்கம் கல்லுவீட்டு
வாசலிலேயே காத்திருந்தாள் சுபா. கடா வெட்டு இந்நேரம் முடிந்திருக்கும். எல்லாரும் இந்நேரம்
வீடு வந்திருக்க வேண்டும். இப்போது கூட மனதுக்குள் ஒரு சின்ன நம்பிக்கை, எதாவது நடந்து
அந்த ஆடு தப்பித்து விடாதா என்று!
தேவி அழுது கொண்டே வந்தாள்.
"ஏன் அழுற? என்னாச்சுடி?”
என்றாள் சுபா.
"கடா வெட்டுல சண்டையாகிடுச்சு.
உங்கப்பா, மணிமாறன் மாமா, செல்லதொர மாமா எல்லாம் சேந்து சேதுவ நல்லா அடிச்சுட்டாங்க.”
"என்னாச்சு?? ஏன் சண்ட??
அழாம சொல்லு...”
"எல்லாக் கிடாவும்
வெட்டியாச்சு... கடைசியா, சூலாடுக் குத்துக்கு
உங்க வீட்டு ஆடு நின்னுட்டு இருந்துச்சு. அப்போ, வெட்டி போட்ட எல்லா ஆட்டுலயும் தலைலருந்து
கழுத்துக்கு நகர்த்தி சேர்த்து வெட்டிருக்கறதப் பாத்துட்டு செல்லதொர மாமா சேதுவத் திட்டிட்டு
அடிச்சுட்டாரு. ஆச்சிக்குப் போடுற படையலையே ஏய்க்கிறியா திருட்டுப்பயலே, அந்தப்பயலே,
இந்தப்பயலேனு ஏச்சுப்பாட்டு வேற... கூடவே எல்லாரும் சேந்துக்கிட்டாங்க... மணிமாறன்
மாமா வேற குடிச்சுருந்தாரு... குடிச்சுட்டு நல்லா அடிச்சு போட்டுட்டாரு அவன.. அப்பறம்
சூலாட்டுல கைய வெச்சா கைய வெட்டிப்புடுவேன் போடானு சொல்லி அவன சட்டயக் கிழிச்சு வெரட்டி
விட்டாங்க பாவம்…” என்ற தேவியின் கன்னங்கள் அழுது வீங்கி இருந்தன.
தோழியின் சிநேகிதன் கூட்டத்தில்
உதைப்பட்டதைப் பற்றியெல்லாம் சுபாவுக்கு இம்மியும் கவலையிருந்ததாய் தெரியவில்லை. காத்திருந்து
தாங்க முடியாதவளாய் ஆட்டைப் பற்றி விசாரித்தாள்.
"அப்பறம் என்னாச்சு??
அப்பறம் என்னாச்சு?? அருவா வீச ஆளு இல்லாம எங்க சூலாட்ட விட்டுட்டாங்களா??”
"இல்ல.... சேதுவ வெரட்டிட்டு
சேகர் மாமாவே படையல் போட்டு, உங்க சூலாட்டக் குத்தி போட்டாரு… பாவம் சேது… அவ.....னுக்கு......
நல்.........ல..... அ.........டி...... எ.......ன்.....ன...... பண்....ணு........வா.....ன்…”
விசும்பினாள் தேவி.
கண்கள் சொருகிக் கீழே சரிந்தாள்
சுபா...
இந்தக் கிடா வெட்டுப் படையல்
நடந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. இப்போதும் ஒவ்வொரு வருடமும் கிடா வெட்டு நடந்து கொண்டு
தான் இருக்கிறது. ஆனால், அதற்குப் பிறகு சேது தான் ஒரு முறை கூட கோவில் பக்கம் ஒதுங்க
கூட இல்லை. அவனுக்கு அந்தக் கோவில் பக்கம் போவதே பிடிக்காமல் போனது.
அம்சம் அதற்குப் பிறகு தான்
வளர்த்த முப்பது ஆடுகளையும் விற்றுவிட்டு, ஆடு வளர்ப்பதையே நிறுத்திவிட்டாள்.
எல்லாவற்றிலும் முக்கியமாக
அதற்குப் பிறகு சுபாவுக்கு மாடு முட்டும் கனவு ஒரு முறை கூட வரவேயில்லை. ஆனால், அதற்குப்
பதிலாக தினசரி கனவில் ஒரு ஆட்டுக்குட்டி வந்து 'மே...மே...'என்று கத்திச் செல்கிறது.
- ராஜி